”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்ரு கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“ஏன்? என்னாயிற்றூ?”
“நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” என்று படபடபாய் சொன்ன இளைஞனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
‘வண்டி நிறைய தேங்காய்களுடன் ஒருவன் பயணித்துக் கொண்டிருந்தான். வேறு ஊரிலிருக்கும் கடைக்கு தேங்காய்களை அவன் கொடுக்க வேண்டும். அவனுக்கு அந்த ஊருக்கு சரியான வழி தெரியாது. அதனால் விசாரித்து போய்க் கொண்டிருந்தான. அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி வழி கேட்டான். அவனுக்கு வழி சொன்னவர் ஒரு பெரியவர். ஓரு நேர் சாலையைக் காட்டி அந்த வழியாக போனால் முக்கால் மணி நேரத்தில் ஊரை அடைந்துவிடலாம் என்றார். உடனே வண்டியோட்டி நல்ல வேகமாக போனால் இன்னும் சீக்கிரமாக போய்விடலாமா என்று கேட்க, அந்தப் பெரியவர், ‘ இல்லை.வேகமாக போனால் ஒன்றரை மணி நேரமாக்கிவிடும்’ என்று பதில் சொன்னார். வண்டியோட்டிக்கு எரிச்சலாகிவிட்டது. பெரியவர் தன்னை கிண்டலடிக்கிறார் என்று நினைத்தான். வண்டியை வேகமாக கிள்ப்பினான். நல்ல வேகத்தில் வண்டியை ஓட்டினான்.
சாலை கரடு முரடாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் சொன்ன நேரத்துக்கு முன்பாக சென்று விட வேண்டும் என்று வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு திருப்பத்தில் பள்ளம் ஒன்று இருக்க, இவனால் வண்டியை கட்டுப்படுத்த இயலவில்லை.வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்க வண்டி சாய்ந்தது. தேங்காய்கள் சாலையில் சிதறி ஓடின. வேறுவழியில்லாமல் வண்டியை நிறுத்தி சிதறிக்கிடந்த தேங்காய்களையெல்லாம் எடுத்து வண்டியில் போட்டான்.அத்தனையையும் எடுத்து அடுக்க அவனுக்கு அரை மணிநேரம் மேல் ஆகிவிட்டது. அப்போது பெரியவர் எதை குறிப்பிட்டு நேரக் கணக்கு சொன்னார் என்பது அவனுக்கு உரைத்தது.
இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தான் எப்படி வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது புரிந்த்து.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அவசரப்பட்டால் காரியம் ஆகாது.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)