வாழையடி வாழையாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 5,706 
 

என்ன அமைச்சரே நாட்டில் அனைவரும் நலமா?

நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, நாம் அவ்வப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும், சில சட்ட திட்டங்களுக்கு எதிர்ப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

என்ன செய்வது ஒரு சில சட்டங்கள் கடினமாக இல்லாவிட்டால் அவர்களுக்குத்தானே எதிர்காலத்தில் பிரச்சினை ஆகும். அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேனெங்கிறார்கள்.

பரவாயில்லை மன்னா நீங்களா இதற்கு பொறுப்பு, நான் சொல்லும் யோசனைகளை நீங்கள் அமல் படுத்துகிறீர்கள்.

அந்த விளைச்சலில் ஒரு பங்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தீர்களே? அதுவும் அவனது தேவைக்கு மேல் விளைச்சலானால்தான் என்ற ஷரத்தையும் சேர்த்தீகளே,

ஆமாம் மன்னா, நிறைய பேர் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் விளைச்சலை மறைத்து வரியை கொடுக்காமல் மறைக்கப்பார்க்கிறார்கள்.

மனிதனில் ஒரு சிலர் எப்பொழுதும் ஏமாற்றத்தான் பார்ப்பார்கள்.

அதற்குத்தான் சட்டம் கொண்டு வருகிறோம், ஆனால் அந்த சட்டத்துக்குள் ஒரு சில அப்பாவிகளும் மாட்டிக்கொள்கிறார்கள்,இதனால் நாம் கொண்டு வரும் சட்டமே கேலிக்கூத்தாகிவிடுகிறது.

எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே?

விளைச்சலை மறைத்தவன், மற்றவன் மேல் சாட்டி விடுகிறான், மாட்டிக்கொண்டவன் நேர்மையாக நடந்தாலே இந்த விளைவுகள்தான் என்று முடிவு செய்து அடுத்த முறை அவனும் ஏமாற்றப்பார்க்கிறான்.

அல்லது அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டு புரட்சி செய்பவனாக மாறிவிடுகிறான்.

நீங்கள் புரட்சி என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது, மந்திரியாரே, சில இடங்களில் இன ரீதியாக குழுக்கள் ஏற்பட்டு ஒரு சில இடங்களில் கலகம் ஏற்படுத்துவதாக ஒற்றர்கள் சொன்னார்களே,

ஆம் மன்னா, அதுவும் என்னுடைய இனத்தை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் குழுக்களாக செயல்பட்டு கலகம் செய்வதாக செய்தி வந்துள்ளது.
கேள்விப்பட்டேன், உங்களைக்கூட ‘இனத்துரோகி’ என்று பட்டமிட்டு அழைக்கத்தொடங்கியிருக்கிறார்களாமே. அதுவும் என்னிடம் தாங்கள் இருப்பது மாற்று இனத்தவனுக்கு தொண்டு செய்துகொண்டுள்ளான், வெட்கம் கெட்டவன் என்று அழைப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

ஹ..ஹ… மன்னா நான் அவர்கள் இனத்தவனாக இருந்தாலும், ‘பொதுவானவனாக ‘ இருப்பது அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது. என்னைப்பொருத்தவரை நாடுதான் எனக்கு முக்கியம். நான் அந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை மறுக்க முயற்சிக்கவில்லை, ஆனால் பொது வாழ்க்கை என்று வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னால், நான் பொதுமக்கள் சார்பாகத்தான் எந்தவொரு முடிவையும் செயல்படுத்த முடியும்.

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் மந்திரியாரே, நான் பாண்டிய நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும், சோழநாட்டை ஆண்டு கொண்டிருப்பது உங்களைப்போன்ற நல்லவர்களால்தான். நானும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் மந்திரியாரே, என் மூதாதையர் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து ஆட்சியை பிடித்து இருக்கலாம். அவரின் சந்ததியாய் நானும் ஆண்டு கொண்டிருக்கிறேன்.நானும் ஒரு உறுதி கூறுகிறேன் எனக்கு இந்த நாடும், மக்களும்தான் முக்கியம். நான் வாழ்ந்த மூதாதையர்கள் நாட்டை சேர்ந்தவர்களாயினும், அல்லது, மற்ற நாட்டை சேர்ந்தவர்களானாளும் சரி, இந்த நாட்டின் மீது ஒரு துரும்புகூட பட அனுமதிக்கமாட்டேன்.

நல்லது மன்னா!, நாம் இத்துடன் நம்முடைய இரவுக்காவல் நடையை முடித்துக்கொண்டு வீடு திரும்புவோம்.

ஏன் மந்திரியாரே இத்துடன் நடையை முடித்துக்கொள்ள சொல்கிறீர்கள்.

என் மனது இத்துடன் முடித்துக்கொள்ளச்சொல்கிறது திரும்பலாம் வாருங்கள்.

திரும்ப எத்தனித்த மன்னர் குப்புற கீழே விழுகிறார். முதுகில ஓர் அம்பு தைத்திருக்கிறது. மன்னா, பாய்ந்தோடி வந்து அம்பை பிடுங்கி மன்னரை மல்லாக்க படுக்க வைக்க மன்னர் முதுகில் தைத்த அம்பு விஷம் தோய்க்கப்பட்டிருந்ததால் உடனடி மரணமுற்றிருந்தார்.

நிமிர்ந்து பார்க்க அவரை சுற்றி முகத்தை மூடியபடி நான்கைந்து பேர் குதிரையின் மீது அமர்ந்து வாளை கையில் வைத்தபடி இருந்தனர்.

கோழைகளே, எங்களுடன் சண்டையிட்டு அவர் இறந்திருந்தால் கூட அவர் உயிர் பெருமையுடன் பிரிந்திருக்குமே,

மந்திரியாரே வாயை மூடும்.உம்மை கொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும், நீர் எம் இனத்தை சேர்ந்தவ்ராக இருப்பதால் உம்மை உயிரோடு எங்கள் கைதியாக்கி கொண்டு செல்கிறோம்.நாளை முதல் பாண்டிய நாட்டுக்காரனுக்கு நாம் அடிமையில்லை.

அடுத்த சில நாட்கள் கழித்து!

நான் மன்னனாக முடிசூட்டி நான்கைந்து மாதங்கள் ஆகியும் நாட்டில் இன்னும் ஆங்காங்கே கலவரங்கள் நடந்து கொண்டுள்ளனவே, சொந்த நாட்டுக்காரன் ஆள்வதற்கு இவர்கள் பெருமைப்படுவதை விட்டுவிட்டு ஏன் கலவரம் செய்து கொண்டுள்ளார்கள்.

பொதுமக்கள் நாம் மன்னனைக்கொன்றதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நமக்கு பயந்துகொண்டு எதுவும் பேசாமல் இருக்கிறார்கள், ஆனால் நம் இனத்தை சேர்ந்தவர்களில், வேறொரு பிரிவை சேர்ந்தவர்களால் நீங்கள் மன்னனாதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இந்த நாட்டிலே நம் இனத்திலே அவர்கள் பிரிவை சேர்ந்தவர்கள்தான் அதிகம் வசிக்கிறார்களாம், அப்படி இருக்கும்போது அடுத்த பிரிவை சேர்ந்தவன் எப்படி மன்னனாகலாம் என்று குழுக்களாக பிரிந்து கலகங்களை தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை பார்த்து அடுத்த இனததவர்களும் நம்மை கவிழ்க்க முயற்சி செய்து கொண்டுள்ளார்களாம். சேர நாட்டு மன்னருடனும் ஒரு குழு உதவி கேட்டுள்ளதாம்.

பல நூற்றாண்டுகள் கழிந்த பின்பும் மேடையில் ஒரு பிரசங்கம்

வெள்ளையர்கள் நம்மை ஆண்டு கொண்டுள்ளார்கள், நாம் அவர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியே தீரவேண்டும், அதற்காக நாம் உயிரையே தர தயாராக இருக்க வேண்டும். அதற்காக வன்முறை மட்டும் வேண்டாம், காந்தீய வழியிலேயே முயற்சி செய்ய வேண்டும்.

மேடையில் மற்றொரு பிரசங்கம்

வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற சாத்வீக வழி உதவாது. போராட்ட குணமே வேண்டும், சுதந்திரம் வாங்கியே தீருவோம்.

அதற்கு பின் அறுபத்தெட்டு ஆண்டுகள் கழிந்த பின்பும் எல்லா கட்சி குழு உறுப்பினர்களின் கூட்டங்களிலும் பிரசங்கம்

நாம் ஆட்சிக்கு வரணும்னா எந்தெந்த இடத்துல எந்த எந்த சாதி மக்கள் அதிகமா இருக்காங்களோ, அந்த இடத்துல அந்தந்த ஆளுங்களை போடணும். அப்பத்தான் ஓட்டுக்களை அள்ள முடியும்.

ஆட்சியைப்பிடிக்க, அன்று வாள் முனையில் தந்திரம், இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் தந்திரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *