(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையிலே தருமசாமி என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். தகுந்தபடி அவனுக்குச் செல்வம் இருந்தது. கல்வி யறிவையும் அவன் நன்கு பெற்றிருந்தான். அவன் சிறுவனாக இருந்தபோது சிறுபிள்ளைகள் பலரோடு கூடி விளையாடுதல் வழக்கம். தருமசாமி பெரியவனான பிறகும் அந்தப் பழக்கம் அவனை விடவில்லை.
பல சிறுவர்களைச் சேர்த்துக்கொண்டு பலவகை யான விளையாட்டுக்களிலே ஈடுபட்டான். அறிவற்ற சிறுவர்கள் சிலர் சேவற்கோழிகளைப் போருக்குப் பழக்கிப் போர்மூட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். தருமசாமி ஒருநாள் அப்போரைப் பார்த்தான். தானும் அப்போரிலே ஈடுபட்டு அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து அந்தப் போரை நடத்திக் கொண்டிருந்தான்.
‘கோழிகளைப் போருக்கு விடுதல் கூடாது’ என்று அரசன் கட்டளை பிறப்பித்திருந்தான். அத னால் கோழிப்போர் மறைமுகமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது ஊர்க் காவலர்கள் திடீரென்று கோழிப் போர் நடக்குமிடத்திற்கு வந்தார்கள். அனை வரையும் பிடித்துக்கொண்டு போய் முறை மன்றத் தலைவர் முன்பு விட்டார்கள். ஆளுக்குப் பத்து வெண்பொற்காசுகள் தண்டம் இறுக்க வேண்டும் என்றும் ஒரு திங்களுக்குச் சிறையில் இருக்கவேண்டு மென்றும் முடிவாயிற்று. ‘நாம் சிறுவர்களுடன் சேர்ந்ததன் பலன் இதுதான்’ என்று தருமசாமி மிகவும் வருத்தம் அடைந்தான். அறிவற்ற சிறுவர்களோடு சேர்ந்தால் இவ்வாறுதான் இழிவடைய நேரிடும்.
“பையலோ டிணங்கேல்” (இ – ள்.) பையலோடு – சிறுபிள்ளையோடு, இணங்கேல் – கூடாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955