சிவப்பு மஞ்சள் பச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 9,873 
 

வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக். இரட்டையர்களான அஞ்சலி, அரவிந்தனுக்கு ஐந்து வயது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குனரான கார்த்திக்கும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் அம்பிகாவும் லண்டனுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. தம் பெற்றோர்களை சந்திப்பதற்கு வருடத்திற்கு இரண்டு முறை இந்தியா செல்வது கார்த்திக் – அம்பிகாவின் வழக்கம்.

“நம்ம வீட்டிலிருந்து ஏர்போர்டுக்கு எவ்ளோ நேரம் ஆகும் அப்பா?” என்று கேட்டாள் அஞ்சலி. “ஒரு மணி நேரம் ஆகும் அஞ்சலி” என்றான் கார்த்திக். அதற்கு அரவிந்தன், “நீங்க காரை வேகமா ஓட்டினா இன்னும் சீக்கிரமா போயிடலாம் இல்லையா அப்பா?” என்று கேட்க, கார்த்திக் புன்னகைத்தான். “டிராஃபிக் ரூல்ஸ் எல்லாம் இருக்கு அரவிந்த். அதன்படி தான் போகணும்” என்றான் கார்த்திக். “அது என்னென்ன?” என்று அரவிந்தன் கேட்க, டிராஃபிக் சிக்னலில் மஞ்சள் நிறம் வந்ததால் வண்டியை நிறுத்தினான் கார்த்திக். “இப்போ மஞ்சள் சிக்னல் வந்ததால உங்க அப்பா வண்டியை நிறுத்தினார் இல்லையா? அது மாதிரி நிறைய ரூல்ஸ் இருக்கு அரவிந்த்” என்று முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த அம்பிகா கூறினாள். “ரெட் லைட் வந்தாலும் காரை நிறுத்தறீங்க. மஞ்சள் லைட் வந்தாலும் நிறுத்தனுமா அப்பா?” என்று கேட்டாள் அஞ்சலி. அதற்கு கார்த்திக், “மஞ்சள் லைட் வந்ததுன்னா வண்டியை ஸ்லோ பண்ணி நிறுத்தணும். ரெட் சிக்னல் வந்தா இருக்கிற இடத்தை விட்டு நகரக்கூடாது. கிரீன் லைட் வந்தாமட்டும்தான் நகரணும்” என்று பொறுமையோடு விளக்கினான் கார்த்திக். அடுத்த சில நொடிகளில் சிக்னலில் பச்சை விளக்கு எரிய, வண்டி புறப்பட்டது.

சிறிது நேரத்தில் அரவிந்தன் “ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணலைன்னா இன்னும் சீக்கிரம் போயிடலாம் இல்லையா அப்பா?” என்று கேட்க, உரையாடல் எந்த திசையில் செல்கிறது என்பதை உணர்ந்தான் கார்த்திக். “ரூல்ஸ ஃபாலோபண்ணாம இருக்கறது தப்பு அரவிந்த். எது எது எப்படி செய்யணுமோ அது அது அப்படித்தான் செய்யணும். இல்லைன்னா போலீஸ் அங்கிள் பிடிச்சிட்டு போயிடுவாங்க” என்றான் கார்த்திக். “அதனாலதான் 2 மணி ஃப்ளைட்டுக்கு இவ்ளோ சீக்கிரம் கிளம்பினோமா அப்பா?” என்று அஞ்சலி கேட்க, “ஆமாம் அஞ்சலி. இப்போ உங்க ரெண்டு பேருக்கும் புரிஞ்சுதா?” என்று கார்த்திக் கேட்க, அதற்கு இருவரும் புரிந்தது என்றபடி தலையசைத்தனர். விமான நிலையத்தை அடைந்து, செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் முடிந்து, தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி உட்கார்ந்தனர். சிறிது நேரத்தில் விமானம் சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அஞ்சலியும், அடுத்து அரவிந்தனும் உட்கார்ந்துகொண்டு, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர். இவர்களுக்கு முன் இருக்கின்ற வரிசையில் அம்பிகாவும் கார்த்திக்கும் உட்கார்ந்து இருந்தனர். விமானம் கிளம்பி ஒரு மணி நேரம் ஆனது. அஞ்சலியும் அரவிந்தனும் உறங்கிக்கொண்டிருந்தனர். “நல்லா கேள்வி கேக்க ஆர்மபிச்சுட்டாங்க இல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். அதற்கு அம்பிகா, “ஆமாம். நிறைய கேள்வி கேக்கறாங்க. நல்லது எது, கெட்டது எதுன்னு நாமதான் சரியா சொல்லிக்கொடுக்கணும். இப்போ மனசுல பதியறதுதான் கடைசிவரைக்கும் இருக்கும்” என்றாள். “என்னை மாதிரியே இவங்களையும் நல்லவங்களா வளர்க்கணும்” என்று கூறிய கார்த்திக்கைப் பார்த்து அம்பிகா, “இன்னும் எத்தனை நாளுக்கு இதே நினைப்போட இருப்பீங்க. NPK தான் உங்களுக்கு” என்றாள். அதென்ன NPK என்று கார்த்திக்கிற்கு புரிவதற்க்குள் “NPK என்றால் நெனப்புதான் (N) பொழப்பைக் (P) கெடுக்கும் (K). இதுகூட தெரியாதா?” என்று அம்பிகா விளக்க, “எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமான்னு செக் பண்ணேன்” என்று மழுப்பி ஒரு வழியாக சமாளித்தான் கார்த்திக்.

மணி 3:30 ஆனது. அம்பிகாவும் உறங்க ஆரம்பித்திருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு தான் பிறந்த ஊரான சென்னைக்கு செல்வதால் கார்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நிலைமைதான் அவனுக்கு. தான் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்ததைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான்.

7 வருடங்களுக்கு முன்பு, கார்த்திக் பணிபுரிந்துக்கொண்டிருந்த அலுவலகத்தில், அவனுடைய அணியிலிருந்து ஒருவர் லண்டன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. மற்றவரகளைவிட திறமைசாலி என்பதால் லண்டனுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டான் கார்த்திக். ஒரு புறம் அவனுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறு புறம் தனியாக எப்படி செல்வது என்று ஒரு சிறு அச்சம். முதன்முறையாக வெளிநாடு சென்று, தனியாக என்ன செய்வது என்ற எண்ணம் வேறு. சரி, என்ன இருந்தாலும், என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான் கார்த்திக்.

லண்டனுக்கு புறப்பட வேண்டிய நாள் வந்தது. செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் முடித்து விமானத்தில் ஏறி உட்கார்ந்தான் கார்த்திக். முதன்முறையாக பயணம் செய்யப்போகிறோம் என்று ஒருவிதமான உற்சாகத்தில் இருந்தான். விமானம் புறப்படத் தயாரானது. பயணிகளை சீட் பெல்ட் அணியச்சொல்லி விமானத்தில் இருந்த ஏர் ஹோஸ்டஸ் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆர்வமிகுதியின் காரணமாக, சீட் பெல்ட்டை சரியாக அணிந்திருந்தபோதிலும், ஏர் ஹோஸ்டஸிடம் தன்னால் சீட் பெல்ட்டை இறுக அணியமுடியவில்லை என்றான் கார்த்திக். அவனுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு, சீட் பெல்ட்டை மேலும் இறுக்கினாள் அந்த ஏர் ஹோஸ்டஸ். வலித்தாலும், ஒரு அழகான பெண் எதிரில் அந்த வலியை காண்பிக்கக்கூடாது என்று நினைத்து, வலியினால் கண்களில் நீர் வந்தாலும் அதைத் துடைத்துக்கொண்டு சமாளித்தான் கார்த்திக்.

சிறிது நேரத்தில் சீட் பெல்ட்டை கழற்றி விடலாம் என்று விமானத்தில் அறிவிப்பு வந்தது. காந்தி ஜெயந்தியன்று பல இடங்களிலும் தேடி கிடைக்காமல், கடைசியில் ஒரு சிறு கள்ளுக்கடை திறந்திருப்பதைக் கண்டால் நம் நாட்டு ‘குடி’மக்கள் எப்படி உணர்வார்களோ, அப்படி இந்த அறிவிப்பைக் கேட்டு உணர்ந்தான் கார்த்திக். தன் குலதெய்வத்திற்கு நன்றி கூறிவிட்டு, சீட் பெல்டைக் கழற்ற முயன்றான். அவனுடைய கெட்ட நேரம், சீட் பெல்டைக் கழற்ற முடியவில்லை.  சீட் பெல்டுடன் போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் அவனுக்கு உதவ முன்வர, வேண்டாம் என்று ஜம்பமாகக் கூறினான் கார்த்திக்.

போராட்டம் ஆரம்பித்து இருபது நிமிடம் ஆனது. இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த அயல்நாட்டவர் இந்தப் போராட்டத்தை சற்றும் கவனிக்காமல் தேநீர் (டீ) அருந்திக்கொண்டிருந்தார். ஜாதி, மதம் பாராமல் எல்லா தெய்வத்தையும் வேண்டி, தன் முழுபலத்தை உபயோகப்படுத்தி சீட் பெல்ட்டைக் கழற்ற முயன்றான் கார்த்திக். அடடா என்ன ஆச்சரியம்! சீட் பெல்ட் கழன்று விட்டது. பெருந்துயரத்திலிருந்து மீண்ட கார்த்திக், மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி கூறி, தனக்குப் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தான். ஐயோ பாவம் அவர். கார்த்திக் தன் முழுபலத்துடன் சீட் பெல்ட்டை கழற்றிய போது, அவனது வலது கை, அவர் அருந்திக்கொண்டிருந்த டீ கோப்பையை தட்டிவிட்டது. யாரையும் தொந்தரவு செய்யாமல், தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த அவரது வெள்ளை சட்டையில் டீ கொட்டியது. சாதாரண ஷர்ட்டை டீ ஷர்ட் ஆக்கிவிட்டான் கார்த்திக். அந்த அயல்நாட்டவரை சமாதானம் செய்ய அவனுக்கு அரை மணி நேரம் ஆனது. இவ்வாறாக தனது அனுபவங்களை நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். விமானம் சென்னையை வந்தடைந்தது.

தன் மகன், மருமகள், பேரன், பேத்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கார்த்திக்கின் தந்தை சுந்தரம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இவர்கள் நால்வரையும் கண்ட சுந்தரம், மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, பயணத்தைக் குறித்து கேட்டவாறே தனது கார் அருகே அழைத்துச்சென்றார்.  கார் ஓட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால், காரின் சாவியை கார்த்திக்கிடம் கொடுத்தார் சுந்தரம். அதை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்ட கார்த்திக், அடையாரில் இருக்கும் தன் வீட்டை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தான்.

வீட்டை வந்தடைந்தனர் ஐவரும். இவர்கள் அனைவரையும் வரவேற்க கார்த்திக்கின் தாய் ஜானகியும், அம்பிகாவின் தந்தை நடராஜனும், தாய் கீதாவும், வீட்டு வாசலுக்கு விரைந்தனர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் கார்த்திக்கின் பெற்றோரும், அம்பிகாவின் பெற்றோரும், பயணத்தைப் பற்றிய வழக்கமான கேள்விகளை கேட்டனர். இரவு உணவை உண்டபின் அனைவரும் உறங்கச் செல்ல, அந்த நாள் இனிதே முடிந்தது.

அடுத்த நாள், தனது நெருங்கிய நண்பர்களான சையது, விஜய் இருவரையும் சந்திக்க, தனது பைக்கில் கிளம்பினான் கார்த்திக். இவர்கள் மூவரும் பள்ளிக்காலத்திலிருந்தே நண்பர்கள். பள்ளியிலும், பின்னர் கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சிறு வயதில் செய்த சேட்டைகள் ஏராளம்.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த கார்த்திக், சையது, விஜய் மூவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தனர். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். மூவரும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தனர். முதல் நாள் என்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் (Head of the Department) வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவ மாணவியையும், பொறியியல் படிப்பு முடித்து என்ன ஆகப்போகிறாய் என ஒவ்வொரு வரிசையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  இறுதியாக, கடைசி வரிசையைப் பார்த்து, “இன்ஜினியரிங் முடிச்சிட்டு நீங்க என்ன ஆகப்போறீங்க?” என்று கேட்டார். அதற்கு கார்த்திக், சையது, விஜய் மூவரும் எழுந்து நின்று, “நாங்க மூணு பேரும் இன்ஜினியரிங் முடிச்சிட்டு டாக்டர் ஆகப்போறோம்” என சொல்ல வகுப்பறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற பல குரும்புகளைத் தன் அனுபவத்தில் பார்த்திருந்ததால், துறைத்தலைவர், சிறு [புன்னகையுடன் இவர்கள் மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு கிளம்பினார். இதுபோல நிறைய சேட்டைகள் செய்தாலும், மூவரும் மிகவும் திறமைசாலிகள் என்பதாலும், படிப்பில் சிறந்து விளங்கியதாலும், கல்லூரி ஆசிரியர்கள் இவர்கள் செய்த எதையும் பொருட்படுத்தியதில்லை.

வெகுநாட்களுக்குப்பிறகு தன் நண்பர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற குதூகலத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது, கார்த்திக்கின் செல் ஃபோனில் ஏதோ ஒரு அழைப்பு வந்தது. டிராஃபிக் போலீஸ் இல்லாத இடம் என்பதால் வண்டியை நிறுத்தாமல் செல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். விஜயிடமிருந்து வந்த அந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக். ஒரு டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துக்கொண்டிருந்ததால் வண்டியை நிறுத்தினான். சிவப்பிலிருந்து மஞ்சள் வந்து பச்சை விளக்கு எரிவதற்குள் அவசரமாக வண்டியை கிளப்பினான் கார்த்திக். இவனைப்போலவே டிராஃபிக் சிக்னலை மதிக்காத லாரி ஒன்று மிகவேகமாக இவன் எதிரில் வந்துக்கொண்டிருந்ததைப் பார்க்காததால், கார்த்திக்கின் வண்டி அந்த லாரியை மோதியது. செல் ஃபோனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிக்கொன்டிருந்ததால், எதிரில் வந்த லாரியை அவன் கவனிக்கவில்லை. மோதிய வேகத்தில், வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கார்த்திக், தன் முதுகு தரையில் படும்படி கீழே விழுந்தான். பின் மண்டையிலும் பலத்த அடிபட்டதால் மயக்கமடைந்த கார்த்திக்கை, சாலையில் இருந்தவர்கள், வேகவேகமாக ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட கார்த்திக்கின் குடும்பத்தினர், சையது மற்றும் விஜய் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கார்த்திக்கைப் பரிசோதித்தபின் “பயப்படுவதற்கு ஒண்ணுமில்ல. அடிபட்டதுல மயக்கம் வந்திருக்கு. சில மாத்திரைகளை கொடுக்கறேன். அதை கொடுங்க. சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் கூற, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அன்று மாலை கார்த்திக்கை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வரும் வழியில் கார்த்திக்கிடம் அஞ்சலி, “எப்படி அப்பா உங்களுக்கு இப்படி ஆச்சு?” என்று கேட்டாள். அதற்கு கார்த்திக், “செல் ஃபோன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினேன். கிரீன் சிக்னல் வர்றதுக்கு முன்னாடி வண்டியை வேகமா ஓட்ட ஆரம்பிச்சேன். அதனாலதான் இப்படி” என்று பதில் அளித்தான். “இப்படி செய்யறது தப்புன்னு நீங்கதானே சொன்னீங்க. இப்படி செஞ்சா போலீஸ் அங்கிள் பிடிச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்னீங்களே?” என்று கேட்டாள் அஞ்சலி. அதற்கு கார்த்திக், “அந்த இடத்துல போலீஸ் அங்கிள் இல்லம்மா. அதனாலதான் பரவாயில்லைன்னு அப்படி செஞ்சேன்” என்று கூறினான். இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்தன், “தப்பு செஞ்சா பிடிக்கறதுக்கு, தடுக்கறதுக்கு ஆள் இல்லன்னா தப்பு செய்யலாமா அப்பா?” என்று கேட்டு முடிக்கும்போது தங்கள் வீட்டை வந்தடைந்தனர். இதைக்கேட்டு திகைத்துப்போன கார்த்திக், தன்னை சுதாரித்துக்கொண்டு, “தப்பான விஷயம் எதையும் செய்யக்கூடாது அரவிந்த். செஞ்சா எனக்கு நடந்த மாதிரிதான் நடக்கும்” என்று தன் தவறை உணர்ந்தவனாகக் கூறினான்.

ஒரு வாரம் ஆனது. முற்றிலும் குணமடைந்திருந்தான் கார்த்திக். தன் குடும்பத்தினரை காரில் அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தான். சாலையில் டிராஃபிக் சிக்னலில் சிவப்பிலிருந்து மஞ்சள் விளக்கு எரிய, வண்டியை நிறுத்தினான். சில நொடிகளில் மஞ்சள் விளக்கு அணைந்து, பச்சை விளக்கு எரிய, வண்டியைக் கிளப்பினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *