அன்று பெய்த மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 32,773 
 

தன்னுடைய “வொர்க்ஷாப்பில் வேலை செய்யும் வேலையாளை கடினமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த ஹமீம், இவனின் கணைப்பை கேட்டு “வா ஷாம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்த வேலைக்காரனிடம் தன் அர்ச்சனையை தொடர்ந்தான்.

ஷாம் உள்ளே வந்து அங்கு இருந்த ஸ்டூலில் உடகார்ந்தான். சிறிது நேரம் அவனை திட்டி விட்டு உள்ளே வந்த ஹமீம், வா வெளியே போய் பேசுவோம். அழைத்துக்கொண்டு எதிரிலிருக்கும் பேக்கரிக்குள் நுழைந்தவன்”ராம்ஜி “இரண்டு டீ ஸ்ட்ராங்கா” சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.

“சொல்லு ஷாம்” அவன் முகத்தை பார்த்தான் ஹமீம். “ஒரு புராஜெக்ட் போட்டுருக்கேன், உன் வண்டி அன்னைக்கு வேணும்”.

“போன தடவையே போலீஸ் பெரிய பிரச்சினை பண்ணிடுச்சுப்பா, அதனால அந்த வண்டியை வித்துட்டேன்.இப்பவெல்லாம் எது நடந்தாலும் நம்மளையும் ஒரு என்கொயரி பண்ணிடறாங்க, சலித்துக்கொண்டான் ஹமீம்.

சரி உன் வண்டி வேண்டாம், வேற வண்டி ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொடு., கொஞ்சம் “ஆல்டர்” பண்ணனும் அதுக்கு தோதான வண்டியா பாத்து கொடு.

பாக்கறேன். வெளி பார்ட்டி கொஞ்சம் கூடுதலா கேப்பானுங்க, அப்புறம் என் மேலை சங்கடப்படாத. சொன்னவன் கடைப்பையன் கொண்டு வந்த டீ டம்ளரை வாங்கி அவனுக்கு ஒன்று கொடுத்து தான் ஒன்றை உறிஞ்ச ஆரம்பித்தான்.

இருவரும் மெளனமாய் டீயை உறிஞ்ச ஆரம்பித்தனர்.

மெல்ல கேட்டான் ஹமீம், பிளான் எல்லாம் ஒ கே பண்ணிட்டயா? எந்த இடம்.

கொஞ்சம் தள்ளித்தான் போட்டிருக்கேன். நீ பார்ட்டிய ரெடி பண்ணி கொடு, அப்புறம் உன்னை வச்சுத்தான் எங்க வரணும், அப்படீன்னு சொல்லணும்.

சரி வா, இருவரும் நடந்து வெளியே வந்தார்கள்.ஷாம் மெல்ல தலையசைப்புடன் விடை பெற்றான்.

ஹமீம், கூட்டி வந்திருந்த பன்னீர் என்பவனை ஷாம் பலமுறை கேட்டான், ஆள் நம்பிக்கையானவனா? ஹமீம் நம்பிக்கையாய் தலையசைத்தான். நம்பலாம்.

இருவருக்கும் தன்னுடைய திட்டத்தை விளக்கினான். அந்த வங்கி ஒதுக்குப்புறமாய் இருந்தது. மாநகர எல்லையை ஒட்டியும், ஆனால் ஆளரவமற்றும் இருந்தது. வங்கியின் பின்புறம் பாதையை ஒட்டி வேனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவன் சரியாக வங்கியில் இருந்து இரவு ஒரு மணி அளவில் வெளியே வருவான். தயாராக இருக்கவேண்டும்.வண்டியை ஷாமிடம் கொடுத்து விடவேண்டும், பன்னீர் காருக்குள் ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும். அடுத்த நிமிடம் சென்னை எல்லையை தாண்டி பறந்து விட வேண்டும். எப்படி போவது என்று பன்னீரிடம் விளக்கினான்.

பன்னீர் திடீரென்று ஒரு சந்தேகம் கேட்டான், அந்த இடத்தை நான் பார்த்துக்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் தடங்கலில்லாமல் என்னால் அங்கு வந்து நிற்க முடியும்.

காரியம் நடக்கும் முன் இடத்தை காண்பிப்பது அவ்வளவு புத்திசாலித்தனமில்லை, தயங்கினான் ஷாம்.

ஷமீம் நம்பிக்கையாய் சொன்னான், அவனை கூட்டி போ, நம்பிக்கையானவன், உனக்கு உதவியாய் இருப்பான்.

மறு நாள் இருவரும் அந்த வங்கியில் வாடிக்கையாளராய் நின்று கொண்டிருந்தனர்.

வாசல் புறம் இருந்த ரோட்டையும், பின் புறம் இருந்த ரோட்டையும் நன்கு பார்த்துக்கொண்டான் பன்னீர். வண்டி எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்றும் கண்களாலே காட்டினான் ஷாம். புரிந்து கொண்டது போல் தலையசைத்தான் பன்னீர்.

மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. திடீரென்று மாலையிலைருந்து மழை பிடித்துக்கொண்டது. திட்டத்தில் மாற்றம் உண்டா என்று கேட்ட பன்னீரை அதெல்லாம் இல்லை. என்னை சற்று தள்ளி இறக்கி விட்டு விடு. நான் சிக்னல் கொடுத்தவுடன் பின் புறம் உள்ள பாதையில் வந்து நின்றால் போதும்.ஷாம் வந்தவுடன் அவன் கையில் வண்டியை கொடுத்து விடவேண்டும். உறுதியாய் சொல்லிவிட்டான் ஷாம்.

இரவு பனிரெண்டை தாண்டியிருக்கும். சற்று தள்ளி மாருதி ஜிப்ஸியில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த பன்னீர் பட படப்புடன் காத்திருந்தான். ஷாம் போய் முக்கால் மணி நேரம் ஆகி விட்டது. சர்ரென்று ஒரு போலீஸ் ஜீப் அவன் வண்டியை தாண்டி சென்றது. இவன் மனம் துணுக்கென்றது. மீண்டும் திரும்பி வரும்போது இங்கு நின்று கொண்டிருந்தால் போலீசுக்கு சந்தேகம் வரும். மெல்ல வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

ஷமீம் சொன்ன இடத்தில் வண்டியை கொண்டு போய் நிறுத்தியவன், மெல்ல உள் புறமாய் வந்து சில வேலைகளை செய்தான். செய்து முடிப்பதற்குள் வேர்த்து விறு விறுத்து விட்டது.

மெல்ல சிக்னல் அவன் செல்போனில் அழைத்தது. இவன் விரைப்பானான். ஷாம் இருளில் இருந்து வெளியே வந்தான். கையில் பெரிய பை ஒன்று இருந்தது. பன்னீர் டிரைவர் சீட்டிலிருந்து வெளியே வந்து அந்த பையை வாங்கியவன் சட்டென்று உள்ளே சென்று விட்டான். டிரைவர் சீட்டில் வந்தமர்ந்த ஷாம் சில நிமிடங்கள் காத்திருந்தான். பன்னீர் போலாம் என்று சொன்னவுடன் வண்டியை எடுத்த ஷாம் வேகமாய் ஆக்சிலேட்டரை அமுக்க ஆரம்பித்தான். மழை கொட்டிக்கொண்டிருந்தது.

பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும் வேகமாக சென்று கொண்டிருந்த வண்டியின் பின் புறம் போலீஸ் வண்டியின் “பீப்”பீப்” சத்தம் கேட்கவும் வண்டியின் வேகத்தை கொஞ்சம் குறைத்தான் ஷாம். உள்ளே அமர்ந்திருந்த பன்னீருக்கு அந்த மழையிலும் வேர்த்திருந்தது.

போலீஸ் ஜீப்பால் வழி மறிக்கப்பட்டது ஷாம் ஓட்டி வந்த மாருதி ஜிப்ஸி. ஜீப்பில் இருந்து மழை கோட்டு அணிந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர், “இறங்கு கீழே” என்றார். இன்ஸ்பெக்டரின் ஆணைக்கு கீழ்படிந்து இறங்கி வந்தான் ஷாம். உள்ளிருந்து பன்னீரும் இவன் பின்னாலே இறங்கி வந்தான்.

“இந்த நேரத்துல எங்கேயா போயிட்டிருக்கீங்க?”. பட்டென்று பதில் தந்தான் பன்னீர், “ஐயா, ஆந்திராவுல இருந்து ஒரு சவாரி கூட்டிட்டு வந்தோம்ங்க. அவங்களை இறக்கி விட்டுட்டு திரும்பி போயிட்டிருக்கோம்”.

இன்ஸ்பெக்டர் தனது ஜீப்புக்கருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரகளிடம், “அந்த மாருதிக்குள்ள் “செக்” பண்ணி பாருங்க”. சொல்லிவிட்டு அந்த தலைமேல் விழுந்த தண்ணீரை தட்டி விட்டுக்கொண்டார்.

உள்ளே எட்டி மேலும் கீழும் கண்களால் துழாவி பார்த்த போலீஸ் “உள்ளே ஒண்ணுமில்லே சார்”. பதில் சொன்னவர்களை வர சொல்லிய இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பை கிளப்ப சொன்னார்.

அவர்களை தாண்டி போலீஸ் ஜீப் தொலை தூரம் சென்று விட்டது என்று உறுதி செய்த ஷாம் “தேங்க்ஸ் பன்னீர்” என்றவன் சந்தோசமாய் சிரித்தான்.

மழை நன்கு வலுத்து பெய்து கொண்டிருந்தது. இருவரும் மீண்டும் அந்த இடத்தை விட்டு கிளம்பினர். இப்பொழுது பன்னீர் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, ஷாம் நிம்மதியாய் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான்.

நான் சொன்ன இடத்திலேயே வைத்து விட்டாயா? பன்னீர் தலையசைத்தான், அந்த “மேன் ஹோல்ஸ்” மூடிகிட்ட வண்டிய நிறுத்துனதே அதுக்காகத்தான. சரியா அதை திறந்து நீங்க உள்ளே போற பைப்புக்கு மேல ஒரு கம்பி கட்டி வச்சிருந்தீங்க இல்லே, அதுல நல்ல சுத்தி வச்சிருக்கேன். கீழே எவ்வளவு தண்ணி போனாலும் அந்த பைக்கு ஒண்ணும் ஆகாது.

இப்ப போய் எடுத்துக்கலாமா?

வேண்டாம் இந்த மழையில திரும்ப அங்க போனமுன்னா போலீசுக்கு சந்தேகம் வந்துடும்.

நாளைக்கு இவங்க நகைய காணோமுன்னு போலீசுக்கு தகவல் போய் அவங்க வந்து “எங்கொயரி” பண்ணி முடிக்கற வரைக்கும் அதைய தொட வேணாம்.சரி என்று தலையசைத்து வண்டியை ஓட்டினான் பன்னீர்.

ஆனால் சுமார் விடியற்காலை மூன்று மணி அளவில் மழை வலுத்து தண்ணீர் வேகமாக நிரம்பியதால் அந்த ஊரில் இருந்த குளம் உடைந்து விடும் என்று அவசரம் அவசரமாக அதன் கதவை திறந்து விட்டு விட்டதால் அந்த வங்கியும், அதை சுற்றியுள்ள அனைத்து இடங்களும் தண்ணீர் நிரம்பி விட்டது.

அந்த வங்கியில் திருட்டு நடந்துள்ளது என்பது கூட தெரியாத அளவுக்கு அது தண்ணீரில் மூழ்கி கிடந்தது.

ஷாமும், பன்னீரும்,ஒளித்து வைத்த நகைகள் இனி திரும்ப கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்து கவலையாய் உட்கார்ந்திருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *