ஒரு தேர்ந்த விற்பனையாளன்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 1, 2023
பார்வையிட்டோர்: 5,182 
 
 

நேர்த்தியான உடை அணிந்திருந்த, இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன், பங்களாவின் கேட்டை திறந்து உள் நுழைந்தான். நேராக நடந்து, முன் வாசலில் இருந்த அழைப்பு மணியை வலது கையால் அழுத்தினான். இடது கை டையை சரி செய்தது.

உள்ளிருந்து ஆக்ரோஷமான நாய் குரைக்கும் சப்தம். கதவு திறந்து, தொழிலதிபர் ஆதித்ய வர்மா, “யெஸ்” என்றார்.

இளைஞன் கை நீட்டினான். “குட் மார்னிங் மிஸ்டர் வர்மா. என் பெயர் ராஜ்குமார். அப்ளைட் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் விற்பனையாளன். உங்களிடம் பேச பத்து மணி அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருக்கிறேன்.”

“ஓ, ஆமாம். நினைவிருக்கிறது.” வர்மா கை குலுக்கி ராஜ்குமாரை உள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். அவரே பேச ஆரம்பித்தார். “எனக்கு ஒரு நல்ல, திறமைசாலியான உதவியாளர் தேவைப்படுகிறார். உங்கள் நிறுவனம் தயாரிக்கும், மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள்… அவற்றுக்குப் பெயர் என்ன?” என்று கேட்டார்.

“யந்திரர்கள்.” என்றான் ராஜ்குமார்

“யெஸ், யந்திரர்கள். அவர்களால் உதவியாளர் வேலை செய்ய முடியுமா? அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள், எப்படி செயல்படுவார்கள் என்று விளக்கிச் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பாக.” என்று சொல்லி விட்டு, ராஜ்குமார் தன் லேப்டாப்பை திறந்தான். அடுத்த பத்து நிமிடங்களுக்கு, யந்திரர்களின் திறனை நேர்த்தியாக வெளிக்காட்டும் வண்ணப் புகைப்படங்களையும் விடீயோக்களையும் காட்டினான். அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, நெரிசலான தெருக்களில் திறமையாக வண்டி ஓட்டுவது, கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவது, பசுமையான தோட்டங்களைப் பராமரிப்பது என்று யந்திரர்கள் செய்யும் வேலைகளை ஒவொன்றாக விளக்கிச் சொன்னான்.

யந்திரர்களின் வேலை செய்யும் திறன் வர்மாவிற்கு பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட, யந்திரர்கள் மனிதர்களை போலவே இருந்ததும் மனிதர்களை போலவே செயல்பட்டதும் வர்மாவைப் பிரமிக்க வைத்து. அவரால் யந்திரர்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு வித்தியாசம் கூட கண்டு பிடிக்க முடிய வில்லை.

ராஜ்குமார் பேசிக்கொண்டே போக, வர்மாவின் போன் அவசரமாக ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்த வர்மா, “சாரி, ராஜ்குமார். நான் இந்த அழைப்பை எடுக்க வேண்டும். உங்களால் இன்னொரு நாள் வந்து மீதியை சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக மிஸ்டர் வர்மா.” என்று சொல்லி விட்டு, லேப்டாப்பைக் கவர்ந்து கொண்டு கிளம்பினான்.

“ஒரு நிமிஷம்,” என்று அவனை நிறுத்தினார் வர்மா. “அடுத்த முறை வரும்போது, ஒரு நிஜ யந்திரனை உங்களால் கொண்டு வர முடியுமா? அவர்களின் திறமைகளை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன்.”

ராஜ்குமார் புன்னகைத்து, “இது வரை நீங்கள் பார்த்ததும் பேசியதும் ஒரு யந்திரன் உடன் தான், மிஸ்டர் வர்மா.” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *