கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 12,833 
 

மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். மணி 5 ஆனது. சரி, கிளம்பலாம் என்று எண்ணி அவனுடைய இருக்கையிலிருந்து எழும்போது அவனுடைய மேனேஜர் அவனைப் பார்த்து, தன் இருக்கைக்கு வருமாறு செய்கை காட்டினார். “என்னடா இது, சீக்கிரம் கிளம்பலாம்னு நெனச்சா இப்ப போய் இவர் என்ன பாக்கணுமா? எதுக்கு கூப்பிடறார்னு தெரியல. எவ்ளோ நேரம் ஆகும்னும் தெரியல” என்று நினைத்தபடி அவனுடைய மேனேஜரின் இருக்கைக்கு சென்றான்.

“கார்த்திக், என்ன கிளம்பிட்டீங்க போல?” என்று கேட்டார் கார்த்திக்கின் மேனேஜர் ரகுராம். உண்மையை சொன்னால் தப்பாக நினைத்துக்கொள்ளப் போகிறார் என்று எண்ணி, “இல்ல சார், அப்படியே போய் ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்னு எழுந்தேன். சொல்லுங்க சார்”, என்றான் கார்த்திக்.

“அப்படியா, சரி. ஒண்ணும் இல்ல. இன்னிக்கு ஈவினிங் 5:30 மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும். நம்ம டீம்ல நீங்க தான் சீனியர். அதனால எனக்கு பதிலா நீங்க அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியுமா?” என்று கேட்டார் ரகுராம். மேனேஜர் கேட்டதை முடியாது என்று நிராகரித்தால் அது சரியாக இருக்காது என்று எண்ணிய கார்த்திக், “நோ ப்ராப்ளம் சார். நான் பாத்துக்கறேன்” என்றான்.

“தேங்க்ஸ் கார்த்திக். நான் உங்க கிட்ட இருந்து மீட்டிங்க்ல நடந்ததப்பத்தி நாளைக்கு கேட்டு தெரிஞ்சுக்கறேன். சீ யூ டுமாரோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ரகுராம். தான் நினைத்தது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்தபடியே ஆஃபீஸில் இருக்கும் கேன்டீனுக்குச் சென்றான் கார்த்திக்.

ஒரு கப் டீ வாங்கி, அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தான் கார்த்திக். அங்கு அவனைப் பார்த்த அவன் நண்பன் விமல், “என்னடா கார்த்திக், வீட்டுக்குப் போகலையா? 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருக்கு. தெரியும்ல?” என்றான். “வாடா விமல். நான் அப்பவே கிளம்பலாம்னு தான் இருந்தேன். ஆனா 5:30 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அத முடிச்சுட்டு கிளம்பிடுவேன்” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி, எப்ப இருந்து உனக்கு இவ்ளோ பொறுப்பு வந்தது? கிரிக்கெட் மேட்ச், அதுவும் இந்தியா விளையாடுதுன்னா, அன்னிக்கு உடம்பு சரியில்ல, அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்லி லீவு போடுவ நீ. இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா?” என்று கிண்டலாகக் கேட்டான் விமல்.

அதற்கு கார்த்திக், “ஏன்டா வயித்தெரிச்சல கிளப்பற. நான் கிளம்பின நேரத்துல கரெக்டா என் மேனேஜர் பாத்து கூப்பிட்டார். அவருக்கு ஏதோ வேலை இருக்காம், அதனால அவரால அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியாதாம். அதனால என்ன அட்டெண்ட் பண்ண சொன்னார். எல்லாம் என் நேரம்” என்று அலுத்தபடியே சொன்னான் கார்த்திக்.

“சரி, நீ நல்லா என்ஜாய் பண்ணு. நான் கிளம்பறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மேட்ச் ஆரம்பிச்சிடும்” என்று கிண்டலாக சொன்னான் விமல். “டேய், ரொம்ப பேசற நீ. பாரு, வானம் இருட்டி இருக்கு. நீ வீட்டுக்கு போறதுக்குள்ள பயங்கரமா மழை வரப்போகுது. நீ அதுல மாட்டிக்கப்போற” என்று கார்த்திக் சபித்ததை சற்றும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினான் விமல்.

5:30 மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் முடியும்போது மணி 6:15 ஆகி இருந்தது. “பரவாயில்ல, கொஞ்சம் சீக்கிரமே முடிஞ்சிருச்சு. வீட்டுக்கு போய் நிம்மதியா மேட்ச் பாக்கலாம்” என்று எண்ணியபடியே தன் பைக்கில் உட்கார்ந்தான். தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மழை தூரல் போட ஆரம்பித்தது. மழை வலுப்பதற்குள் சென்றுவிட வேண்டும் என்று எண்ணி தன் பைக்கை சற்று வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

அவனுடைய துரதிஷ்டம், அடுத்த சில நொடிகளில் மழை வலுத்தது. வேறு வழியே இல்லாமல் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் இருக்கும் மரத்தடியில் சென்று நின்றான். அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

மழை ஆரம்பித்து இருபது நிமிடங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. “என்ன கொடுமை இது. இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல” என்று கார்த்திக் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த போது எதிரில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டி வந்து நின்றது. கறுப்பு நிற டீ சர்ட், நீல நிற ஜீன்ஸில் அழகான ஒரு பெண் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தோளில் லேப்டாப் பையுடன் அந்த மரத்தடியில் வந்து நின்றாள். அந்த கறுப்பு நிற டீ சர்ட் அவளுடைய நிறத்தை இன்னும் தூக்கிக் காட்டியது.

மழை சற்றும் குறையவில்லை. மரத்தடியிலும் மழைத்துளிகள் பெரிது பெரிதாக விழத்தொடங்கின. தன் பையிலிருந்து குடையை எடுத்து, அதனை விரித்து மழைத்துளிகள் தன் மேலே விழாதவாறு நின்றாள் அந்தப் பெண். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், மழையில் நனைந்தபடியே நின்றிருந்தான் கார்த்திக்.

“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ. மழை ரொம்ப அதிகமா வருது. வேணும்னா இந்த குடைக்குள்ள வந்து நில்லுங்க, இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றாள் அந்தப் பெண். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக், “ரொம்ப தேங்க்ஸுங்க. நான் உங்கள எப்படி கேக்கறதுன்னு இருந்தேன்” என்றான்.

மழைச்சத்தத்தைத் தவிர அங்கு வேறு சத்தமே கேட்கவில்லை. அந்த இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். “என் பேர் கார்த்திக். இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன். நீங்க என்ன பண்றீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். அதற்கு அந்த பெண், “அப்படியா? வெரி குட்” என்றாள். இப்படி ஒரு பதிலை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“என்னங்க, அவ்ளோ தானா? மழை வேற நிக்கற மாதிரி தெரியல. அதுவரைக்கும் ஏதாவது பொழுதுபோற மாதிரி பேசலாம்னு பாத்தா ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க. உங்களப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன், இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றான் கார்த்திக்.

அதற்கு அந்த பெண், “மை நேம் இஸ் ஜெயா. நானும் இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன்” என்றாள். அதற்கு கார்த்திக், “ஓ இஸ் இட்? வெரி குட். உங்க லேப்டாப் பேக்குல போட்டிருக்கறத பாத்தா நீங்க ஐ.பி.எம்-ல வேல பாக்கறீங்கன்னு நெனக்கிறேன். கரெக்டா?” என்றான்.

“ஓ, அப்போ நான் சரவண பவன் பேக் வெச்சிருந்தேன்னா அந்த ஹோட்டல்ல வேலை பாக்கறேன்னு சொல்லுவீங்களோ? என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா. இதைக்கேட்டு கார்த்திக் வழிந்துக்கொண்டு, “அப்படி இல்லீங்க. ஏதோ தோணிச்சு, அதான் சொன்னேன்” என்று ஒரு வழியாக சமாளித்தான்.

“பாருங்க என் நிலைமையை. 5 மணிக்கே கிளம்பலாம், வீட்டுக்கு போய் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பாக்கலாம்னு இருந்தேன். கடைசி நேரத்துல ஒரு வேலை வந்துடுச்சு. அதனால ஆஃபீஸ்ல இருந்து கிளம்பறதுக்கு லேட் ஆகிடுச்சு. இப்பொ மழை வேற பயங்கமா கொட்டுது. எப்பொ நிக்கும்னு தெரியல” என்று தன் நிலைமையைப் பற்றி புலம்பினான் கார்த்திக். அதற்கு ஜெயா, “சரி விடுங்க. நம்மால என்ன பண்ண முடியும். நான்கூட இன்னிக்கு ‘வெற்றி நிச்சயம்’ படத்துக்குப் போகலாம்னு இருந்தேன். ஆனா இந்த மழையால அந்த ப்ளான் அவுட் ஆகிடுச்சு. எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும்” என்றாள்.

“நல்ல வேளை இன்னிக்கு மழை வந்து உங்கள காப்பாத்தியிருக்கு. போன வாரம் தான் அந்த படத்த பாத்தேன். அதுக்கு, மழைய விடுங்க, சுட்டெரிக்கற வெயிலே பெட்டர்” என்றான் கார்த்திக். இதைக்கேட்டு சிரித்தபடியே ஜெயா, “அப்படியா? நல்ல வேளை தப்பிச்சேன். இதே மாதிரி நீங்களும் தப்பிச்சுட்டீங்க” என்றாள்.

“என்னங்க சொல்றீங்க? நான் தான் அந்த படத்துக்கு மறுபடியும் போகப்போறதில்லையே. அப்பறம் எப்படி தப்பிச்சேன்னு சொல்றீங்க?” என்றான் கார்த்திக். “நீங்க மேட்ச் பாக்கணும்னு சொன்னீங்களே, அதைத்தான் சொன்னேன். யாரு எவ்ளோ ரன் அடிக்கணும், எவ்ளோ விக்கெட் எடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம். அதையெல்லாம் பாத்தா தேவையில்லாம டென்ஷன்தான் மிச்சம். அதுக்குத்தான் நீங்க தப்பிச்சுட்டீங்கன்னு சொன்னேன்” என்றாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “கலக்கறீங்க போங்க. சொல்றதுக்கெல்லாம் டக், டக்குனு பதில் தர்றீங்க. நீங்க வக்கீலா ஆகியிருந்தீங்கன்னா செமையா வந்திருப்பீங்க” என்றான். “ஓஹோ அப்படியா? ஸோ, இப்பொ நான் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறதால சரியா வரமாட்டேன்னு சொல்ல வர்றீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “பாத்தீங்களா? நான் சொன்ன ஒரு சின்ன விஷயத்துல இருந்து ஒரு கேள்வி கேட்டு மடக்க பாக்கறீங்க. இதத்தான் சொன்னேன்” என்று சிரித்தபடியே சொல்ல ஜெயாவும் சிரிக்க ஆரம்பித்தாள். இப்படியே சிரிப்பும் சத்தமுமாய் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஒரு சிறு நட்புணர்வு வளரத் தொடங்கியிருந்தது.

மணி 7:30 ஆனது. மழை சற்று ஓய்ந்திருந்தது. “சரிங்க. மழை நின்னுடுச்சு. நான் கிளம்பறேன்” என்றாள் ஜெயா. அதற்குள் மழை நின்றுவிட்டதே என்று தன் அதிர்ஷ்டத்தை எண்ணி பெருமூச்சு விட்டவனாக, “சரிங்க. டைம் நல்லா வேகமா போயிடுச்சு. மணி 7:30 ஆனதே தெரியல. தேங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்” என்றான் கார்த்திக். “வெல்கம் கார்த்திக். அப்பறம் பாப்போம்” என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் உட்கார்ந்து கிளம்பினாள் ஜெயா.

கார்த்திக்கும் அவனுடைய பைக்கில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். அவன் கிளம்பி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, மறுபடியும் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது. “அடடா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மழை வந்திருக்கக் கூடாதா” என்று நினைத்தபடியே மழைக்கு ஒதுங்க ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே அவனுடைய வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அவன் கண்களுக்கு, சற்று தொலைவில் ஒரு மரம் இருப்பது தென்பட்டது. அருகே சென்று பார்த்தால் அதே சிவப்பு நிற ஸ்கூட்டியும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

“ஹாய் கார்த்திக். இன்னிக்கு மழை நம்மள விடாதுன்னு நெனக்கிறேன்” என்றாள் அந்த மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்த ஜெயா. மறுபடியும் அந்த குரலைக் கேட்ட கார்த்திக் முகத்தில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி. மழைக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அந்த மரத்தருகில் சென்றான் கார்த்திக்.

மழை வலுக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *