கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 21,936 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் முயற்சியில் சற்றும் மனம் தள தராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர நடுநிசியில் இப்படி சிரமப்படுகிறாயாயே, இது யாராவது பண்டிதருக்காகவா? உண்மையில் அந்தப் பண்டிதருக்கு அனுபவ அறிவும் இருந்தாலே உன் முயற்சி பலனை அளிக்கும். இதற்கு உதாரணம் ஞானசேகரன் என்பவனே. அவன் தன்னை மாபெரும் பண்டிதராக எண்ணி இருந்தான். ஆனால் அது தவறு எனப் புரிய வைத்தாள் அவனது மாமன் மகள் மஞ்சுளா. இக்கதையை கவனமாகக் கேள்” என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.

Ambulimama_Tamil_1996_05_0025-picஞானசேகரன் சிறுவயது முதலே பலநூல்களைப்படித்தவன். அதனால் தான் எல்லாவற்றையும் கற்று மாபெரும் பண்டிதராகி விட்டதாக எண்ணிப் பெருமிதம் அடைந்தான். அவன் எல்லாவற்றையும் படித்து விட்டதாக எண்ணியாருடனும் இலக்கிய சம்மந்தமாக வாதம் புரியவும் தயாராக இருந்தான்.

ஒருமுறை அவனது தாய் மாமா மகாலிங்கம் ஞானசேகரனைப்பார்க்க அவனது ஊருக்கு வந்தார். அவருடைய நோக்கம் தம் மகள் மஞ்சுளாவை ஞானசேகரனுக்கு மண முடித்து வைப்பதே. ஆனால் ஞானசேகரன் எப்போது பார்த்தாலும் இலக்கியம், இலக்கணம் என்றே பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவன் மனதைத் தன் வழியில் திருப்ப ஒரு திட்டத்தோடு வந்திருந்தார்.

ஞானசேகரன் ஊரிலிருந்து வந்த மாமாவிடம் இலக்கியம் பற்றிப் பேசத் தொடங்கவே அவரும் “இதோ பார்! நானும் இலக்கியத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தாலும் உன்னோடு என்னால் வாதம் புரிய முடியாது. நீ என்னுடன் எங்கள் ஊருக்கு வா. அங்கு பண்டி தர் பரமசிவம் என்பவர் இருக்கிறார். அவர் அறிவுக் கடல். அவரிடம் பேசி னால் அவர் கூறும் புது வார்த்தைகளுக்கு மற்றவர்களால் சரியான பொருள் கூடக் கூற முடியாது” என்றார்.

அதைக் கேட்டு ஞானசேகரன் ஆச்சரியப்பட்டான். ஏனெனில் அவன் தன்னை விட அதிகம் படித்தவர் யாருமே இல்லை என்றும் தனக்குத் தெரிந்த அளவு வேறு யாருக்குமே தெரியாது என்று எண்ணி கர்வப்பட்டுக் கொண்டிருந்தான். எனவே யாரோ பரமசிவம் என்ற மாபெரும் பண்டிதர் இருக்கிறார் என்று கேட்டதும் அவரைக் கண்டு இலக்கியவாதம் புரிய வேண்டுமெனவே அவன் நினைத்தான்.

Ambulimama_Tamil_1996_05_0026-picஞானசேகரனோ “மாமா எனக்கு எவ்வளவு சொற்கள் தெரியுமோ அவ் வளவு வேறு எந்தப் பண்டிதருக்கும் தெரிந்திருக்க முடியாது. நீங்கள் கூறும் உங்கள் ஊர் பண்டிதர் பரமசிவத்தை நான் நேரில் கண்டு அவரது அறிவு எவ்வளவு என்று அறிய விரும்புகிறேன் அதனால் நான் உங்களோடு உங்கள் ஊருக்கு வரத்தீர்மானித்து விட்டேன்” என்றான்.

மகாலிங்கமும் மகிழ்ச்சியுடன் “அப்படியா!சரி, என்னோடு வா. பணடிதர் பரமசிவத்தை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் அறிவுக் கடல் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ இதுவரைப் பார்த்துள்ள பண்டிதர்களைப் போல அரைவேக்காடு அல்ல. நிறைகுடம்” என்றார்.

“ஞானசேகரனும் இருக்கட்டுமே. என் முன் அவரால் நிற்க முடியாது” என்று பெருமை பேசி தன் மாமா மகாலிங்கத்துடன் அவரது ஊருக்குச் சென்றான். மகாலிங்கமும் மனதிற்குள்ளேயே “ஞானசேகரா! உன்னுடன் மஞ்சுளாவை பழக வைத்து உங்கள் திருமணத்தை செய்கிறேனா இல்லையா என்று பார்” என்று கூறிக்கொண்டார்.

மகாலிங்கம் தன் வீட்டை அடைந்ததும் ஞானசேகரனிடம் “ஞானசேகரா! நீ எப்போது பார்த்தாலும் இலக்கியம் என்று தான் யோசித்துக் கொண்டே இருப்பாய். உன் தேவைகளைப் பற்றி நினைக்கக் கூட மாட்டாய். அதனால் தான் நீ இங்கு இருக்கும் வரை ஒரு ஏற்பாடு செய்ய எண்ணி இருக்கிறேன். உனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அந்த வேலைகளை எல்லாம் என் மகள் மஞ்சுளா செய்வாள்” என்றார். ஞானசேகரனும் “அது பற்றியெல்லாம் நான்கவலைப்படவில்லை முதலில் அந்தப் பண்டிதர் பரமசிவத்தைப் பார்த்து வாதம் புரிய வேண்டும்” என்றான்.

மஞ்சுளாவும் “அத்தான்! அவர் மாபெரும் பண்டிதர். அவரோடு பேசுவது என்றாலே சற்று யோசித்தே பேச வேண்டும் அவர் கூறும் புதிய சொற்கள் பிறருக்கு எளிதில் புரியாமல் கூட இருக்கும்” என்றாள். ஞானசேகரனோ “இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது பண்டிதராகிய நான். நீ ஒன்றும் எனக்குச் சொல்ல வேண்டாம். உனக்கு இலக்கியம் பற்றியோ அல்லது இலக்கணம் பற்றியோ எதுவும் தெரியாது. உனக்குத் தெரியாத விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடாதே” என்று வெடுக்கென்று கூறினான்.

Ambulimama_Tamil_1996_05_0027-picமகாலிங்கமும் “சேகரா! அவளுடன் இப்போது ஏன் வீண் விவாதம்! நான் போய் பண்டிதர் பரமசிவம் வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்து உன்னை அவர் சந்திக்கும் நேரத்தையும் அறிந்து கொண்டு வருகிறேன். அதற்குள் மஞ்சுளா நீ குளிக்க ஏற்பாடுகளைக் செய்வாள்” என்று கூறிவிட்டு சென்றார்.

மஞ்சுளை நல்ல அழகி நன்கு படித்தவள். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்பவள். நன்கு பேசுபவள். இப்படிப்பட்டவள் ஞானசேகரனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கலானாள். ஆனால் ஞானசேகரனோ அவளைப் பற்றிக் கவலைப்படாமல் தன் மாமா எப்போது வருவார் என்றும் எப்போது பண்டிதர் பரமசிவத்தைக் கண்டு எப்படியெல்லாம் வாதம் புரிய வேண்டும் என்றே யோசிக்கலானான்.

மகாலிங்கம் வெளியே போய் விட்டு வந்து “பரமசிவம் வெளியூர் போயிருக்கிறாராம். வருவதற்கு இரண்டு நாட்களாகுமாம்” என்று ஞானசேகரனிடம் கூறினார். அது கேட்டு ஞானசேகரன் “இரண்டு நாட்களாகுமா? அதுவரை நான் என்ன செய்வது?” என்று கேட்டான். மஞ்சுளாவோ “ஏன்? நான் இருக்கிறேன். பல விஷயங்கள் பற்றிப் பேசிப் பொழுதைப் போக்கலாம்” என்றாள்.

ஞானசேகரனோ “உன்னிடம் பேச என் போன்ற பண்டிதர்களுக்கு என்ன இருக்கிறது?” எனவே மஞ்சுளாவும் “ஏன்? பரமசிவனார் உபயோகிக்கும் புதிய சொற்கள் பற்றிப் பேசலாமே” என்றாள். ஞானசேகரனோ “நீயோ எனக்கு எடுபிடி வேலை செய்பவள். எனக்குச் சமமாக பேசக் கூடிய அறிவு உனக்கு ஏது?” என்று கேட்டான். மஞ்சுளாவும் “ஆகா உங்களைப் போன்றவர்களைப் பார்த்துத்தான் ‘நரடன்றி கெரட்டவன்’ என்ற சொல்லைப் பரமசிவனார் பயன்படுத்தினார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

ஞானசேகரனுக்கு மஞ்சுளா கூறிய புதிய சொல் புரியவே இல்லை. அவன் அது பற்றி வெகுநேரம் யோசித்தான். அப்போதும் விளங்கவில்லை. அதனால் அவன் மஞ்சுளாவைக் கண்டு “நீ ஏதோ புதிதாகப் பண்டிதர் பரமசிவம் பயன்படுத்தினார் என்று ஒரு சொல்லைக் கூறினாயே. அதன் பொருள் என்ன?” என்று கேட்டான்.

Ambulimama_Tamil_1996_05_0028-picஅதைக் கேட்ட மஞ்சுளா கலகலவென்று சிரித்து “அத்தான்! அதைப் புரிந்து கொள்ளப் புத்தக அறிவு இருந்தால் மட்டும் போதாது அனுபவ அறிவும் வேண்டும். மாபெரும் பண்டிதர் என்று உங்களை நீங்களே கூறிக்கொள்வதில் பயனில்லை. இது பற்றி விளக்கமாகக் கூற வேண்டுமானால் இவ்வூர் மாடசாமியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவனைக் குறிப்பிடவே பரமசிவனார் இந்த சொல்லைப் பயன்படுத்தினார்” என்றாள்.

அதைக் கேட்ட ஞானசேகரன் விழித்தான். அவனுக்கு அந்த சொல்லே முற்றிலும் புதிதாக இருந்தது. அது வரை அவன் அதைக் கேட்டது கூட இல்லை. அதனால் அவன் அவளிடம் “நீ என்ன சொன்னாய்? புரியும்படிச் சொல்” என்றான். மஞ்சுளாவும் “நான் சொன்ன சொல்லை நன்கு கவனியுங்கள் நரட்டன்றி என்பதிலிருந்த ‘ரட்ட’ என்பதை எடுத்து விட்டால் கிடைக்கும் சொல் நன்றி. அது போலக் ‘கெரட்டவன்’ என்பதில் ‘ர’வை எடுத்தால் கெட்டவன் என்ற சொல் கிடைக்கிறது. இவற்றைச் சேர்த்தால் நன்றி கெட்டவன் என்பது கிடைக்கிறது, சரி. இதை ஏன் மாடசாமியைக் குறிக்க பரமசிவனார் பயன்படுத்தினார் என்பதைக் கூறுகிறேன்” என்று விவரமாகச் சொல்லலானாள்.

“மாடசாமி ஏழை விவசாயி. ஒரு முறை மிக மலிவாக ஒரு வயல் விலைக்கு வரவே வாங்க அவன் நினைத்தான். ஆனால் அவனிடம் அதற்கான பணம் இருக்கவில்லை. அப்போது முருகைய்யன் என்பவன் அவனுக்குக்கடன் கொடுத்து உதவவே மாடசாமி அந்த வயலை வாங்கி விட்டான். அதில் ஒரு புதையல் கிடைக்கவே மாடசாமி முருகைய்யனின் கடனையும் தீர்த்துவிட்டான்.

முருகைய்யனின் மகளின் திருமணம் திடீரென நிச்சயமாகவே அவன் அதனை நடத்த மாடசாமியிடம் கடன் கேட்டான். மாடசாமியோ “கடன் வாங்கித் கல்யாணம் செய்யாதே. ஏழைகள் தம் சக்திக்குள் எதையும் செய்ய வேண்டும். அகலக்கால் வைக்கக் கூடாது” என்று கூறிக் கடன் கொடுக்காமல் முருகைய்யனை அனுப்பி விட்டான்.

Ambulimama_Tamil_1996_05_0029-picஒருமுறை மாடசாமி வயலில் வேலை செய்து கொண்டிருக்கையில் அவனை ஒரு நல்ல பாம்பு தீண்டி விட்டது. முருகைய்யன் தான் ஓடி அவனைச் சுமந்து கொண்டு வைத்தியரிடம் கொண்டு போய்க் காட்டி அவன் உயிரைக் காப்பாற்றினான், இதற்குச் சில நாட்களக்குப் பின் முருகைய்யனைப் பாம்பு தீண்டியது. அதைப் பார்த்தும் மாடசாமி அவனுக்கு உதவாமல் தன் வழியே போய் விட்டான். வேறு யாரோ சொல்லித் தான் வைத்தியர் வந்து முருகைய்யனைக் காப்பாற்றினார். “மாடசாமி பற்றிய இந்த இரு நிகழ்ச்சிகளை மஞ்சுளா ஞானசேகரனிடம் கூறி இப்படிப்பட்டவனுக்குத் தான் பரமசிவனார் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்” என்று கூறினாள். ஞானசேகரனும் “அப்படியா?” எனவே மஞ்சுளாவும் “நான் இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. நீங்கள் மாடசாமியைக் கண்டால்தான் புரியும்” என்றாள்.

ஞானசேகரனும் “நீ சொல்வது வேடிக்கையாகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அப்படி ஒருவன் இருப்பானா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவனை நேரில் பார்க்க வேண்டும்” என்றான். மஞ்சுளாவும் “ஆகா! போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றாள்.

ஞானசேகரனும் மாடசாமியைப் பார்த்து வருவதாகக் கூறிச்சென்றான். ஒரு தெருவில் அவன் போனபோது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைக்கண்டான். அவர்களில் ஒருவன் பயில்வான். மற்றவன் ஈர்க்குச்சி போல ஒல்லியாக இருந்தான். பயில்வான் ஒல்லிப்பேர் வழியை அடிக்கப் போனான். அங்கு கூடி இருந்தவர்களில் ஒருவன் கூட அவனைத் தடுக்கவில்லை. அப்போது ஞானசேகரன் குறுக்கிட்டு அவர்களை விலக்கி விட்டான்.

அப்போது பயில்வான் “இந்த ஒல்லிப் பயலை ஆற்று நீர் அடித்துக் கொண்டு போயிற்று ஊரார் யாரும் இவனைக் காப்பாற்ற முன் வரவில்லை. நான் ஆற்றில் குதித்து இவனை மரணத்திலிருந்து காப்பாற்றினேன். இது இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இன்று இவனை வழியில் பார்த்தேன். நலமா என்று நான் விசாரித்தேன். இவனோ என்னை யாரென்றே தெரியாது என்று ஒரேயடியாகச் சாதிக்கிறான். இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்களை நாயை அடிப்பது போல அடித்தால்தான் புத்தி வரும்” என்றான்.

Ambulimama_Tamil_1996_05_0030-picஞானசேகரனுக்கு அந்த ஒல்லிப் பேர்வழிதான் மாடசாமி என்று தெரிந்துவிட்டது. அவன் பயில்வானைச் சமாதானப்படுத்தி “இவரைப்பார்த்தால் முற்றும் துறந்த ஞானி போல் தோன்றுகிறது. அதனால்தான் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது கூட இவருக்கு நினைவில் இல்லை. உங்கள் பலத்தை ஏன் இவரிடம் காட்டி வீணாக்குகிறீர்கள்? இவரை விட்டு விடுங்கள்” என்றான்.

பயில்வானும் ஞானசேகரன் சொன்னதால் அந்த ஒல்லிப் பேர்வழியை விட்டு விட்டுத் தன் வழியே சென்றான். அப்போது ஞானசேகரன் அந்த ஒல்லிப் பேர்வழியைப் பார்த்து “நீதானே மாடசாமி?” என்று கேட்டான். அவனும் “இதென்ன கேள்வி? நான்தான் யாரென்று நீ தெரிந்து வைத்திருக்கிறாயே. நீ யாரென்பது எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை” என்று கூறியவாறே போய் விட்டான். ஞானசேகரன் பெருமூச்சு விட்டவாறே தன் வீட்டை அடைந்தான்.

மஞ்சுளா ஞானசேகரனைக் கண்டதும் “என்ன? நீங்கள் அந்த மாடசாமியைப் பார்த்து விட்டீர்களா?” என்று கேட்கவே அவனும் “ஓ! பார்க்கவும் பார்த்தேன். பேசவும் பேசினேன். அவனைக் குறிப்பிடப் பரமசிவனார் பயன்படுத்திய சொல் மிகவும் பொருத்தமானதே. ஆனால் நீ ஆரம்பத்தில் என்ன சொன்னாய்? என் போன்றவர்களைக் குறிக்க இந்தச் சொல் என்றாயே. நான் ஒன்றும் நன்றி கெட்டவனாக இருக்க மாட்டேன்” என்றான்.

மகாலிங்கமும் “சபாஷ் நீ ஒன்றும் நன்றி கெட்டவனாக இருக்க மாட்டாய்தான். உன் தேவைகளை எல்லாம் கவனித்துக் கொண்டு வந்தவள் மஞ்சுளாவே. அவள் செய்த பணியை மறந்து விடமாட்டாயே. அப்படி மறந்தால் நீ மாடசாமியைப் போல நன்றி கெட்டவனே. சரி இது இருக்கட்டும் பரமசிவனார் என்ற பண்டிதரே இல்லை. இவ்வூர் மாடசாமியை வைத்து மஞ்சுளா கற்பனை செய்ததே இது. இனியாவது அனுபவ அறிவு வேண்டுமென உணர்கிறாயா? உனக்கும் மஞ்சுளாவிற்கும் விரைவில் திருமணம்” என்றார். ஞானசேகரனும் புன்சிரிப்புடன் மஞ்சுளாவைப் பார்த்தான்.

Ambulimama_Tamil_1996_05_0031-picவேதாளம் இக்கதையைக் கூறி “மகாப் பண்டிதனென நினைத்த ஞானசேகரானால் ஏன் மஞ்சுளா திரித்துக் கூறிய ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள முடியவில்லை? நன்றி கெட்டவன் என்ற ஒரு சொல்லைக் கொண்டு மஞ்சுளா அவனைத் திக்குமுக்காட வைத்தாளே! இலக்கியத்தைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளாத ஞானசேகரனின் மனம் எப்படி மாறியது? இக்கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்க நூறாகிவிடும்” என்றது.

விக்கரமனும் “மஞ்சுளா ஞானசேகரனுக்கு உலக அனுபவமும் அனுபவ அறிவும் தேவை என்பதை உணர்ந்து கொண்டாள். எனவே ஒரு சொல்லை எடுத்து அதைச் சிதைத்து நன்றி கெட்டவன் யார் என்பதை அவனுக்கும் புரிய வைத்தாள். அவள் அவனுக்காக எல்லா வேலைகளைச் செய்தும் அவன் நன்றி செலுத்தவில்லையே என்று உணர்த்தினாள். ஞானசேகரன் அவளது அறிவையும் குணத்தையும் கண்டும் தான் நன்றிகெட்டவன் எனப் பெயர் பெறாமல் இருக்கவும் மனம் மாறி அவளை மணக்க இசைந்தான்” என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– மே 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *