உழவுத் தொழிலையே நம்பி வந்த சொக்கையன் காவிரியில் தண்ணீர் இல்லை என்றாலும் தன் பணியை விடுவதாக இல்லை. காவிரியில் நீர் வரும்; மழையும் வரும் என்ற நம்பிக்கையில் காளை மாடுகளை கலப்பையில் பூட்டி உழுகத் தொடங்கினார். பாவம்! கார்மேகத்தின் கடைக்கண் பார்வை எங்குமே விழாத போது சொக்கையனுக்கு மட்டும் என்ன!
உழுது உழுது கலப்பையும் தேய்ந்தது. பூமா தேவியும் காய்ந்து போனாள். தண்ணீர் இல்லாமல் அவரது கண்களும் சுருங்கின. வலியால் காளைகளும் கதறியது தான் மிச்சம்.
“ஏலே மரத்துகளையும் வெட்டிப்புட்டோம். காவிரியாத்தாவும் கண்ண மூடிட்டா. நம்ம பொழப்பே காஞ்சு போன பொழப்புத்தாலே. இனி வௌச்சல காணமுடியாதுல் சாவத்தால பாக்க முடியும்” என்றோ ஒரு நாள் வேலன் சொன்னது நினைவுக்கு வந்தது.
மாட்டை அவிழ்த்துவிட்டு நரைத்துப் போன தலைமுடியோடும் திரை விழுந்த முகத்தில் முளைத்த தாடியோடும், கையில் தடியோடும் ஏக்கத்தோடு வானத்தையே பார்த்தவாறு தெருவோரத்தில் உட்கார்ந்திருந்தார். பசிமயக்கம் வயிறைக் கிள்ளியது கூட தெரியாமல் புதிய சிந்தனையில்.
“தெருவோரத்துல என்னலே பண்றே. மானவேற் இருண்டுக்கிட்டு இருக்கு எந்திரிலே அந்தாண்ட போவலாம்” கூழன் அவரைப் பிடித்து தூக்கிச் சென்றார்.
மின்னலை வீசியவாறு இடிமுழக்கத்தோடு காற்றுக்கு வேலை இல்லாமல் மழை பொழியத் தொடங்கியது. கண்களைத் திறந்து வாசலைப் பார்த்தார். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. இதோ! அவர் மனசிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்துவங்கி விட்டது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.