சாதிகள் இரண்டே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 1,296 
 
 

(1975 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிலுட்டு பாஸ் அசலாட்டியமாக நடக்கின்றபோது அடியறுந்த கொடி காற்றிலே அலைப்புறுவதுபோல இருக் கும். அந்த நடையில் அலாதியான ஒரு கவர்ச்சி உண்டு. தனக்கே சொந்தமான அந்த அசல் நடையிழந்து ஒரு புதிய நடையைத் தத்தெடுத்தபோது அவன் பட்ட சிரமம் பச்சையாகத் தெரிந்தது.

நெடுஞ்சாலையில் இருந்து கிராமங்களை நோக்கிச் செல்லும் கப்பிப் பாதையில் அவன் நடந்து சென்றான். சிங்களவர் மத்தியில் சிறுபான்மை இனத்தவர் செய்திருக்கும் ஊடுருவலைத் துடைத்தெறிவதென்ற திடசங்கற்பத்துடன் கருங்கல்லாய் அழுத்திய இனவெறியின் பாரச் சுமையுடன் தினவெடுத்த தோள்களை உயர்த்திப் போர்முனைக்குப் போகும் தளபதியின் துறுதுறுப்புடன், கையிலே கசிப்பு நிறைந்த போத்தலுடன் அவன் நடந்தான். கப்பிப்பாதை நெடுஞ்சாலையுடன் முட்டுகின்ற சந்தியில் வானுயந்து நிற்கும் அப்புகாமி முதலாளியின் கடையிலிருந்து தான் அந்த வீர நடை ஆரம்பமானது.

ஊருங்காலும் அடங்கியபின் ஒரு போத்தல் கசிப்பையும் பருகவேண்டும். அது தரும் அதீத வெறியில் உத்வேகம் பெற்று தனது குடிசைக்கு அண்டையில், கிழக்குப்புற மாக உள்ள தமிழர்களதும், முஸ்லிம்களதும் குடிசைகளைக் கொழுத்தவேண்டும், காரியமானதும் அப்புஹாமி முதலாளி நூறு ரூபா அன்பளிப்புச் செய்வார்.

பாதையின் இரு மருங்கிலும் இருந்த காட்டை அழித்து, குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் அடைத்து அத்து மீறிக் குடியேறி இருக்கின்றனர், நிலமற்ற ஏழைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள். அந்தக் குடியேற்றத்திற்கு அப்பால் உள்ள பகுதியோ நீளமான குன்று.

அப்புஹாமி முதலாளி, மேலும் ஒரு அரிசி ஆலையை அமைக்கப் பொருத்தமான இடமென்று கண்குத்தியிருந்த பகுதி அது. இந்தப் பஞ்சப் பிராணிகள் அந்த இடமாகப் பார்த்துக் குடியேறி, முதலாளியின் எண்ணத்தில் மண்ணை அல்ல, பெரும் பாறாங்கல்லை அல்லவா தூக்கிப் போட்டு விட்டார்கள்!

காணி இலாகா அவர்களுக்கு உத்தரவுப் பத்திரம் வழங்குவதற்குமுன் அவர்களை அப்புறப்படுத்தியாக வேண்டு மென்று முதலாளி சங்கற்பம் எடுத்துக்கொண்டார். பாதை யின் வலதுபுறமாக நான்கைந்து தமிழ். முஸ்லிம் குடும்பங்கள் குடிசையமைத்ததானது அவரது சங்கற்பத்தை நிறை வேற்றுவதை இலகுபடுத்திவிட்டது.

சிங்கள மக்களின் மனதில் அவர் ஊன்றிய இனவாத வித்துக்கள் முளைத்துச் சடைத்துப் பயிராகியதும், அதை அறுவடை செய்து அனுபவிக்கக் காரணத்தோடு தான் கிலுட்டுப் பாஸை தேர்ந்தெடுத்தார்.

பகலைக்கெல்லாம் இரும்பைக் காய்ச்சி நெருப்போடு பழகுபவன்; அத்தோடு ஆளொரு கசிப்பு மன்னனுங்கூட. எந்த நேரமும் அவன் குடலுக்குள் ஐம்பது சதம் பெறுமதி யான கசிப்பாவது இருக்கவேண்டும். இன்றேல் மனுஷன் அடித்துப்போட்ட எலிதான். அவனைப் பொறுத்தவரையில் கசிப்பு மதுவல்ல; உணவாகவும் மருந்தாகவும் கைகொடுக் கின்ற தெய்வம். கசிப்பின் உந்துவிசையோடு கொப்பறை யின் பக்கத்திலே பாய் புலியாய் நின்று இரும்பை அடி அடியென்று அடிப்பதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் மனைவி, ஏழு மக்கள் கொண்ட. அவனது குடும்பத்தின் அரை வயிற்றைக் கழுவவும், கசிப்பு விடாயைத் தணிக்கவும்கூட காணாது.

அப்பேர்ப்பட்ட கிலுட்டுப் பாஸை ஒரு போத்தல் கசிப்பாலும், “காரியமானதும் நூறுரூபா தரப்படும்” என்ற வாக்குறுதியாலும் வளைத்தும் பிடிக்கலாம் என அப்புஹாமி முதலாளி நினைத்தது பிழையாகிப்போய்விடவில்லை

“நாம் சிங்களவர். இது நமது பிரதேசம். இங்கு தமிழனுக்கும் தம்பிலாவுக்கும் என்ன காணி? இவர்களைத் துரத்தினால்தான், சிங்களச் சாதி சந்தோஷமாக வாழும். பாசுண்ணே நீ ஒன்றையும் யோசிக்காதே. என்ன வந்தா லும் நான் கவனித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நீ ஒரு வீர புருஷனாகவே மதிக்கப்படுவாய்.”

இறுதியாக அப்புஹாமி முதலாளி அந்த வீர வசனங் களைக் கூறி அட்வான்சாகக் கசிப்புப் போத்தல் ஒன்றைக் கையிலே கொடுத்து, கிலுட்டுப் பாஸை வழியனுப்பினார்.

தூரத்தே இருந்துவந்த அழுகுரல் அவன் வேகத்தை சற்றுத் தணித்தது. தனது குடிசையில் இருந்தே அந்த அழு குரல் வருகிறதென்பதையும், அக்குரல் தனது மக்களுடை. யதே என்பதையும் தீர்மானிக்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பதறிக்கொண்டு ஓடினான்.

குடிசையின் அடைப்பெதுவும் இல்லாததும் பட்டறை யாகப் பயன்படுவதுமான முன்பாகத்தில் ஒரு சிறு கும்பலே கூடி இருந்தது. கிலுட்டுப் பாஸ் என்னமோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு நெருங்கினான். உலையின் பக்கத்தில் கரிபடிந்த சாக்கின்மேல் சோமாவதி கிடத்தப்பட்டிருந்தாள். தாய்மை நெறுநெறுக்க எட்டுமாதக் கர்ப்பிணியான அவன் மனைவி சோமாவதி மயங்கிக்கிடந்தாள். அண்டைக் குடித் தனக்காரர்களான கல்லுடைக்கும் தொழிலாளியான கந்தையனும், அவன் மனைவி வள்ளிநாயகியும், சோமாவின் உச்சியிலும், உள்ளங்கால்களிலும் சுக்குப் பொடியைத் தேய்த்தவண்ணம் இருந்தனர். கடைச் சிப்பந்தியான கரீமின் மனைவி கதீஜா இடுப்பளவு உயர மரக்குற்றியில் ஏற்றப்பட் டிருக்கும் அம்மிக்கல்லில் வேர்க்கொம்பைப் பொடியாக்கிக் கொண்டிருந்தாள்.

“வேப்பெண்ணை தேடி அலையாத இடமில்லை. ஆட் டுக்கார ஜோன்பின்ளையின் சீசாவில் தான் சிறிது கிடந்தது”

வேப்பெண்ணைச் சீசாவுடன் கதிஜாவின் புருஷன் கரீம் வந்து சேர்ந்தான்.

“கதிசம்மா! வேர்க்கொம்பு போதும். வேப்பெண்ணை யைக் காய்ச்சியெடு”

வள்ளி, கதீஜாவுக்குக் கட்டளை இட்டுவிட்டு, சோமா வின் இமைகளைக் கசக்கினாள். கதீஜா அம்மியை வழித்து வேர்க்கொம்புப் பொடியைக் கந்தையனிடம் கொடுத்து விட்டு கரீமிடம் வேப்பெண்ணைச் சீசாவை வாங்கினாள். பின் குடிசையின் பின்பக்கம் போனாள்.

“பிரேமாவதி கரண்டி யொன்று எடுத்துத்தா.” கதீஜாவின் அழைப்பைத் தொடர்ந்து கிலுட்டுவின் மூத்த மகள் பிரேமா உள்ளே போனாள். அங்கு நடந்துகொண் டிருந்த சிகிச்சைகளின் மூலம் சோமாவுக்கு என்ன நேர்ந்தது என்பதை கிலுட்டுபாஸ் உணர்ந்து கொண்டான்.

“சோமா…! ஓ…! என் சோமா…!”

அவன் ஓவென்று கதறினான். அவனது உயிர், உணர்வு, ஆத்மா எல்லாவற்றையும் வழித்தெடுத்த பாவம் அந்த கதறலில் இழைந்து பறந்தது.

“எட்டாங்கால் ஆபத்தாமே! கொப்பரைக்கு காத் தூத வைத்து உன் வாழ்வையே கொப்பரையாக்கிவிட்ட இந்தக் கிலுட்டுவை அந்தரிக்க விட்டிடாதே ராசாத்தி!”

சோமா சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திருந்தால், ஒருதரமாவது லங்கா ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப் பாள் என்று நினைத்துத் தலைக்கனமும், அவளுக்கு நான் என்னத்தைக் கொடுத்துவிட்டேன் என எண்ணி மனோ விசாரமும் கொள்பவன் கிலுட்டுபாஸ். மார்பின் இரு கரும் பொட்டுக்களைச் சுற்றியும், மோவாயிலும் முழங்காலுக்குக் கீழும் ஐதாக வளர்ந்திருக்கும் ரோமங்களை சிரைத்துவிட்டுப் பார்த்தால் தன்னை யாரும் ஆணென்றே சொல்லமாட்டார் கள். பெண்ணின் சாயலே கொண்ட தன்னை நம்பி மாத் தறையில் இருந்து மரதன் கடவளை வரையும் வந்தவள் என்பதை நினைவுகூறும்போதெல்லாம் அவன் மெய்மறந்து போவான். கொப்பரைக் கரியும் சாம்பலும், கசிப்பு வெறி யில் நிலத்தில் ஓலைப்பாய் சுற்றுவதாற் படியும் புழுதியும் வியர்வை நெடியும் மாறாத அந்த உடலை அருவருத்து ஒதுக் காது எட்டுப் பிள்ளைகளுக்குத் தாயானவள் என்பதை நினைக் கும்போதெல்லாம் அவனுக்கு புல்லரிப்பு எடுக்கும். ஆராத காதலுடன் அந்த அழுக்குடலை ஆரத்தழுவும் சோமாவை இழப்பதுபற்றி அவன் சிந்தித்ததே கிடையாது. அது என்ன உடம்போ? அது என்ன வியாதியோ? குளித்தால் வருத்தம் வரும் என்பதை முதலில் கேட்பவர்களுக்கு இப்படியான சந்தேகம் டேண்டர்கவே செய்யும். மாதம் ஒரு தடவையோ , வாரமொருமுறையோ வென்னீரால் அந்த உடம்பை நனைப்ப தற்கு ஆட்சேபனை இல்லையாம். தினமும் காலையில் முகம் அலம்புவதற்குக் கூட ஒரு குவளை வென்னீர் போட்டுக் கொடுக்க அவள் மறக்கமாட்டாள். அழுக்கு உடலில் சரும நோய்வரும் எனும் வைத்திய சாஸ்திரமும் கிலுட்டுவிடம் எடுபடவில்லை. அதுதான் அசாதாரண உடம்பாயிற்றே! அந்த மனமும் அசாதாரணமானது தான். மற்றவர்கள் கிலுட்டு (அழுக்கு) பாஸ் என அழைப்பதுபற்றி ஆர்ப்பளவு கவலை, இம்மியளவு சினம் கிடையவே கிடையாது.

கிலுட்டு சோமாவின் தலைமாட்டில் குந்தி, அந்தச் சூழலையே மறந்தவனாய் உணர்வற்ற அவள் கன்னங்களில் முத்தங்களால் சூடேற்ற முனைந்தான். அதனால் விளைந்த ஆர்ப்பளவு வெப்பமும் அவன் கண்ணீராக ஆறியது.

“நீ இல்லாமல் நான் எப்படி வாழப்போகிறேன் சோமா – உனைத்தவிர இந்தக் கிலுட்டுவை ஆதரிக்கக்கூடிய வர்கள் யார்?”

“தாத்தே! பியதாச மாத்தயாட டைகர் என் காலைக் கடிச்சிப்போட்டுது…. தாத்தே!”

பையனொருவன் காலைக்காட்டி அழுதான். “அழாதே புத்தே அழாதே. ‘அவர்’ காயத்திலே செருப்பாலே அடித்து ஓதியும் பார்த்துவிட்டார் வள்ளியக்கா ஒட்டறையும் கத் திரி எலயும் அரச்சிப் பூசிவிட்டார் பாசுண்னே!”

வேப்பெண்ணைக் கரண்டியோடு வந்த கதீஜா பையனின் சாயத்துக்கு நடந்த வைத்தியத்தையும் விபரித்தாள்.

“நெருப்பு மிடிக்காம புள்ளயார் காப்பாற்றினார்.”

கந்தனைத் தொடர்ந்து கிலுட்டுவின் மூத்தமகள் பேசத்தொடங்கினாள்.

“விளக்கேற்றும்போது அம்மா மயங்கி விழுந்தா தாத்தே! செய்வதறியாது நாங்க கூச்சலிட்டம். பியதாச மாத்தயாட வீட்டுக்கு தம்பிய அனுப்பினேன். அங்கிருந்து ஆரும் வரவில்லை. நாய்க் கடியோடு தம்பிதான் கதறிக் கொண்டு வந்தான். ஆபத்து வேளையில் இவங்கதான் வந்தாங்க.”

தாத்தே பியதாச மாத்தய, பொம்பள, புள்ளயள் எல்லாம் பன்சலயில பிங்கமயாம் அது பாக்கப் போறாங்க அவங்கட நாய் என்னப் பாஞ்சு, பாஞ்சு கிடிச்சிச்சி!”பையன் மேலும் விம்மினான்!”

“அணே ! அம்மா !”

சோமா தீனமாக முனகினாள். எல்லோரும் அவளை ஆர்வத்தோடு நோக்கினர். கண் இமைகள் சாடையாகத் துடித்தன.

வயப் ‘சோமா! உன் கிலுட்டைப் பார் சோமா’

“பாசுன்னே ! சோமா புள்ளத்தாச்சி. டாக்குத்தருக் கிட்ட காட்டுறதுதான் புத்தி”

கந்தனின் யோசனைக்கு மறுப்பு செல்லும் நிலையில் கிலுட்டு இல்லை.

“டாக்குத்தருக்கிட்ட போறது பெரிய செலவிலே. கொண்டு போய்விடும் வெத மாத்தயாவக் கூட்டி வந்தா என்ன?”

கந்தனின் அபிப்பிராயத்தை வள்ளி மறுத்ததும் நியாயம் தான்.

“வெதமாத்தயாவை பேய் விரட்டப் புளியங்குளத் துக்கு கூட்டிப்போய் இருக்கிறார்கள். டாக்டரிடம் தான் காட்டவேணும்.”

கரீமின் வார்த்தைகளைத் தொடர்ந்து கிலுட்டு விசுக் கென்றெழுந்தான், முற்றத்தில் இறங்கி வேகமாக நடந் தான். கசிப்புப் போத்தல் அவன் கையிலேயே இருந்தது. பாதையில் ஏறியதும் கசிப்புப் போத்தலைத் தூக்கிப்பிடித்து அதன் குடுதியை திருடலாமா என் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக கசிப்புப் போத்தலை ஆவேசத் துடன் எறிந்தான். ஊமை நிலவுதான்; ஆனால் அவன் வைத்த குறி பிசகவில்லை. பாதையின் அருகில் துருத்திக் கொண்டு நிற்கும் பாறாங்கல்லில் அது விழுந்து சிதறியது. இப்போது அவன் மனச்சுமை குறைந்து உடல் மென்மை யாகி இதமளித்த பாவம் நடையிலே தென்பட்டது?

ஆமாம் அடியறுந்த கொடியாட்ட அசலாட்டிய நடையை அநாயாசமாகத் தொடர்ந்தான். பெருந்தெரு வைக் கடந்து கடைக்குள் ஏறிய கிலுட்டு பாசை ஏமாற் றமே காத்திருந்தது. அப்புஹாமி முதலாளி ஆரோகணித் திருக்கும் சுழல் கதிரை காலியாகக் கிடந்தது.

“முதலாளி எங்கே?”

பக்கத்தே சிறிய நாற்காலியில் அமந்திருந்த சின்ன முதலாளியிடம் கவலையோடும் கலவரத்தோடும் வினவினான்.

“முதலாளி ஏன்?”

நீண்ட கன்னக்கிறுதாவும் சடாமுடியுமாகக் கன்னங் கரேலன்றிருந்த சின்ன முதலாளி செருக்குடன் தலையை அசைத்த அசைப்பும், குரலின் கடுமையும், கிலுட்.ை.. கலங்க அடித்தன. ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்டான்.

“முதலாளியை நான் பார்க்கவேண்டும்.”

“அடேய் இப்போது முதலாளியை யாரும் பார்க்க முடியாது.”

“நான் கிலுட்டுபாஸ் வந்திருக்கிறேன் என்று தெரிந் தால் என்னைக் கட்டாயம் பார்ப்பார்” உரத்த தொனியிற் கூறினான்.

“யார், கிலுட்டு பாஸா? “

முதலாளியின் குரல் மாடியிலிருந்து ஒலித்தது. இரும்பு இளகிவிட்டதென்றால் அதில் ஊன்றி, ஊன்றி அடிப்பானே கிலுட்டு. அந்த வேகத்தில் மாடிப்படிகளில் விடுவிடு என்று ஏறினான். எல்லை கடந்த பரபரப்புடன் கீழே இறங்க, தயாராய் நின்ற முதலாளியைக்கூட கவனிக்க முடியாத அவசரத்துடன் அவரிலே முட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான். கணப்பொழுதிலே தன் தவறை உணர்ந்து பயத்துடன் ஒதுங்கி நின்ற வாயுளறினான்.

மாடி அறையை நிமிர்ந்து பார்த்தானோ இல்லையோ பயம் எங்கோ பறந்தது. வியப்பு அவனை அதிரடித்தது. சினத்தால் முகம் சிவப்பேறியது. ஆடம்பரமான மேசைகள் கதிரைகள், மேசையிலே உயர்ந்தரக வீதுறுகள் இறைச்சிப் பொரியல், முட்டை , சுருட்டு, சிகரட் இத்தியாதி இவற் றைக்கண்டு அவன் அதிர்ந்துவிடவில்லை. சம்சாரியாகி பெரிய குடும்பக்காரன் ஆகுவதற்கு முன் அவன் பருகாத மதுபானங் களா? ருசிக்காத டேஸ்ட்களா? ஆமா அப்போதிக்கரி அருளம்பலத்தையும் சீலைக்கடை முதலாளி சுலைமானையும் அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை.

தமிழர்களின் குடிசைகளை பொசுக்குமாறு தன்னை ஏவிவிட்டு, இங்கே தமிழ் கனவான்களோடு குதுகலிக்கின்ற அப்புஹாமி முதலாளியை சம்மட்டயடிக்கும் தனது முஷ்டி யால் நொறுக்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. ஆயினும் தனது தற்போதய நிலையில் அது புத்திசாலித்தன மில்லை என நிதானித்து, தனது உணர்ச்சிகளை மடக்கிப் பிடித்தான்.

“முதலாளி! என் சோமா… அவளுக்கு எட்டாங்கால், எட்டுமாதம். ஜன்னிகண்டு, மயங்கிப்போய் கிடக்கிறாள். அவளை டாக்டரிடம் காட்டவேண்டும். சல்லி இருபத்தைஞ்சு ரூபா அவசரமா வேணும் முதலாளி.”

இதைச் சொல்லிவிட்டு விம்மிவிம்மி அழுதான். இவ் வேளை அவன் அங்குவந்தது முதலாளிக்கு கட்டோடு பிடிக்க வில்லை. பொங்கி எழுந்த ஆத்திரத்தை எல்லாம் குரலிலே என்று கூட்டி,

“சல்லியும் மல்லியும், சனியன் ….. பழயங்” என்று கத்தினார். கிலுட்டு பிச்சைக்காரனைப்போல கைகளை ஏந்தி,

அப்போதிக்கரியை உருக்கத்துடன் பார்த்தான். அவர் நிலை அவனுக்கே பரிதாபமாக இருந்தது. அவன் தலை நிமிர்ந்த போது சுவரிலே தொங்கும் புதுரகக் கண்ணாடியின் சிவப்புக் கம்பி வேகமாகச் சுழன்றது. கைகளைக் கூப்பியவண்ணம்,

“உங்களைக் கும்பிட்டேன் முதலாளி. என் சோமாவின் உயிருக்காக எதை வேண்டுமானாலும் பொசுக்கிவிடுகிறேன். நூறு வேணாம். இருபத்தைஞ்சே போதும். இப்ப இருக்கிற நிலையில் என் சோமாவைக் கெக்குறாவைக்குத்தான் கொண்டு போகவேணும்.”

“பற பள்ளா ! பளயங்!”

முதலாளி தன்னை மறந்த நிலையில் ஆவேசமுற்றார். கனவான்கள் முன்னிலையில் தன்னை அம்பலப்படுத்தவே இவன் வந்திருக்கிறான் என்றுகூட அவருக்குப் பட்டது. அவரது நாடி நரம்புகள் புடைத்தெழுந்தன. கையை ஆவேசமுடன் ஓங்கினார்.

கிலுட்டு அதற்கு இடம்வைக்காமல் படபடவென்று படிகளில் இறங்கினான். வெறிபிடித்தவன் போல வந்து வெளியே நடந்தான்.

கப்பிப் பாதையின் அருகில் துருத்திக்கொண்டு நிற்கும் பாறாங்கல், அதனருகில் சிதறிக்கிடக்கும் குப்பியோடுகள், ஊமை நிலவாயினும் போத்தலோடுகள் ‘பளிச்பளிச்’ என்று அவன் கவனத்தை ஈர்த்தன. போத்தலின் அடிப்பாகமும் கழுத்துப்பாகமும் இரு பெருந் துண்டுகளாகவே கிடந்தன. கிலுட்டு அவற்றை இரு கைகளிலும் எடுத்தான். அவற்றை ஏந்தியவண்ணம் சற்றுத் தூரம் நடந்தான்.

“இவற்றை இனி ஒட்டமுடியாது. இவற்றின் வாய் களோ நான் அராவுகிற கத்திகளை விடக் கூர்மையாக இருக்கின்றன!” என்ற நினைவுக் குதிரோடு அவற்றைத் தூக்கி வீசினான். அவை பாதையின் இருமருங்கிலும் தொப்பென்று விழுந்தன. மனோவேதனையில் பாறாங்கற் சுமையாலே துவை யுண்டு சாம்பிப்போன கிலுட்டுபாஸின் முகத்தில் மெல்லிய பிரகாசம் மறுமலர்ச்சி காட்டியது. அவனது அசலான அடி யறுந்த கொடியாட்ட நடையை அசலாட்டியமாக ஆனாலும் சற்று வேகமாக நடந்தான்.

“கந்தையா! நான் காரோடு வருவேன் என எதிர்பார்த்தீங்க என்ன? நாயெண்டு துரத்திட்டாங்க முதலாளி. சோமா எனக்குமுந்தி நீ போவே எண்டு நான் கனாக்கூடக் காணல்ல”

கிலுட்டுவுக்கு சித்தப்பிரமை தான் பிடித்துவிட்டது என மற்றவர்கள் நினைக்கும்படியாக வாய் குழறிக்கொண்டு குடிசைக்குள் நுழைந்தான். கரீமின் மடியில் வீழ்ந்து கதறி னான். கந்தனின் கால்களைத் தொட்டுக் கெஞ்சினான். இரு வரும் அவனைத் தூக்கி நிமிர்த்தி உணர்வு மீண்ட நிலையில் அசந்து படுக்கும் சோமாவின் அருகிலிருத்தினர். கரீம் இடுப்பு வாரைத் திறந்து விரலைவிட்டுப் பார்த்தான். பின் விசுக்கென்றெழுந்து,

“பாசுண்ணே கவலைப்படாதே! நான் போய் கார் எடுத்துவாறன்” என்றவாறே வேகமாக நடந்தான்.

“கந்தையா, இந்த உலகத்திலே ரெண்டு சாதிகள் தான் எண்டத்த இப்ப கண்ணாரக் கண்டிட்டன். ஒன்று பணக்காரச்சாதி, மற்றது என்னையும், உன்னையும், கரீமையும் போன்ற ஏழைச்சாதி.”

கிலுட்டுபாஸ் கரி படிந்த தன் சாரத்தால் கண்களைத் துடைத்துவிட்டான்.

– புதுமை இலக்கியம் 1975

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *