கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,850 
 

தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும்.

“நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை எம்பிள்ளையும் செய்யக் கூடாது. அவனைப் படிக்க வைத்து வேறு உத்தியோகம் வாங்கித் தருவேன்,’ என்று சொல்லும் பெற்றோர் தான் இவ்வுலகில் ஏராளம்.

அப்படித்தான் செருப்புத் தொழில் செய்து வந்த தாமஸ் பேட்டாவின் பெற்றோரும், “”செருப்புத் தைக்கும் தொழிலை நீ செய்ய வேண்டாம்… வேறு தொழிலைச் செய்யப்பா,” என்று கூறினர்.

Betta

“”இந்தத் தொழிலை உலகம் போற்றும் உன்னதத் தொழிலாக மாற்றுவேன். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்,” என்று பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு செருப்புத் தைக்கும் மேன்மையினை அறிந்து கொள்ள வெளிநாடுகள் சிலவற்றிற்குச் சென்றான் தாமஸ் பேட்டாவோ.

செருப்புத் தைக்கும் இயந்திரங்களைப் பார்த்தார். இயந்திரங்களை விட வேகமாகச் செருப்புத் தைக்கும் முயற்சியினை மேற்கொண்டார். ஊக்கமும் முயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டாமலா போகும்.

தாமஸ் எண்ணியபடி சில ஆண்டுகளிலே வேகமாக செருப்புத் தைக்கும் நிலையை அடைந்தார். 1905ம் ஆண்டு நண்பர் ஒருவர் கொடுத்த 50 பவுன் மூலதனத்துடன் தனது பங்கினையும் போட்டு தமது பெயரில் தொழிற்சாலை ஒன்றினைத் தொடங்கினார்.

நாளடைவில் தாமஸ் பேட்டாவின் தொழிற்சாலை விரிவாக்கம் அடைந்து வரத் தொடங்கியது. முதலில் சில்லறை வியாபாரியாக இருந்தவர் நாளடைவில் பெரிய வியாபாரியானார்.

அத்துடன் மக்களின் மனப்போக்கினை அறிந்து அவர்களுக்குப் பிடிக்கும்படியாக புது மாதிரியான செருப்புகளைத் தயார் செய்தார். அதனால் வியாபாரம் மென்மேலும் பெருகிக் கொண்டே சென்றது. தாமஸ் பேட்டா… தமது பெயரில் பாதியான பேட்டா கம்பெனி செருப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதும் தாமஸ் ஒரு புதுமுறையைக் கையாண்டார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் செருப்புகளைத் தயார் செய்து அனுப்புவதை விட அந்தந்த நாட்டில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தினால் நன்றாக இருக்கும். மேலும், அந்நாட்டு மக்களுக்கு விருப்பமான முறையில் மேன்மையாகத் தயார் செய்து கொடுக்க முடியும். அதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்றும் எண்ணினார். எண்ணத்தின் வெளிப்பாட்டினை பல நாடுகளிலும் “பேட்டா’ தொழிற்சாலைகளைத் தோற்றுவித்தார். அதனால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்தார். “பேட்டா’ தொழிற்சாலை தோற்றுவித்ததோடு நிற்கவில்லை. நாட்டின் பல பாகங்களிலும் தங்களது விற்பனை நிலையங்களையும் தோற்றுவித்தார்.

இப்படிச் செய்ததன் மூலம் அவசிய சரக்கினை விற்க வேறு வியாபாரிகளைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அது மட்டுமா? பேட்டா செருப்பு வியாபாரத்தின் மூலம் ஒரு நகரையே உருவாக்கினார். லட்சக்கணக்கானோர் அந்நகரில் வசித்து வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியமான தேவைகளான கடைகள், ஸ்டோர்கள், ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கல்விக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து வசதிகள், திருமணக் கூடங்கள் அனைத்தும் கம்பெனி மூலமே இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. எண்ணம் – செயல் ஒன்றானால் எல்லாம் நன்றே… தாமஸ் பேட்டாவின் வெற்றி மிக மகத்துவமானது.

-ஜூலை 09,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *