இடம் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 1,541 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப்போயின. 

மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

“இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன். இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்…என்றது கழுதை. 

அது பாடத் தொடங்கியது

என்ன கொடுமை… கழுதைக் கச்சேரி- கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது. 

அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன. 

கழுதைக்கு ஒரே கொண்டாட்டம். 

ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது. 

என்ன ஆச்சரியம்! 

தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். 

வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு “ஒன்றும் வியப்படையாதே… இங்கே அப்படித்தான்” என்று கூறியது. 

சுருக்கமாக அது சொன்னது- 

“ஓணான்களின் ஊரில் 

கழுதைகளும் வித்துவான்களே!”

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *