கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,539 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

உபதேசியார் கை கட்டிக் கொண்டு நின்றார்.மூப்பரும் மொடு தாமும் தூங்குகிற கோழியாட்டம் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சங்கிலித் தாமுக்குப் பக்கத்தில் சாஷ்டாங்கமாக அமர்ந்து கொண்டனர். ‘நோக்கி’ கரையை எடுத்துக்கொண்டு வந்து வைத்தான். சுலாமியார் அதில் அமர்ந்து கொண்டார். 

“அப்பையா கோயில் குளமெண்டு இல்லாம இருந் தான். இப்ப விசர் பிடிச்சு செத்துப் போனான்” 

ஊர்ச் சனங்கள் அள்ளுப்பட்டுக்கொண்டு அவன் குடிசையைத் தேடி ஓடினார்கள். 

பரபரப்பாக விழுந்தடித்து ஓடிய சனம், மிருகக் காட்சிச் சாலைக்குள் புகுந்து ‘விடுப்பு’ப் பார்ப்பவர்கள் போல் பிரேதத்கைப் பாரத்து அருவருகது முகத்தைச் சுழிப்பதுமாக வெளியேயும் முற்றத்திலும் கூடி நின்று ‘குசுகுசு’த்துக் கொண்டிருந்தார்கள். 

“சுவாமியிட்ட ஆள் விட்டிட்டியளோ?” என்று கேட்டார் ஒருவர். 

”விட்டாச்சு. ஆனா, சுவாமி குருசுமணி குடுப்பாரெண்டு மட்டும் நினையாதையுங்கோ” என்று மறுமொழி சொன்னார் இன்னோருவர் 

“குடுப்பாரெண்டு நானும் நம்பேல” என்றார் அடுத்தவர். 

“அவன் சாகமுந்தியே, எட அப்பையா, கோயிலுக்குப் பத்திலொண்டு குடடா; ஞாயிற்றுக்கிழமையில் கடலுக்குப் போகாதையடா. கொப்பியாரிச்சுச் சற்பிரசாதம் எட்டா. ஞாயிறு – கடன் திருநாளில் பூசைக்குப் போடா” வெண்டு நான் சொன்னனான். அவன் கேட்டாத்தானே?” 

“இப்ப தன்மை தின்மை இல்லாமல் செத்துப்போனான். எக்கணம் அவன்ர ஆத்துமம் நரகத்துக்குத்தான் போகும்.” 

“கெடுகுடி சொற்கேளாது. சாகுடி மருந்துண்ணாது. நாங்கள் என்ன செய்யிறது? அவன்ர ஆத்துமம கெட்ட ஆத்துமமாப் போட்டுது. அது போற இடத்துக்குப் போகும் தானே?” 

”கொஞ்சம் பொறுங்கோ. சுவாமியிட்டப் போன பொடியன் வாறான். என்னெண்டு கேப்பம்?” 

“குருசு மணிகைக் காணேல்ல. வெறுங் கையோடதான் வாறான்போல கிடக்கு” 

எல்லோரும் பொடியன் வாற திக்கை வாய் பிளக்கப் பார்த்தனர். 

குருசுமணி எடுத்துக்கொண்டு வரப்போன பொடியன் வெறுங் கையோடுதான் வருகிறான். 

“சுவாமி என்னவாம்?” 

“அவர், உங்களெல்லாரையும் ஒருக்காக் கோயிலடிக்கு வரட்டாம. சங்கிலித் தாமையும கையோட கூட்டியரட்டாம்”

”பாத்தியளே, நான் சொன்னன் இப்ப எப்படி?”

“சுவாமி கூப்பிடுறாராம். பேந்தென்ன நிண்டு யோசிக்கிறியள்? வாருங்கோவன் போவம்” 

பெரிய ‘பிளான்’ போட்டுக்கொண்டு ஆளை ஆள் திரும்பிவிட்டார்கள் ஓடிவந்த பெண்களும் தங்கள் புருஷன்மார் திரும்பும் போது தாங்களும ‘இதில கலக்கப்படாது. என்ற ஒழுக்கத்திற் கிணங்க, மெதுவாக எழுந்து நழுவி’ நடையைக் கட்டினார்கள். ‘ஊரோடு ஒத்தோடிக்கொள்ள வேண்டுமாம். பித்துப்பிடித் துக்கொண்டு எல்லோரும் சொன்னால்கூட கிண ற்றுக்குள் ளேயும் கூடிவிழை’ அவர்கள் ஆயத்தம். அவ்ளவு ‘ஒற்றுமை’. 

அப்பையாளின் பெண்சாதி. புழுதி படிந்த வெறும் மேனிகளுடன் கோவணத்தோடு நிற்கும் தனது குழந்தைகளைக் கட்டிப்பிடித்தக்கொண்டு ஊரெடுக்க ஒப்பாரி சொல்லிப் பெருங் குரல் வைத்து அழுதாள். 

வீரச்சமத்தனெண்டு – என்ராசா
விடியமுன்னம் பாயிழுப்பாய், 
மெத்தச் சமத்தனெண்டோ – ராசா நீ 
மேலைக்கடல் போயிடுவாய், 
கொண்டலடிச்சாலும் – ஐயா உன்ர 
கோலத்தில மாத்தமில்லே. 
கச்சான் அடிச்சாலும் – ஐயா நீ 
கடுகளவும் அஞ்சாயணே. 
அலறி முன் பாலரெல்லாம் – இஞ்ச இனி 
தரெனக்குத் தஞ்சமணை? 
தனிக்கப் பிடிச்சினமே – ஐயா என்ர 
தாலியைப் பறிச்சினமே 
ஆலாய்ப் பறந்தாலும் – இப்ப என்னை 
ஆரெண்டும் கேளாயினம். 
ஆவிபிரியேக்க – துரையெனக்கோர் 
அறுதலைச் சொன்னியோணை? 

சிறுவர்கள் தாயின் முகத்தையும் செத்துக்கிடக்கும் தங்கள் அப்பன் சடலதையும் மாறிமாறிப் பார்த்து ஓலமிட்டழுகிறார்கள். அவர்கள் கண்களிலிருந்து வழிந்து தேங்கிய கண்ணீர் வடுக்கள், புழுதிபடர்ந்த அவர்கள் முகங்களில் படர்ந்து காய்ந்து உப்பிக்கிடந்தன. சொறி பிடித்த நாய்க்குட்டிகள் மாதிரி அவர்கள் மேனியடங்கலும் பொருக்குகள் வெடித்துப் பாம்புச்செட்டை போன்றிருந்தன.

கேவிக் கேவி அழும்போது சின்னஞ் சிறுவர்சளின் வலுவிழந்த விலா எலும்புகள், மாமிசத்தின் முள்ளுகளைப் போல் புறப்படடு பீறிட்டுக் குத்திநின்றன. தேகத்தின் தோலும் சவ்வு அவர்களின் அவலட்சண எலும்புக் கூடுகளுக்கு மேலால் புரளுப்போது பாம்பு நெளிவது போலிருக்கின்றன. பார்க்கு போது பரிதாபமாகவும் அருவருப்பாகவும் இருக்கின்றன. 

தனது புருஷனை எடுத்து அடக்கம் செய்யக்கூட ‘ஊர்ச் சனங்கள் வரமாட்டார்களோ?’ என்று தவித்துக் கொண்ட பொன்னரியம், பிரேதததின் காலடியில் கிடந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். 

காலையில் மரித்த அப்பைய கவின் சடலம் மாலைவரையும் தேடுவாரற்றுக்கிடந்தது ‘பாவ வாளி’, ‘கெட்ட ஆத்துமம்’ என்று ஊராரின் பலவிதமான பழிச் சொற்களுக்கும் ஆளாகிக் கொண்டிருந்தது 

முன்பெல்லாம் கடலுக்குப் போய் வந்ததும் சோற்றுப் பெட்டியை அவீழ்த்து நாளாந்தம் ‘கட்டுச்சோறு’ தினைக் கொடுக்கும் தன் எஜமான், இன்று காலை தொடக்க மாலை வரை எழுந்திருக்காமல் ஒரே படுக்கையில் கிடப்பதையும், படுக்கையைச் சுற்றி வீட்டிலுள்ள அனைவரும் அழுதுகொண்டிருப்பதையும் உற்றுப்பார்த்துக் கொண்டிந்த நாய, தெருப்படலையடியில் போய் நின்று ஊளையிட்டது. அதைச் சகிக்கமாட்டாத எதிரவீட்டுக்காரன், எரிந்து புகைந்து கொண்டு, “அவன்ர ஆத்துமம் நரகத்துக்குப் போனதை அறிஞ்ச அவன்ர நாய்கூட ஊளையிடுகுது. அதுக்காக, எங்கட வீட்டைப் பாத்துககொண்டு கத்துதே சனியன். சீ அடிநாயே” என்று ஆத்துமப் பரீட சை நடத்தி மோட்சத்தைக் கண்டு பிடித்த மகான்போல் சினந்துகொண்டு ஒரு கல்லை எடுத்து எறிந்தான் கல்லு அதன் விலாவில் சளக்கென்று பட்டதும், ‘ங்காய் ங்காய்’ என்று கத்திக்கொண்டு காலைத் தூக்கி நொண்டியபடி.ஓடியது. 

அந்த நாட்களில் ஊரில் செல்லம் பிடித்த சில குழந்தைகள் சோறு தின்ன மறுத்து அடங் கொண்டு அழுதால். அவற்றின் தாய்மார்கள் “ஐயோ, ஒறுவாய் அப்பையா பிடிச்சுக்கொண்டு போகப் போகுது. பங்கபார் ஒறுவாய் அப்பையா வாறான்” என்று பயங்காட்டி, தங்கள் குழந்தைகளைத் தேற்றி உணவூட்டுவார்கள். அப்படி ஒரு ‘பயங்கரப்பிறவி’ யாகத்தான் அந்த ஊரில் அப்பையா அறிமுகப் படுத்தப்பட்டான். 

ஆனால் ..? 

கள்ளுக் குடிக்கும்போது துரும்புகளை வடிப்பதற் கென்றே நீளமாக அடர்த்தியாக வளர்த்துவிட்ட ஓறணவன் மீசை திரண்டு உருண்ட திரளான தோள்கள். சதை சதையாகக் கிழங்குபோல் திரட்சியான சாவாங்கம் நிமிர்ந்து அகன்ற நெஞ்சு பக்கம் இடிந்து அவலட்சணமாகிவிட்ட கோணல் வாய், நெருப்புக்கொள்ளிபோல் சிவந்த கண்கள், இமைவெட்டாத உறுத்தற் பார்வை – இப்படியெல்லாம் காட்சிதரும ‘மனிதன்’தான் இந்த ஒறுவாய் அப்பையா. 

அவனோ குழந்தைச் செல்வங்களைப் பிடித்துக் கட்டிக் கொஞ்சுவதற்கு ஆசைப்பட்டு அவர்களை அணைத்துத் தூக்க ஓடுவான். குழந்தைகளோ அவனைக் கண்டால் வீரிட்டுக் கொண்டு குடல்தெறிக்க ஓடுவார்கள். இந்த ஏமாற்றத்தினால், “நாசமாய்ப்போற பிள்ளையள் ஒண்டாவது கிட்ட அண்டுதில்லையே?” என்று மனம் நொந்து கண்ணீரே விடுவான். 

ஒருநாள் ஊரிலுள்ள குழந்தையொன்றைத் தெருவில் கண்டவன். தள்ளாடும வெறியிலும் கரங்களால் அதை அரவணைக்கப் போனான் அது, ‘ஐயோ அம்மா’ என்று கத்திக் கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் முறையிட்டது. அம்மா புருஷனுக்குச் சொல்ல, புருஷன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அப்பையாவின் வீட்டுக்கே வந்து ‘நாயம்’ கேட்டுவிட்டு, “அப்பையா, கடைசியாகச் சொல்றன், இனிமேல் பட்டு இப்படிச் சேட்டையள் விடாதை சொல்லிப்போட்டன். நீ கோயிலுக்குப் பத்திலொண்டுப் பணம் குடுக்கிறாயில்லை. பூசைக்குப் போறாயில்லை, ஞாயிறு – கடன் திருநாளெண்டும் பாராம அந்த நாளில் பாத்துக் கடலுக்குப் போறாய். உன்ர கையால எங்கட பிள்ளையளைத் தொட்டால் அதுகளும் நரகத்துக்குத்தான் போகும்” என்று சொல்லி அப்பையாவைக் கண்டித்து விட்டு, தன்னை ஒரு மோட்சராச்சியத்தின் பிரதிநிதயென்பதை எண்பித்துக் கொண்டு போய்விட்டார். 

அப்பையா எதுவுமே பேசவில்லை. அழுதான். 

தன்னைக் கண்டதும் குழந்தைகள் ஏன் இப்படிப் பயந்து ஓடுகிறார்கள் என்பதை இதனைக் காரணமாகக் கொள்ளவும் அவன் மனம் ஒப்பவில்லை குழந்தைகள் மட்டுமா? வயதுவந்தவர்கள் தொடக்கம் ‘பெண்புரசு’கள் கூட அவனுடைய பயங்கரத்தோற்றதிலும் மிரட்டற் பார்வையிலும் பயந்துதான் இருந்தார்கள். அவனுக்குச் சிரிப்பு வராது. சிரிக்கமாட்டாதவனின் நெஞ்சில் இரக்கமோ அன்போ கிடையாது என்பது அவர்களின் அபிப்பிராயம், ஆனால், அவனோ வேறுவிதமாகத் தன்னைப் பற்றிக் கற்பனை பண்ணிக் கொண்டான். 

‘நான் கோயிலுக்குப் பத்திலொண்டுக் காசு குடுக்காம ஞாற்றுக்கிழமையில கோயிலுக்குப் போகாம சைவக்காற அஞ்ஞனியளோட கூடிக்கொண்டுகடலுக்குப் பேறதுதான் அவங்களுக்குப் பொறாமை. அதுக்காசுத தாங்கள் எல்லாரும் சேந்து என்ர குடும்பத்தையு ஊரால – கோயிலால கழிச்சு வைக்கப்பாக்கிறாங்கள். தங்கட பிள்ளையளையும் என்னோட சேரவேண்டாமெண்டு கெட்டபுத்தி சொல்லிக் குடுத்திருப்பாங்கள்…? 

மேலும் யோசிக்க அப்பையாவுக்குப் ‘பொல்லாதகோபம் வந்தது. திடீரெனச் சதிரத்தை உலுப்பிக்கொண்டு “நான் ஒருக்காக் குடிச்சுப் போட்டுவந்து இவங்களுக்கு இண்டைசகு ஒரு பாடம் படிப்பிக்கிறன் பார்” என்று சூளுரைத்துவிட்டுப் போனவன், மாலைக் கருக்கலின் போது சின்னாச்சியின் முச்சந்தியில் வந்து நின்று, வில்லுக்கத்தி ஒன்றை விரித்து மடிக்குள் செருகி வைத்துக்கொண்டு புறங்கை கட்டியபடி அங்குமிங்குமாக நடந்தான். 

இந்தக் கொழுவல் வெளிக்குத் தெரிந்துவிட்டதால் அன்று அந்தப்பக்கத்தால் ஒரு குருவிகூடத் தலைகாட்டவில்லை. ‘தன்பாட்டுக்குப் பேசினால் ரோசம் கிளம்பி எவனாவது முன்னுக்கு வருவான்’ என்ற நினைப்பில் வாய்க்கு வந்தபடி கூச்சநாச்சமில்லாமல் பேசத தொங்கினான், 

“டேய். அப்பையன் தனிச்சவன் தான்ரா. எவனெண்டாலும் முன்னுக்கு வாருங்கோடா பாப்பம். விட்டு வாங்கிற போக்கிலியள் டேய் ஏன்ரா கோயிலுக்குப் போறியள்? கள்ளப் பாவஞ்செய்யிற நீங்கள் தான்ரா கோயில் கோயிலெண்டு சும்மா விழுந்தடிச்சுக் கொண்டு ஓடுறியள்” 

வேலியோடு வளவுக்குள் அவன் மூத்த மகள் வந்து நின்று “எணை அப்பு, ஆச்சி உன்னை வாட்டாம். வாணை” என்று அழைத்தாள். மகளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே “நீ போ பிள்ளை. உன்ர கொப்பன் இண்டைக்கு மறியலுக்குப் போகப்போறான், நீ போ ‘” என்று அதட்டிவிட்டு. “டேய், போக்கிலியள் ஆரெண்டாலும் வாருங்கோடா” என்று பிறகும் பேசத் தொடங்க, “உதில நிண்டு ஏன் வீணாய்க் கத்திக்கொண்டு நிக்கிறாய்? வாவன், வந்து முழுகிப் போட்டுப் படன்'” என்று சினத்தோட அழைத்தாள் பொன்னரியம். 

”ஏன்ரி,நீதான் ஒரு துணையெண்டு பாத்தா. கட்டின பெண்டில் நீயும் உவங்களை போல என்னை வெருட்டப் பாக்கிறாய், என்ன? அப்பையனைத் தெரியுமெல்லே? நான் பேந்து வந்து முழுகிறன், நீ போ” 

ஒரு முறைப்பு. பொன்னரியம் ஆத்தாக்கடைசியில் “என்ன கூத்தையெண்டாலும் நடத்து” என்றாள். அத்துடன் வீட்டுக்கு வந்து விட்டாள். 

அப்பையா திரும்பும் போது ஆவேசத்தில் என்னவோ எல்லாம் பேசினான் வில்லுக்கத்தியை மடிக்குள்ளால் எடுத்து ஒரு தடவை பார்த்தான். பக்கத்தில் கிடந்த கிளுவந்தடி ஒன்றை முறித்துச் சீவிக்கொண்டே அம்மாறு போட்டாள். 

“டேய், அப்பையனை எல்லாரும் சேந்து கழிச்சுத் தனிக்கப் பிடிச்சாப்போல, நாளைக்கு அப்பையன் உங்கட வீட்டுக்குத்தான் வரபோறானெண்டு நினைச்சி டியளாக்கும் 

ஆனா, நான் செத்தாலும், என்ர வீட்டு நாய்கூட உங் சட முத்தம் மிதிக்காதடா. ஞாயிற்றுக்கிழமையில நான் கடலுக்குப் போய்த் தனிய உழைக்கிறனெண்ட பொறாமையில, சுவாமி சொன்ன தெண்டு, எல்லாருமாச் சேந்து எனக்கு ஆமிச்சட்டம் வைக்கிறியளே? டேய், அற்பன் பொறுக்கியள். உங்களுக்கதான்ரா ஊத்தை கிடக்கு அதை மூடி மறைக்கிறதுக்கு என்னிலயே கயிறு திரிக்கிறியள் ? ஆருக்கடா புலுடா விடுறியள், இந்த அப்பையனுக்கோ…? டேய் பெண்ணையங்கள், வெளிக்கிட்டு வாருங்கோடா ஒருக்காப் போய்க் கம்பி எண்ணிப் பாப்பம்..” 

துணிந்து எவரும் வரவில்லை. நேரம் இருட்டிவிட்டது அவனும் பேசிக் களைத்துவிட்டாள். 

இப்படிப் பல சம்பவங்கள் அவன் வாழ்க்கையில் முன்பு நடந்தேறியிருந்தன. 

இப்போது அந்தச் சடலம் தேடுவாரில்லாமல் கிடந்தது. பொன்னரியம் அவன் கால்மாட்டில் கிடந்து தேமபித் தேம்பி அழுதுகொண்டிருந்தான். 

மாலை ஆறு ஆறரை மணி. 

வழக்கத்திற்கு மாறாக மாதா கோயில் மணிச்சத்தம் அவலமாகக் கேட்டது. 

தீ அணைக்கிற படைபோல் எல்லோரும் அள்ளுப்பட்டுக்கொண்டு கோயிலைத் தேடி ஓடினார்கள். சுவாமியார் வெளி விறாந்தையில் உலாத்தியபடி புத்தகமும் செபமாலையுமாகச் செபஞ் சொல்லிக்கொண்டிருந்தார். 

Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 

வந்த சனங்களைக் கண்ட சுவாமியார் மெதுவாகக் கை உயர்த்தி, முகவாய்க் கட்டை தொடக்கம் தனது நீண்ட வெண் தாடியைத் தடவிக்கொண்டார். அவர் பேசிய வெள்ளைக்காரத் தமிழ் அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று. 

“அடுத்தார்ப் பக்கம் எல்தோதும் வாதுங்கோ. அது ததி, சங்கிதித்தாம் எங்கே?” 

”நான் இஞ்ச நிக்கிறன் தேவரீர்” என்று சங்கிலித்தாம் குரல் கொடுத்தார். 

“அப்ப ததி, மெத்தச் சந்தோதம்” என்று தனது மகிழ்வைத் தெரிவித்துக்கொண்டார் 

உபதேசியார் கை கட்டிக்கொண்டு நின்றார். மூப்பரும் மொடுதாமும் தூங்குகிற கோழியாட்டம் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சங்கிலித்தாமூக்குப்பக்கத் தில் சாஷ்டாங்கயாக அமர்ந்து கொண்டனர். ‘கோக்கி’ ஒரு கதிரையை எடுத்துக் கொண்டு வந்து வைத்தான். சுவாமியார் அதில் அமர்ந்துகொண்டார். 

வந்த அனைவரும் சப்பாணி கட்டிக்கொண்டு வெகு அடக்க ஒடுக்கமாகக் கீழே – தரையில் இகுந்தனர். சட்டை போட்டிருந்த ‘இளந்தாரி’ப் பொடியங்களைத் தவிர ஏனை யோர் தாங்கள் போட்டிருந்த சால்வைகளைத் தோள்களி லிருந்து எடுத்து மடியிலும் சுக்கத்துக்குள்ளும் வைத்துக் கொண்டு மரியாதை செய்தனர். அவர்களுடைய பயபக்தி யையும் விசுவாசத்தையும் கண்ட சுவாமியார் சங்கிலித் சா மைப் பார்த்து, “எல்தோதும் நல்த விதுவாதிகல் என்று சொல்ல, சங்கிலித்தாமும் குழைந்து நைந்து சிரித்துக் கொண்டே, ‘ஆம் தேவரீர்; எல்லேரும் நல்ல விசுவாசிகள்தான்” என்று பதிலளித்தார். 

இதைக் கேட்டு உள்ளம் பூரித்த சிலர், ‘ஈ, என்று தேக்கமாய்ச் சிரித்தனர். கொஞ்சம் நாகரிகமானவர்கள் ‘எல்லாம் தெரிநதவர்கள் பாணியில் ‘கலகல’ வென்று வெடித்துச் சிரித்தனர். சங்கிலி தாமும் உபதேசியாரும் பாடம் ஒப்புவிக்கும் மாணாக்கராகக் கைகளைக் கட்டியவண் ணம் எழுந்து நின்றார்கள். கோக்கியும் ட்ரைவரும் விறாந்தை ஓரத்தில் நின்று ‘விடுப்பு’ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் 

கோயில் குத்தகை – அதாவது பத்திலொன்றுக் காணிக் கைப் பணக் கணக்குக் கொப்பியை அவுறார் அப்பா சுவாமியிடம் கையளித்தார். 

அந்தக் கொப்பியில் அப்பையாவின் பெயர் மட்டும் வெறுமனே கீறிட்டுக் கிடந்தது. 

பத்திலொன்றுப் பாக்கிப் பணத்தை வசூலிக்காததினால் அந்தக் கோட்டுக்கு நேரே ‘வரவு’ என்று எழுதியிருந்தார் அவுறார் அப்பா. மொத்தமாகச் சுமார் நூறு ரூபாய்க்கு மேல் இப்போது ஏறிவிட்டது. பழைய கொப்பியை. வரவ ழைத்துப் பார்த்தார். அதிலேயும் பெயர் மட்டும் இருந் தது, பணம் கொடுபட்டிருக்கவில்லை. 

‘அட பாவி’ 

சுவாமியாருக்கு ஆத்திரமும் மணஸ்தாபமும் சிளர்ந்தன. உடனே அவர்களைப் பார்த்து “அப்பையா கோவிதுக்கும் வாதகில்லே ?” என்று கேட்டார். 

சங்கிலித்தாம். “ஓம் ஆண்டவரே, அவனும் வாறேல்ல, புள்ளையளையும் விடுறேல்ல” என்று விநயமாகப் பதிலளித்தார். 

மோடுதாம் எழுந்து “அவன்ர பொஞ்சாதியும் கோயிலுக்கு வாறேல்ல” என்று கூறி இருந்தார். 

”அப்போ… அவன் கெத்த ஆத்தமம், குதுது மணி குதுக்க ஏலாது. அந்தப் பிதேதக்தைக் கோவிதுக்குல்லே கொந்து வத வேந்தாம் நான் ஆதீர்வதிக்க முதியாது” என்றார் சுவாமியார். 

”தேவரீர்,கேக்கிறமெண்டு கோவிக்க வேண்டாம். கோயிலுக்குப் பக்கத்துக் காணிக்கயும் குடியிருக்க அடுக்குப் பண்ணினவள். அவன்ர செத்த வீட்டுக்கும் ஊரவை போகப்படாதுதானே?” 

”அதுக்குப் போதந்தாப் போகலாம். போகாத்தியும் காதியமில்லே…” 

சடுதியாக எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு “அப்ப நாங்க ஒருமித்துப் போகாமல் இருக்கிறம் தேவரீர்” என்று சேர்ந்து சொன்னார்கள். 

“அதுதான் நல்லது; நீங்கல்தான் உத்தம விதுவாத மான பில்லைகல்.” 

“நாங்கள் போட்டு வாறம் தேவரீர்; சுவாமிக்கு ஸ்தோத்திரம்” 

”ஓ..ஆதீர்வாதம்…”

அன்று பொழுது மமைந்துவிட்ட பின்னும், ஊரில் உள்ள எவராவது செத்த வீட்டை எட்டியும் பாரிக்கவில்லை.

‘உத்தம விசுவாசிகளான’ அவர்கள், பாவம் செய்து கெட்டுப்போன ஆத்துமாவான அப்பையாவையும் அவன் பெண்சாதி பிள்ளை குட்டிகளையும் ஊருக்குள்ளே புறக்கணித்துவிட்டு. தாங்கள் மட்டும், நித்திய பேரின்ப மோட்சராச்சியத்துக்குப் போக வழிதோடித்கொண்டிருந்தார்கள். 

பல காலமாக அப்பையாவோடு கூடிக்கொண்டு கடலுக்குப் போய் வந்த அகலூரார் பொன்னரியத்தின் பரிதாப நிலை கண்டு வந்து, அவ்வூரில் உள்ள விசுவாசிகளுக்குத் தெரியாமல் அந்தப் பிரேதத்தைக் கொண்டு போய்ச் சவக்காலையில் அடக்கம் பண்ணிவிட்டார்கள். 

ஏற்கனவே அந்த ஊரில் ‘பத்தில் ஒன்றைப் பிய்த்து எறி’ கூறி மதப்புரட்சி அப்பையாவுக்குப் பக்கபலமாய் நின்று அவனை உளளன்போடு நேசித்த பாகசிங்கம் மட்டும் அவ்வேளை பணிவிடை செய்தான். அப்போது அந்த நாய் தெருப்படலையருகில் போயிருந்து பிரேதத்தை எடுத்துக் கொண்டுபோன வழியைப் பார்த்த ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அடக்கம் செய்து விட்டு வந்த பாலசிங்கத்தைக் கண்ட நாய், ஓடிப்போய் அவன் கால்களை நக்கிக் கொஞ்சியது. 

பாலசிங்கத்தின் கண்கள் சிவந்து கலங்கின. 

பொன்னரியம் தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள்; தாயைப் பார்த்து குழந்தைகளும ஓலமிட்டுக் கதறிக்கொண்டிருந்தார்கள். 

மறுநாள் விடிந்தது. 

கோயில் மணி ‘டாங்’ கென்று வழக்கம் போல் கேட்டது. 

கெட்ட ஆத்துமாவின் அடக்கத்துக்குப் பின் அந்தக் குடியை எட்டிப்பார்க்காத உத்தம விசுவாசிகள் அன்று கோயிலில் நிகழ்ந்த பிரார்த்தனையின் போது ‘இறந்துபோன அப்பையாவின் கெட்ட ஆத்துமா’ நரகத்துக்குப் போகாமல் மூக்தி அடைந்து மோட்ச ராய்ச்சியத்துக்குப் போகச் செபித்தார்கள். 

சங்கிலித்தாம் ஆசாரஞ் செப்பினார். 

“இறந்துபோன அப்பையாவின் கெட்ட ஆத்துமா நித்திய நரக ஆக்கினைக்குள்ளருந்து மோட்சராய்ச்சியம் சேர்வதற்கு யேசுநாதர் கருணைபுரிய வேண்டுமென்று மன்றாடி ஒரு பரமண்ட மந்திரம் ஓதுவோம்….” 

ஏனைய விசுவாசிகள் செபிக்கிறார்கள்: 

“பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே…உம்முடைய ராய்ச்சியம் வருக…அன்றன்றுள்ள எங்கள் அப்பம எங்களுக்கு இன்று தாரும் எங்கள் கடன்காரருக்கு நாங்கள் பொறுக்குமாப்போலே நீரும் எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறும், எங்களைச் சோதனையிலே பிரவேசிக் கவிடாதேயும். தீமையில் நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ஆமென்” 

– 1961 தினகரன்

– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *