பட்டறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 1,876 
 
 

(குறுநாவல்)

அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம்.

குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் செய்வதற்கு எல்லாம் அரசாங்க அலுவலகங்களில் எப்போது பஞ்சம் வந்திருக்கிறது.

விடுப்புச்சலுகைப்பயணம். அப்படி ஒரு பயணம் போய் வந்த பின்னே கட்டம் கட்டமாய் குறுக்கும் நெடுக்கும் கோடு போடப்பட்ட சாணி நிற விண்ணப்பத்தை தேடிப்பிடித்துத் தெரிந்தவர்கள் துணைகொண்டு ஏற்ற இறக்கத்தோடு வளைத்து வளைத்து நிரப்பி க்காலத்தே அந்தக்கணக்குப்பிரிவுக்குச் சமர்ப்பிக்கும் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.

பயணச்சீட்டு வாங்க ச்செலவிட்ட பணம் என்கிறவகையில் ஒரு நூறு உரூபாய் மைய அரசாங்கத்திடமிருந்து பெற்றுவிடலாம் என்றால் அதற்கு ப்பயணச்செலவோடு இன்ன பிறவும் கூட்டிப்பார்த்தால் பத்துமடங்குக்கு வந்துவிடும். அது பற்றி எல்லாம் யாருக்குத்தான் என்ன. இப்படியாக இந்த விடுப்புச்சலுகைப்பயணம் எடுத்துக்கொண்டு ஒருவன் ஊர்ச்சுற்றி வந்துதான் தீர வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.

அவனுக்கு சங்கு வளவதுரையனோடு இலக்கிய நட்பு இருந்தது. சங்கு என்னும் பெயரில் ஒரு இலக்கியச்சிற்றிதழை கடலூர் கூத்தப்பாக்கத்திலிருந்து அந்த வளவதுரையன் தான் நடத்திக் கொண்டுவருகிறார். அந்த நண்பனின் மூத்த பையனுக்கு மும்பையில் பெரிய கம்பனி ஒன்றில் வேலை. அவன் சொந்த வீட்டோடு மும்பையில் இருந்தான். அவன் வசதி இத்யாதிகள் கேட்போர் பொறாமைப்படும் அளவுக்குமே இருந்தது. டோம்பிவிலி த்தமிழர்களின் பாலாஜி கோவிலுக்கு அருகே அவனுக்கு மூன்றரைகள் கொண்ட பெரிய வீடு. மும்பைக்கு யாத்திரை போன அவனுக்கும் அவளுக்கும் மும்பையில் வைத்து அந்த நண்பனின் பையன்தான் ராஜோபசாரம் செய்தான். இந்த ஜன்மத்தில் அப்படியொரு அன்பின் மரு உருவத்தை இனி அவன் எங்கே கண்டுபிடிப்பது.. எல்லாவற்றிற்கும் ஒரு ராசி வேண்டும் என்பார்கள். அது இருந்திருக்கலாம். ஆகத்தான் இருவரும் அந்த டோம்பிவிலி யில் மூன்றரை கொண்ட அவ் வீட்டிற்கு விருந்தினராகப் போய்வந்தார்கள்.

அவனுக்கும் அவளுக்கும் மும்பையில் அப்படிபோய்ப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்து செல்லியம்மன் கோவிலிலே கால்பங்குக்கு வரும் அந்த மஹாலட்சுமிக்கோவில், உள்ளூரில் வட்டிக்கு விட்டு தொழில் நடத்தும் சேட்டு ஒருவரின் தலையணை பரப்பிக்கொண்ட அடகுக் கடையை நினைவுக்குக் கொண்டு வரும் சின்ன சித்திவிநாயகர் கோவில், குடல் பிரட்டும் கீக்கிடமானதொரு மீன்பண்ணை, அண்ணாந்து பார்த்து விட்டு அவரவர் தத்தம் வேலையை மட்டுமே கவனிக்கும் ஒட்டும் உறவும் இல்லா நரிமன்முனை, அங்கங்கே எட்டி எட்டி கரையைத்தொட்டுப் பார்க்கும் கருப்புத்தண்ணீர்க் கடல், தேசலாகிப்போன மிருகங்களை இன்னும் விடாமல் இம்சித்து இம்சித்து வருவோரும் போவோரும் ரசிக்க மட்டுமே (அது என்ன ரசனையோ) நிர்வகிக்கப்படும் ஒரு புராதன ஜூ, வேர்த்து விருவிருக்க ச்சென்றுவிட்டு இன்னது இது என்று புரியாமலே தலையை ஆட்டி விட்டு சென்றுதிரும்பும் எலிபெண்டா குகை. அத்தீவுக்குப் போய் வர காய்ந்துபோனதொரு படகுச்சவாரி , மும்பைக்கு ப்புதியதாக வருவோர் முறைத்து முறைத்து ப்பார்க்கமட்டுமே எழுந்துள்ள சிவாஜி முனை, வயிறு பசித்தால் வெல்லம் கரைத்து விடப்பட்டு ஜீவன் என்று ஏதும் இல்லாச் சாம்பார் பரிமாறும் சைவ ஔட்டல்கள், வேறு என்ன மும்பையில் இருக்கிறது. அதுதான் பிடிபடவில்லை. அது இருக்கட்டும் விடுங்கள்.

அவர்கள் தங்கியிருந்த அந்த டொம்பிவிலி வீட்டில் மரக் கட்டில் ஒன்றினை அவள் நோட்டம் விட்டாள். அத்தனை வேலைப்பாடு. அத்தனை அழகு. கட்டிலுக்கு கீழே தள்ளு பலகைகொண்டதொரு அறை. இப்படியும் இப்படியும் அது நகர்ந்து தலையணை போர்வை என எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துக்கொண்டு அப்போதைக்கு அப்போது உறங்குவோர்க்குக் கொடுத்து உதவியது. அம்மரக் கட்டிலின் கச்சிதமான ஒரு கீழ்தள அமைப்பினைப் பார்த்து அவள் அசந்து போனாள். இப்படியொரு வசதியுடன் ஒரு மரக் கட்டில் தன் வீட்டிலும் இருக்கத்தான் வேண்டும் என்று அப்போதே தீர்மானம் செய்துகொண்டாள்.

‘நம்ம வீட்டில் தான் கட்டில் இருக்கே’ அவளுக்குப்பதில் சொன்னான்.

‘இருக்கு. அது இரும்பிலேதான் இருக்கு. தகரம்னு சொல்லணும். உக்காந்தா எழுந்தா டபுக்கு டுபுக்குன்னு ஒரே சத்தம். என்னா நாராசம். கோடையிலே பாத்தா தோசக்கல்லாட்டம் காயும் மழைகாலத்திலே சில்லுன்னு ஆளைக்கொல்லும் என்னா இரும்புக் கட்டிலு. அந்த தலகாணி போர்வயை எல்லாம் வேற எடத்திலதான கொண்டுபோயி வக்கிணும். இங்க பாருங்க தள்ளு கதவு, அப்படியும் இப்படியும் தள்ளுனா போதும் தலகாணி போர்வ சமுக்காளம் எல்லாத்தையும் அசமடக்கி வச்சிடலாம் வேணுங்கிறது எடுத்துக்கலாம். கட்டிலு மேல தூங்குறவன் ஒரு தொந்தரவு இல்லாம அவன் பாட்டுக்குத்தூங்கலாம்.’

‘ஆமாம். அதற்காக அங்க அங்க பார்த்தது எல்லாம் வாங்கிடத்தான் வேண்டுமா’

‘வாங்கிடத்தான் வேண்டும்’

அவள் சொன்னாள். இனி பேசிப்பயன் இல்லை. எத்தனை வேகமாக அவன் வேண்டாம் என்றாலும் அத்தனை வேகமாக அவள் வேண்டும் என்பாள். இது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ராமாயண நாயகன் ராமன் கூட மாய மான் உனக்கு வேண்டும நான் போய் பிடித்து வரட்டுமா என்று சீதாபிராட்டியிடம் கேட்டிருந்தால் அது எதற்கு வீண் வேலை உங்கள் தகுதிக்கு ஒரு சிங்கத்தை அல்லவா நீங்கள் பிடித்துக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லி இருப்பாள், ஆனால் ராமாயணக்கதை வேறு விதமாகத்தானே போகவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது.

மும்பைப்பயணம் முடிந்துஅவன் தன் அலுவலகத்தில் தன் சக நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் சமயம் மரக்கட்டில் ஒன்று வாங்க வேண்டும் என்றான்.

‘அந்த காலத்திலேயே அத வாங்குலயா’ கனமான வினாதான்.

‘வாங்கினேன். அது இரும்புக்கட்டில்’

‘சரிதான். கட்டிலுன்னா அது மரத்தில இருக்கணும்’ என்றான் நண்பன்.

‘அதுதான் பாக்குறேன்’

‘நம்ம கையில ஒரு ஆசாரி இருக்குறான். ஜாமான் வாங்கி குடுத்தம்னா உங்க வீட்டுல வச்சி செய்யச்சொல்லுலாம். கட்டிலுக்குக் கூலி என்னான்னு பேசிக்குவோம்’

‘ரொம்ப சரி’’ மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு..

‘நாம நல்ல மரமா வாங்கி செய்யச்சொன்னா அதனொட தரமே வேறதான்’

‘அது தான் சரின்னு படுது’

‘ஆசாரி நாளைக்கு காலையில உங்கள பாப்பாரு. நான் அனுப்பி வக்கிறேன் சொச்சத்தையும் அவருகிட்ட பேசிக்கிடுங்க’

‘நல்லா வேல தெரிஞ்சி செய்யுற ஆசாரியா இருக்கட்டும்’

‘அப்பிடி தரம் இல்லாத ஆளை நான் அனுப்பிவைப்பனா.சரியாபோச்சி. சாரு என்னப்பத்தி என்னதான் தெரிஞ்சி வச்சி இருக்கிறீங்க. எத்தினி வருஷமா பழகுனாலும் ஒருத்தற ஒருத்தர் புரிஞ்சி வச்சிக்கலன்னா அது எப்படி சொல்லுங்க’

‘அதுக்கு சொல்லுல’

‘பின்ன எதுக்கு அப்படிப் பேசுறீங்க’

‘என்னுமோ சொல்லுணும்னு தோணிச்சி அதான் சொல்லிப்புட்டன்’

‘பேசத்தெரியாத ஆசாமின்னு ஊருக்கே தெரிஞ்சி கெடக்குது. ஒண்ணு குடுத்துட்டு நாலு வாங்கிகறதுதான் உங்களுக்கு வழக்கமா போச்சி’

‘இண்ணைக்கு நேத்து சேதி இல்ல இது’

‘பிரம்ம லிபிக்கு திருத்தம் இல்லே. கெடக்கு விடுங்க. நான் நாளைக்கே ஆசாரிய அனுப்பி வக்கிறன்’
அலுவலக நண்பன் பேச்சை முடித்து வைத்தான்.

அனுக்கு ப்பிரச்சனை இனிமேல்தான் தொடங்கப்போகிறதா, அல்லது சாமர்த்தியமாக ஏதும் செய்து விட்டோமா என்கிற சந்தேகம் வந்தது.

அவன் தன் மனைவியிடம் ஆசாரி வரப்போவதை சொல்லி வைத்தான். சொந்தமாய் ‘மரம் இத்யாதிகள் வாங்கிக்கொடுத்து நாமே ஆசாரி வைத்து கட்டில் செய்யப்போகிறோம்’

‘நம் வீட்டிலேயா’

‘ஆமாம். அதுதான் வலுவா இருக்கும் நல்லாவும் ஒழைக்கும்னு சொல்லுறாங்க’

‘யாரு சொன்னா’

‘ஆபீசு க்காரங்கதான்’ பதில் சொன்னான்.

‘வர்ர ஆசாரி எப்பிடி அவுரு செய்யிற வேல எப்பிடி இருக்கும் எல்லாம் விசாரிச்சிங்களா’

‘அதெல்லாம் விசாரிக்காமலா’ பொய் சொன்னான்.

மறுநாள் காலை வழக்கம்போல் விடிந்தது. சொல்லி விட்டுப்போனபடியே அந்த நண்பன் அனுப்பிய வைத்த ஆசாரி அவன் வீட்டில் காபி சாப்பிடும் நேரத்திற்குச்சரியாக வந்தான்.

‘கட்டிலு செய்யுணும்னு சொல்லி அனுப்பினாரு. நம்ம டெலி போன் ஆபிசுலே வேல பாக்குற இவுறு. நீங்க தானே சாரு அது’

‘கரைக்டா கண்டு பிடிச்சி வந்துட்டீங்க’

‘பின்ன என்ன சாரு பம்பாயி சிங்கப்பூர்னு பட்டணம்னு சுத்தி சுத்தி வேல பாத்து இருக்கேன்’

‘மரம் எங்க வாங்குணும்’ அவன் பிரச்சனையை ஆரம்பித்தான்.

‘வழக்கமா அந்த சேட்டு கிட்டதான் வாங்குறது’.

‘கூட நான் வரணுமா’

‘சரியா போச்சி நீங்க வராம கதை எப்பிடி ஆவுறது. எசமானரு போவாத காரியம் ஏடாகூடம்ல’

‘நான் பத்துமணிக்கு ஆபிசுல இருக்குனுமே’

‘அம்மாம் நாழி அங்க என்னா செய்யுறம்’

‘சரக்க பாக்கறம் கணக்கு வழக்கபாக்கறம் கெளம்புறம் அப்புறம் என்னா வேல இருக்கு’

‘இதுல என்னா வழக்கு அது இதுன்னு’

‘சும்மா பேச்சுக்கு அப்பிடி சொல்லுறது’

‘நான் பயந்துட்டேன்’

‘சும்மா பேசுற வார்த்தையில என்னா இருக்கு. நெருப்புன்னா சுட்டுமா. நீங்க ஆபிசு கெளம்பி வர்ர மாதிரி வாங்க நானு சேட்டு மரவாடில இருக்குறன்’

‘சரி ‘என்றான். ஆசாரி தனக்கு ஏதோ சவுகரியம் செய்துவிட்டதாக அவன் உணர்ந்தான்.

அவன் மனைவி உள்ளிருந்து வெளியே வந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தாள்.

‘என்னா ஆசாரி கட்டிலுன்னா எப்பிடி தலகாணி போர்வ இதுவ எல்லாம் அப்பிடியே கீழயே வச்சிகிற மாதிரி வசதி இருக்குணும்’

‘எப்பிடி சொல்றீங்க’

‘அதான் நான் மும்பையில பாத்தன். அந்த கட்டிலு. அப்பிடியே கட்டில்ல படுத்துக்கற அந்தப் பலகாயுக்குக்கீழ ஒரு ரூம்பு மாதிரி இப்படியும் அப்படியும் தள்ளுறாப்போல ஒரு சொருவு கதவு இருந்துச்சி அது மாதிரிதான் செய்யுனும்’

அவள் முடித்துக்கொண்டாள்.

ஆசாரி எதுவும் பேசாமல் இருந்தான்.

அவன் ஆசாரி முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

பேச்சு ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்ட மாதிரி தெரிந்தது.

‘என்னா பேச்ச க்காணும், நுரையா அடங்கிபோச்சி’’ அவள் ஆசாரியிடம் கேட்டாள்

‘இதுல என்னா இருக்கு எப்பிடி கேக்குறீங்களோ அப்பிடி’

‘சரி’நானு மரவாடியில அய்யாவ பாக்குறன்’

ஆசாரி கிளம்பினான்.

அவனுக்கு ஆசாரி தன் வீடு வந்து கட்டில் பற்றி பேசிய வுடனேயே கட்டிலில் கால் நீட்டி படுத்துக்கொண்டு காற்று வாங்குவதாகவே உணர்ந்தான்.

பத்துமணி அலுவலகத்துக்கு எப்போதும் பத்து நிமிடம் முன்னதாக கிளம்பினால் போதும். அலுவலகம் அவ்வளவு அருகில் இருந்தது. வேலை செய்யும் அலுவலகம் வெகுஅருகில் இருப்ப்து ஒருவனுக்கு எவ்வளவோ சவுகரியம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம் .

அவன் ஒன்பது மணிக்கே புறப்பட்டான். ஒரு பத்தாயிரம் ரூபாயை சட்டைப்பையில் எடுத்துவைத்துகொண்டான். தனது டிவி எஸ் வண்டியை கிளப்பினான். பணம் பையில் இருப்பது தெரிந்தோ என்னவோ வண்டி ஒரே உதையில் ஸ்டார்ட் ஆனது.

கோர்டர்ஸ் வாயிலில் இரும்பு கேட் பெரிய ராட்சசன் கணக்குக்கு இருந்தது. அந்த ஜோடிக்கதவுகள் மூடப்பட்டதே இல்லை. அவன் இங்கு குடி வந்து இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தடவைக்கூட சாத்தி மூடாத ஒரு கதவினை ச்செய்து வைப்பது எதற்கு என்று எண்ணினான். இது அரசாங்க க்கட்டிடம் ஆக இதெல்லாம் சகஜமப்பா என்று முடிவுக்கு வந்து மெயின்ரோடுக்கு ச்செல்லும் கப்பிச் சாலையில் வண்டியைத்திருப்பினான்.
தெரு திருப்பத்தில் வள்ளலார் நகர் என்று எழுதிய சிமெண்ட் பலகை நின்றுகொண்டிருந்தது. அதனில் வள்ளலார் என்ற பெயரை தார் பூசி யாரோ அழித்துவிட முயற்சித்துத் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
வள்ளலாரைப்பிடிக்காதவர்கள்கூட இந்த உலகத்தில் இருப்பார்களா என்ன. யோசித்துக்கொண்டே மெயின் ரோடுக்குச்செல்லும் பாதையில் வண்டியைச்செலுத்தினான்.

பிணம் அறுக்கும் அலுவலகம் வாயிலில் ஒரே கூட்டமாக இருந்தது. எதிரே இருக்கும் பெரிய மருத்துவ மனையின் இன்னொரு பகுதி இது. ஏதேனும் விபத்து நிகழ்ந்து யாரேனும் இறந்துபோயிருக்கலாம்
ஒரு நடுத்தர வயதிருக்கும் பெண் கீழே விழுந்து புரண்டு புரண்டு. அழுதுகொண்டிருந்தாள். செத்த பிணத்திற்கு சாகப்போகிற ஒரு பிணம் அழுகிறது என்று சித்தர்கள் ஆகாயம் பார்த்து பாடிக்கொண்டிருக்கலாம். சாவு சாவுதானே. இழப்பின் வலி சாமான்யமானதுவா என்ன. எதோ அவன் மனம் பேத்திக்கொண்டே இருந்தது.

மெயின் ரோடின் திருப்பத்தில் ஒரு கருமாரிம்மன் கோவில் இருந்தது. அதற்கு முன்பாக வண்டியை நிறுத்தினான். கை யெடுத்துக்கொம்பிட்டான். எல்லாம் நல்ல படி நடக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.’ இப்படி எல்லாம் பிரார்த்தனை செய்வது அறிவு பூர்வமான ஒன்றா என எண்ணிப்பார்த்தான். எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நாம் ஏன் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று எதோ ஏதோ சொல்லிக்கொண்டான்.

தரையில் வீழ்ந்தும் நெடுஞ்சாண் கிடையாகக் கும்பிட்டான். தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப்பார்க்காமல் இருக்கவேண்டுமே என்று குரங்கு மனம் எச்சரித்தது.

என்ன பிரார்த்தனை பலமா இருக்கு என்று யாரேனும் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது..

படேல் மரவாடி விளம்பரப்பலகை முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கினான். சேட்டும் ஆசாரியும் உள்ளே தயாராய் இருந்தார்கள்.

அது என்னவோ தங்கம் இரும்பு சிமென்ட் பெயிண்ட் எல்லாம் இங்கே சேட்டுக்கள் மட்டுமே வைத்து வியாபாரம் செய்கிறார்கள். வாழைப்பழம் பூ வெற்றிலை இட்டலிக்கடை வைக்கமட்டும் வருவதில்லை. எங்கே சுற்றினாலும் இப்படி மட்டுந்தானே இருக்கிறது கதை.

‘வாங்க சார்’ சேட்டு உள்ளே அழைத்தார்.

ஆசாரி மவுனமாய் சிரித்துக்கொண்டிருந்தான்

சட்டைப்பையில் பத்தாயிரம் இருப்பதை அவன் உறுதி செய்துகொண்டான். அது பத்திரமாகவே இருந்தது.
எல்லாரும் வாங்கா வாங்க, வருக வருக என்பதெல்லாம் அதன் பொருட்டுமட்டும்தான் என்பது தெரிந்தவன்தானே அவன்.

‘பின்பக்கமா போவும் அங்கதான் மரம் கெடக்கு. இதுல ஒண்ணு பாக்குணும் குஜராத் தேக்குன்னு ஒரு மரம் இருக்கு அது தான் ரொம்ப பெஸ்ட். அதுலய வேணுங்கற உருப்படிய எடுத்துகுங்க’

‘தேக்குல செய்யுலாம்னு பாக்குறன்’

‘அது சும்மாங்க அது அழவு வலுவுங்கறது இல்லே தெரிதா’

‘எல்லாரும் அதுதானே வாங்குணும் சொல்றாங்க’

‘எல்லாரும் ஒண்ணு சரின்னு சொன்னா அது சரியா’

இதற்கெல்லாம் அவனிடம் எங்கே பதில் இருந்தது. பதில் சொல்லத்தெரிந்திருந்தால் எங்கெங்கோ போயிருக்கமுடியும்தான். திரு திரு என்று விழிக்கத்தொடங்கினான்.

ஆசாரி ஆரம்பித்தான்.

‘நாமதான் சொல்லுணும் சேட்டு. அவுங்க என்னத்தை கண்டாங்க. சாணிய சின்ன சின்னதா உண்டி இது மருந்துன்னு சொன்னாலும் வாங்கி சாப்புடற ஜனமாச்சே ’ சொல்லிசிரித்துக்கொண்டான்.

சேட்டு அவனை ஒருமுறை பார்த்துக்கொண்டார். அவர் ஏதும் சொல்லாதமாதிரியும் ஆச்சாரி மட்டுமே இப்படி சொல்வதாயும் அந்த பார்வைக்கு யாரும் வசனம் சொல்லிவிடலாம்.

‘குஜராத் பூவரசுலயே வேல செஞ்சி புடுவம்’

அவன் வேண்டா வெறுப்பாய் சரி என்றான்.

‘ஒரு சேதி இண்ணைக்கு ச்சாயந்திரம் ஒரு லோடு வருது. அது நல்ல சரக்கு. கொஞ்சம் பொறுத்துகுங்க. ஆனது ஆச்சி போனது போச்சி. நாளைக்கி வேலய ஆரம்பிச்சிபுடுவம்’

மணி பத்தை தொட்டுக்கொண்டிருந்தது. இனி அவனுக்கு அங்கு நின்று பேச நேரம் இல்லை என்பது ஆசாரிக்கும் சேட்டுக்கும் தெரிந்த விஷயமே.

இது தான் தக்க தருணமென ஆசாரி வாங்க வேண்டிய லிஸ்டை எடுத்து நீட்டினான்

லிஸ்டை கையில் வாங்கிய சேட்டு இப்படியு அப்படியும் தலையை ஆட்டி ஏதோ கணக்கு போட்டு விட்டு
‘ஒரு பதினஞ்சி வரும். அதுக்குள்ளறதான் வரும். கையில இருக்கறது கொடுத்துட்டுப்போங்க சொச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்’

அவன் தன் கை வசமிருந்த பத்தாயிரத்தை சேட்டிடம் கொடுத்துவிட்டு,

‘ஆசாரி சொல்ற ஜாமானுவ கொடுங்க பாக்கி பணம் நான் கொடுத்துடறேன்’

‘எனக்குத்தெரியாதா என்னாங்க இது’

சேட்டு சொல்லி முடித்தார்.

அவன் பெரிய விடுதலை கிட்டிவிட்டதாய் எண்ணி தன் அலுவலகம் நோக்கி வண்டியில் புறப்பட்டான்.
அலுவலக வாயிலில் நின்றுகொண்டிருந்த அவன் நண்பன்,

‘ஆசாரி இண்ணைக்கு உங்க வூட்டுக்கு வந்தாப்புலயா’

அவன் நண்பன் தான் கேட்டான்.

‘மரவாடிக்கு ப்போயிட்டுதான் வர்ரேன்’ அவன் பதில் சொன்னான்.

‘சாருன்னு சாருதான். எதுலயும் சோடயில்லை’

நண்பன் சொல்லி சிரித்துக்கொண்டான்.

மதியம் உணவிற்கு தன் வீடு நோக்கி நடந்தான். தன் வீட்டு வாயிலில் ஒரு மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பின்பக்கக்கதவைத்திறந்து கொண்டிருந்தான் காக்கி சட்டை போட்டிருந்த மினி லாரிக்காரன்.

வண்டியின் உள்ளே மரச்சட்டங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

‘யாரு வீட்டுக்கு இதுக எல்லாம்’

‘சி ரெண்டு வீட்டுல இந்த சரக்க இறக்குணும்னு ஆசாரி சொன்னாரு’

‘அப்ப நம்ப வீட்டுக்குத்தான்’

‘ரொம்ப நல்லது சாரு, செத்த ஒரு கை போடுங்க சட்டுனு இறக்கிடலாம்’

சம்பாஷணை முடிந்தது. அவனும் வண்டிக்காரனும் வண்டியில் இருந்த மரச்சட்டங்களை அவன் வீட்டு முன்பக்கமாக இறக்கி அடுக்கினர்.

‘இது என்ன ஏகத்துக்கு இருக்கும் போல’ அவன் மனைவி ஆச்சரியத்தோடு அந்த மரச்சட்டங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

வேலை முடிந்தது. மினி லாரிக்காரன் தன் கைகளை க்கழுவினான். துடைத்துக்கொண்டான்

‘சாருக்கு பசி யா இருக்கும் நா வேற தொந்தரவு கொடுத்துட்டென். ஆசாரி வரன்னாரு . ஆனா வருல. நீங்க இப்ப வருலன்னா எனக்கு ரெம்ப செருமம்’

‘யாரூட்டு வேல. நம்ப வேலதானே’ அவன் பதில் சொன்னான்.

‘நா கெளம்புணும் ஜோலி கெடக்கு. ரூவா முந்நூறு எடுங்க’

‘எதுக்கு’

‘எதுக்கா லாரி வாடவதான் சரக்க சும்மா எடுத்தாருவாங்களா’

‘ஆசாரி என்கிட்ட எதுவும் சொல்லுலயே’

‘சொல்லுலன்னா அப்ப சும்மா போவுறதா நா’

‘இல்ல எதுக்கும் ஒறு மொறன்னு இருக்குல்ல’

‘என்னா மொறண்ரீரு’

மரியாதை இறங்கிக்கொண்டது.

‘காசி கொடுக்கலன்னா. நானு சரக்க அள்ளி வண்டிலபோட்டுகிட்டு பூடுவேன். என்னா வெளயாட்டு வேலயா’

‘போயேன். எல்லாம் அப்பிடியே அவிஞ்சி பூடுமா என்ன’

அவன் மனைவி வீட்டு உள்ளிருந்து வேக வேகமாக வந்தாள்.

‘இந்தா உன் பணம். எடுத்துக. கெளம்பு. ஏன் வெட்டி பேச்சு எல்லாம்.’

அவன் முந்நூறு ரூபாயைப்பெற்றுக்கொண்டான். லேசாகச் சிரித்து முடித்தான்.

‘ரொம்ப கஸ்டம் அம்மா உங்க பொழப்பு’

அவன் மனைவியிடம் அந்த மினிவண்டிக்காரன் இறங்கிப்பேசினான்.

‘காசு வந்துபோச்சில்ல அப்புறம் என்னா செத்த பேச்சி கெளம்பு கெளம்பு’

அவன் மினிலாரிக்காரனை விரட்டினான்.

‘ஆசாரி நாளக்கி காலயில வருவாரு. இந்த சேதிய சொல்ல சொன்னாரு. இந்தாங்க மரவாடிக்காரன் சீட்டு இதுல சட்டங்க எத்தினி என்ன என்ன அளவு எல்லம் எழுதி இருக்கு. இது பத்திரம். ஆசாரிகிட்ட கொடுத்துடணும்’

அவன் மனைவியிடம் அந்த சீட்டை நீட்டிக்கொடிருந்தான் லாரிக்காரன்.

‘அவுரு கிட்டயே அதக் கொடு’ என்றாள் அவன் மனைவி.

அவன் அதனை வாங்கி பத்திரமாக த்தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்

‘நா வரங்கம்மா’ என்றான். லாரிக்காரன் அவன் தன் வண்டி நோக்கிப்புறப்பட்டான்.

வீட்டில் மரச்சட்டங்களின் ஆக்கிரமிப்பாக இருந்தது. ஏதோ தேர் ஒன்று செய்ய வாங்கிய மரச்சாமான்கள் போலத்தான் அவை காணப்பட்டன. புது மரத்தின் நெடி. அவை அறுப்புக்குள்ளானதால் இன்னும் நெடி கூடித்தெரிந்திருக்க வேண்டும். அவன் தேக்க மரத்தில்தான் கட்டில் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். குஜராத் பூவரசு என்று பெயர்கொண்ட மரச்சட்டங்களே இப்போது அவனுக்கு முன்னால் சட்டமாய் அமர்ந்திருந்தன.

‘இதெல்லாம் குஜராத் பூவரசு உனக்குச்சொல்லணுமே மறந்து போனேன்’

‘ஏன் தேக்குல செய்யுறேன்னுதான் ஆரம்பிச்சிங்க’ அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.

‘நான் எதுல ஆசைப்பட்டாலும் அது போயி வேறயாதான் முடியுது, என் நேரம்’

‘வாங்கியாச்சில்ல இப்புறம் அது இதுன்னு பேசி ஆவுறது என்னா’ அவளே நொந்துகொண்டாள்.

‘யாரு எது சொன்னாலும் அதுதான் நமக்கு நல்லதுன்னு எடுத்துகிடறேன். என்னை அதிலேந்து மாத்திகிட முடியலை. தேக்கு மரம் வாங்கணும்னுதான் மரவாடிக்குப் போனேன் ஆனா ஆசாரியும் மரவாடி சேட்டும் குஜராத் பூவரசு ரொம்ப நல்ல மரம்னு சொல்லிட்டாங்க’

‘பூவரசு வேற தேக்கு வேறதானே’

‘ஆமாம்’

‘இப்பயும் ஆமாம் சொல்றீங்க அதான் உங்ககிட்ட கோளாறு. ரெண்டு மரமுமே ஒண்ணு மாதிரிதான். இதுலயும் ஒண்ணு செஞ்சி பாப்பம் இதுல என்னா வந்துதுன்னு சமாளிக்கக்கூடாதா’

‘இனிமேலுக்கு போயி நான் வித்த கத்துக முடியுமா’

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

மறுநாள் காலை சொன்னதுபோலவே ஆசாரி அவன் வீட்டு வாயிலில் வந்து நின்றுகொண்டான்.

‘மரம் இன்னும் சைசு பண்ணணும் அத இழைப்பு போடணும் பட்டறைக்குப்போறம் நம்ப’

‘இப்பயா’

‘ஆமாம் அது அது வேல ஆவுணும்ல’

அரை மனதோடு சரி என்றான்.

‘மினி லாரி வருது. தே வந்துடும். மரத்த எடுத்து வெளிய வையுங்க. வேல கெடக்கு’

‘என்னா ஆசாரியாரே இது தேக்கு இல்லயாமே. சாரு சொன்னாரு’

‘ஆமாம் இந்த மரத்துல ஒரு வேல செஞ்சிப்பாருங்க. அப்புறம் தெரியும்’தேக்கு கீக்குல்லாம் இது கிட்ட பிச்ச வாங்குணுமாச்சே. சேட்டு ன்னா சும்மா ஆளா. அவுங்க வூட்டுல எல்லாமே இந்த பூவரசு மரமேதான். நீங்க எதை கண்டிங்க’

அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். அவன் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

வீட்டு வாயிலில் அந்த மினிலாரி வந்து உறுமிக்காட்டியது.

அதே மினிலாரிக்கரன்தான், முதல் முறை அவன் அங்குவந்து மரம் இறக்கிச்சென்றதாகவோ எல்லாம் அவன் இப்போது காட்டிக்கொள்ள வே இல்லை. புதியதாய் தான் வருவதுபோல் நடந்துகொண்டான்.

‘மரத்த அள்ளி போடுங்க’ அந்த மினிலாரிக்காரன் கட்டளை இட்டான்.

அவை அத்தனையும் சமத்தாய் ஏறி வண்டிக்குள் அமர்ந்து கொண்டமாதிரியே இருந்தது.

‘ஒரு முந்நூறுலாரிக்காரன் கிட்ட கொடுத்துடுங்க’ ஆசாரி சொன்னான்.

‘தூரம் எவ்வளவு அது இதுன்னு ஒண்ணும் கிடயாதா’
‘உண்டு’

‘அப்புறம்.’

‘இப்ப மரவாடிய தாண்டி நாம போறம். இன்னும் கூடக்கேக்கணும். நம்ப ஆளு அதான் ரேட்டு கொறச்சித்தர்ரம்’

அவன் மனைவி முந்நூறு ரூபாயை ஆசாரியிடம் கொண்டு தந்தாள்.

மினிலாரிக்கரன் இப்படியும் அப்படியும் பார்த்துக்கொண்டே அதனை க்கையில் வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

‘நா கெளம்புறென். பட்டறை வேலைக்குக்கூலி ஆயிரத்துக்குள்ள வரும்’

‘ஆயிரமா’

‘அதுக்குள்ளதான் வரும். நாம மரத்த சைசு பண்ணினா ஆவுறகதயா எம்மாம் கூலி ஆவும்தெரியுமா சொன்ன பயந்துபுடுவீங்க.’

‘எப்ப திரும்பறது’

‘போன வேல ஆன அப்பறம். நமக்கு வேற வேல என்னா இருக்கு அங்கே’

‘திரும்பி வர மினிலாரிக்காரனுக்கு வாடகை தரணுமில்ல’

‘ரைட்டா’

‘அதே முந்நூறுதானே’

‘ஆமாம்’

மினி லாரி புறப்பட்டுப்போனது. ஆசாரியும் இடத்தைக்காலி செய்துவிட்டுப்புறப்பட்டான்.

ஒரு வேலயும் லேசாக முடிந்துவிடுவதாக இல்லை. அதன் அதனுள்ளும் ஆயிரம் சிடுக்குகள் வைத்துக்கொண்டே அவை பிறக்கின்றன.

டெலிபோன் கோர்டர்சில் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் அவன் ஏதோ கப்பல் ஒன்று செய்து வியாபாரம் ஆரம்பித்துவிடுவானோ என்கிற விதமாகப்பார்த்தனர். இந்த வகைக்கான வேலைகளை ஒருவன் மறைத்து வைத்துக்கொண்டு செய்துவிட முடியுமா என்ன. அவன் அன்று அலுவலகம் சென்றான். அவனின் நண்பன் வழக்கம்போல் அவனிடம் கேள்வி ஆரம்பித்தான்.

ஆசாரி வந்துபோனது, மரம் வாங்கியதை பட்டறைக்கு ஏற்றிச்சென்றது எல்லாம் சொல்லி முடித்தான்.

‘பட்டறைக்கு நீங்கபோயி வாங்க’

‘எல்லாம் ஆசாரி பாத்துகுவாருல்ல’

‘வெவரம் இல்லாம பேசுறீங்க சாரு. பண்டம் நம்புளுதுல்ல ஒரு வேலய நாம கூடவே இருந்து பாத்தா எப்பிடி. அது அதுக்கு ஒரு மரியாதை இருக்குல்ல’

‘இந்நேரம் வேல முடிஞ்சி திரும்பற நேரம்னு நெனக்கிறன்’

‘நீங்க ஒண்ணு சாரு. பட்டறைல ஜே ஜேன்னு கூட்டம் இருக்கும். போனா சட்டுனு திரும்பி வர்ர காரியம் இல்லே கரண்டு சுகுரா இருக்கணும்ல’

‘அப்ப லன்ச் இடைவெளியில நா போயி பாக்குறேன்’.

‘போங்க போயி பாருங்க. அது ரொம்ப முக்கியம்’

வண்டியை எடுத்துக்கொண்டு மதிய உணவு இடைவேளையின் போது அந்தப் பட்டறை நோக்கிப்புறப்பட்டான். மரங்கள் மட்டுமே ஒரு மகாஅசுரனின் பசிக்குக் காத்து க்கிடக்கும் விலங்குகள் போல் பட்டறையின் வாயிலில் படுத்துக் கிடந்தன.

பட்டறையில் வேறு எதுவும் அரவம் இல்லை. அரை டிராயர் போட்டுக்கொண்டு சில சிறுவர்கள் இரைந்துகிடக்கும் மரத்துண்டுகள் பொறுக்கிக்கொண்டு இருந்தனர். அவர்களின்தலை முடி காய்ந்து கிடந்தது.

‘அடுப்புக்கு பொறுக்கறம்’

யாரும் அவர்களை க்கேட்கவே இல்லை. அவர்களேதான் அவனிடம் சொல்லிக்கொண்டார்கள்.

‘எங்க தம்பி யாரையும் காணும்’

‘இப்ப கரண்டு இல்ல அதான் போயி இருக்குறாங்க’

‘இல்லயே நா பொறப்படகுள்ள இருந்தது’.

‘அது சின்ன கரண்டு சாரு. இது பெரிய கரண்டுல்ல’

சிறுவன் பொட்டில் அறைந்த மாதிரி பதில் சொன்னான். கொண்டு வந்த பைகளை நிறப்பிக்கொண்டு அந்தச் சிறுவர்கள் புறப்படத்தயாராயினர்.

பட்டறையின் ஆட்கள் தூரத்தில் வருவது தெரிந்த சிறுவர்கள் ஔட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

‘அங்க யார்ரா ஔடுறது தோ வர்ரன் பாரு அந்தாண்ட இந்தாண்ட ரவ நவுறப்பிடாதே உடனே கழுவு மாதிரில்ல வந்துபுடுறீங்க’

சொல்லிக்கொண்டே வந்தார் ஒரு பட்டறை ஆள்.

‘என்னா சேதி ‘அவனிடம் கேட்டார் அந்த பட்டறை ஆள்.

அந்த மனிதரின் தலைமுடியெல்லாம் கலைந்து அவை மீது ஒரே மரத்தூளாகக்கிடந்தது. அவர் முழங்கால் அளவுக்கு ஒரு காக்கி டிரவுசர் போட்டுக்கொண்டிருந்தார். அவரின் கால்களை ச்சுற்றி க்கொண்டு ஒரு பூனைக்குட்டி விளையாடிக்கொண்டு இருந்தது. அவர் தன் கால்களை இங்கும் அங்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். பூனை நகரவே இல்லை.

‘இல்ல ஆசாரி இங்க வந்தாரு. ஒரு கட்டிலு செய்ய க்குடுத்து இருக்கன். சட்டம் சாமானுவ மினிலாரியில் ஏத்திவுட்டன் இண்ணைக்குக் காலையிலதான்’

‘இங்கதான் கெடக்கும். ஆமாம் ஒரு மினி லாரி இண்ணைக்கு காலையில வந்துது’

‘அதுவாதான் இருக்கும்’

‘இங்கதான் எங்கனா மரத்தை எறக்கிப்போட்டுடிருப்பாரு. ஆசாரி வந்தாதான் கதை சரியாத் தெரியும். இடையனுக்குத்தான தன் உருப்பிடி எதுன்னு புரியும். இப்பக்கி இங்க கரண்டும் ஒரு பேசுலதான் இருக்கு. நீங்க சாயந்திரம் வந்திங்கன்னா அந்த விவரம் தெரிஞ்சிக்கலாம். நானும் கேட்டு வக்குறன்’

அவனுக்கு ஒரு சந்தேகம். இங்கு ஜெனரேட்டர்கள் எல்லாம் வைக்க மாட்டார்களோ. இந்தக்கேள்வியை அந்த பட்டறை ஆளிடம் கேட்கலாமா என்று யோசித்தான். கேட்டால் அது அதிகமாக இருக்குமோ என முடிவுக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டான்.

மதிய உணவுக்கான இடைவெளி முடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது. எப்போதும் அவனுக்கு அலுவலகத்தில் வேலை நெருக்கடி. அன்று மதியம் சாப்பிடாமலேயே அவன் பட்டறைக்குச்சென்றதோடு தன் பணிக்குத் திரும்பினான்.

அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான்.

மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து பின் பக்கம் பொறுத்தியிருந்த ஷட்டர் கதவைத்திறந்து சட்டங்களை இறக்கினான்.

‘எழப்பு வேல முடிஞ்சிது. இனி நம்ப வேலதான் பாக்கி இருக்குது’

அருகில் வந்த அவனுக்குச்சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் லாரியின் உள்ளே எட்டிப்பார்த்தான். ஒரு மூலையில் இழைக்கப்பட்ட மரச்சட்டங்கள் இன்னும் கிடந்தன.

காலையில் வண்டி நிறைத்துக்கொண்டு போனதாகவும் இப்போது ஏதோ அவை அளவில் குறைந்து விட்டமாதிரியும் தெரிந்தது. இது விஷயம் ஏதும் அவனுக்குச்சரியாக பிடிபடவில்லை.

‘என்னா பாக்குறீங்க’

‘இல்ல ஆசாரியாரே ஏதும் மரம் கொறஞ்சிபோனமாதிரி தெரியுது. அதான் பாக்குறன்’

‘எல்லாம் மனசுதான் காரணம். கொண்டு போன மரத்த இழைச்சா அப்புறம் என்னா மீதம் இருக்குணுமோ அதான் இருக்கும்’

‘அதுக்குன்னு ரொம்ப கொறஞ்சிபோனதுமாதிரி இருக்குது’

‘கட்டிலுக்கு என்னா உருப்பிடி வேணுமோ அது இருக்கு. அப்புறம் என்னா வேணும்’

‘கழிச்சது எல்லாம் எங்க இருக்கு’

‘குப்ப அது இழப்பு பட்டறைல கெடக்கும். அது வச்சிகினு நீங்க என்னா செய்வீங்க’

‘இல்ல கேட்டன்’

‘கெடக்கு வேலய பாருங்க. இந்த சட்டத்தை வூட்டுல உள்ளாற அடுக்குங்க. லாரிக்காரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பலாமுல்ல அவனுக்கு வேற ஜோலி இருக்குமே’

அவன் மனைவி முந்நூறு ரூபாயைத்தயாறாக எடுத்துக்கொண்டு வந்தாள். அதை மினிலாரிக்காரனிடம் ஒப்படைத்தான்.

‘நாளைக்கு வேல தொடங்கறம். மூணு மொறை நானு வந்து இருக்கன், ஒரு டீ சாப்புடுன்னு நீங்க சொல்லுல. உங்க டீயுக்கு நானு ஒண்ணும் அலையுல. ஒரு இதுக்கு இதைச் ச்சொல்லுறன்’

‘நீங்க வாங்க வூட்டுக்குள்ளாற. நல்ல டீயா போட்டுத்தறன் சாப்டு போகலாம்’ அவள் ஆசாரியிடம் முந்திக்கொண்டு சொன்னாள்.

அவன் அதிர்ந்து போனான். இப்படி எல்லாம் அவள் சொல்பவளே இல்லைதான்.

‘எனக்கும் வேல பலது இருக்கு. ஆனா மரவாடிக்கு வந்தேன். வாள் பட்டறைக்கு போனன். இழப்பு ஆலைக்கும் போனன். நானு இதுக்கு எல்லாம் உங்க கிட்ட சம்பளம் கேக்குல .நாளக்கி என் வேலய தொடங்கறன்.அப்புறம் பேசிக்குலாம்.’

‘சஞ்சாயமாதான வேல’

‘ஆமாம் அப்பதான் வேல சுத்தம் இருக்கும். கடா புடான்னு அடிச்சி கெடாவிட்டு போவுற வேல இல்லிங்க இது’
அவன் மனைவிக்கு முகம் மலர்ந்து தெரிந்தது. அவன் அதனை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

‘நான் கெளம்புறன்’

‘சரி’

‘நாங்க ரெண்டு பேரு வருவம் . காலையில மாலையில டீ . மதியம் சாப்பாடு இருக்கு.

சொல்லாம போயிட்டா பெறகு என்னா ஆவுறது அதான் இப்பவே அதை சொல்லிபுடறன்.

‘இதுக்கு ரெண்டு பேரு வேணுமா’

ஆசாரி ஒரு முறை பல்லைக்கடித்துக்கொண்டான்.

‘வேல தெரியாதவங்க கிட்ட வேல செய்யுறது ரெம்ப செருமம்’

ஆசாரியே சொல்லிக்கொண்டான்.

அவள் குறுக்கிட்டாள்.

‘நீங்க வாங்க. எப்பிடி செய்யுணுமோ. அப்பிடி செய்யுங்க. சாருக்கு வெவரம் புரியாது’

ஆசாரியிடம் அவள் சொல்லிக்கொண்டாள்.

அவன் ஏதும் பேசாமல் இருந்தான்.

‘நாளக்கி வர்ரன்’ ஆசாரி புறப்பட்டான்

மரச்சாட்டங்கள் வீட்டில் சுவர் ஔரமாக அடுக்கிக்கிடந்தன. அவைகளின் இடுக்குகளில் பல வண்ண எறும்புகள் பல்லிகள் வாசம் செய்யத்தொடங்கின. பத்து நாட்ளுக்கு மேலாக ஆகியிருக்கலாம். போன ஆசாரி அவன் வீட்டுப்பக்கம் வரவே இல்லை. வருகிறேன் என்று சொல்லிப்போன அந்த ஆசாரி எங்கேதான் போனான் என்று அவனுக்கு க்கவலை. தன் வீட்டிற்கு வருவோர்க்கும் போவோர்க்கும் விளக்கம் கொடுத்து அவனால் முடியவே இல்லை. ரெடிமேடு கட்டிலாகவே மரச்சாமான்கள் கடையில் ஒன்று வாங்கி இருக்கலாம். ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டதாகவே அவன் நினைத்துக்கொண்டு புலம்பினான்.

‘எதுவும் நாம கிட்ட இருந்து ஜாமானுவ வாங்கி கொடுத்துச் செய்யிற மாதிரி ஆவுமா’ என்று யாரேனும் சொல்லிவிட்டால் அவனுக்குக்கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அலுவலக நண்பனிடம் விசாரித்தான். ஆசாரி எங்கேனும் வெளியூர்தான் போய் இருக்கவேண்டும். ஊரில் இருந்து கொண்டு இங்கு வராமல் இருக்க முடியாதுதான்.

அவன் தன் அலுவலக நண்பனிடம் கேட்டு வைத்தான்..

‘ஆசாரி வீடு தெரியுமா’

‘ஏன் அவ்வளவு தூரம். நான் போயி பாக்கறேன் உங்களுக்கு ஆசாரிய அனுப்பி வக்கிறேன்.’ அவனுக்கு அந்த நண்பனே ஒத்தாசையாய் விடை சொன்னான்.

அவன் மனதிற்குள் குறுகுறு என்று இருந்த ஒரு விஷயம். மினி லாரியில் ஏற்றிக்கொண்டு போன சரக்கு இழைப்பகம் சென்று திரும்பியதில் ஏதும் குறைந்து இருக்கவேண்டும். பாதிக்கு மேலாகத்தான் சட்டத்தைக் காணோம். அப்படியா குறைந்து விடும். இதில் ஏதும் சூட்சி இருக்க வேண்டும்.

ஆக நண்பனிடமே விசாரித்து விடுவோம் என முடிவுக்கு வந்தான்.

‘இழைப்பு பட்டறைக்குப்போனதில் மரத்தில் பாதியைக்காணோம். அப்பிடித்தான் குறையுமா’

‘சட்டத்த எண்ணி அனுப்பினிங்களா’

‘இல்லை’

‘அப்புறம் எதுக்கு ப்பேசுறீங்க எதையும் எண்ண மாட்டிங்க. ஆனா கொறஞ்சி போச்சின்னுமட்டும் உங்க மனசு சொல்லுது. இது எப்பிடி சாரு இருக்குது’

‘எல்லாம் சரியாத்தான் நடக்கும் யாரு யாரை ஏமாத்தி என்ன கெடுதலு செஞ்சிடப்போறாங்கன்னு ஒரு நெனப்பு’

‘நெனப்புத்தான் பொழப்பைக்கெடுக்குது’

‘இனிமேலுக்கு எல்லாத்தையும் சரியா எண்ணி வச்சிடறேன்’.

‘சுடுகாட்டு வைராக்கியம் சாரு இது. கூட வாழ்ந்தவன் பொணமாயி செதையில எரியகுள்ள மனம் கெடந்து பதறும் இப்பவே போயி பால முருகருக்கு ஒரு கோயிலு கட்டுணும்னு அந்த மனம் சொல்லும். அப்புறம் குளிச்சி முழுவி பருப்பு சாம்பாரு அடியா ஊத்திகினு கொழப்பி நாலு வுண்ட வாயில அள்ளிபொட்டுகிட்டா எல்லாம் பழயபடிக்கு ஆயிடாதா சாரு. அந்த ஆசாரி கிட்ட மட்டும் எதுவும் கேட்டுடாதிங்க. தெரிதா. பெரிய சண்டயா பூடும்’

‘ஆசாரிய கிட்ட கேப்பனா’

‘சரி ஆசாரிய நானு பாத்து அனுப்பி வக்கிறேன்’

நண்பன் சொல்லியபடியே ஆசாரி மறுநாள் காலையில் அவன் வீட்டு வாயிலில் வந்து நின்றான். அவன் கொண்டு வந்த கருவிகள் பை ஒன்றைச் சுவர் ஔரமாக வைத்தான்.

‘வேல தொடங்குறன்’ என்றான்.

ஆசாரி வருகின்றவரை அவன் மீது எரிச்சலாக இருந்தவன் அவனைக்கண்டதும் மனம்மாறிப்போனான். இந்த சமாச்சாரம் மட்டும்தான் அவனுக்கு ப்பிடிபடவில்லை. யாரைத்திட்டுகிறானோ அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் பாழும் மனம் உடன் குழைந்து போகிறது.

ஆசாரி மரச்சட்டங்களை அடுக்குவதும் கலைப்பதும் மாறி மாறி செய்து கொண்டே இருந்தான். மீண்டும் மரத்தை இழைப்பான். துளை ஒன்று போடுவான். . தட்டுவான். அடுக்குவான், கலைப்பான். மீண்டும் துளை ஒன்று போடுவான், ஒத்தாசைக்கு என ஒரு ஆள் அவன் கூடவே வந்திருந்தான்.. அவனும் ஆசாரிதான் என்பான். ஆசாரிக்கு த்தரும் கூலி அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்பான், வெற்றிலைப்பொட்டுக்கொள்வான். பீடி ஒன்றை பிடித்துகொண்டுநிற்பான்.

‘ஒரு டீ சாப்புட்டு வர்ரன்.’ சொல்லக்கிளம்பி விடுவான்.

முனியாண்டி விலாசில்தான் அவனுக்குச்சாப்பாடு. போய்தான் சாப்பிட்டு வருவான்.

இப்படியாக ஒருவாரம் கழித்துவிட்டு

‘ரெண்டு பக்கமும் பூ போடுணும், கால் மாடு தல மாடுல பூ ப்போட்ட பலக வருணும் சட்டத்த எடுத்தும் போயி பூ போட்டாறன். அதுக்கு ஒரு இடம் இருக்கு. அங்க போனத்தான் அந்தக்கதை ஆவும் அஞ்சி நூறு கொடுங்க. மேல கூட ஆவும் அதை அப்புறம் பாக்குலாம்’.

‘சட்டத்தை எண்ணி எடுத்துட்டுப்போவுணும்’

‘என்னா பேசுறீங்க சாரு. யாருகிட்ட பேசுறீங்க. அப்பிடியே வுட்டு கெடாவிட்டு ப்பூடுவேன். தெரிதா. என் வூட்ட நேரா நீங்க வந்து பாக்குல. என்னோடது சிங்கப்பூரு வூடு. சின்னதா கின்னதா எடை போட்டுடாதீங்க. என்னைப்பத்தி முழுசா உங்களுக்குத்தெரியாது. அதான் பேசுறீங்க உங்க ஆபிசுக்காரரு சொன்னாரேன்னு நான் இங்க வேலைக்கு வந்தன் உங்கள மாதிரி தருமத்துக்கு அரசாங்க ஊட்டுல நா ஒண்ணும் குடியிருக்குல’

அதற்குள் அவன் மனைவி அங்கே வந்து நின்றாள். ஆசாரி ஐநூறு ரூபாயை வாங்கிகொண்டு மரப்பலகயையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். ஆசாரியின் பார்வையே சரியில்லாமல் இருந்தது.

‘நீங்க போங்க அவரு தெரியாதவரு’ அவள் ஆசாரியிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.

அவன் இது கண்டு அலட்டிக்கொள்ளவே இல்லை. இது என்ன இன்று புதியதாய் நடக்கிறதா . எத்தனையோ தரம் பார்த்தாயிற்று. எந்த ப்பெண்ணும் தான் தன் கணவன் தன்னைக்காட்டிலும் விவரம் தெரிந்தவன் என்று ஒத்துக்கொள்வது இல்லை. அப்படியே ஒத்துக்கொண்டு விட்டால் பின் எப்படி அவள் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்க முடியும்.

அய்ந்தாறு சட்டங்கள் மட்டும் இப்போது அவன் வீட்டில் அனாதையாய்க்கிடந்தன. இது ஒன்றும் முடிகிறகதையாய் இல்லையே என எண்ணிப்பார்த்தான். வாங்கிய மரங்களில் பாதியைத்தன் வீட்டிற்கு ஆசாரி எடுத்துச்சென்று இருப்பானோ என்று அவனுக்கு மனதிற்குள் சங்கடமாக இருந்தது.

இது பற்றி த்தன் மனைவியுடன் அவனால் பேசமுடியவில்லை. பேச வேண்டும் என்று ஆரம்பிப்பான். ஆனால் பேசாமலே நிறுத்திக்கொள்வான். எது சொல்லி என்ன ஆகப்போகிறது. கடைசியில் அவன் மட்டுமே தவறு செய்துவிட்டதாக எல்லாக் கதையும் முடிந்துபோகிறது. சொந்த செலவிலா போய் சூனியம் வைத்துக்கொள்வது என யோசித்தான். . அவன் மனம் மட்டும் ஏதோ தவறு நடந்திருப்பதை அறிவித்துக்கொண்டேதான் இருந்தது.

தாமரைப்பூ ஒன்றை ஒரு பலகையில் அழகாய்ச்செதுக்கி எடுத்துக்கொண்டு ஆசாரி மறுநாளே அவன் வீட்டுக்குத் திரும்பினான்.

‘குடுத்த காசுல ஒரு பொம்மதான் போட முடிஞ்சிது’

தாமரைப்பூ அழகாக மரத்தில் செதுக்கப்பட்டு இருந்தது. தாமரை இலைகள் தன்டுகள் தத் ரூபமாக இருந்தன. மனம் அவனுக்கு திருப்தி ஆனது. அதனைத்தொட்டுப்பார்த்தான். அவன் மனைவி அவன் அருகில் வந்து நின்றுகொண்டு’

‘ஒரு பலகாயிலதானா தாமரைப்பூவு’ என்றாள்.

‘இதுவே நீங்க காசி குடுக்கலன்னா இந்த இதுவும் ஆவுமா’

ஆசாரி பதில் சொன்னான்.

‘நீங்களே இது மாதிரி பூ வேலங்க செய்யுறது இல்லயா’ அவன்தான் கேட்டு வைத்தான்.

ஆசாரி அவனையே முறைத்துப்பார்த்தான். பதில் ஏதும் சொல்லாமலே இருந்தான். அவன் விடுவதாகவும் இல்லை.

‘உங்களைதான் கேட்டேன் ஆசாரியாரே நீங்க இது மாதிரி பொம்மை வேலைங்க எல்லாம் செய்யுறது இல்லயா’

ஆசாரி எதுவும் பதில் சொல்லாமலேதான் இருந்தான்.

‘ஒரு தரம் கேட்டிங்க அவரு பதில் சொல்லுல அத அப்படியே விட்டுண்ணும்’ அவள் அவனிடம் சொன்னாள்.
‘இல்ல அது தெரியும் தெரியாதுன்னு சொல்லுலாம்ல’

‘சாரு ஆவுற கதைய மேல பாக்குலாம்ல’ ஆசாரி முடித்துவைத்தான்.ஆசாரி மீண்டும் மரச்
சட்டங்களை எடுத்து பிரித்து பிரித்து வைத்துக்கொன்டான். அவைகளைத்தடவினான். வாயால் ஊதிப்பார்த்தான் தட்டிக்கொண்டான். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி சரிபார்த்தான். தேய்த்தான். முதுகை வளைத்து ப்பின் நீட்டிக்கொண்டு ஏதோ அளவு சரி பார்த்தான். பிறகு சட்டத்தை அழுத்தி அழுத்தி இழைக்க ஆரம்பித்தான்.

‘எம்மானுக்கு ஒரு மரத்தை நாம இழைக்கறமோ அம்மானுக்கு செய்யிற பொருளு வலுவு’ ஆசாரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். கோர்டர்சில் அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள் அவன் ஏதோ உலக அதிசயம் ஒன்று செய்வதாகவும் அது அவர்களால் இயலாமல் போய்விட்டதாகவும் யோசித்தார்கள்.

அவள் ஆசாரியிடம் அடிக்கடி கட்டிலின் கீழாக அமைக்கப்போகும் அறை பற்றியே பேசினாள். ஆசாரி அதனை அலட்சியம் செய்தே பேசினான். ஏன் அந்த ஆசாரி அப்படிப்பேசுகிறான் என்பது அவளுக்குத்தெரிந்தால்தானே.

‘நீங்க சொல்லுறீங்க கட்டிலுக்குக்கீழா ஒரு வசதி வேணும்னு. அது கட்டிலுக்கு வலுவு கொறச்சல். யோசனை பண்ணி பாருங்க. இல்ல யாரையும் கேட்டுப்பாருங்க தெரிஞ்சிக்கலாம். எனக்கு ஒண்ணும் இல்லே நானு கூலிக்காரன். எத செய்யின்னாலும் செய்வேன்.’

‘தோ பாரு ஆசாரியாரே சொருவு பலகா வச்சி கட்டிலு செய்யுறதுன்னுதான் பேச்சி. இல்லன்னா கட்டிலே வேணாம்.தெரிதா’

‘இல்லங்கம்மா சும்மா சொன்னேன்.நல்லதுன்னு பட்டிச்சி அதான் சொன்னேன்.’

அவன் எதுவும் பேசாமலே இருந்தான். இதுபோல் இக்கட்டான சமயங்களில் எல்லாம் அவனுக்கு ப்பேசவே தெரியாது அவள் சொல்லியிருக்கிறாள்தானே. பிறகு எப்படி அவனும் குறுக்கே பேசுவது. அவள் அவனை ஒரு முறை முறைத்துப்பார்த்தான். அவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.

‘வேல எப்ப முடியும் ஆசாரியாரே’

‘ஆயிட்டே இருக்குதே. நீங்க பாக்குல. கட்டிலுக்குக்கீழே வர்ர அந்த பொட்டி மாதிரி ஒண்ணு சொல்லுறீங்களே அதான் கன வேல. அது இல்லன்னா வேல இந்நேரம் முடிஞ்சி இருக்கும்.’

‘சட்டுன்னு முடிங்க காண்ட்ராக்ட்டா பேசி இருந்தா இந்நேரம் வேல ஆயிருக்கும். சஞ்சாயமா வுட்டது என் தப்பு’

‘அப்படி இல்லிங்க வேலயில அது அது தரம் இருக்குல்ல. கழுதயும் குதிரையும் எப்படி ஒண்ணாயிடுமா’

அவன் எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமலே இருந்தான்.

‘வேலய இழுத்துகிட்டுபோவாத முடிங்க. கட்டிலுக்ககு க்கீழ வர்ர அந்த சொறுவுபலவாதான் ரொம்ப முக்கியம். அத கரெக்ட்டா செஞ்சிடணும். வேலயும் சட்டுனு ஆவுட்டும்’

ஆசாரி தன் வேலையில் மும்முரமாக இருந்தான்.

அன்று அவன் வழக்கம்போல் தன் அலுவலகம் சென்றான். ஆசாரியை அனுப்பி வைத்த நண்பன் எதிர்ப்பட்டான்.

‘இன்னுமா கட்டிலு வேல ஆவுது.’

‘ஆமாம். காண்ட்ராக்டா வுட்டு இருக்கலாம்போல. நாமதான் ஏமாந்து போனம்’

‘கட்டிலு செய்ய எதுக்கு இவ்வளவு நாளு. சட்டத்தை சைசு பண்ணி எழைச்சி ஏன் அங்க அங்க தொளை போடறதுக்கு எல்லாமேதான் மெஷினு வந்து இருக்குல்ல. இதுல என்னா வேல இருக்கு. ஒரு நாளு ரெண்டு நாளைக்கு மேல இதுல அப்பிடி என்னாதான் இருக்கு’

‘நீங்க சொல்றபடிபாத்தா இத்தனி நாளு எதுக்கு. ஒண்ணு சொல்ல மறந்துபோனேன், கட்டிலுக்கு கீழ ஒரு பெட்டிமாதிரி செஞ்சி சொறுவுபலவ போடணும்னு என் வீட்டுக்காரி யோசனை. அது ஆசாரி கிட்ட சொல்லி இருக்கம்’

‘செய்யுறாரா’

‘ஆமாம்’

‘அது செத்த கூட வேலய குடுக்கலாம். இருந்தாலும் இப்பதான் எதுவும் மெஷினு செய்யுது மேலகீழே சைசுக்கு பிளை வுட்டை அறுத்து பொட்டாணி அங்க அங்க போடுவாரு. அவ்வளவுதான்.வேலய சஞ்சாயமா வுட்டா இப்படித்தான். எப்பிடி சாப்புடலாம்னு ஆசாரிங்க பாக்குறாங்க. காண்ட்ராக்டா வுட்டாலும் வேல தரம் இருக்கரது என்னா செய்வே’

‘நீங்க கொஞ்சம் ஆசாரி கிட்ட பேசுங்க. நான் பேசுனா அவுரு எப்பவும் கணக்கில எடுத்துகறதே இல்லே’
‘கூலி பட்டுவாடா எல்லாம் யாரு நீங்களா இல்ல அம்மாவா’

‘அம்மாதான்’

‘அதான் கேட்டன். நீங்க தண்ணி பாம்பு. யாரு காசு வச்சிகிணு மணியம் பண்ணுறாங்களோ அங்கதான எதுவும் மடங்கும்’

‘இருக்கட்டும் நீங்க ஆசாரிய பாத்தா கேளுங்க. சட்டுன்னு முடின்னு சொல்லுங்க. என்னாதான் ஆவுதுன்னு பாக்குலாம்’

‘சரி நான் கேக்குறன்’ நண்பன் ஒத்துக்கொண்டான்.

மறு நாள் காலை ஆசாரி வந்தான். அவனோடு இன்னொரு ஆளையும் கூட்டி வந்தான்.

‘இன்னைக்கு வேல முடிஞ்சி பூடும். அதான் ரெண்டு ஆசாரியா வந்தம்’

‘ரொம்ப சரி ஆசாரியாரே’

‘என்ன சரி சாரு உங்க ஆபிசுக்காரருகிட்ட என்னா சொன்னிங்க அவ்ரு எங்கிட்ட சத்தம் போடுறாரு நானு வேலய வளத்தறனா. செய்ய வேண்டிய வேலய செஞ்சித்தானே ஆவுணும்’

‘எல்லாத்துக்கும் பட்றை பட்றைன்னு போயி வர்ரீரு. அப்புறம் எதுக்கு இம்மாம் நாளு’

‘என்னா பேசுறீரு சாரு. நான் என்ன உம் பீத்த காசுக்கு இந்த வேலெய இழுத்துகிட்டுபோறன்னுதானே. சொல்றீரு. நல்லா இல்ல சாரு’

‘எது நல்லா இல்லே.’

‘வேணாம் பேசவேணாம் அதான் சொல்லுவேன் இண்ணைக்கு வேல முடிச்சிட்டு நானு கெளம்பிடறேன்.

‘நான் ஒண்ணும் தப்பா சொல்லுல. அவுரு தானே உங்களை இந்தவேலைக்கு அனுப்பிவச்சாரு. அதான் அவருகிட்ட சொன்னேன். எதுவும் தப்பாகிப்பா சொல்லுலயே’

அதற்குள் அவன் மனைவி அங்கே வந்து நின்றாள்.

‘ஆசாரி வந்து இருக்காருன்னா நாம நம்ம வேலய பாக்குணும். ரெண்டு ஆசாரிங்க நிக்குறாங்க. வேல மெனக்கெடுதுன்னு. இதுல. என்னா பேச்சு வேண்டிகெடக்குன்னு கேக்குறன்.’

‘அம்மா இவரு ஆபிசுக்காரருகிட்டபோயி நான் வேலய இழுத்துகிட்டே போறன்னு சொல்லி இருக்குறா. அப்பிடி சொல்லுலாமான்னுதான் கேக்குறன்.’

‘இவுரு மூட்டை கட்டிகிட்டு போய் அதை ஆபிசுல அவர கேட்டு அவுரு வந்து உம்மகிட்ட கேட்டு நீரு இப்ப வந்து இவரகேக்குறீரு. இதெல்லாம் என்னா வேல. உடுங்க ஆசாரியாரே ஜோலிய பாருங்க’

‘உங்களாலதான் பாக்குறன் இல்லன்னா வேலய அப்பிடியே வுட்டுட்டு கெளம்பிடுவேன். எனக்கு காசு பெருசு இல்ல. மனுஷாளு வேணும். இப்ப சிங்கப்பூருல வா வான்னு என்ன கூப்புடறான். ஆயிரம் பேரு கெஞ்சுறான். நான் தான் தொட்ட வேலய வுட்டுட்டுப்போவுறது மொற இல்லன்னு பாக்குறன். மனுஷாள்னா பேசுலாம் எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணும். அதான் சொல்லுறன்’

‘கெடக்குறாரு நீங்க வேலய பாருங்க நான்தான் கட்டிகிட்டன் படுறன். உங்களுக்கு என்னா இருக்கு’

‘எந்த பொம்ம்னாட்டி நல்ல புருசனை கட்டுகிட்டன் அதனால நான் சந்தோசமா வாழுறன்னு சொல்லி இருக்கா. கடவுளு பரமேசுவரனையே கட்டிக்கிட்டாலும் அந்தப் பார்வதி நானு சந்தோசமா இருக்குறன்னா சொல்லப்போறா. பொம்பளயா பொறந்தா எண்ணிக்கும் எப்பவும் கொறதான். தன்னவிட தம் புருசன் ஒரு மொழம் கூட மக்குன்னு தான் இந்த உலகத்துல இருக்குற எல்லா பொம்பளையும் நினைக்கிறா’ அவன் பேசிக்கொண்டே இருந்தான்.

ஆசாரி அவன் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தான். ஆசாரிக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது. வாய்விட்டு ஒருமுறை சிரித்துக்கொண்டான்.

‘உங்களுக்குள்ள சண்ட எதுக்கு வேணாம். நாங்க வேலய பாக்குறம்.’

சட்டங்களை எடுத்துக்கொண்டு வேல செய்யும் இடத்திற்கு ப்போய் அமர்ந்துகொண்டான் ஆசாரி அழைத்து வந்த ஆளும் அவனோடு வந்து உட்கார்ந்துகொண்டான்.

அசுரகதியில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன, அவன் வழக்கம்போல் தன் அலுவலகம் புறப்பட்டான்.

‘ஆசாரி வேல செய்யுறாங்க பாத்துக்க’

‘நான்தான பாத்துக்கறேன் இண்ணைக்கு என்னுமோ அதிசயமா சேதி சொல்லுறீங்க’

‘இல்ல வேல இன்ணைக்கு முடியுதுன்னு சொன்னாரு’

‘சரி’’அவள் பதில் சொன்னாள்.

அலுவலகத்தில் அவனோடு பணியாற்றும் நண்பன் எதிர்ப்பட்டான்.

‘இண்ணைக்கு உங்க வேல முடிஞ்சி பூடும் ஆசாரி சொன்னாரு’

‘ஆமாம்’

‘வேல எது வரைக்கும் ஆகி யிருக்கு’

‘செய்து வச்சிருக்கிறாரு அது அதக் கோத்தாதானே பாக்குலாம் சட்டங்க அப்படி அப்படியே கெடக்கு’
‘நாளைக்கு சொல்லுங்க இப்ப என்ன அவுசரம்’

‘வாங்களேன் வந்து எப்பிடி வேல ஆயிருக்குன்னு பாக்குலாம்’

‘ஒரு நாளைக்கு வர்ரேன்’

‘வாங்க வந்து பாத்துட்டு சொல்லுங்க’

மாலை வீடு திரும்பினான். கட்டில் அனேகமாக முழு உருவம் பெற்று இருந்தது. ஆசாரிகள் இருவரும் கட்டிலின் கால்களைத் தட்டிக்கொண்டும் தடவிக்கொண்டும் இருந்தார்கள்.

‘என்ன வேல எப்பிடி ஆயிட்டு இருக்கு’

‘ஆயிடிச்சி’ ஆனா ஒரு சேதி ஒரு முப்பது ஸ்குறூங்க வேணும் ஒண்ணர இஞ்ச்சில அதான் பாக்குறன்’

‘எதுக்கு’

‘இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்க முடியுமா வாங்கியாங்கன்னா வாங்கியாறா வேண்டுயதுதான் போவகுள்ள பாத்துகுங்க நானு இங்கேந்து எதாவது வேட்டில முடிஞ்சிகிட்டு போறனான்னு’
‘இல்ல கேட்டன்’

‘போங்க வேல கெடக்கு’

அவன் புறப்பட்டான். ஒண்ணரை இஞ்ச் ஸ்குரூ வாங்க ஊர் முழுவதும் அலைந்து திரிந்து அது ஏதோ ஒரு கடையில் தான் கிடைத்தது.

‘கட்டிலுக்கு எதுக்கு இந்த ஸ்குரூ எல்லாம்’

கடைக்காரன் தான் கேட்டான்.

‘ஆசாரி வாங்கியாற சொன்னாரு’

‘வேல முடியற நேரமா இது’

‘ஆமாம் கட்டிலு செய்யச்சொன்னேன். வேல இண்ணைக்கு முடியும்னு சொன்னாரு.’

‘அப்ப சரிதான். ஆசாரிங்க வேண்டாத சாமான கேக்குறார்னா ஏதோ கொளறு படி இருக்கும் அது தெரிஞ்சி வெளியில வந்துடப்போவுதேன்னு அது இது வேணும் ஔடி வாங்கியாம்பாங்க ஆமாம் கூலிய சில்லறையா மாத்தி கொண்டாங்க, அந்த ஆணி வேணும், இந்த ஸ்குரு ஆணி வேணும், ஹாக்சா கூரம் இல்ல புதுசா ஒண்ணு இப்பவே கொண்டாரணும், கொஞ்சமா எமரி சீட்டு நல்லதா வேணும்னு. வேல முடியகுள்ள இப்பிடி ஆசாரிப்க்க சொன்னா அந்த வேலயில ஏதும் சூது இருக்கும்’

அவன் திரி திரி என்று விழித்தான்.

‘போங்க வேல எதுவோ அத பாருங்க இங்க என் வாய பாத்து என்னா ஆவுறது’

கடைக்காரன் மீண்டும் சேதி சொன்னான்.

அவன் வாங்கிய சாமானை எடுத்துக்கொண்டு தன் வீடு வந்தான்..

‘இருக்குறது வச்சி வேல கச்சிதமா முடிச்சிட்டேன்.’

‘இந்த ஸ்குறூ’

‘உங்க ஊட்டுல எம்மானோ வேல இன்னும் இருக்கு எதுவும் ஒண்ணும் வீணா போவாது வையுங்க’

அவன் என்னசெய்வது என்று தெரியாமல் விழித்தான்.

‘போங்க கணக்க முடிச்சி அனுப்புங்க’

செய்த கட்டில் வீட்டு வாயிலில் கிடந்தது.

‘கெடக்கட்டும் ஒரு வார்னீஷ் கோட்டிங் கொடுத்துட்டு அப்புறம் இத வூட்டு உள்ளாற போடுங்க’

‘இண்ணைக்கு கூலி மட்டும்தானே பாக்கி இந்தாங்க’ அவள் ஆசாரியிடம் சரியா ஒப்படைத்தாள்.

ஆசாரியோடு வந்த ஆள் கீழே கிடந்த சிறு சிறு மரத்துண்டுகள் எல்லாம் பொறுக்கி த்தன் வெள்ளைச்சாக்கு ஒன்றில் நிறைத்துக்கொண்டிருந்தான்.

‘இது எதுக்கு’

‘இங்க கெடந்து என்னா ஆவப்போவுது குப்பதானே அவுரு எடுத்துனுபோவுட்டுமே’

‘போவுட்டும் ஒரு வார்த்த கேக்குலாம்ல’ அவள் சண்டைக்கு வந்தாள்.

‘சரி வுடு நாமதான் அத வச்சிகிணு என்னா செய்யப்போறம்’

‘எதுக்கும் ஒரு மொறை இருக்குல்ல’

‘அலுப்பை சனம். நாம வந்து மாட்டிக்கினோம்.’

‘என்னா பேசுறீங்க’

அவன் ஆசாரியிடம் கேட்டான்.

‘இப்பவும் சொல்றன். உங்க ஆபிசுக்காரரு சொன்னாரேன்னு இங்க வேலைக்கு வந்தன் இல்லன்னா கோடியா கொட்டி குடுத்தாலும் நான் வரமாட்டன்.’

ஆசாரிகள் இருவரும் விடை பெற்றுக்கொண்டார்கள்.

கட்டிலைப்பார்க்க அவனும் அவளும் அதன் அருகே சென்றார்கள்.

‘சொறுவு பலக எங்கு இருக்கு’

‘இல்ல ரெண்டு பக்கமும் மொண்ணையாதான இருக்கு’

கட்டிலின் மேல் பகுதியை மூடிய பிளைவுட் பலகையில் பாதி மட்டும் திறந்து பார்க்கும் விதம் கட்டில் செய்யப்பட்டு இருந்தது.

அவன் அது திறந்து பார்த்தான்.

அவள் அந்த கோடவுன் அறையைப்பார்த்தாள்.

‘இது என்னா எருமை கணக்கா கனக்குற பலகை தூக்கி அப்ப அப்ப நா என்ன எடுக்கறது என்ன வைக்கறது. இது யாரால ஆவுற காரியம். சொறுகு பலகய வச்சி சுலுவா சைடுல தொறக்குறமாதிரிதான செய்யச்சொன்னன்’

‘ஆமாம். ஆசாரி மேல தப்பு இல்ல நாம அவரு இந்த வேலைக்கு கொண்ணாந்ததுதான் தப்பு’

‘அப்ப யாரு கோண்டாந்தா’

‘நான்தான்.’

‘இப்ப நம்ப கைப்பொருளும் போயி நாம எது கேட்டமோ அதுவும் இல்லன்னு ஆயிடிச்சி’

‘ரொம்ப கேவுலமா இருக்கு. அந்த ஆசாரி பாத்து இது என்னா கேவுலம்னு கேக்குலாமா
எங்கப்போனாலும் இந்த கதையாத்தான் இருக்கு எங்க போயி எங்க வந்தாதான் என்ன’ அவள் சொல்லிக்கொன்டாள்.

மறுநாள் வழக்கம்போல் அலுவலகம் கிளம்பிப்போனான். அவன் நண்பன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்தான். கொஞ்ச நேரம் போகட்டுமே என்று இருந்தவனை நண்பனே முந்திக்கொண்டு கேட்டான்

‘என்னா கட்டிலு வேல முடிஞ்சிதா’

‘முடிஞ்சிது. ஆனா நாம சொன்ன மாதிரி ஆசாரி கட்டில செய்யுல. அவுரு இஸ்டத்துக்கு செய்துட்டாரு.

‘நீங்க அப்ப அப்ப பாக்குலயா’

‘பாத்தேன் பாத்தேன் பாத்து என்ன செய்ய. செஞ்ச சட்டத்தை ஒரு உருவாக்கிக்காட்டுனது வேல முடிஞ்சி கெளம்பகுள்ளதான் ‘நான் கட்டிலுக்குக்கீழ சொறுவு பலவ தள்ளி தொறக்குற மாதிரி வக்க சொன்னேன். ஆசாரி கட்டிலுக்கு மேல தொறக்குற மாதிரி செஞ்சிட்டாரு. ஆம்பளங்கதான் மேல்மூடிய தொறக்கணும். பொணமா கனக்குது. நாம நெனச்சது ஒண்ணு. அவுரு செஞ்சது வேற ஒண்ணு. என் வூட்டுக்காரிக்கு ஒண்ணும் சொல்லிக்க முடியல’

‘கட்டிலு புத்சா செஞ்சிட்டு பொணம் கிணம்னு பேசுனா என்னா சாரு’

‘அப்பிடி ஆயி போச்சே என்னா பண்ணுவே.’

கூலி எல்லாம் கணக்குப்பண்ணி ஆசாரிக்கு குடுத்தாச்சா’

‘ஆச்சி அது அது அண்ண அண்ணக்கி முடிஞ்சிபோச்சில்ல’

‘அப்புறம பேசி என்னா ஆவும் அவ்வளவுதான் அமுசம்னு வச்சிக்க வேண்டியதுதான்’.

‘யார சொல்லி என்ன செய்வே மான் மார்க்கு க்கொட கையில இருந்தாலும் மழை பேயகுள்ள அது விரிஞ்சிநிக்குணும். அது மக்காறு பண்ணிச்சின்னா என்னா சொல்லுவே’

‘நல்லா பேசுறீங்க ஆனா செய்யுற காரியம்தான் கெட்டுப்போயிடுது. இது எல்லாம் புத்திகொள்முதல்னு வச்சிகிட்டாலும் ஒருத்தன் எம்மாந்தான் அத கொள்முதலாவே பண்ணுறது. நானும் ஒரு கட்டிலு செய்யுலாம்னு பாத்தேன், உங்களுக்கு எப்பிடி செய்யுறாருன்னு அத பாத்துபுட்டு நாமளும் அந்த ஆசாரிகிட்ட சொல்லுலாம்னு ஒரு முடிவுல இருந்தேன், இனி அந்த வேலயும் இல்ல.’

‘நான்தான் ஏமாந்து போனேன்’

‘சாரு ஆசாரி கட்டிலே உங்க வூட்டுலதான் மொத மொத ஒரு கட்டிலு செய்ய தொடங்கி இருக்காரு’

‘எப்படி ‘

‘இன்னுமா எப்பிடின்னு கேப்பிங்க’ நண்பன் முடித்துக்கொண்டான்.

அவன் இந்த விஷயத்தைமட்டும் அவளிடம் யாரும் சொல்லிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *