ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 25,885 
 

பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்…

எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, ‘குளிருதே… குளிருதே… உடம்பெல்லாம் உதறுதே…’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள்,

‘நெஞ்செல்லாம் சிதறுதே… நீ வேணும்னு கதறுதே…’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்).

நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன்.

ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது நம் ஊரில் ரொம்பக் கஷ்டம். வீட்டில் நம் நலன் கருதி செய்யச் சொல்லும் விஷயங்களை, நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் செய்தே ஆகவேண்டும். எனவே, இப்போது நான் என் அம்மா – அப்பாவுடன் ஜோசியர் முன்பு உட்கார்ந்திருக்கிறேன்.

எனது ஜாதகக் கட்டங்களை உற்று நோக்கிய ஜோசியர், என் முகத்தைப் பார்த்துவிட்டு ‘ஒண்ணும் தேறாது’ என்பதுபோல் உதடுகளைப் பிதுக்கினார். பிறகு, ஜாதகத்தில் விரல் வைத்து மேற்கு நோக்கி நகர்த்திக்கொண்டே சென்றவர், டக்கெனத் திரும்பி மேற்குத் திசையைப் பார்த்தார். கைவிரல்களை விரித்து ஏதோ கணக்குப் போட்டுவிட்டு, எங்களை உற்றுப் பார்த்தார்.

‘என்ன ஜோசியரே… பையனைப் பத்தி ஏதாச்சும் தெரியுதா?’ என்றார் அப்பா.

‘ம்… பையன் பி.இ படிச்சிருக்கான். சரியா?’ என்றவுடன் என் அம்மா-அப்பா இருவரும் ஜோசியரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள்.

என் அப்பா, ஜோசியரின் கையை ஒருமுறை தொட்டுக் கும்பிட்டுக்கொண்டார். அம்மா என் காதில் கிசுகிசுப்பாக, ‘நான் சொல்லல சரவணா… இவரு எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைப்பாரு!’ என்றாள்.

நான் எரிச்சலுடன், ”அம்மா… தமிழ்நாட்டுல தடுக்கி ஒரு பையன் மேல் விழுந்தா, அவன் பி.இ முடிச்சிருப்பான். இல்லை பி.இ படிச்சிட்டு இருப்பான். இல்லைன்னா… கூடிய சீக்கிரம்

பி.இ படிப்பான். இதைச் சொல்ல எதுக்கும்மா ஜோசியர்?’ என்றேன் மெதுவாக.

ஜோசியரிடம், ‘சார்… பையன் பி.இ முடிச்சு ரெண்டு வருஷம் ஆவுது. இன்னும் வேலையே கிடைக்கலை. சும்மா கம்ப்யூட்டர் க்ளாஸ் போய்ட்டு வந்துட்டிருக்கான். அதான் வேலை எப்ப கிடைக்கும்னு கேட்கிறதுக்காக வந்தோம்’ என்றார் அப்பா.

‘வேலையை விடுங்க… அதைவிட ஒரு பெரிய பிரச்னை இருக்கு.’

‘என்ன பிரச்னை?’

‘பையன் ஜாதகத்துல, இப்ப சுக்கிரன் தசா புத்தி நடந்துக்கிட்டிருக்கு. அதனால இப்ப கல்யாண யோகம்தான் உடனே தெரியுது.’

‘அப்படியா?’ – சந்தோஷத்துடன் கூறிய என்னை, அம்மாவும் அப்பாவும் முறைத்தனர்.

‘இவர் ஜாதகப்படி, பொண்ணு இங்கே இருந்து மேற்கே 48 மைல் தூரம். அதாவது கேரளா பொண்ணு.’

‘கரெக்ட்டா கேரளா பொண்ணுனு எப்படிச் சொல்றீங்க?’

‘இங்கே இருந்து மேற்கே 48 மைல்னா தமிழ்நாடு தாண்டி, பாலக்காடு மாவட்டம் வருது. பையனுக்கு போன ஜென்மத்துல பாலக்காட்டுல ஏதோ லிங்க் இருக்கு’ என்றார் ஜோசியர்.

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்இதைக் கேட்ட அப்பா வேகமாக, ‘போன ஜென்மத்துல என்ன… இந்த ஜென்மத்துலயே லிங்க் இருக்கு. இவ…’ என, என் அம்மாவை நோக்கி கையைக் காண்பித்து, ‘குருவாயூரப்பனோட தீவிர பக்தை. இவ நிறைமாசமா இருக்கிறப்ப, குடும்பத்தோடு குருவாயூர் போனோம். அப்ப திடீர்னு பிரசவ வலி வந்து, பாலக்காடு மாதவியம்மா ஆஸ்பத்திரியிலதான் இவன் பிறந்தான்’ எனக் கூற, ஜோதிடர் முகத்தில் ‘நான் சொல்லல…’ என்பதுபோல் ஒரு மலர்ச்சி.

அப்பா, அம்மாவிடம் முணுமுணுப்பாக… ‘நம்மூர்ல இவ்ளோ சாமி இருக்கிறப்ப கேரளா சாமியைக் கும்பிட்டல்ல… இப்பப் பாரு…’ என்றார்.

‘இவரு காதலால பெரிய பிரச்னை வெடிச்சு… அடிதடி, தகராறுல போய் முடியும்’ என்றார் ஜோசியர் அதிரடியாக.

அம்மா, ‘அதனால பையன் உயிருக்கு ஏதாச்சும் ஆபத்து…’ என இழுத்தாள்.

அப்பா கோபமாக, ‘நீ ஏன்டி இதுக்கு பையன் உயிரை இழுக்குற? அவன் பச்ச மண்ணு…’ என என்னைப் பாசத்துடன் நோக்க, என் மனம் நெகிழ்ந்துவிட்டது.

ஜோசியர், ‘சேச்சே… பையன் உயிருக்கு எல்லாம் ஒரு ஆபத்தும் இல்ல…’ எனக் கூற, அப்பாவின் முகம் நிம்மதியானது. ஜோசியர் தொடர்ந்து ‘பையனோட அப்பா உயிருக்குத்தான் ஆபத்து’ எனக் கூற, ‘ஆ..!’ என அலறினார் அப்பா.

ஆட்டோவில் நாங்கள் அனைவரும் மௌனமாக வந்துகொண்டிருந்தோம். அம்மா ஜன்னல் பக்கம் திரும்பி, கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

‘அம்மா… நீ ஏன் அழுவுற? நம்ம கேரளா பார்டர்ல இருக்கோம். ஊருல பாதி பொண்ணுங்க மலையாளப் பொண்ணுங்கதான். ஜோசியர் சும்மா குன்ஸா அடிச்சுவிடுறாரும்மா’ என்றேன்.

‘லவ் பண்ணாக்கூட பரவாயில்லை. அதனால உங்க அப்பா உயிருக்கு ஆபத்துனு சொல்றாங்களே…’ என்ற அம்மாவை, அப்பா காதலுடன் பார்த்தார்.

தொடர்ந்து அம்மா, ”உங்க பேர்ல எடுத்திருக்கிற எல்.ஐ.சி பாலிசிக்கு, கடைசி ரெண்டு டியூ கட்டாமலே இருக்கு. முதல்ல நாளைக்கு அதைப் போயி கட்டுங்க. அப்புறம் ‘பாலிசி செல்லாது’னு சொல்லிடப்போறான்’ என்றபடி கண்ணீருடன் தாலியை எடுத்து, கண்களில் ஒற்றிக்கொள்ள, அப்பா ‘அடிப்பாவி’ என்பதுபோல் பார்த்தார்.

மறுநாள் காலை. வேகமாக வீட்டுக்குள் நுழைந்த அம்மா, ‘ஏங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?’ என்றாள்.

‘என்ன?’ என்றார் அப்பா அசுவாரஸ்யமாக.

‘எதிர்வீட்டுல புதுசா ஒரு மலையாளி வந்திருக்காங்க. அவங்களுக்கு நல்ல அழகா, தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கு’ என்றபோது என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்தேன். ‘காந்தியைச் சுட்டுட்டாங்க’ என்ற தகவல் கேட்டவுடன், நேருவின் முகம் இப்படித்தான் அதிர்ச்சி அடைந்திருக்கும்.

அப்போது எதிர்வீட்டுக்குள் இருந்து ஸ்பீக்கரில் செண்டை மேளம், கொம்பு ஊதும் வாத்திய ஒலி கேட்க… அப்பா முகத்தில் பீதியுடன், ‘இது என்னடி சத்தம்… சாவு வீட்டுல சங்கு ஊதுற மாதிரி?’ என்றார்.

‘அது சங்கு இல்லைங்க. கொம்பு…’ என்றாள் அம்மா.

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்2அரை மணி நேரம் கழித்து காலிங் பெல் ஒலிக்க, அப்பா எழுந்துபோய் கதவைத் திறந்தார். வெளியே ஒல்லியாக, உயரமாக, வழுக்கைத் தலையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் அப்பா வைப் பார்த்து, ‘நமஸ்காரம்.

எதிர் வீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்கோம். என் பேரு கிருஷ்ணன் நாயர்’ என்றவுடன் அப்பாவின் முகம் இருண்டது.

கிருஷ்ணன் நாயர் வாசல் பக்கம் திரும்பி, ‘உள்ளே வரூ…’ என அழைக்க, அப்போதுதான் கவனித்தோம் படிகளுக்குக் கீழ், தெருவில் ஒரு பெண்மணி தலையில் லேசான நரைமுடியுடன், கேரள பாணி சந்தன நிறச் சேலை உடுத்தி நின்றிருப்பதை. அவர் அருகில் இருந்த இளம்பெண்ணை ‘அருகில் ஓர் இளம்பெண்’ என மூன்றே வார்த்தைகளில் சொன்னால், அது அந்தப் பெண்ணின் அழகுக்கு இழைக்கப்படும் மகத்தான அநீதி.

கடவுள், தான் இத்தனை யுகங்களில் கற்ற அத்தனை படைப்புத்திறனையும் அவளது முகத்தில் காட்டியிருந்தார்.

சீஸ் மீது லேசாக சாஸை ஊற்றியதுபோல் பொன்னிற நெற்றியில் தீற்றலாகக் குங்குமம். மையிட்ட அ…க…ன்…ற விழிகள். அவளின் இடது கன்னமும் ஈர உதடுகளும் இணையும் புள்ளியில் ஒரு மச்சத்தை வைத்த கடவுள்தான் எவ்வளவு மகத்தான கலைஞன்!

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். அனைத்துக் காதலிலும் காதலுக்குப் பிறகுதான் பிரச்னை வரும். ஆனால் என் காதலில், காதலுக்கு முன்பே ஜோசியர் செக் வைத்திருக்கிறார். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், அப்பா நம்புவதுதான் பிரச்னை.

படியேறி வந்த அவர்களை, ‘இது என் மனைவி தேவிகா… இது என் பொண்ணு கார்த்திகா’ என அறிமுகப்படுத்திவைத்தார் கிருஷ்ணன் நாயர்.

என் தங்கை பூஜா, ‘வாங்க… உள்ள வாங்க…’ என அவர்களை அழைக்க… அம்மா, பூஜாவை முறைத்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், நான், ‘உட்காருங்க…’ எனக் கூற, அப்பா என் காலில் ஓங்கி மிதித்தார்.

‘நான் ரயில்வேஸ்ல வொர்க் பண்றேன். கோயம்புத்தூர்ல இருந்தேன். இப்ப இங்க மாத்திட்டாங்க’ என்றார் அப்பாவை நோக்கி.

‘நான் தாலுக்கா ஆபீஸ்ல சூப்பரின்டெண்டன்ட்டா இருக்கேன்.’

‘சந்தோஷம். பையன் என்ன பண்றார்?’ என்றார் என்னைப் பார்த்தபடி.

‘பி.இ படிச்சிட்டு, ஜாபுக்கு ட்ரை பண்ணிட்டிருக்கான்.’

‘என் பொண்ணு பி.இ ஃபைனல் இயர்’ எனக் கூற, பூஜா ‘தமிழ் நல்லா பேசுறீங்க?’ என்றாள்.

‘இருபத்தஞ்சு வருஷமா தமிழ்நாட்டுலதான் வேலை செய்றேன். அதனால எங்க வீட்டுல எல்லோருக்கும் தமிழ் அத்துப்படி. சொந்த ஊரு பாலக்காடு பக்கத்துல ஒரு கிராமம்’ என்றார்.

உடனே நான் வேகமாக, ‘சார்… நான் பிறந்ததுகூட பாலக்காடு மாதவியம்மா ஆஸ்பத்திரியிலதான்’ என்றேன்.

‘அப்படியா? என் பொண்ணும் அதே ஆஸ்பத்திரியிலதான் பிறந்தா. என்ன ஒற்றுமை பாருங்க… இவ கார்த்திகை நட்சத்திரத்துல பிறந்தா. அதனாலதான் ‘கார்த்திகா’னு பேர் வெச்சோம்.’

‘அய்யோ… நானும் கார்த்திகை நட்சத்திரத்துலதான் சார் பிறந்தேன்’ என்றேன் உற்சாகமாக.

‘நீங்க ரொம்ப நெருங்கிட்டீங்க’ என, என் கையைப் பிடித்துக் குலுக்கிய கிருஷ்ணன் நாயர், ‘எப்படி எல்லாம் பொருந்திவருது பாருங்க…’ என அப்பாவிடம் சொல்ல, அவர் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணன் நாயர் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பினார்.

அவர்கள் படி இறங்கிச் செல்ல… பூஜா, கார்த்திகாவைப் பார்த்தபடி, ‘அம்மா… சேட்டத்தி சூப்பரா இருக்காங்கள்ல?’ என்றாள்.

‘ஆமாம். ‘சேட்டத்தி’ன்னா?’

‘மலையாளத்துல அண்ணியை

‘சேட்டத்தி’னு சொல்வாங்க’ என்ற பூஜாவை, அப்பா எரிப்பதுபோல் பார்த்தார்.

தமிழ் வருடப்பிறப்பு.

நாங்கள் குடும்பத்துடன் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, அங்கே கிருஷ்ணன் நாயரும் குடும்பத்துடன் வந்திருந்தார். சந்நிதியில், எங்களுக்கு எதிர்வரிசையில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

கார்த்திகா, லட்சம் கார்த்திகை தீபங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பதுபோல் பளிச்சென இருந்தாள். கேரளா வயசுப் பெண்கள் அணிந்திருக்கும் நீண்ட சந்தன நிறச் சட்டையும் பட்டுப்பாவாடையும் அணிந்துகொண்டு, கோயிலில் இருந்த திருமணம் ஆகாத பக்தர்களைக் கவிஞர்களாக்கிக்கொண்டிருந்தாள். நெற்றியில் சந்தனம், சந்தனத்துக்குக் கீழ் அவள் சற்று முன் வைத்த குங்குமம் சிந்தி… அவள் பொன்னிற மூக்கில் லேசாகத் தெளித்தாற்போல் சிதறி இருந்தது. என்னைப் பார்த்தவுடன் அவள் கண்களில் ஒரு தனி வெளிச்சம். ‘ஹாய்…’ என்பதுபோல் அவள் கையை ஆட்ட, நானும் பதிலுக்குக் கையைத் தூக்கியபோது, அப்பா என் கையைப் பிடித்துக் கீழே இறக்கிவிட்டார். அர்ச்சகரிடம் பூ வாங்கிக்கொண்டு நாங்கள் நகர்ந்தோம்.

கிருஷ்ணன் நாயர் அப்பாவை நோக்கி வந்து, ‘என்ன சார்…’ எனப் பேச ஆரம்பிக்க, நாங்கள் சந்நிதியைச் சுற்றுவதற்காக முன்னால் நடந்தோம். எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கார்த்திகா, அர்ச்சகர் கொடுத்த பூவை தலையில் வைத்தபடி நடக்க, பூ நழுவி கீழே விழுந்தது. நான் ‘ஹலோ… எக்ஸ்கியூஸ் மீ’ என கார்த்திகாவை அழைத்தேன்.

‘பூ கீழே விழுந்துருச்சு’ என, நான் அந்தப் பூவை எடுத்து கார்த்திகாவிடம் நீட்டினேன்.

‘தேங்க்ஸ்’ என்றபடி பூவை வாங்கியபோது அவளின் விரல் என் விரல்களில் தீண்ட, எனக்குச் சிலிர்த்துப்போனது. அப்போது என் அருகில் வந்த அப்பா, கார்த்திகா என்னிடம் இருந்து பூவை வாங்குவதைக் கண்டு அதிர்ச்சியுடன், ‘என்ன நடக்குது இங்கே?’ என்றார்.

‘ஒண்ணும் இல்லை அங்கிள். தலையில இருந்து பூ கீழே விழுந்துருச்சு. எடுத்துத் தந்தார்’ என்றாள் கார்த்திகா.

‘இவ்ளோ பெருசா வளர்ந்திருக்க… அறிவு இல்லை உனக்கு? வயசுப் பையன் தர்ற பூவை தலையில வெச்சுக்கலாமா? அதை இங்க தா…’ என அந்தப் பூவை வாங்கிய அப்பா, அம்மாவிடம் ‘இந்தா… இதை நீ வெச்சுக்க. உன் பூவைத் தா…’ என அம்மா கையில் இருந்த பூவை வாங்கி, கார்த்திகாவின் கையில் கொடுத்தார். கார்த்திகா ஒன்றும் புரியாமல் பூவை தலையில் வைத்தபடி நகர்ந்தாள்.

நாங்கள் சந்நிதியைவிட்டு வெளியே வந்தோம். எங்கள் பின்னாலேயே வந்த கிருஷ்ணன் நாயர், ‘எங்களுக்கு இன்னைக்குக் கல்யாண நாள். அதுக்காக வந்தோம். நாளைக்கும் வரணும். உங்களுக்கு இன்னைக்கு வருஷப் பிறப்பு; எங்களுக்கு நாளைக்கு வருஷப் பிறப்பு. தமிழுக்கும் மலையாளத் துக்கும் நெருங்கிய கனெக்‌ஷன் இருக்கு’ என்றார்.

‘அதனால எல்லாம் தமிழனும் மலையாளியும் ஒண்ணாகிட முடியாதுங்க’ என்றார் அப்பா.

‘என்னங்க இப்படிச் சொல்றீங்க? நீங்கதான் மலையாளினா வெறுப்பா பேசுறீங்க. நம்ம டைரக்டர் பாரதிராஜா மகன், ஒரு மலையாளிப் பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?’ என்றார்.

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்3இப்போது பூஜா, ‘அவ்வளவு ஏன்… தமிழ் டைரக்டர் விஜய், மலையாளப் பொண்ணு அமலா பாலைத்தானே ரீஸன்ட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு’ என்றாள்.

அம்மாவும் தன்னை மறந்து, ‘அங்கே எல்லாம் ஏன் போறீங்க? நம்ம முக்கு வீடு முருகேசன் மகனே மலையாளப் பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்’ எனக் கூற, பல்லைக் கடித்துக்கொண்டு அம்மாவை ஆத்திரத்துடன் பார்த்த அப்பாவின் முகத்தில் தீவிர சிந்தனை.

நொடிப்பொழுதில் சடசடவென மழை பொழியத் தொடங்க, நான் வேகமாக அந்த குல்மொஹர் மரத்தடியில் ஒதுங்கினேன். சாலையை அலட்சியமாகப் பார்த்த எனக்கு, இன்ப அதிர்ச்சி. மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியில் வேகமாக அந்த மரத்தடியை நோக்கி வந்தாள் கார்த்திகா. அவள் வண்டியை நிறுத்திவிட்டு மரத்தடிக்கு வந்து நின்ற பிறகுதான், என்னைக் கவனித்துவிட்டு ”ஹாய்!’ என்றாள்.

அவள் கன்னங்களில் தங்கத் தகட்டில் விழுந்த வைரத் துகள்கள்போல் மழைத்துளிகள். ஜோசியரின் வார்த்தைகள், அவளின் அழகுக்கு முன்னால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்தன. இதுபோல் தனியாகப் பேசும் வாய்ப்பு அரிது. அவளை நன்கு இம்ப்ரஸ் பண்ணும் முடிவோடு பேச்சைத் தொடங்கினேன்.

‘எனக்கு மலையாளின்னா ரொம்பப் பிடிக்கும்.’

‘மலையாளியைப் பிடிக்குமா… மலையாளப் பொண்ணுங்களைப் பிடிக்குமா?’ என அவள் கேட்க, நான் ‘என்னைப் பொறுத்தவரைக்கும் ‘மலையாளி’ன்னாலே மலையாளப் பொண்ணுங்கதான்’ எனக் கூற, உலகின் மிக அழகான சிரிப்பை அவள் உதிர்த்தாள். அது சிரிப்பு அல்ல… சிம்பொனி.

‘நீங்க பேசறப்ப, நடுநடுவுல ‘அய்யே… ஓ… என்ட குருவாயூரப்பா…’ இந்த மாதிரி வார்த்தைங்களை போட்டுப் பேசுங்க. அப்பதான் ஒரு மலையாள எஃபெக்ட் கிடைக்கும்’ என்றேன்.

‘அய்யே… எந்தா இது?’ என கார்த்திகா கூற, நான் ”ஆஹா… கவிதை… கவிதை!’ என்றேன். மீண்டும் சிம்பொனி.

கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, ‘அப்புறம், மலையாளப் பொண்ணு தவிர, வேற எந்த மாதிரி பொண்ணுங்களைப் பிடிக்கும்?’ என்றாள் கார்த்திகா.

நான், ‘இந்த மாதிரி மழை நீரை கையில பிடிச்சு விளையாடுற பொண்ணுங்களைப் பிடிக்கும்’ என்றவுடன் சட்டெனக் கையைப் பின்னுக்கு இழுத்த கார்த்திகா, புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள்.

‘அப்புறம்… உதட்டுக்குள்ள சிரிப்பை அடக்கிக்கிட்டு முறைக்கிற பொண்ணுங்களையும் பிடிக்கும்.’

‘ஏய்!’ என அவள் வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள, நான் ‘வெட்கத்தோடு முகத்தைத் திருப்பிக்கிற பெண்களைப் பிடிக்கும்’ என்றேன்.

‘ஸ்டாப் இட்!’ என்ற கார்த்திகாவின் முகம் நிறைய சிரிப்பு.

‘உங்களுக்கு ரொம்பத் தைரியம்’ என்ற கார்த்திகா, கையை நீட்டிப் பார்த்துவிட்டு, ‘மழை விட்டுருச்சு. நான் கிளம்புறேன்’ என வண்டியில் ஏறினாள். அப்போது மரத்தில் இருந்து இரண்டு சிவப்பு பூக்கள், அவள் தலை மீது விழுந்து, அப்படியே அவள் கூந்தலில் தொற்றிக்கொண்டன.

‘எனக்கு ‘இன்னும் கொஞ்ச நேரம் மழை

பெஞ்சிருக்கலாம்’னு தோணுது’ என்றேன்.

அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்தாள். கிளம்பும்போது, ‘எனக்கும் ‘இன்னும் கொஞ்ச நேரம் மழை பெஞ்சிருக்கலாம்’னு தோணுது’ என்றபடி சென்றாள்.

நான் உற்சாகத்துடன் அவள் சென்ற திசையைப் பார்த்தேன். கார்த்திகா தெருமுனையில் திரும்பும்போது தமிழ் சினிமாவில் எல்லா கதாநாயகிகளும் செய்யும் அந்தக் காரியத்தைச் செய்தாள். ஆம்! திரும்புவதற்கு முன்பு என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

மறுநாள் மாலையும் நன்கு மழை பெய்துகொண்டிருந்தது. தம்மடித்துவிட்டு வரலாம் எனக் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரம் சென்றதும் மனதில் சந்தோஷ மின்னல். கார்த்திகா, எனக்கு முன்னால் குடையுடன் சென்றுகொண்டிருந்தாள். சட்டென ஒரு முடிவெடுத்த நான், அருகில் இருந்த நாடார் கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி… இந்தக் குடையைக் கொஞ்சம் வெச்சுக்கங்க’ எனக் கொடுத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நடந்தேன்.

அவளை நெருங்கியவுடன் ‘ஹலோ’ என்றேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.

‘நம்ம சந்திக்கிறப்ப எல்லாம் மழை பெய்யுது’ என்றேன்.

‘இல்ல… மழை பெய்யிறப்ப எல்லாம் நாம சந்திக்கிறோம். ஏன் நனையுறீங்க… உள்ள வாங்க?’ என்றாள் சுற்றிலும் பார்த்தபடி. நான் குடைக்குள் நுழைந்தேன். மழைச்சாரல் முகத்தில் விழ, குடைக்குள் நெருக்கமாகத் தெரிந்த கார்த்திகாவை ரசித்தபடி, ‘மழையில எங்கே?’ என்றேன்.

‘போன் ரீசார்ஜ் பண்ண. நீங்க எங்கே… தம்மடிக்கவா? அநாவசியமா பொய் சொல்லாதீங்க. நீங்க மொட்டைமாடியில தம்மடிக்கிறதைப் பார்த்திருக்கேன்’ என்றபடி கார்த்திகா தன் கூந்தலை முன்னால் தூக்கிப் போட்டபோது, அவள் கூந்தல் நுனி ஈரம் என் கன்னத்தில் உரசிவிட்டுச் சென்றது.

‘மழை பெய்யிறப்ப உங்களுக்கு என்னங்க தோணும்?’ என்றேன்.

‘ம்… மழை பெய்யிறப்ப ‘டி.வி.டி-யில ‘சிங்கம்’ படம் பார்ட் ஒண்ணும், பார்ட் டூ-வும் சேர்ந்த மாதிரி பார்க்கணும்’னு தோணும்’ என்றவளின் முகத்தில் குறும்புச் சிரிப்பு.

‘என்னது!’ என அதிர்ந்த நான், சற்று சமாளித்துக்கொண்டு, ‘ஓ.கே… வேற என்ன தோணும்?’ என்றேன்.

‘ம்… தெலுங்குல பாலகிருஷ்ணா நடிச்ச ‘லயன்’ படம் பார்க்கலாம்னு தோணும்’ என்றாள்.

‘நீங்க சொல்றப்பவே காதுக்குள்ள யாரோ ‘டேய்…’னு அலர்ற மாதிரி இருக்குங்க. நீங்க ரொம்ப வயலென்ட்டான ஆளா இருக்கீங்க. கொஞ்சம் சாஃப்ட்டா ரொமான்டிக்கா எதுவும் உங்களுக்குத் தோணாதா?’

‘எனக்குத் தோண்றது இருக்கட்டும். உங்களுக்கு என்ன தோணும்?’

‘எனக்கு…’ என அவளை உற்று நோக்கிய நான், ‘இந்த மாதிரி அழகான பெண்ணோடு ஒரே குடைக்குள் நடந்துபோறது பிடிக்கும்’ என்றவுடன் அவள் சட்டென நின்றாள். சில விநாடிகள் உற்றுப் பார்த்தவள், ‘உங்க கடை வந்துருச்சு’ என, கண்களால் காட்டினாள்.

வேறு வழியின்றி நான் சிகரெட் கடையை நோக்கி நடந்தேன். ‘ஒரு நிமிஷம்’ எனப் பின்னால் இருந்து கார்த்திகாவின் குரல் கேட்க, திரும்பினேன். அவள் தன் முகத்தை, பயமுறுத்துவதுபோல் வைத்துக்கொண்டு, ‘சட்டபூர்வமான எச்சரிக்கை: புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும். புகைப்பழக்கம் உயிரைக் கொல்லும்’ என அழகாகக் கூற, எனக்குக் கொஞ்சம்கூட பயமே வரவில்லை.

ஞாயிற்றுக்கிழமை. அம்மா துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் காயவைக்க செல்ல, அப்பா ‘ஏய்… இன்னைக்கு துணியை எல்லாம் எதிர்வீட்டு வாசற்கொடியில காயப்போடுடி’ என்றார்.

‘ஏங்க?’ என்ற அம்மா, சட்டென விஷயத்தைப் புரிந்துகொண்டு துணிகளை எதிர்வீட்டு வாசலில் காயப்போட்டாள். நான் அப்பாவிடம், ‘கொஞ்சமாச்சும் மனசாட்சியோடு நடந்துக்கங்க. நம்ம காயப்போட்டா அவங்க எங்க துணியைக் காயப்போடுவாங்க?’ என்றேன்.

‘அதை அந்த நாயர் வந்து கேட்பான்ல? அப்ப வெச்சுக்கிறேன் கச்சேரியை’ என்றார் அப்பா.

அப்பா எதிர்பார்த்தபடியே ஒரு மணி நேரம் கழித்து காலிங் பெல் அடித்தது. வெளியே இரண்டு வாளிகளில் துணிகளுடன் கார்த்திகாவும் கிருஷ்ணன் நாயரும் நின்றிருந்தனர். கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்பதற்கு முன்பே அப்பா எடுத்தவுடனேயே எகிறி அடித்தார்.

‘அப்படித்தான்யா உங்க வீட்டு வாசல்ல காயப்போடுவோம். இப்ப என்னய்யா வேணும் உனக்கு?’ என்றார்.

நான் கிருஷ்ணன் நாயரை பரிதாபத்துடன் பார்த்தேன்.

‘சார்… நான் அதைப் பத்தி ஒண்ணும் கேட்கவே இல்லை. அங்கே காலை வெயில் அடிக்கும்னு போட்டிருப்பீங்க. ‘நாங்க வேணும்னா உங்க வீட்டு வாசல்ல துணியைக் காயப்போட்டுக்கலாமா?’னு கேட்க வந்தேன். அவ்வளவுதான்.’

‘யோவ் நாயரே… நான் காயப்போட்டா,

நீ பதிலுக்கு எங்க வீட்டுல காயப்போடுவியா? இந்த வேலை எல்லாம் இங்கே வேணாம்’ என்றார் அப்பா.

பதிலுக்கு கிருஷ்ணன் நாயர் கோபப்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ, ‘பரவாயில்லைங்க… நாங்க அப்புறம் காயப் போட்டுக்கிறோம். கார்த்திகா நீ வாம்மா’ என நகர்ந்தார்.

இதை எதிர்பார்க்காத அப்பா, சண்டையை மேற்கொண்டு எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல், ‘என்ன நான் பேசிக்கிட்டேயிருக்கேன். மரியாதை இல்லாம போய்கிட்டே இருக்க’ என்றார்.

இதற்கும் கிருஷ்ணன் நாயர் கோபப்படாமல், ‘சரி நிக்கிறேன். சொல்லுங்க’ என்றார்.

அம்மாவிடம் அப்பா, ‘என்னடி இவன்… எவ்ளோ அடாவடியா பேசினாலும் சண்டைக்கே வர மாட்டேங்கிறான்?’ என்றவர், ‘டேய்… கொஞ்சமாச்சும் சண்டை போடுடா’ என முனகியபடி படிகளில் அவரை அடிப்பதுபோல் வேகமாக இறங்கினார்.

நான் அப்பாவின் தோள்களைப் பிடித்து நிறுத்தினேன். அப்போது கண்களில் நீர் ததும்ப கார்த்திகா, ‘சார்… எங்க அப்பா ஏதாச்சும் தெரியாமல் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க’ எனக் கூற, அப்பா அமைதியானார்.

அன்று மாலை. அர்ச்சனைக் கூடையுடன் கார்த்திகா கோயிலுக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, நான் வேகமாக அவள் பின்னாலேயே சென்றேன். என்னைப் பார்த்த கார்த்திகாவிடம், ‘உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். பார்க்ல போய்ப் பேசலாமா?’ என்றேன்.

பார்க்கில் கார்த்திகா, ‘உங்க அப்பாவுக்கு எங்களைக் கண்டாலே பிடிக்கலை. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்க?’ என்றாள்.

‘எங்க அப்பா பண்ணதுக்கு ஸாரி கேட்கத்தான் வந்தேன்.’

‘நாங்க என்ன தப்பு பண்ணோம்? ஏன் தேவையே இல்லாம உங்க அப்பா எங்க மேல வெறுப்பைக் கொட்டுறார்? இந்த மாதிரி எங்களை யாரும் அசிங்கப்படுத்தினது இல்லை’ என்ற கார்த்திகா, மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

‘கார்த்திகா… என்னங்க நீங்க?’ என நான் அவள் கைகளைப் பிடித்து ஆறுதலாக அழுத்த, அவள் அப்படியே என் தோளில் சாய்ந்து சத்தமாக அழுதாள்.

அதற்கு மேல் தாங்க முடியாத நான் அவள் தோளை அணைத்தபடி, ‘கார்த்திகா… ஐ லவ் யூ’ என்றேன்.

ஒரு விநாடி முகம் மலர்ந்த கார்த்திகா சட்டென முகம் மாறி, ‘இப்பவே உங்க அப்பாவுக்கு எங்களைக் கண்டா ஆக மாட்டேங்குது. இதுல லவ் வேற பண்ணா அவ்ளோதான்’ என, என்னிடம் இருந்து நகர்ந்துகொண்டாள்.

‘அய்யோ… உங்களைப் பிடிக்காம எல்லாம் இல்லைங்க, என்ன பிரச்னைன்னா…’ என்ற நான் ஜோசியர் சொன்ன விவரத்தைச் சொல்லி முடித்தேன். சில நிமிடங்கள் அமைதியாக இருந்த கார்த்திகா சட்டென எழுந்தபடி, ‘அப்படின்னா நிச்சயமா நான் உங்களை லவ் பண்ண முடியாது’ என்றாள்.

‘ஏங்க… என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?’

‘உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கும் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனா, உங்க அப்பா நம்புறார். அதான் முக்கியமான விஷயம். ‘காதலால தன் உயிருக்கு ஆபத்து’னு நம்புறவர் எப்படி நம்ம காதலை ஏத்துக்குவார்? அதுவும் இல்லாம… அவர் அப்படிப் பயப்படுறார்னு தெரிஞ்சும் நம்ம காதலிச்சா, அதைவிட பெரிய சுயநலம் வேற இல்லை. என்னை மன்னிச்சிடுங்க!” என்ற கார்த்திகா, வேகமாக நடந்து சென்றாள்.

மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் கார்த்திகாவின் பின்னால் நடந்து வெளியே வந்த நான் அதிர்ந்தேன். அப்பா எதிர்கடையில் டீ குடித்தபடி எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பா முதலில் என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டுவிட்டுத்தான் பேச ஆரம்பித்தார்.

‘என் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் எப்படிடா அவகூடப் பழக மனசு வருது?’ என்றார்.

‘நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலைப்பா’ என்றேன்.

‘அப்ப நீங்க லவ் பண்ணலையா?’

‘ரெண்டு பேருக்கும் பிடிச்சுத்தான்பா இருக்கு. ஆனா, நான் என் லவ்வ அவகிட்ட சொன்னப்ப, கார்த்திகா என்ன சொன்னா தெரியுமா?’ என்ற நான் கார்த்திகா சொன்ன விஷயத்தைக் கூற, அப்பா மிகவும் ஆச்சர்யத்துடன் எதிர்வீட்டைப் பார்த்தார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்து, எங்கள் வீட்டாரின் சம்மதத்துடன் எனக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் முடிந்து, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. என் அப்பாவும் தன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் பேரக்குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்!

– ஜூலை 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *