கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 30,624 
 

காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்க —ஜன்னல் வழியே நோக்கினாள் தாமினி…

கேட்டுக்கு வெளியே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நான்கு வயது சிறுவனோடு நின்றாள். கதவை திறந்த தாமினி – “யாரும்மா நீ? என்னவேண்டும்? ” கேட்டாள்.

“வக்கீல் வீட்டு அம்மா சொன்னாங்க, உங்களுக்கு வேலைக்கு ஆள் கேட்டதா ,,,அதான் வந்தேன் ”

”அப்படியா,வா உள்ளே ,அது யாரு கூட..உன் பையனா?”

“ஆமாம்மா …..” என்று சொன்னபடியே கையிலுள்ள கடிதத்தை கொடுத்தாள்.

அதை வாங்கி படித்துப்பார்த்தாள், வக்கீல் வீட்டு வனஜாதான் எழுதிருந்தாள். தனக்குத் தெரிந்தவள் என்றும், நன்றாக வேலை செய்வாள் என்றும்.

“உன் பேரு என்ன?”

“முனியம்மாங்க”

“இதோ பாரு முனியம்மா, வேலைக்கு வந்தபிறகு அந்த வேலை செய்யமாட்டேன் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்லக்கூடாது. சமயத்தில் கடைக்கும், ரேஷனுக்கும் ஏன் மில்லுக்கும் கூட போகவேண்டியிருக்கும். வீட்ல நாங்க இரண்டு பேர்தான். காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடனும். வெள்ளி செவ்வாய் வீடு துடைக்கணும். கண்டிப்பாய், உன் மகனை வேலைக்கு வரும்போது இங்கே அழைச்சுகிட்டு வரக்கூடாது. இதுதான் என் கண்டிஷன். இதற்கெல்லாம் சம்மதம்னா சொல்லு பார்ப்போம்.பொய், திருட்டு கூடவேகூடாது”

“நீங்க உங்க கண்டிஷனை சொல்லிட்டீங்க, நான் என் கண்டிஷனை சொல்லிடறேன், நான், நாணயமானவள், என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வீட்டை விட்டு போய்டுவேன், இரண்டு வேலை காபி கொடுத்திடனும், ஒரு வேலையாவது சாப்பாடு கொடுத்துடணும் அது காலையோ மதியமோ அது உங்களிஷ்டம், சம்பளம் அறநூறு ருபாய் கொடுத்திடனும். கைநீட்டி சம்பளம் வாங்கிட்டா எந்த வேலையையும் செய்யாம போகமாட்டேன், உடல் நிலை சரி இல்லாமல் போனாலொழிய –அவசிய லீவுன்னா முன்னாடியே சொல்லிடுவேன். இதுக்கெல்லாம் சரின்னா எனக்கும் சம்மதம்தான்”

“அடேடே இத்தனை கறாராகத்தான் பேசுற, நாளையிலருந்து வேலைக்கு வந்துடு ஒன்னாம் தேதியாயிருக்கு கணக்கு வைக்க சரியாயிருக்கும்.”

“சரிம்மா ,காலையிலே வரேன் ”

முனியம்மா எந்த வேலையையும் சுத்தமாகவும் ,விரைவாகவும் செய்தாள்.முகம் சுளிக்காமல். எந்த வேலை சொன்னாலும் அவள் செய்தது தாமினிக்கு திருப்தியாக இருந்தது’..
இரண்டு மாதம் சீராக ஓடியது .ஒரு காலை நேரம் —

“முனியம்மா, அய்யாவோட டிபன் பாக்ஸ் சை எங்கே கழுவி வைச்சே?”

“எல்லா சாமானையும் அந்த மேடையிலேதான் கவிழ்த்துவிட்டு போறேன்”

“அங்கே டிபன் பாக்ஸ் சை காணோமே , ஞாயிறு லீவாச்சே? டிபன் பாக்ஸ்சுக்கு வேலை இல்லையே, அங்கே வச்சிருந்தால் எங்கே போகும் ?” மறுபடி தாமினி கேடடாள்.

முனியம்மா போய் பார்த்து விட்டு, “இங்கே இல்லையே, உள்ளே எங்காவது கை தவறி வச்சிருக்கீங்களா பாருங்கம்மா” என்றால் முனியம்மா அமைதியாக.

அதற்குள் “இதைப்பாரு தாமினி எனக்கு இன்னைக்கு டிபன் வேண்டாம் நான் வெளிலே போறேன் அங்கேயே சாப்பிட்டுக்குறேன், நீ நிதானமா வீட்டில தேடிப்பாரு உனக்கு ஞாபகமறதி அதிகம்” என்ற கணவனை முறைத்து பின் –

“என்னை எல்லோரும் பைத்தியம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே, வீட்டில நாம மூணு பேருதான், வேற திருடனா வந்து எடுத்துட்டு போயிருப்பான்? அப்படியே இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிபன் பாக்ஸ் சை மட்டுமா திருடுவான் அதிசயம்தான், முனியம்மா நீயும் உன்வீட்டில தேடிப்பாரு எதனாச்சும் எடுத்திட்டு போறேல்ல”

“நீங்க இப்படி சொல்லிடக்கூடாதுன்னுதானே நான் என் வீட்டிளிருந்து பாத்திரம் கொண்டு வரேன்”

“வீட்டையே அலசிட்டேன் வேணும்னா மறுபடியும் தேடிப்பார்க்கிறேன் எதுக்கும் உன் வீட்லயும் தேடிபாரேன், கை தவறுதலா எடுத்துட்டுப்போயிருக்கலாம்ல”

முனியம்மா வியப்போடு பார்த்துவிட்டு வெளியேறினாள் .மாலை ……

முனியம்மா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள் ..அலுவலகம் விட்டு வந்த பாஸ்கரன்,

“தாமினி உனக்கு இருந்தாலும் இத்தனை ஞாபகமரதி கூடாது ஞாயிறு உன் அக்காள் இங்கு வந்த பொது நீதானே ஸ்வீட் வைத்து இந்த டிபன் பாக்ஸ்சை கொடுத்தாயாம் அதை மறந்துவிட்டு முனியம்மாவை சந்தேகப்பட்டாயே நியாயமா? உன் அக்காள் அலுவலகம் விட்டு வருகையில் என்னை கூப்பிட்டு கொடுத்தாள்”

“சரிசரி சப்தம் போட்டு பேசாதீங்க, டிபன் பாக்ஸ் கிடைத்துவிட்டது என்று முனியம்மாவிற்கு தெரிந்தால் நாளைக்கு ஏதாவது சாமானை எடுத்துகொண்டால் கூட, நீங்கதான் ஞாபக மறதியா எங்காவது வைச்சுட்டு என்னை கேட்கிறீகள் என்று சொல்லிடப்போரால் இந்த பாக்ஸ்
காணாமல் போனது மாதிரியே இருக்கட்டும், எதையாவ உளறி வைக்காம போங்க ”என்று கணவனை மடக்கினால் தாமினி

மாலை வேலையெல்லாம் முடிந்ததும் முனியம்மா தாமினிடம் வந்தால்.

“அம்மா என் கணக்கை பார்த்து சம்பளத்தை தரீங்களா ?”

“என்ன முனியம்மா, மாசமே முடியலே ,அதற்குள்ளே ,,சம்பளம் கேட்கிறே?” புரியாமல் கேட்டாள் தாமினி

“அது அப்படித்தான் அம்மா, நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் உங்ககிட்டே என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வேலையை விட்டு போயிடுவேன் என்று டப்பாவை நீங்களே உங்க அக்கா வீட்டுக்கு கொடுத்துவிட்டு காணோம்னு சொன்னீங்க, அய்யா கொண்டு வந்து கொடுத்த பிறகாவது தப்பா கிடைச்சுட்டுதுன்னும், நாதான் மறந்துட்டேன்னு சொல்லியிருந்தாகூட என் மனசு ஆறியிருக்கும் ,ஆனால் நீங்க …. நான் ஏழைதாம்மா எங்ககிட்டே இருக்கிறதே இந்த நாணயம் ஒண்ணுதான் அதையும் உங்ககிட்ட இழக்கத்தயாராயிள்ளே ,,நீங்க வசதியானவங்க ,காணாமல்; போனது இன்னும் பெரிய பொருளா இருந்தா என்னை போலீசிலே பிடிச்சுகொடுக்கக்கூட தயங்க மாட்டீங்க, வேண்டாம்மா இந்த வேலை, என் கணக்கை நேர் பண்ணிடுங்க ‘

தாமினி கணவனை முறைத்து பேச்சற்று நின்றாள்

– 5-2-95

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *