இப்பொழுதெல்லாம் கோவையில் வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கட்டிப் போட்டுத் திருடுவது தினசரி நிகழ்ச்சியாகி விட்டது.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிருந்தாவன் வீதியில் ஒரு வீட்டில் ஆறு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து, கதவை மூடாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரையும், அவர் மனைவியையும் வாய், கைகளைக் கட்டி போட்டு கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
அவருடைய ஒரே மகள் பக்கத்து ரூமில் கதவைச் சாத்திக் கொண்டு கம்பியூட்டரில் மூழ்கி இருந்திருக்கிறாள்.
ஹாலில் திருடர்கள் பீரோ சாவி கேட்டு அப்பாவை மிரட்டிய சத்தம் கேட்டதை வைத்து வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்திருப்பதைப் அவள் புரிந்து கொண்டு அக்கப் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும் பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் சத்தமில்லாமல் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து விட்டாள். செய்தி காட்டுத் தீயாகப் பரவி அவர்கள் வீட்டின் முன் கூட்டம் கூடி விட்டது. அதற்குள் போலீஸும் வந்து விட்டது.
திருடர்கள் பீரோவில் இருந்த நகைகள், ரொக்கம், அந்தம்மா போட்டிருந்த நகைகள் எல்லாம் ஒன்றாக மூட்டை கட்டிக் கொண்டு வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள்.
வெளியில் அதற்காக தயாராக காத்திருந்தவர்கள் பாய்ந்து அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள்.
இதில் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஆச்சரியம் என்னவென்றால், அந்த திருடர்கள் புகுந்த வீட்டில் இரு பக்கமும் தொடர்ச்சியாக வீடுகள் இருந்தன. அதே பிருந்தாவன் வீதியில் இன்று பெரிய பெரிய பதவியில் இருக்கும் வசதி படைத்த அரசியல்வாதிகள் வீடுகள் தனித் தனியாக இருந்தன.
திருடுவதற்கு வசதியாக அமைந்த அந்த இடங்களை எல்லாம் விட்டு விட்டு, ஒரே கும்பலாக இருக்கும் வீடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த வீட்டை ஏன் திருடுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டார்!
அதைச் சொல்லியே அந்தக் கூட்டத்தினரிடம் அந்தப் கேள்வியைக் கேட்டார். அதில் ஒருவன் படித்தவன் போலிருந்தான். அவன் தான் அதற்கு முன் வந்து பதில் சொன்னான்.
“ என்ன சார்!…இப்படி கேட்டிட்டீங்க?….என்ன இருந்தாலும் அவங்க எல்லாம் எங்க இனம் சார்!..அவங்க வீட்டிற்கெல்லாம் திருடப் போனா எங்க வீடுகளில் நாங்களே திருடின மாதிரி இருக்கும்! பணம் படைத்த மக்களை நாங்கள் ஒரு விதத்தில் ‘அப்ரோச்’ செய்வோம்!……அவங்க ஒரு விதத்தில் ‘அப்ரோச்’ செய்வாங்க அது தான் வித்தியாசம்!…” என்று விளக்கம் சொன்னான்.
இன்ஸ்பெக்டர் அவனை அருகில் அழைத்து என்று லத்தியில் விளாசித் தள்ளி விட்டார்.
– குங்குமம் 14-1`2-2015 இதழ்