போர்த்திக் கொள்ளுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 10,015 
 

கதை ஆசிரியர்: வண்ணதாசன்.

கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும்.

ஆனால் அவனுக்கு இப்படியெல்லாம் உடனுக்குடன் வாங்குகிற குணமில்லை. வாங்க ஓடாது. ஒரு காரியத்தை உடனே செய்து முடிக்க அவன் பழகியிருக்கவில்லை.

இந்தப் போர்வைகூட கோவாப்ரேடிவ் ஸ்டோரில் பார்த்து சரசுதான் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சரசுவுக்கு அந்தப் போர்வையை வாங்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம் இருந்தது. அவளுக்குக் கல்யாணம் ஆன சமயத்தில் அவள் இரண்டு ஜமுக்காளங்களும் நாலு தலையணை களையும் மாத்திரமே கொண்டுவர முடிந்தது. ஒரு புழுவைப் போலச் சிறுமைப்பட்டுக் கொண்டேதான் அவள் அவனுடன் வாழ்வு நடத்த நுழைந்தாள். அவனுக்குத் தான் அல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று சரசு பல சமயங்களில் நினைக்கிறாள். எதை மிச்சப்படுத்தியாவது அவனுக்குக் கட்டில் வாங்கிக் கொடுக்க அவளுக்கு ஆசை யிருந்தது. அதை அவனுடைய பிரியத்தைத் தாங்க முடியாத ஒரு இரவில் சொன்னபோது சரசுவால் அழத்தான் முடிந்தது.

”நீங்க வேற யாரையாவது கட்டியிருக் கலாம்” என்று திரும்பத் திரும்பச் சொல் வாள். ‘சீச்சீ’ என்று மட்டும் சொல்லி அவளைத் தேற்றுவான். அது ஒப்புக்காகத் தேற்றுவது போல இருக்கும். ‘வேறே யாரையாவது கட்டியிருந்தாலாவது நான் நிம்மதியாக இருந்திருப்பேன்’ என்று அவனே தன்னிடம் ஒருநாள் சொல்லிவிடுவானோ என்ற பயம் ரேவதியைப் பெற்று ஐந்து வருஷத்திற்கு அப்புறம் இந்தப் போர்வையை வாங்கிக் கொண்டு வருகிற வினாடிவரை இருக்கிறது.

”என்னம்மா வாங்கிட்டு வந்திருக்கே? சட்டையா!” என்று வந்ததும் வராததுமாக ரேவதி கேட்டபொழுது சட்டென்று ஒரு கோபம் அதன் மீது வந்தது. சரசுவுக்கு ரேவதிமீது முதலில் ஒரு வினாடி கோபம் தான் எப்பொழுதும் வருகிறது. அப்புறம்தான் பிரியம். ஓர் ஆண் குழந்தைமூலம் தான் கொண்டுவராத எல்லாச் சீதனங்களையும் ஈடுகட்டிவிடலாம் என்று சரசு நினைத்திருந்த வேளையில் அவள் பெண்ணாகவே பிறந்ததனால் ஏற்பட்ட கோபம். கல்யாணத்துக்கு முன்னால் நினைக்கிறதை எல்லாம் சிறிது சிறிதாக முழுமையாக நடத்தி வந்ததுக்கு மாறாக, அவளும் மொத்தமாக ஏமாற்றிவிட்டாள் என்ற கோபம்.

”சட்டை இல்லேம்மா. அப்பாவுக்குப் போர்வை. ராத்திரிப் போர்த்திக்கிடுறதுக்கு” சரசுவின் போர்வைக்குள் அவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பான். கால் பாதத்தில் கூடக் கொசுக் கடிக்காத அளவுக்கு முழுக்கப் போர்த்திக் கொள்ளலாம். ஜமுக்காளம், கைலி எல்லாம் இனிமேல் அதனதன் வேலைகள் செய்யும். ஆனால் ஒரு போர்வையை அவள் கூடுதலாகத் துவைக்க வேண்டும். தினசரி ரேவதியின் யூனிபாரத்தைச் சாயந்தரம் ஸ்கூலில் இருந்து வந்ததும் கழற்றச் சொல்லித் துவைத்துக் காயப்போட்டு வருகிறபோது போர்வையை ஒரு மாதத்திற்கு ஒருமுறை துவைப்பதில் கஷ்டமில்லை. ஆனால் ஒரு போர்வையை அலசத் தண்ணீர் நிறைய வேண்டும். தண்ணீராவது இறைத்துக் கொள்ளலாம். சோப் நிறையத் தேவைப்படும். காயப்போட்டதும், கொடி முழுக்க நான்தான் என்று தொங்கும். மழைக்காலத்தில் எப்படிக் காயும்?

ரேவதியிடம் போர்வையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே யூனிபாரத்தைக் கழற்றி வேறு கவுன் போடச் சொன்னாள். ரேவதிக்கு யூனிபாரத்தைத் தவிர வேறு கவுன்கள் அதிகம் இல்லை. வேறு கவுன்கள் வாங்கிவிடலாம். போகிற வழியில் டெய்லரிடம் ¦¡ல்ல வேண்டும். அதுவரை வெட்டுத் துணியில் கவுன்கள் தைக்கப் படுகிறதும் விறக்கப்படுகிறதும் வேறு யாருக்கும் தெரிந்து விடாமல் இருக்க வேண்டும். வெட்டுத் துணிகளாலேயே ஒட்டுப் போடப்பட்டுத் தைத்த ஒரு பெரிய போர்வையின் கற்பனையில் புதைந்து அவள் சிரித்துக் கொண்டாள்.

சைக்கிளைத் தார்சாவில் ஓரமாக வைக்கிறதற்கு முன்னாலேயே வீட்டில் நடக்கிற ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லி முடித்துவிடுகிற ரேவதி போர்வையைப் பற்றியும் தனக்கு முந்திச் சொல்லிவிடுவாள் என்று நினைத்தாள். சரசுவுக்கு தானே இதைச் சொல்லவேண்டும் போல இருந்தது. வாயால் சொல்லக்கூடாது. அவன் தூங்கிவிட்ட பிறகு போர்த்துவதன் மூலம் சொல்லவேண்டும். காலையில் போர்வையே அவனுக்குச் சொல்லியிருக்கும்.

போர்வையை நெஞ்சுவரை ஏற்றிக் கட்டிச் சாமியார் மாதிரி முடிச்சுப் போட்டுக் கொண்டு ”அம்மா! தாயே!’-

போர்வையை முக்காடிட்டுப் பூச்சாண்டி காட்டி-

‘ஒருநாள் கால்பக்கம் வைத்தது மறுநாள் முகத்துப் பக்கம் வராமல் இருக்கணும்னா அடையாளத்துக்கு முடிச்சுப் போட்டுக் கிடணும் ஒரு மூலையிலே’ சரசு அவனிடம்-

சலவைக்கு எல்லா அழுக்கையும் போர்வையில் வைத்து மூட்டையாகக் கட்டி-

சரசுவின் தம்பி யாரிடமிருந்தோ காமிரா இரவல் வாங்கி வந்து படமெடுக்கும் போது சரசுவுக்கும் ரேவதிக்கும் பின்னால் போர்வை தொங்க-

மனதின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரசு போர்வையை விரித்து விரித்துப் பார்த்தாள். ரேவதி வெறுந்தரையில் படுத்துத் தூங்கியிருந்தாள். அது எப்போதும் இப்படி வெறுந்தரையில்தான் முதலில் தூங்கும். அப்புறம்தான் துணியை விரித்துத் தூக்கிப் போட வேண்டும். தூங்குகிற ரேவதியைத் தூக்கிப் போடுகிற சிரமத்துக்கு சரசு அலுப்பதே இல்லை. ரேவதி தூங்கும்போது அப்படியே அவளுடைய அப்பாவைப் போல ‘ஒருச் சாய்ந்து’ இருப்பாள். சரசுவுக்கும் ரேவதியுடன் அப்படியே படுத்துக் கொள்ளத் தோன்றியது.

ஆனால் படுப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எவ்வளவு நேரம் இருந்தாலும் ஜோலி சிறிது சிறிதாக இருப்பது போலிருக்கிறது. தொலைந்து போன சாமான்கள் கிடைப்பது போல் ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வேலை வருகிறது. வேலை முடிகிறதும் முடியாததும் அவன் சாப்பிடுவதைப் பொறுத்து இருக்கிறது. அவன் நேரா நேரத்துக்குச் சோறு சாப்பிடுவதில்லை. திரும்பத் திரும்ப கூப்பிட வேண்டும். ‘வாரேன்’ என்பான். வரமாட்டான்.

சில சமயம் லைப்ரரி புத்தகங்கள், சில சமயம் வாரப்பத்திரிகைகளிடம் அவன் இருப்பான். ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் தினம் ஒன்று வருகிற அளவுக்குப் பத்திரிகைகள் அவனுடைய ஆபீஸ் கிளப்பிற்கு வருகின்றன. முதலில் புத்தகம் படிக்கிற காரணத்திற்காகவே இவன் கிளப்பிற்குக் காரியதாரிசியாக இருப்பது போல இருக்கும். மாதாமாதம் பேப்பர் பையன் பில்லைக் கொடுக்கும்போது இவன் புத்தகங்களை வரவு வைத்திருப் பதற்கும் செலவுத் தொகைக்கும் பொருத்தம் இருக்காது. இவள்தான் அதையும் சரிபார்த்து வைக்க வேண்டும்.

சில நாட்களில் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வரும்போதே சிடுசிடுவென்று வருவான். நாற்காலியை இழுத்து ஜன்னல் விளம்பில் கா¡லை நீட்டிக் கொண்டு தூங்குவான். இருட்டின பிறகுகூட விளக்கைப் போடாமல் அப்படியே உட்கார்ந்திருப்பான். “உடம்புக் குச் செளகரியமில்லையா? வேலை ஜாஸ்தியா?” எப்படிக் கேட்டாலும், ”ஒண்ணு மில்லை” என்பதற்குமேல் பதில் வராது.

கல்யாணம் ஆன சமயம் லேசாக மண்டையிடி வந்தால்கூட சரசு அவனிடம் சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். அவனுக்கு இவளுடைய தலைவலியை மாத்திரம் பொறுத்துக் கொள்ள ஏன் முடியவில்லை? அவள் தலைவலி என்று படுத்திருக்கையில் அவன் அனாவசியமாக எரிச்சலுற்றுத் தலைவலியைவிட வேதனை தருகிற ஒரு முணுமுணுப்புக் கொள்வான். ஒரு தடவை ‘எப்பப் பார்த்தாலும் தலைவலி. உடம்பும் குச்சி. சதையே கிடையாது… சீக்காளி மாதிரி…” என்று குரலே கசக்கிற மாதிரி திரும்பிப் படுத்துக் கொண்டான். ஒரு நுனிவிரல்கூட சரசுவின் மேல் படாமல் ஜாக்கிரதையாக இருந்தான். பக்கத்தில் படுத்துக் கொண்டே ரொம்ப விலகினது போல ஆகிற இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் சரசுவின் குழந்தைதான் சரசுவுக்கு அழத் துணைதரும். இந்த அழுகையைக்கூட அவன் பார்க்காமல் அழவேண்டும்.

இவள் அழுவாள் என்று எதிர்பார்த்தது போல, இவள் அழுதிருக்கிறாளா என்று பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வது போலச் சரசுவின் பக்கத்தில் வந்து தலைமாட்டில் உட்கார்ந்து தலையணையில் நனைகிற முகத்தை ரொம்ப உக்கிரமாகக் கன்னத்தில் கையைக் கொடுத்துத் திருப்பி, ”அழுதியா?” என்று கேட்டு, அழுகிறாயா என்றால் என்ன சொல்ல? அதுதான் அழுகிறாளே. சரசு பேசாமல் இருப்பாள். “இப்ப என்னத்துக்கு அழுகை?” – அவனுக்குச் சொல்ல சரசுவுக்கு எந்தப் பதிலும் இருக்காது. மேலும் அழுகையைத் தவிர. “எதுக்கு அழுதுகிட்டு இருக்கே, சொல்லு.. சொல்லு..” என்று திரும்பித் திரும்பிக் கேட்பான். ‘உன்னைப் பிடிக்கவில்லை’ என்று சொல்லாமல் குத்தி வாங்குகிறது போல இருக்கும் அது. சரசு குழந்தைக்குப் பக்கத்தில் மேலும் அணைத்து படுத்துக் கொள்வாள். குழந்தையின் கை, உடம்பு, தலையெல்லாம் நீவிக் கொடுத்து மூச்சு விடுகையில் தட்டுப்படுகிற வளையலும் பொறுக்குப் போலக் கிளம்பி நிற்கிற குழந்தையின் நெற்றிப் பொட்டும், குருட்டு விரலாக ஊர்ந்து ஊர்ந்து தடவுகையில் ஓர் ஒடுக்கமான பாதை போல் தட்டுப்படுகிற தலை வகிடும் சரசுவுக்கு அவளுடைய அம்மாவை, இறந்துபோன சிநேகிதியை எல்லாம் ஞாபகமாக்கிப் பக்கத்தில் படுத்துக் கொள்ளச் செய்யும்.

”ரேவதி தூங்கியாச்சா?” – கதவைத் திறந்து கொண்டே வந்தவனைக் கண்டதும் சரசு எழுந்தாள். “ரேவதி தூங்கியாச்சா” என்றால் அது ரேவதியின் தூக்கத்தைப் பற்றியில்லை. சரசுதான் பதில் சொல்ல வேண்டும். சொன்னாள், “வேலை ஒண்ணும் இல்லையேண்ணு இப்பதான் படுத்தேன்”.

கதவுப் பக்கம் வந்ததும்தான் அவன்கூட இன்னொருத்தரும் வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. தலையை விகிட்டிலிருந்து இரணடு பக்கமும் தவுக் காதுப்பக்கம் செருகலாகக் கோதிவிட்டப்படி ‘வாங்க’ என்று சொன்னாள். உட்காரச் சொல்லி அவன் நாற்காலியை இழுத்துப் போட்டான். சரசு கோதுமையையும் சீனியையும் வாங்கி வைத்திருந்த பையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஸ்டூலைக் கொண்டுவந்து போட்டாள். ஸ்டூலின் கீறலுக்குள் சிந்தி யிருந்த சீனி மினுங்கியது. கொண்டுவந்து போடுகிற அவசரத்தில், ஸ்டூலின் கால்கள் வாசல் பக்கம் தட்டியது. சரசுவை ஒரு தடவை பார்த்துவிட்டு அவன் ஸ்டூலை வாங்கிப்போட்டான். அறைந்தால்கூட இப்படிப் பார்க்கிறது போல வலிக்காது.

அவனுக்காகவே அவள் கொண்டு வந்து போட்டதென்றாலும் ஸ்டூலைக் காலியாக வைத்துவிட்டுச் சன்னல் விளிம்பில் உட்கார்ந்து வந்தவருடன் பேச ஆரம்பித்தான். அவர் போக வேண்டுமென்று சொன்ன இடத்திற்குப் புறப்படுகிற விடிகாலை பஸ்ஸையும், பஸ் நிற்கிற இடத்திலிருந்து அவர் நடக்க வேண்டிய திசையையும் அவன் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சரசுவுக்குப் போர்வையை அவனிடம் காட்ட வேண்டும் போல இருந்தது. ”நீங்க என்ன? அவங்க இப்போதான் வந்திருக் காங்க. வந்து சரியாக உட்காரக்கூட இல்லை. அதுக்குள்ளேயே புறப்படுகிறதுக்கு வழி சொல்லி ஆகுது!” என்று பேச்சைத் துவக்கலாம். முகத்தில் கொஞ்சம் சிரிப்பைச் சிந்தினபடி இரண்டடி எட்டி வந்து இதைச் சொன்னால் போதும். அப்புறம், “அதுக் கில்லை, நாளைக்குக் காலம்பற பார்க்க வேண்டிய முக்கியமான ஜோலியிருக்கு. இல்லைண்ணா நம்ம வீட்டில தங்குகிறதுக்கு என்ன?” என்பார். வந்தவரே பேசிக் கொண்டு இருக்கிற போது, ‘போர்வையை வாங்கியிருக்கேன். பாருங்க வந்து’ என்று எப்படிக் கூப்பிடுவது?

“ரேவதியைக் கொஞ்சம் தூக்கிப் படுக்கையில் போடுங்களேன். தரையிலேயே படுத்துக் தூங்கிட்டுது” – சரசு கூப்பிட்டாள். மூன்றாவது ஆள் எதிரே இருக்கும் போது சரசு சொல்கிறவைகளை அவன் கனிவாகவே செய்வான். படுக்கைகளை விரிப்பது, மறுநு¡ட்களையில் மடித்துச் சுருட்டி வைப்பது எல்லாம் நடக்கும்.

”வாரேன்” என்று வந்து ரேவதியை ஏந்தி எடுத்துப் பாயில் போட்டான். பாயின் சுருக்கத்தை ரேவதியின் காலை கொஞ்சம் தூக்கி நேர் செய்து விட்டு நிமிர்ந்தபோது சரசு போர்வையை எடுத்துக் காட்டிக் கொண்டு நின்றாள்.

”வாங்கினேயா?” என்று கேட்டான். குரலில் சந்தோஷம் இருந்தது. அடர்த்தியான ஊதாவும் செங்கல் காவியும் அகலம் சதுரம் சதுரமாக ஓடியிருந்த போர்வையை லுங்கிபோல இடையில் கட்டிக் கொண்டு ‘நல்லாயிருக்கா?’ என்று சிரித்தான். விலையைக் கேட்டதும் ‘பரவாயில்லையே’ என்று தோளில் இருந்து கால் விரல்வரை படுதாபோல் தொங்கவிட்டான்.

சரசு கொசுக்களும் குளிரும் தொடமுடியாத அவனுடைய தூக்கத்திற்கான கற்பனையில் இருந்தாள். அவனுக்கு இந்த முகம் மாறிவிடுவதற்கு முன், கொஞ்சம் தலையைச் சாய்த்துக் கண்ணை மூடுகிற நேரம் அவனுடைய மடியில் படுக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தாள். இருந்தவள் சட்டென்று முகம் மாறி அவனிடம் கேட்டாள்.

“என்ன சாப்பிடுறீங்க ரெண்டு பேரும்?”

”பாயாசமும் சோறும் வெச்சிருக்கையா?” – சரசுவை அவன் கிண்டல் பண்ணினான். அந்த அளவுக்குப் போர்வை அவனை மென்மையாகச் செய்திருந்தது.

”சரி சொல்லுங்க… என்ன சாப்பிடுறீங்க?” – சரசு மறுபடியும் கேட்டாள். இனிமேல் அவர்கள் சாப்பிடுவதானால் இரண்டு பேருக்கும் தோசை மாவு இல்லை. பழைய சோறும் காணாது. உப்புமாதான் கிண்ட வேண்டும். இவ்வளவு மணிக்குப் பிறகு இரும்புச் சட்டியைக் காய வைத்து, பச்சை மிளகாயை அரிந்து, கடுகு உளுத்தம்பருப்புத் தாளித்து… பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். ரேவதியின் யூனிபாரத்தைத் துவைத்து இனிமேல்தான் போட வேண்டும். படுக்கிறதானால் தலையணை உறைகளை மாற்றி ஆக வேண்டும்.

‘சாப்பாடு ஆச்சு ரெண்டு பேருக்கும்’

சரசுவுக்கு இதைக் கேட்டதும் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் ”நல்லாயிருக்கே.. வீட்டுக்கு வரும் போதே வெளியில சாப்பாடு பண்ணிக் கூட்டிக்கிட்டு வர்றதாக்கும். ரெண்டு வாய் வேணும் வேண்டாம் என்கிறதைச் சாப்பிட்டு விட்டுப் படுங்க” – சரசு விருந்தாளியிருந்த பக்கம் போய்ச் சொன்னாள். வந்தவுடன் இருட்டிலிருந்து, அப்புறம் கொஞ்சம் தெரிந்ததும் தெரியாததுமாக. இப்போது முகத்தை முழுவதுமாகக் காட்டியும் பார்த்தும்.

”சாப்பாட்டுக்கு என்ன இப்ப? நம்ம வீட்டில சாப்பிடச் சொல்லலைன்னு ஆவலாதியா சொல்லப் போறோம்?” வந்தவர் சிரித்துக் கொண்டே போனார்.

”அதெல்லாம் இல்லை, ஒரு தோசையாவது சாப்பிடலாம். கல் போட்டாச்சு!” சரசு சொல்லி, அது தீர்மானமாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் உள்ளே பரணில் தொங்கிக் கொண்டிருந்த தலையணைகளையும் படுக்கையையும் தள்ள ஆரம்பித்தான்.

இரண்டு படுக்கை தலையணைகளைத் தன் கையிலேயே நேரடியாக எடுத்துக் கொண்டு போய்விடலாம். அவன் அப்படிச் செய்யவில்லை. சிறுபிள்ளையைப் போல அவற்றை மேலிருந்து தள்ளி கீழே தாறுமாறாக விழுந்தபின் அவனுடைய படுக்கையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அவள் படுக்கையை தொள தொளவென்று துவண்டிருக்கிற தலையணை நசுங்கும்படி மிதித்து விட்டுப் போனான். ஒரே இடத்தில் படுக்கிறபோது அடுத்த படுக்கையையும் எடுத்துக் கொண்டு போய்ப் போட்டால் என்ன? விரித்து வைக்கக்கூட வேண்டாம். இப்போது இழுத்துப் போடுகிற மாதிரி அங்கே கொண்டு போய்ப் பக்கத்தில் தாறுமாறாகப் போட்டு வைத்திருந்தால்கூடப் போதும். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, உள் பாவாடையில் அடிச்சேலையில் ஈரம் தெறிக்க ‘எப்படா விழுவோம்’ என்று வருகிறவளுக்கு விரித்து வைத்திருக்கிற படுக்கை எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.

“இருங்க, இருங்க, உறையை மாற்றித் தாரேன். எல்லாம் பிசினா இருக்கு” – சரசு சொல்லிக் கொண்டு இருக்கையில் அவன் தலையணையைச் சொத்தென்று வீசி விட்டுப் போனான். பக்கத்தில்தான் சரசு இருக்கிறாள். கை எட்டிக் கொடுத்தால் இப்படி வீசுவதைவிட எவ்வளவு மிருதுவாக இருக்கும்.

ஜமுக்காளத்தைத் திடீரென உதறுவது கேட்டது. ஜமுக்காளத்தை இப்படிச் சத்தமாக உதறாமல் அவர் விரிப்பதில்லை. ரேவதி குழந்தையாகத் தொட்டிலில் கிடக்கையில் எத்தனையோ தடவை இந்தச் சத்தத்தில் பதறிச் சிணுங்கியிருக்கிறது. சரசுவைப் போல் அது இப்போது எல்லாவற்ற்றுக்கும் பழகிவிட்டது.

‘ஒரு செம்பில் தண்ணி கொண்டா’ – சரசுவிடம் சொல்லிக் கொண்டே வெளுத்த உறை போட்ட தலையணைகளை அவன் கையில் எடுத்து பிதுங்கல் இல்லாமல் சீராக்கிக் கொண்டு போனான். ரொம்பக் களிம்பாக இருக்கிற செம்பை அவசரத்தோடு அவசரமாகச் சாம்பலில் கழுவிக் கொண்டிருந்த சரசுவைத் தேடி அடுக் களைக்குள் வந்தபடி அவன் கேட்டான். ”போர்வையை எங்க வெச்சிருக்கே?”

”அங்கேதானே இருக்கு” சரசு தண்ணீரில் முக்கிச் செம்பை அலசினாள்.

”அங்கே அங்கேன்னா எங்கே?” தூக்கத்தில் எழும்பினது போல ஒரு எரிச்சலுடன் வாசல்படிப் பக்கத்திலிருந்து குரல் சீறினது. ”நான் கேட்கிறேன். நீ உன் பாட்டில் ஜோலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்ற சீறல் அங்கணக் குழிக்கும் அம்மியடிக்கும் இடையிலுள்ள இருட்டில் பம்மினது போல உட்கார்ந்திருந்த சரசுக்குள் கொஞ்ச நேரத்துக்கு முன்பு போர்வையைப் பார்த்த சமயத்தில் கிண்டல் பண்ணின அவனுடைய முகம் கிழிந்து தொங்கினது.

”உங்ககிட்டே காண்பிச்சுட்டு அலமாரியில் தானே வச்சேன்” – சரசு செம்பை அலம்பியிருந்தாள். தண்ணீருக்குள் கைகள் அமிழ்ந்து கிடப்பது ஒரு வேலைக்காக என்றாலும் நன்றாகத்தானிருக்கிறது. செம்பில் தண்ணீரை எடுத்துக் கொணட சரசு வரும்போது போர்வையை எடுத்துவிட்டுத் திறந்தபடி விட்டுவிட்டிருந்த அலமாரி தெரிந்தது. இருட்டுக்குள் புகையடித்துப் போய் நின்ற அலமரியின் மேல் தட்டில் அவள் கொண்டு வந்த குறைவான எவர்சில்வர் பாத்திரங்கள் மிகக் குறைவாகப் பளபளத்தன.

சேலையானால் அவள் இன்றைக்கு என்ன கிழமை என்று பார்த்திருப்பாள். போர்வையை இன்றைக்கே உபயோகப் படுத்தினாலும் பாதகமில்ல. எவ்வளவு சீக்கிரம் உபயோகத்துக்கு வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவன் உடலைப் போர்த்தித் தூங்குவான். சாதாரண வளர்த்திக்குக் கூடுதலான உயரம் இருப்பவர்கள்கூட முழுதாகக் கொள்ளும் படியாகப் போர்வைக்கு ‘வீதி’ தாரளமாக இருந்தது. சரசுவும் ரேவதியும் அவனுமாக மூன்று பேர் நெருங்கிப் படுத்தாலும் அது கொள்ளும்.

சரசு செம்பும் தம்ளருமாகத் தண்ணீரை ஜன்னலில் வைத்த போது வந்தவரிடம் அவன் போர்வையை கொடுத்துக் கொண்டிருந்தான். சரசுவுக்கு மேற்கொண்டு எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் ஒரு சோர்வு வந்தது.

‘புதுசாத் தெரியுது’ என்று போர்வையை ஒரு பாகம் அளவுக்குப் பிரித்து இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு அவனிடம் அதன் விலையைப் பற்றி, வந்தவர் விசாரித்தார்.

இனிமேல் எப்போது போர்த்தினாலும் சரசுவுக்கு அது பழசுதான். இன்றைக்கு உபயோகப்படுத்தவே படாமல் மடித்த வாக்கில் தலையண¨மேல் விரிந்திருந் தால்கூட அது சாயம்போன சேலையைப் போலத்தான் இனி.

ஒரு காலின் மேல் இன்னொரு புறங்காலால் தேய்த்துக் கொண்டு அவன் விலையைச் சொன்னான். தானே விலை விசாரித்துக் கடையில் வாங்கிய பாவனையில் பேசினான். பிரார்த்தனை போலப் பூத்துவிட்ட ஒரு மெளனத்திற்குப் பின் சரசு உள்ளே நகர்ந்தாள். நகர்ந்து வர வர அவன் சொல்வது கேட்டது.

”இந்தப் பக்கத்தில் கொசுக்கடி கொஞ்சம் ஜாஸ்தி. போர்த்திக்கிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கு மேன்னுதான் கொடுத்தேன்..” அவனுக்கும் ஒரு சங்கடம் இருந்தது போல இருந்தது. சொல்லிக் கொண்டே உள்ளே சரசு குருவி லைட்டை பொருத்தின கையுடன் உள்ளே நடமாடுகிற பக்கம் பார்த்தான். சரசு அலமாரியிலிருந்த ஒரு கிழிந்த சேலையை ஒரு வேளை அவனுக்குப் போர்த்திக் கொள்ள கொடுக்கலாம் என்ற விழைவுடன் வைத்துக் கொண்டு நின்றாள்.

”போர்வையை என் கிட்டேக் கொடுத் திட்டீங்களே.. நீங்க போர்த்திக்கிடலியா?” – வந்தவர் படுக்கையில் சாய்ந்து மெதுவாக மடங்கினபடி கேட்டார்.

”சீச்சீ… நான் போர்த்திக்கிடுறதே இல்லை. போர்த்தினோமோ போச்சு. அவ்வளவுதான் அப்புறம் விடிய விடியத் தூக்கமே வராது. சிவராத்திரிதான்” – கண்ணாடியைக் கழற்றின வித்தியாசமான முகத்துடன் விளக்கை அணைப்பதற்காக ஸ்விட்ச் பக்கம் போய்க் கொண்டே அவன் சொன்னான்.

இதைச் சொல்லும்போது அவன் முகம் எப்படியிருக்கிறது என்று சரசு பார்க்க முடியாதபடி விளக்கு சுத்தமாக அணைந் திருந்தது. பழஞ்சேலையால் குழந்தையை மூடிவிட்டு அவள் படுக்கிற சமயம் உள்ளங் கையால் தோள்பட்டையில் சுளீர் என்று அறைவது வெளிப்பக்கம் கேட்டது.

கொசுக்கள் இப்போதே அவனிடம் வந்திருக்க வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *