“உலகம் முழுவதும் என் ஆளுகைக்குள் வரவேண்டும்’ என்னும் பேராசையுடன் பல போர்களை நடத்தி, வென்று தன் ஆளுகைப் பகுதியை அதிகப்படுத்திக் கொண்டவன் அந்த மன்னன்.
ஒருநாள் அவன் ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு துறவி, கரையோர ஆற்று மணலில் வெற்றுடம்போடு கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்தார்.
அவரது அருகில் சென்ற மன்னன், “”நான்தான் மகாசக்ரவர்த்தி வந்திருக்கிறேன்…” என்றான் பெருமை தொனிக்க.
“”அதற்கென்ன?” என்றார் அந்தத் துறவி அமைதியாக.
“”இந்த வெற்று மணலில் இப்படிப் படுத்திருக்கிறீரே, ஏன்?”
“”குளிர் அதிகமாக இருக்கின்றது.. அதனால் வெயிலில் காய்கிறேன்…”
“”உமக்கு வேண்டிய செல்வங்கள் தருகிறேன். பெரிய மாளிகை தருகிறேன்.. நீர் சொகுசாகப் படுத்துறங்க வழி செய்கிறேன்…”
“”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஓர் உதவி மட்டும் நீ செய்தால் போதும்..!”
“”என்ன உதவி?”
“”கொஞ்சம் ஒதுங்கி நில்… உன் நிழல் எனக்குக் கிடைக்கும் வெயிலை மறைக்கின்றது…” என்றார் துறவி அமைதியாக.
மாபெரும் சக்ரவர்த்தி என்ற மமதையுடன் வந்த அந்த மன்னனின் முகம் வாடிப்போனாலும், ஒரு புதிய பாடத்தை அன்று கற்றுக் கொண்ட திருப்தியோடு அரண்மனை திரும்பினான்.
– க.பரமசிவன், மதுரை.(ஏப்ரல் 2012)