ஒரு காட்டின் எல்லையில், சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சாந்தமே உருவெடுத்தவர். அவருக்குப் பல சீடர்கள்.
ஒருநாள் அந்த குரு, தமது சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “”எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். எனவே, எல்லாரையும் நீங்கள் வணங்க வேண்டும்,” என்றார் அவர். ஒருநாள், அவருடைய சீடர்களில் ஒருவன் விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில், “”எல்லாரும் ஓடிப்போங்க… மதயானை வருது!” என்று யாரோ கூவினர்.
விறகு சேகரிக்கச் சென்ற அந்தச் சீடன் அதுபற்றி கவலைப்படவில்லை. ஒருபக்கம் உயிருக்குப் பயந்து மக்கள் ஓடுகிறதையும், மற்றொரு பக்கம் யானை ஒன்று வேகமாய் வருவதையும் அவன் கண்டான். ஆனால், அவனுக்கு அங்கிருந்து ஓடத் தோன்றவில்லை.
“”எதற்காக ஓட வேண்டும். நம் குருதான் எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதாய் சொல்லியிருக்கிறாரே. இந்த யானை, பிள்ளையார் சொரூபம்… நம்மை ஒன்றும் செய்யாது,” என்று அவன் எண்ணிக் கொண்டான்.
யானையின் மீதிருந்த பாகன், “”ஓடு, ஓடிவிடு…” என்று கத்தினான். சீடன் விலகினால் தானே. அவனை நெருங்கி வந்த யானை, துதிக்கையால் தூக்கி அவனை வீசியெறிந்துவிட்டது. அவன் பெற்றோரின் புண்ணியமோ, என்னவோ, உயிருக்கு ஈனமில்லை. உடல் முழுவதும் காயங்களுடன் மூர்ச்சித்துக் கிடந்தான்.
செய்தியறிந்த குரு, மற்ற சீடர்களுடன் அங்கே வந்தார். அவனை ஆசிரமத்திற்கு தூக்கிச் சென்று சிகிச்சையளித்தார். சிறிது நேரத்தில் அவன் மூர்ச்சை தெளிந்து, எழுந்தான்.
அப்போது சீடர்களுள் ஒருவன் அவனிடம், “”மதயானை வருகிறதென்று எல்லாரும் ஓட்டம் பிடித்தனர். நீ மட்டும் ஏன் ஓடவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு சீடன், “”எல்லா உயிர்களிலும் பகவான் இருப்பதாக நம் குரு சொல்லியிருக்கிறாரே. அதனால் நமக்கு ஒண்ணும் ஆகாது என்று எண்ணிக் கொண்டு விட்டேன்!” என்றான்.
குரு சிரித்தார். “”முட்டாளே! எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பது உண்மைதான். அவர் யானைக்குள்ளும் இருக்கிறார். யானைப் பாகனுக்குள்ளும் இருக்கிறார். “ஓடு’ என்று பாகன் உன்னை எச்சரித்தது, கடவுள் கொடுத்த எச்சரிக்கை அல்லவா. நீ கடவுள் பேச்சைக் கேட்டிருந்தால் கஷ்டம் வந்திருக்காது!” என்றார்.
ஆத்திகன், நாத்திகன், அறிவாளி, முட்டாள், நல்லவன், கெட்டவன் என்று எல்லாருக்குள்ளும் இறைவன் இருப்பது உண்மைதான். ஆனால், தனக்குள் இறைவன் இருப்பதை கெட்டவன் உணர்வதில்லை. இறையுணர்வு இல்லாத காரணத்தால் அவன், மற்றவர்களுக்குத் தீங்கு செய்வான் என்பதை தற்போது உணர்ந்து கொண்டான் சீடன்.
– அக்டோபர் 22,2010