(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பூந்துறை என்னும் ஊரிலே உடன் பிறந்தார்கள் இருவர் இருந்தனர். அவர்களில் மூத்தவன் பெயர் பேகன். இளையவன் பெயர் பெருமாள். பேகன் இளமைப் பருவத்திலே பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகச் சென்று கல்வி கற்கவில்லை. பெருமாள் கல்வியை ஒழுங்காகக் கற்று அறிவுள்ளவன் ஆனான். பேகனும் பெருமாளும் உடன்பிறந்தவர்களாக இருந்தும் அறிவின் சிறப்பி னாலே பெருமாள் சிறந்து விளங்கினான். பேகன் சிறப்படையவில்லை. பேகன் தீய காரியங்களையே பற்றிக்கொண்டிருத்தான். பிறருக்குத் தீமை செய்தல், பொய்புகலுதல், வஞ்சனைகள் செய்தல் முதலிய தீக் குணங்கள் பேகனிடம் குடி கொண்டன.
பெருமாள் அனைவரிடத்திலும் அன்பும் அருளுஞ் சிறந்து விளங்கினான். வறியவர்கட்குந் துன்பப்பட்டவர்களுக்கும் தகுந்த உதவி புரிந்தான். மற்றும் நன்மை யான செயல்கள் எல்லாவற்றையும் தனக்கு உரிமையாக மேற்கொண்டிருந்தான்.
பூந்துறை ஒரு சிற்றூர். அவ்வூர்த் தலைவனாக இருந்தவன் இறந்து போனான். அவ்வலுவலைப் பெறு தற்குப் பலரும் முயன்றனர். அத்தலைமை வேலை செல்வர்களாகவும் நல்லவர்களாகவும் உள்ளவர்கட்குத் தான் கிடைக்கும். பேகன் செல்வமுடையவன் தான். அதனால் அவன் ஊர்த் தலைவனாக வருதற்குப் பெரிதும் முயன்றான். எவ்வளவோ முயன்றும் அவ்வேலை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவ்வேலையைக் குறித்து எத்தகைய முயற்சியுமே செய்யாதிருந்தவனும், நல்லவனாக விளங்கியவனுமாகிய பெருமாளுக்கே அவ்வேலை தானாக வந்து சேர்ந்தது. ஆகையால், ஒவ்வொருவரும் நன்மையைக் கடைபிடித் தொழுகுதல் தான் சிறப்பைக் கொடுக்கும்.
“நன்மை கடைப்பிடி” (இ-ள்.) நன்மை – நல்ல செயல்களைச் செய்வதையே ; கடைப்பிடி – உறுதியாகப் பற்றிக்கொள்.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,