கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 1,400 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

“நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும் சொன்னால், கேட்பதற்கு எவ்வளவு திகைப்பு இருக்கும். நான் இருந்த நிலையைக் கண்டு என் தாயார் மெள்ளச் சிரித்துவிட்டு, “தம்பி! என் கதையைக் கேட்டுக் கலக்கமடைகிறாய். ஒருவேளை எனக்கு மூளை புரண்டுவிட்டதோ என்று எண்ணுகிறாயோ என்னவோ. நீ மட்டுமா, யாரிடம் சொல்லப்போனாலுந்தான் இப்படித் திகைப்பார்கள். ஆனால், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் உன்னிடம். நான் உண்மையை, முழு உண்மையைக் கூறுகிறேன். இன்னொருவர் நம்பவேண்டும், அதனால் எனக்கொரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக அல்ல, என் நெஞ்சிலே நெடுங்காலமாக இருந்துவரும் பாரத்தைப் போக்கிக் கொள்ள. ஆகவே, ஆச்சரியம் திகைப்பு எது ஏற்பட்டாலும், பொருட்படுத்தாமல் என் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்” என்று கூறிவிட்டு கதையைத் தொடர்ந்து கூறலானார்கள்.

“கோட்டையூர் மக்களுக்கெல்லாம், நான் இறந்து விட்டதாகத்தான் எண்ணம். என் அப்பா வீரராகவ முதலியாரும் அப்படியே நினைத்தார். உற்றார் உறவினரும் அது போலவே தான் எண்ணிக் கொண்டனர். மயானத்துக்குக் கோட்டையூர் மக்கள் வந்ததும், அந்த நினைப்போடுதான். ஆனால், உண்மை, எனக்கும், உன் அப்பாவுக்கும் மட்டுமே தெரியும். இறந்து போனது நானல்ல என்பது, அவருக்கும் எனக்கும் தெரியும். நாங்கள் இருவரும் கலந்து பேசியே நான் இறந்து போனதாகக் கூறிவிடவேண்டும் என்ற முடிவு செய்தோம்.

இரவு மணி பத்துக்குப் பிணம் வேகத் தொடங்கிற்று. அதே நேரத்தில், நான் வேகமாக, ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தேன். முடி தரித்த மன்னரும் முடிவிலொரு பிடி சாம்பலாகப் போவர் என்ற பழமொழிப்படி, நான் வெந்து நீறானேன் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்த சமயம், காவி உடையுடன், கையில் திருவோட்டுடன், காளி கோயில், காத்தவராயன் கோயில் ஆகிய இடங்களிலே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். கூந்தல் கிடையாது. மழுங்க மொட்டையடித்துக் கொண்டிருந்தேன். ஆமாமடா கண்ணே! உன் அன்னை இந்த அலங்கோல உருவிலே அலைந்து கொண்டிருந்தபோது உன் அப்பாவிடம் ஊரார், “என்ன செய்யலாம் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். புண்யவதி உமது மனைவி, பூவோடும் மஞ்சளோடும் போய்ச் சேர்ந்துவிட்டாள் பாவம்” என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். நான் இறந்துவிடவில்லை; ஓடிவிட்டேன்; அவருக்குத் தெரிந்தே ஓடிவிட்டேன், என்பது உன் அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். எப்படித்தான் அவர் தன்னிடம் தேறுதல் மொழி கூற வந்தவர்களோடு பேசினாரோ, எனக்குத் தெரியாது. கோட்டையூர் மக்கள், நான் இறந்துவிட்டேன் என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால், பாவம், இறந்தது உண்மையில் ஒரு பிச்சைக்காரி! இறக்கக்கூடவில்லை, கொல்லப்பட்டாள். ஆமாம், கண்ணு! சாந்தசீலர், சத்தியவந்தர் என்று புகழப்படும் உன் தகப்பனாரால் கொல்லப்பட்டாள். என்னைக் கொல்ல, அவர் ஒரு ரகசிய ஏற்பாடு செய்திருந்தார். அதிலே அவள் சிக்கிக் கொண்டாள்; பாபம், செத்தாள். கேள், உன் தகப்பனாரின் கெடுமதி சென்ற விதத்தை. கொஞ்சம் பழைய கதை கூறவேண்டும் இதற்கு.

கோட்டையூர் வீரராகவ முதலியார், அதாவது உன் தாத்தாவுக்கு இரண்டு பெண்கள். ஆண் வாரிசு கிடையாது. நான் மூத்தவள். இரண்டாவது பெண் தான் உன் சிற்றன்னை தங்கம்.

என்னை, உன் அப்பாவுக்கு ஏற்பாடு செய்தபோது வீரராகவ முதலியாருடைய மிட்டா சம்பந்தமாகப் பெரிய கேஸ் நடந்து தோற்றுவிட்டது. கொஞ்சம் அவர் நொடிந்துப் போயிருந்தார். ஆகவே, என் கலியாணத்தின்போது, அதிகமான சீர் செய்யவில்லை. ஆடம்பரம் அவ்வளவும் உன் அப்பாவின் செலவிலேயே நடந்தது. விசாரத்தில் மூழ்கிய வீரராகவ முதலியார், கேஸ் தன் பக்கம் ஜெயித்திருந்தால், எனக்கு மாங்காய் மாலையும், மரகத மணியும், கல் இழைத்த ஒட்டியாணமும், காசு மாலையும் பூட்டி இருக்கலாம்; கச்சேரியும் காலட்சேபமும் வைத்திருக்கலாம் என்று கூறினார். ஒன்றும் செய்ய முடியாத நிலை. பெரிய குடும்பம். நல்ல பரம்பரை . ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட இடத்திலே சம்பந்தம் கிடைத்ததே ஒரு பெருமை என்று உன் அப்பா இருந்துவிட்டார். அவருடைய குடும்பம் பரம்பரைப் பணக்காரக் குடும்பமல்ல. உன் அப்பாவின் திறமையால் சொத்துச் சேர்ந்தது.

என்னைக் கலியாணம் செய்துகொண்டதால், சந்தோஷமும் பெருமையும் அடைந்தார் உன் அப்பா. என்னை அன்பாகவே நடத்தினார். வீட்டை மிக அக்கறையாகக் கவனித்து வந்தார். பிறந்த இடத்திலே இருந்ததை விட அதிக சந்தோஷமாகவே புகுந்த இடத்திலே வாழ்க்கை இருந்தது. சொத்துப் போனாலும் கவலையில்லை எனக்குத் தங்கமான மருமகன் கிடைத்தான்; என் மகள் ரங்கம் அங்கு ராஜாத்திபோல் இருக்கிறாள். ஒரு குறையும் இல்லை. அவள் நிம்மதியாக வாழ்வதைக் கண்குளிரக் காண்கிறேன்; அதுவே போதும் எனக்கு என்று, என் அப்பா சொல்லுவார். நான் சில வருஷங்கள் மிகவும் சந்தோஷமாகக் காலங் கழித்தேன். கனவிலும் நான் எண்ணியதில்லை, என் கதி பிறகு இப்படி எல்லாம் மாறும் என்று. சீமாட்டி போலிருந்து வந்த நான் கேவலம் நாடோ டியாகி, நாதியற்றவளாகி, குடிகாரனுக்குக் கூத்தியாகிப் பாழாவேன் என்று எண்ணியதில்லையடா அப்பா. எப்படி நான் எண்ண முடியும்? இப்போது அந்தக் காட்சி; நன்றாகக் கவனமிருக்கிறது. உன் அப்பா நாலைந்து வீடுகளுக்கு அப்பால் நடந்து வரும்போதே, எனக்கு ஜாடை தெரிந்து விடும்! அவருடைய கால் செருப்பு, ஒருவிதமான ‘கிறீச்’ என்ற சத்தம் கொடுக்கும். அந்தச் சத்தம் எனக்குச் சங்கீதம். அதைக் கேட்டதும் முகம் மலரும். துள்ளி எழுந்திருப்பேன். கண்ணாடி முன் நிற்பேன். குங்குமத்தைச் சரிபடுத்திக் கொள்வேன். வாசற்படியில் கால் வைக்கும்போதே அவர் வாஞ்சையுடன் “ரங்கம்!” என்று அழைப்பார். ஓடிப்போய், கால் கழுவச் செம்பில் நீர் தருவேன். அவர் கழுவி முடிப்பதற்குள் கை துடைக்கத் துணி தருவேன். துடைத்துக் கொண்டிருக்கும்போதே தலைவாழை இலையில் தண்ணீர் தெளிப்பேன். மனை போடுவேன். அவர் நெற்றியில் விபூதி தடவிக்கொண்டு, வந்து உட்காருவார் மனையில். ஒரு மணி நேரமாகும் சாப்பிட்டு முடிக்க, இடையிடையே அவ்வளவு வேடிக்கையாகப் பேசுவார்! மகனே! அந்த இன்ப வாழ்விலே ஈடுபட்டிருந்தபோது, இந்தக் கதி எனக்கு நேரிடும் என்று எப்படியடா, எண்ணம் பிறக்க முடியும்? குடும்பம் என்று இருந்தால், தர்மலிங்க முதலியார் வீட்டுக் குடும்பம் போலிருக்க வேண்டும் என்று கோட்டையூரில் பேசிக் கொள்வார்கள். எனக்கு மாமி, நாத்தி, மைத்துனர் யாரும் கிடையாது. நானும் அவரும் தான். வேலைக்கு ஆள் உண்டு. ஆள் அடிக்கடி மாறுவதுண்டு.

தரகு மண்டி தர்மலிங்க முதலியார் என்றால் யாருக்கும் ஒரு பற்றுதல், மரியாதை, நம்பிக்கை. இதற்கு முக்கிய காரணம் அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்பது தான். நான்கூட மற்றவர்களைப் போலவே, உன் அப்பாவுக்குப் பணத்தாசை கிடையாது என்றே நினைத்தேன். அவ்வளவு திறமையாக உன் அப்பா நடித்து வந்தார். உள்ளமோ ஒரே ஆசைக்காடு. அது பிறகுதான் எனக்கே தெரியவந்தது. ஊராருக்கு இப்போதாவது தெரியுமோ என்னவோ.

நிம்மதியாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோது என் அப்பா, என் தங்கை தங்கத்துடன், தன் வீட்டில் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். கேஸ் தோற்ற பிறகு அவருக்கு ஊரிலே முன்பு இருந்ததைவிட மதிப்பு அதிகம். அது ஒரு விசித்திரந்தான். கேஸ் யார் பக்கம் ஜெயித்ததோ, அவர்கள் கடனாளியாகக் கஷ்டப்பட்டார்கள். அப்பாவுக்குச் சொந்தமான மிட்டா அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததே தவிர, கேஸிலே ஜெயிப்பதற்காக அவர்கள் பட்ட அலுப்புத் தீரவில்லை. அப்பாவோ தன் கவலை வெளியே தெரிய ஒட்டாதபடி நடந்துகொண்டார். எப்போதும் போலச் சரிகைத் துப்பட்டாதான், வெள்ளிப் பூண் போட்ட தடிதான், ஊர் பெரியதனக்காரராகவே வாழ்ந்து வந்தார். இரண்டொரு ஏக்கர் நிலம் மிச்சமிருந்தது. அது மண் போட்டால் பொன் விளையும் பூமி என்பார்கள். அவ்வளவு நல்ல நிலம். அதிலே கிடைக்கும் வருமானமே ஜீவன ஆதாரம். இந்தக் கஷ்டத்துக்கிடையே தங்கம் கொடிபோல வளர்ந்து வந்தாள். அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாள், எனக்கு அவளிடம் அபாரமான ஆசை. அவளும் அப்படியே இருப்பாளென்று பைத்தியக்காரி நான் நினைத்தேன். அது தவறு என்பதைக் கண்டுபிடிக்க ரொம்ப நாளாயிற்று. வீட்டுக்கு வந்ததும், ‘அக்கா’ என்று ஆசை வழியக் கூப்பிடுவாள், ‘வாடி கண்ணே!’ என்று நான் அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போவேன். என் கூடவே இருந்து சமையல் வேலையைக் கவனிப்பாள். பிறகு அவளுக்கு நான் தலை சீவி அலங்காரம் செய்து, என் நகைகளை அவளுக்குப் போட்டு அழகுபடுத்தி, அவர் வருகிறபோது அவளிடம் காபியோ, வெற்றிலைத் தட்டோ , எதையாவது கொடுத்து அனுப்புவேன். அவர் அவளைப் பார்த்ததும், “பலே தங்கமா! எவ்வளவு அழகடி ரங்கம் உன் தங்கை” என்று கூறுவார். “அக்கா! அத்தானைப் பாரேன், கேலி செய்கிறார்” என்று தங்கம் சொல்லுவாள். “என்னாங்க! நம்ப தங்கத்துக்கு இந்த நகை எல்லாம் போட்டா, எவ்வளவு அழகாக இருக்கு, பார்த்தீங்களா?” – நான் கேட்பேன். “அதுக்கென்ன சந்தேகம்! இப்ப என்ன தங்கத்துக்கு ஒரு தனவந்தன் புருஷனாகக் கிடைத்துவிட்டா, வைரமாக இழைத்துவிடுகிறான். தங்கம் அதிர்ஷ்டக்காரிதான், பாரேன்” என்று அவர் சொல்லுவார். தங்கம் வீட்டுக்குப் போகும்போது, நகைகளைக் கழற்றி என்னிடம் கொடுப்பாள். கொடுக்கும்போது சொல்லுவாள்; “அக்கா! அத்தான் சொன்னாரே எனக்கு அதிர்ஷ்டம் என்று; அந்த அதிர்ஷ்டம், எனக்கு இப்படி என்றைக்காவது ஒரு நாளைக்கு அட்டிகையும் செயினுமாகக் கொடுத்து உடனே மறுபடியும் திருப்பி வாங்கிக் கொள்ளுது பார்த்தாயா?” என்பாள். எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கும் அதைக் கேட்க. “ஏண்டி கண்ணே! போட்டுக் கொண்டுதான் போயேன் வீட்டுக்கு” என்று நான் சொல்வேன். “போக்கா போ” என்று கூறிவிட்டுத் தங்கம் போய்விடுவாள்.

நகைகளைப் பூட்டி நான் அவளுடைய அழகைக் கண்டு ஆனந்தப்பட்டு வந்த சமயங்களிலெல்லாம், அவள் அசூயை கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. சிறு வயதிலேயே அவள் மனதில் பொறாமை அவ்வளவு குடியேறி விட்டது. வீட்டிலே தனக்குத் தரித்திரமும், எனக்கு என் புருஷன் வீட்டிலே தனபாக்கியமும் இருந்தது அவளுக்குப் பொறுக்கவில்லை. நாளாகவாக அவள் மெள்ள மெள்ளக் கேலி பேசும் பாவனையிலே தன் பொறாமையைக் கொட்டத் தொடங்கினாள். இந்தச் சமயத்திலேதான் அவள் பருவமடைந்தாள். என் கண்களுக்கு ஒரு பெரிய விருந்தாக விளங்கினாள். அவளுக்கு நீராட்டின அன்று, நான் அடைந்த பெருமையும் பூரிப்பும் இவ்வளவு அவ்வளவு என்று கூறமுடியாது. என் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், அவளுக்குப் பூட்டி அழகு படுத்த வேண்டுமென்று நான் ஆவலாகச் சென்றேன். அவளோ, ஒரேயடியாக அவைகளைப் போட மறுத்து விட்டாள். அப்பா, என் புருஷர், யார் சொல்லியும் கேட்கவில்லை.

“என்னடி தங்கம்! இன்று நல்ல நாள். இன்று சந்தோஷமாக இருக்க வேண்டும்.
நமக்கு இருக்கும் நகைகளைப் போட்டுக்கொண்டு மகிழ்வாக இருக்கவேண்டிய தினம். நீ ஏன் இன்று இப்படி முரட்டுப் பிடிவாதம் பேசுகிறாய்” என்று நான் கொஞ்சம் கோபத்தோடு கேட்டேன். அந்தப் பொறாமைக்காரி கொஞ்சம் கூடத் தயங்காமல் சொன்னாள், “அக்கா வேண்டாமென்றால் விட்டுவிடு. ஏன் என் உயிரை வாங்குகிறாய். எனக்கு நகைநட்டு வேண்டாம். இரவல் நகைகளைப் போட்டு மினுக்கிக் கொள்ள வேண்டுமா என்ன? சந்தோஷம் சந்தோஷம் என்று சொல்லுகிறாயே, யாருக்குச் சந்தோஷம், உனக்கா, எனக்கா? உன் நகைகளை எனக்குப் போட்டு, ஊரார் அதைப் பார்த்து தங்கம் போட்டுக் கொண்டிருக்கும் நகைகளெல்லாம், ரங்கத்துடையது என்று கூறும்போது கேட்டு நீ சந்தோஷம் அடைகிறாய். அதற்குத்தானே இவ்வளவு தூரம் பேசுகிறாய். இதிலே எனக்கு எப்படிச் சந்தோஷம் இருக்கும்?” என்றாள். நான், கண்களில் நீர் ததும்ப நின்றேன். வயது பதினைந்துதான் பூர்த்தியாயிற்று தங்கத்துக்கு. அவள் மனதிலே இவ்வளவு பொறாமை நெளிவது கண்டு நான் திடுக்கிட்டுப் போனேன். நான் மேற்கொண்டு ஏதும் பேசவே இல்லை. ஒரு வார காலம், என் மனம் படாதபாடு பட்டது. பிறகு நானாகச் சமாதானப் படுத்திக் கொண்டேன். தங்கம் சிறு பெண், நகைநட்டு இல்லையே என்ற மனக் கஷ்டத்தால், ஏதோ உளறினாள். கிடக்கட்டும்; அவள் சுபாவம் அப்படி இருக்கிறது என்று. இருந்தாலும் தங்கம் என்னிடம் பொறாமை கொண்டிருக்கிறாள் என்பது விளக்கமாகத் தெரிந்துவிட்டது. வேதனை உண்டாயிற்று. உன் அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவர், இது சர்வ சாதாரணம் என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டார். எனக்கு இது அவ்வளவு அலட்சியமாகக் கருதக்கூடிய விஷயமாகத் தோன்றவில்லை. கவலையே இல்லாமலிருந்து வந்த என் மனதிலே ஒரு கவலை பிறந்துவிட்டது.

என் மனதிலேயும் தங்கத்திடம் அசூயை தோன்றிவிட்டது. அதற்கு முன்பெல்லாம், உன் அப்பா, என் வீட்டுப் பக்கம் போய் வராமல் ஒரு நாள் இருந்துவிட்டால், நான் அவரிடம் கோபிப்பது வாடிக்கை. “அது என்னங்க, அப்பாவும் தங்கமும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவரக் கூடாதா? நாலைந்து தெருவுக்கு அப்புறம் இருக்கிறார்கள். பத்து மைலா, எட்டு மைலா? வீட்டுக்கு வருகிறபோது ஒரு நடை அப்படியே போய் வரக்கூடாதா?” என்று கேட்பேன். அவர், கடையில் வேலை, கணக்கப் பிள்ளை வீட்டில் காரியம் என்று ஏதாவது சாக்குச் சொல்வார். அப்படிப்பட்ட நான், அவராக, ‘இன்று உன் அப்பாவைப் பார்த்தேன்’ என்று கூறும்போது ‘கடைவீதியிலா?’ என்று கேட்பேன். ‘இல்லை, வீட்டுக்குப் போயிருந்தேன்’ என்பார். உடனே எனக்கு முகம் ஒரு விதமாக மாறிவிடும். முதலிலே எனக்கு அந்தச் சுபாவம் பிடிக்கத்தான் இல்லை. ஆனால், அது வளருவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. ‘ரங்கம்! வெள்ளரிக்காய் என்றால் தங்கத்துக்கு இஷ்டமல்லவா? கிராமத்திலிருந்து நாளைக்கு ஒரு கூடை கொண்டுவரச் சொல்லி இருக்கிறேன். கொண்டு போய்க் கொடு தங்கத்துக்கு’ என்பார் உன் அப்பா. எனக்குத் திடீரென்று கோபம் வரும். காரணமின்றி நான் கோபித்துக் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக் கொள்வார். ‘தங்கத்துக்கு எது பிடிக்கும், என்ன தேவை என்பதிலே இவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? எனக்கு மாம்பழம் என்றால் உயிர், ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறேன், அது ஒரு அரை டஜன் வாங்கி வரக் காணோம். அவளுக்கு வெள்ளரி பிடிக்குமாம், ஒரு கூடை வருகிறதாம். இதை நான் சுமந்துகொண்டு போய், அவளுக்குத் தருவதாம்’ என்று எண்ணுவேன். கோபம் பொங்கும் மகனே! இந்தப் பொறாமை இருக்கிறதே, அதைப் போல வேகமாக பரவும் நெருப்பு வேறே கிடையாது. நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்கிறது. என் உள்ளத்தை அந்தத் தீ வேகவைத்தது. ‘வெள்ளரி வேண்டுமென்று தங்கம் கேட்டாளா?’ என்று நான் கேட்டேன். புருஷனை மனைவி கேட்பதைப் போல அல்ல, குற்றவாளியை அதிகாரி கேட்பது போல. அவர் சாதாரணமாகவே, ‘அவள் கேட்கவில்லை. நீதானே சொல்லுவாய், தங்கத்துக்கு வெள்ளரி என்றால் பிரியம் என்று’ என்று சொன்னார். என் கோபம் குறைவதற்குப் பதிலாக வளர்ந்தது. ‘அவள் ஏதோ வாய்திறந்து வெள்ளரி வேண்டுமென்று கேட்டாள்; ஆசைப்பட்டுக் கேட்ட பிறகு எப்படி வாங்கிக் கொடுக்காமல் இருப்பது என்று எண்ணி இவர் வெள்ளரி வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. அவள் கேட்கவேயில்லையாம். இவராக அவளுக்கு எந்த வஸ்துமேல் பிரியம் என்று யோசித்து நான் எப்போதோ சொன்னதைக் கவனம் வைத்திருந்து, வெள்ளரி தருவிக்கிறாரே, எவ்வளவு அக்கறை அவள் விஷயத்திலே? ஏன்?” என்று யோசிக்கிறேன். போக்கிரித்தனமும் கலந்து ‘தங்கத்துக்கு எது எது இஷ்டம் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியிலே மும்முரமாக ஈடுபட்டுவிட்டீர்களோ?’ என்று கேலியாகக் கேட்டேன். ‘அத்தான் என்றிருந்தால் அந்த அக்கறை இராதோ?’ என்று அவர் பதில் கூறினார். அது என்னைச் சவுக்கால் அடித்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரம் மரம்போல நின்றேன். பிறகு கேட்டேன். “ஆமாம்! நேற்றுப் போயிருந்தீர்களா வீட்டுக்கு” என்று. “இல்லையே, நாலு நாளாகிவிட்டது நான் போய்” என்று அவர் கூறினார். என் ஆத்திரம் கட்டுக்கு அடங்கவில்லை. “ஐயையோ! ஏன் பாவம் இவ்வளவு கஷ்டம்! இப்போதே ஓடிப்போய் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன். தலைகிலை வெடித்துவிடப் போகிறது” என்று சொல்லிவிட்டுச் சரேலெனச் சமையற்கட்டுக்குப் போனேன். அவர் கூடத்திலே சிரித்துக் கொண்டிருந்த சத்தம் என் காதிலே விழுந்தது. நான் வற்றல் வறுப்பதற்காக, வாணலியில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்தேன். அடுப்பெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தேன். சடசடவெனச் சத்தம் கேட்டது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் அழுது கொண்டிருந்தது. கொதிக்கும் எண்ணெயில் என் கண்ணீர் வீழ்ந்து, அந்தச் சத்தம் உண்டாயிற்று. அதுவரையில் நான் அழுததில்லை, புருஷன் வீட்டிலே! அன்று அழ ஆரம்பித்தேன், அந்த அழுகை இன்னும் ஓயவில்லை; இனியும் ஓயாது.

அத்தியாயம்-5

“தங்கம் கொண்டிருந்த பொறாமை ஒருபுறம் என்னைத் தாக்கிற்று என்றால், உன் அப்பா, வரவர அவளிடம் அக்கறை காட்ட ஆரம்பித்தது வேறு என்னை வாட்டலாயிற்று. அவர் ஒருவேளை, களங்கமற்ற உள்ளத்தோடுதான் தங்கத்திடம் அக்கறை செலுத்தினாரோ என்னவோ என்று நான் சில நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மை அதுவல்ல; கேவலம், சுயநலத்தாலேயே அவர், அந்த அக்கறை காட்ட ஆரம்பித்தார் என்பது எனக்குப் பிறகு தெரியவந்தது. அது தெரிந்ததும், என் மன வேதனை முன்பு இருந்ததைவிடப் பன்மடங்கு அதிகமாகிவிட்டது.”

ஒருநாள் நான் அவரிடம், “இதோ பாருங்கள்! இப்படி அடிக்கடி தங்கத்தைப் போய்ப் பார்ப்பதும், அடிக்கடி ஏதாவது சாமான்களை அவளுக்கு வாங்கி அனுப்புவதுமாக இருக்க வேண்டாம். ஊரிலே ஒருவிதமாக நினைக்கிறார்கள்” என்று சொன்னேன்.

“என்ன சொல்லப்போகிறார்கள். தங்கத்தை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகப் பேசுவார்கள். வேறே என்ன இருக்கிறது வம்பளக்க. அப்படியே நான் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டால்தான் என்ன தவறு? தகாதா?” என்று கேட்டார். நான் என்னவென்று பதில் கூறுவேன்! என் கண்ணீரை அவர் அன்றிரவு காணவில்லை, தலையணை தாங்கிக் கொண்டது.

தங்கம், என்னைவிட அழகுதான், இளமை வேறு அவளுக்கு மெருகிட்டு இருந்தது. நான் கொஞ்சம் சங்கோஜக்காரி. தங்கம் அப்படியல்ல. பேச்சிலே பாதி சிரிப்பாகவே இருக்கும். சிறு பெண்ணாக இருக்கும்போதே நாங்கள் அவளை அதற்காகக் கேலி செய்வதுண்டு. ஆனால், எனக்கு அப்போதெல்லாம் அவளுடைய சிரிப்பு கோபமூட்டியதில்லை. பெண்கள் அப்படித்தான் களங்கமற்றுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். சுடுமூஞ்சியாக இருக்கக்கூடாது என்று சொல்வது வழக்கம். அந்தச் சிரிப்பு, சிலந்திக்கூடாகுமென்று நான் கண்டேனா! தங்கம், இரண்டு நிமிஷம் சேர்ந்தாற்போல ஒரே இடத்திலே பார்வையைச் செலுத்த மாட்டாள். ஏதோ சாமானைத் தவறி விட்டுவிட்டுத் தேடுபவள் போல் அவளுடைய பார்வை அடிக்கொரு தடவை வெவ்வேறு பக்கம் பாயும்; கண் மட்டுந்தான்! நாங்கள் அதற்காக “தங்கம் உன் கண்கள் சுழல் விளக்கடி!” என்று கேலி செய்வது வழக்கம். அந்தச் சுழல் விளக்கு ஒரு பெரிய அரண்மனையிலே ஜோதி தரவேண்டும் என்பதுதான் என் ஆசை. தங்கத்தின் ரூபலாவண்யத்துக்கு ஏற்றதாக ஒரு இடம் அமைய வேண்டும். அவள் ஆடை அணிகளுடன் அகமகிழ்ச்சியோடு வாழவேண்டும், அதைக் கண்டு களிப்பும் பெருமையும் அடைய வேண்டும் என்று தான் நான் நோன்பிருந்து வந்தேன். நடந்தது என்ன? அவள் என் சந்தோஷத்தைச் சூறையாடலானாள். என் புருஷருக்கு மனைவியாக வழி செய்து கொண்டிருந்தாள். எப்படி இருக்கும் எனக்கு. அவளைவிட நான் அழகில் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால், அன்பை அவருக்கு அபிஷேகித்திருக்கிறேன்; மனம் கோணாமல் நடந்திருக்கிறேன்; அவருடைய அன்பினால் ஆனந்தமடைந்திருக்கிறேன். என் வாழ்வைக் கெடுத்து, அவள் இன்பம் பெற விரும்புவதா! இதற்கா என் தங்கையாகப் பிறந்தாள்! மகனே! இப்படி எல்லாம் எண்ணி எண்ணி நான் ஏக்கமடைந்தேன். இடி இதோடு நிற்கவில்லை. சில நாட்களிலே, அவர் தங்கத்திடம் காட்டிய அன்பும் அவளுக்காக அல்ல, கேவலம் பணத்துக்காக என்பது தெரிந்து நான் திடுக்கிட்டுப் போனேன். வழக்கப்படி, நான் அவரிடம் தங்கத்தின் தளுக்கு, மினுக்கு, அதனால் வரக்கூடிய கேடு ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “ரங்கம்! விஷயம் தெரியாமல் உளறிக்கொண்டிராதே. சீமையிலே, உன் அப்பாவின் கேஸ் அவர் பக்கம் தீர்ப்பாகிவிட்டது. மிட்டா திரும்பக் கிடைக்கும். தங்கம் அதிலே பாதி பாகத்துக்குச் சொந்தக்காரி. அவளை இனி நீ முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்ததுபோல நினைக்காதே” என்றார். என் அப்பாவுக்கு கேஸ் ஜெயித்தால் இழந்த இன்பம் மீண்டும் வருவதுபற்றி, எனக்கு மகிழ்ச்சி பிறந்தது. ஆனால் அதே சமயம் தங்கத்துக்குப் பாதி மிட்டா வர இருக்கிறது என்று தெரிந்துதான் உன் அப்பா, அவளிடம் அக்கறை காட்டி வருகிறார் என்பது தெரியவே என் மனம் பதைத்தது. என் பாகமாகக் கிடைக்க இருக்கும் பாதி மிட்டா உன் அப்பாவுக்குத் திருப்தி இல்லை; அவளுக்குக் கிடைக்க இருக்கும் பாகத்தின் மீதும் அவருக்கு ஆவல் பிறந்துவிட்டது. பேராசைதானே! ஒரு பெண்ணின் கண்ணீரைச் சட்டை செய்யாத அளவு மனதைக் கல்லாக்கிக் கொண்டார், உன் அப்பா. ஊரிலே அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்று புகழ்.

“தங்கத்தின் சொத்து அவள் கணவனுக்குத்தான் சேரும். எவன் பல் விளக்கிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை” என்று ஆரம்பித்தார்; பிறகு தங்கத்தின் திருமண விஷயமாக யார் வந்தாலும் ஏதாவதொரு சாக்கு, தடை கூறித் தடுத்து வரத்தொடங்கினார். அவருடைய திட்டம் எனக்கு நன்றாக விளங்கி விட்டது. விளங்கவே என் விசாரம் அதிகரித்து, உடல் துரும்பாக இளைக்க ஆரம்பித்தது. அது கண்டு உன் அப்பா சந்தோஷப்பட்டார். ஆமாம் கண்ணே! நான் இளைக்க ஆரம்பித்தது கண்டு அவருக்கு உள்ளுக்குள் சந்தோஷந்தான். ஏன் தெரியுமா? இரண்டாவது தாரம் தேட வழி கிடைத்தது! இப்படியும் ஒரு மனப்பான்மை இருக்குமா என்று கேட்பாய். நான் இல்லாததையோ நடவாததையோ சொல்லவில்லை; உன் அப்பாவுக்கு அதே மனநிலைதான் இருந்தது. என் உடல் உருகுவது கண்டு தானும் உருகுபவர் போலக் காட்டிக் கொண்டார். ஆனால், அனுதாபத்துடன் அல்ல; அலுப்புடன் சலிப்புடன் உற்றார் உறவினரிடமெல்லாம் கூறுவார். “என்னவோ போங்கள்! கடன்பட்டும் பட்டினி, கல்யாணம் செய்தும் சந்நியாசி என்பார்களே, அது போல இருக்கிறது என் நிலைமை. கொஞ்சமும் நிம்மதி கிடையாது. வீட்டிற்குள் நுழைந்தாலே வேதனைதான். ரங்கம், ஏனோ, துரும்பு துரும்பாக இளைக்கிறாள். அவளைப் பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது” என்று பேசுவார். அவர் சொல்லிச் சொல்லி, ஏறக்குறைய ஊரிலே நமது குடும்பத்தைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் ஒரு நோயாளி என்று தெரிந்துவிட்டது. ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், “ரங்கம்! ஏனம்மா இப்படி இளைத்துக் கொண்டே போகிறாய்? என்னதான் உனக்கு உடம்புக்கு? அவர் பாபம் ரொம்பக் கவலைப்படுகிறார்” என்று கூறுவார்கள். எத்தனை தடவைதான் இந்த ஏமாளிகளின் பேச்சைக் கேட்டுச் சகிப்பது. ஒரு தடவை இல்லாவிட்டால் இன்னோர் தடவை கோபம் வரும். அந்தக் கோபத்திலே, “சரி! எனக்குத்தான் நோய் பிடித்துக் கொண்டது. எலும்புந் தோலுமாகிவிட்டேன். ஏதோ என் வினை. அதற்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும். வேறு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படட்டுமே. நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன். ஒருவேளை சோறு போட்டால் போதும். அதுவும் இல்லை என்றாலும் சரி” என்று கூறுவேன்; கூறிவிட்டு அழுவேன். அப்பா! என் வேதனையில் முளைத்த இந்தப் பேச்சு, என்ன விபரீதத்தில் முடிந்தது தெரியுமோ? உடல் இளைத்ததற்கு, வைத்தியர் வரவழைக்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பூஜாரி வரவழைக்கப்பட்டான்! எனக்கு நோயல்ல, பேய் பிடித்துக் கொண்டது என்று கூறிவிட்டார் உன் தந்தை. அந்தப் பேயின் சேஷ்டையால் தான் நான் இளைத்துவிட்டேனாம். முன் கோபம், கெட்ட சுபாவம் வந்துவிட்டனவாம்.

“என் எழுத்து இப்படியாகிவிட்டது. என்ன செய்வது?” என்று கண்டவர்களிடம் கூறத் தொடங்கினார். ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். தலை முழுக்கு, கயிறு மந்திரித்துக் கட்டல், காளிக்குப் பூஜை, காத்தவராயன் கோவிலில் நோன்பு இருத்தல், இப்படிப் பலப்பல முறைகள். சதா சர்வ காலமும் உடுக்கையும் பம்பையும்; நம் வீட்டிலே பூஜாரிக் கூட்டம் வந்துபோனபடி இருக்கும். ஒரு மாதத்துக்குள், என்னைக் காண குழந்தைகள் பயப்பட்டன. இளம்பெண்கள், பொழுது போனால் என் முகத்தில் விழிக்க மாட்டார்கள். “கூப்பிடட்டுமா ரங்கத்தை” என்று கூறிக் குழந்தைகளுக்குப் பெண்கள் சோறு ஊட்ட ஆரம்பித்தார்கள். அவரே கூட, என்னிடம் ஏதோ கொஞ்சம் பயந்தவர் போல நடந்து கொள்ளத் தொடங்கினார். இரவெல்லாம் வீட்டிலே, பெரிய விளக்கு இருக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்துவிட்டு, எனக்குத் துணையாக ஒரு வேலைக்காரியை இருக்கச் செய்துவிட்டு, அவர் தெருத் திண்ணையில் படுக்கலானார். என்னால் இந்தக் கஷ்டத்தைச் சகிக்க முடியவில்லை. ஆகவே, நான் ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட முறையில், “வேண்டாம்! இப்படி என்னைத் துரோகம் செய்யவேண்டாம்!” என்று அலறினேன். அந்த அலறல், ஆத்திரம், அழுகுரல் யாவும் அவருடைய சேஷ்டையின் விளைவு என்பதை யார் உணர்ந்தார்கள்? என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் சேஷ்டை என்று கூறிவிட்டார்கள். அப்பா! அவர்களெல்லாம் பயந்தது கூட வேடிக்கையில்லை. எனக்கேகூட, கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது, அச்சம் உண்டாயிற்று. என் கண்களின் ஒளி எங்கேயோ போய்விட்டது! முகம் வெளுத்துக் கிடந்தது. பேய் அறைந்தது என்பதற்கு என்னென்ன குறிகள் உண்டு என்று சொல்வார்களோ அவைகள் இருக்கக் கண்டேன். அவ்வளவும் என் வாழ்விலே அவர் கலக்கிய வேதனையால் உண்டானவை. ஊராரோ, அதுவெல்லாம் பேயின் சேஷ்டை என்றனர். ஒரு அண்டப் புளுகன், என்னைப் பிடித்திருப்பது ஒரு பேயல்ல, மூன்று என்று கணக்கிட்டுக் கூறினான்.

“முதலியாரே! அம்மாவுக்கு இராத்திரியிலே தூக்கம் சரியாகக் கிடையாதே.”

“இல்லையே, ரங்கம் சரியாகத் தூங்கி எத்தனையோ மாதங்களாகி விட்டன.”

“வராது! தூக்கம் வராது. அம்மா, அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவார்கள். காரணம் இல்லாமல் சிரிப்பார்கள். சரிதானுங்களா நான் சொல்வது?”

“ஆமாம்! அப்படித்தான் செய்கிறாள்.”

“முன்கோபம் பிரமாதமாக இருக்கும்.”

“அதை ஏன் கேட்கிறாய் போ. முன்பு எவ்வளவுக்கெவ்வளவு சாந்தமாக இருந்தாளோ அவ்வளவுக்கவ்வளவு கோபக்காரியாகி விட்டாள்.”

“ஆமாம்! எல்லாம் அந்தப் பேய்களின் வேலை, முதலியாரே! மூன்று பேய் இருக்கு அம்மா மேலே! வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, மாடியிலே நின்று கொண்டு இருந்தார்கள்; அந்த நேரத்தில் பிடித்துக் கொண்டது ஒரு பேய். அது பிறகு தனக்குச் சினேகிதமான வேறு இரண்டு பேய்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.”

பூஜாரிக்கும் உன் அப்பாவுக்கும் இப்படிப் பேச்சு நடக்கும்போது, என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்.

“அட அடிமுட்டாளே! மூன்று பேயும் இல்லை, முப்பது பேயும் இல்லையடா; அதோ உட்கார்ந்திருக்கிறதே அந்தப் பேய்தாண்டா என்னைப் பிடித்துக்கொண்டது” என்று கூறி உன் அப்பாவைக் காட்டினேன். கோபத்துடன், அந்தப் பாதகன், ஒரு பிடி விபூதி இருக்கும், அதை எடுத்து, “ஆஹா! ஆங்காரி! ஓங்காரி!” என்று ஏதோ அர்த்தமற்றபடி கூவிக்கொண்டு என் கண்களிலே தூவினான். என் கதி இப்படியும் ஆயிற்றே என்று நான் கோவெனக் கதறினேன். அந்த விடாக்கண்டன், தெருமுழுவதும் என்ன என்ன என்று வந்து கேட்கும்படியான கூச்சலிட்டு, உடுக்கையைத் தட்டினான். எதிர் வீட்டார், பக்கத்து விட்டார், உள்ளே வந்தனர். நான் வெட்கமும் துக்கமும் கொண்டவளாய், பேசாமல் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டேன். “ரங்கம் மூர்ச்சையாகி விட்டாள். பேய் மிகப் பொல்லாதது” என்று கூவினர். கண்களைத் திறந்தேன்; கோபத்துடன் எழுந்து உள்ளே வந்து இருந்தவர்களை வாயில் வந்தபடி ஏசி, அங்கே கிடந்த சாமான்களை எடுத்து வீசி விரட்டி அடித்தேன். ஒரு புருஷனின் பேராசையினால் ஒரு பெண் தன் வாழ்வின் நிம்மதியை இழந்து வேதனைப்படுகிறாள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத முட்டாள்கள், தங்கள் முட்டாள்தனத்தை மறைக்க, எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறினால் எனக்குக் கோபம் வராதா! அந்தக் கோபத்தினால், வாயில் வந்தபடி பேசி, விரட்டினேன் அப்பா! அதனால் என்ன நேரிட்டது தெரியுமா? எனக்குப் பேய் பிடித்திருக்கிறது நிச்சயப்படுத்தப்பட்டது. அதிலும், என்னைப் பிடித்திருக்கும் பேய், போக்கிரித்தனமானது, ஆபத்து தரக்கூடியது, சிக்கியவர்களின் உயிரைப் போக்கிவிடக்கூடியது என்று தீர்மானித்தார்கள். பூஜாரியின் யோசனைப்படி, என் கை கால்களைப் பலமான கயிற்றினால் கட்டிப்போட்டு விட்டார்கள். கண்ணா! என் கதியைக் கேள்! கவலையால் தாக்கப்பட்டேன். உன் அப்பாவின் சதி எண்ணத்தைத் தெரிந்து பதை பதைத்தேன். இதைப் பேயின் சேஷ்டை என்று கூறி, என்னை என் வீட்டிலேயே கைதியாக்கினார்கள். எந்த வீட்டிலே நான் இன்பமாக உலவி வந்தேனோ, அதே வீட்டிலே, கைகால்கள் கட்டப்பட்டு உருட்டப்பட்டேன்! மகனே என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? பலம் கொண்ட மட்டும் கூவலானேன். ‘கட்டுகளை அவிழ்த்துவிடு! பாவி! படுமோசக்காரா! என்னைக் கொலையா செய்கிறாய்?” என்று கூவினேன். பேய் கூவுகிறது என்றனரே, தவிர, ஒரு பேதை அழுகிறாள் என்று யாரும் சொல்லவில்லை. என் கூக்குரல் வலுக்க வலுக்க, பூஜாரிகள் மாற்றி மாற்றி வரவழைக்கப்பட்டனர். கூச்சலிட்டால், பிரம்பால் அடிப்பது என்று ஏற்பாடு செய்துவிட்டான் பூஜாரி. அதனால் நான் பட்ட அடி கொஞ்சமல்ல! மனங் கொண்டமட்டும் அவரும் அடித்தார். வேப்பில்லை அடிப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, வெறிக்கக் குடித்துவிட்டு வந்த பூஜாரியும் அடித்தான். அவ்வளவு அடியும் அந்தப் பொல்லாத பேய் தாங்கிக் கொள்வதாக அந்த மனித உருவில் இருந்த பேய்கள் பேசிக்கொண்டன. நான் நோய் தாளாது நெளிவது கண்டு, அந்தப் பூஜாரி, “போகிறாயா! போகிறாயா! இன்னும் பூஜை தரட்டுமா?” என்று கூவுவான். அடி தாளமாட்டாமல், ஒரு நாள் நான் அவன் மேல் விழுந்து கடித்து விட்டேன்; கடித்தால், எனக்குக் கிடைத்த தண்டனையை இப்போது நினைத்தாலும் நடுக்கம் பிறக்கிறது; சூடு இட்டான் அந்தப் போக்கிரி. விளையாட்டுக்கு உன் அப்பா, எப்போதாவது கையைப் பிடித்துக் கொஞ்சம் பலமாக இழுத்து விட்டால்கூட, எனக்கு இரத்தம் கட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட என் உடம்பிலே அந்தப் பாவி சூடிட்டான். உன் அப்பா தன் தலையில் அடித்துக் கொண்டார்.

என் அப்பாவும் உண்மையிலேயே என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்றே நம்பினார். அவருக்குத் தெரிந்த மந்திர வாதிகள் வந்தனர். எவ்வளவு மடத்தனம் இருக்கிறது என்பது அந்தச் சமயத்திலே தெரிந்தது.

புதிதாக வருகிற ஒவ்வொரு பூஜாரியும், பழைய பூஜாரிக்கு ஒன்றுந் தெரியாது. வெறும் உருட்டல் மிரட்டலோடு சரி, மந்திரம் தெரியாது என்று கூறாமலிருப்பதில்லை. வாரக் கணக்கு வைப்பார்கள், பிறகு மாதமாகும், அவன் போய் வேறு பூஜாரி வர. இப்படி நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். எனக்கு இந்த அனுபவம் ஏற்படுகிற வரையிலே நான்கூட, பேய் பிடிப்பது என்பது நிஜம்; மயக்கம் வருவது, உடல் உருகுவது, கண்டபடி பேசுவது, ஆடுவது இவைகளெல்லாம் பேயின் சேஷ்டை, இந்தத் தோஷம் மந்திரத்தால் போகும், என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறிப் பித்தர்கள் சித்திரவதை செய்ய ஆரம்பித்த பிறகுதான், அது அவ்வளவும் புரட்டு அல்லது வெறும் மனமருள் என்று உணர்ந்தேன்.

உன் அப்பா எதை உத்தேசித்து, மெள்ள மெள்ளத் தன் கள்ளத்தனத்தால் என்னை இக்கதிக்கு ஆளாக்கினாரோ, அந்த உத்தேசம் ஈடேற வழி பிறந்தது. முதலிலே உற்றார் உறவினர், என்னைப் பிடித்திருக்கும் பேயை விரட்டுவதுதான் முக்கியம் என்று எண்ணி, அதற்கான வழி கூறி வந்தனர். பேய் இருந்தால் தானே விரட்ட! பேய் போக மறுக்கிறது என்று பிறகு அவர்கள் பேசிக்கொண்டு, வேறு விஷயத்தைக் கவனிக்கலாயினர். “பாவம் இந்தப் பேய் பிடித்தவளோடு, அவர் எப்படிக் குடித்தனம் செய்வார்? எவ்வளவு மனவேதனையாக இருக்கும் அவருக்கு?” என்று பச்சாத்தாபப்படவும், “என்ன செய்வது! எத்தனை காலத்துக்கு இந்தக் கோரத்தைக் காண்பது, வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டால்தான் அவர் வாழ்வு கொஞ்சமாவது நிம்மதி அடையும்” என்று யோசனை கூறவும் “அவருக்குப் பெண் கொடுக்க யாருக்கு என்ன கசப்பு? யார் வேண்டுமானாலும் கொடுப்பார்கள்” என்று ஆதரவு மொழி கூறவும் “சோமசுந்தரம் முதலியார் மகள் சொர்ணம் இருக்கிறாள், விஸ்வநாத முதலியார் மகள் லோகா இருக்கிறாள்” என்று இடம் பார்த்துக் கூறவும், கடைசியில் “வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேன், ஏன் பத்து இடம் பார்க்க வேண்டும்; ரங்கத்தின் சொந்தத் தங்கை தங்கம் இருக்கிறாள், அவளையே முடித்துவிடலாமே” என்று தூண்டவுமாயினர்.

“எதற்கு” என்பதில் துவங்கி, “அப்படித்தான் செய்ய வேண்டும்” என்று முடித்தார் உன் அப்பா.

“இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று முதலில் பேசிய என் தந்தை, “அப்படித்தான் செய்வோம்” என்று சம்மதம் தந்தார். தங்கம் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஆனால் ஒரு நிபந்தனை வைத்தாள்; “நான் அத்தானை கலியாணம் செய்து கொண்டாலும், அப்பாவுடன் தான் இருப்பேன்” என்றாளாம். அந்தச் சாகசக்காரியின் சூது தெரியாதவர்கள், தங்கத்துக்கு அப்பாவை விட்டுப் பிரிய மனமில்லை என்று சிலரும், ரங்கத்தோடு இருக்கத் தங்கம் பயப்படுகிறாள், தன்னையும் பேய் பிடித்துக் கொள்ளுமோ என்று பயந்து என்று சிலரும் பேசிக் கொண்டனர். அவரை என்னிடமிருந்து பிரித்துவிட அவள் செய்த சூது அது என்பதை யார் தெரிந்து கொண்டார்கள்! நான் தான் பெண்ணல்லவே பேய்!

இரகசியமாகப் பேசுவது போய், என் காதில் படும்படியாகவே பேசலாயினர். ஜாதகப் பொருத்தம் கேட்கப்பட்டது. ஜோதிடர், உன் அப்பாவின் தயவில் வாழ்பவர். பொருத்தம் சரியாக இல்லை என்று கூறமுடியுமா அவரால்! என்னை மூன்று பேய்களிடம் ஒப்படைத்துவிட்டு, உன் அப்பா தங்கத்திடம் தன்னை ஒப்படைத்துவிடத் தீர்மானித்துவிட்டார்.

எது நேரிடுமென்று பயந்து வந்தேனோ அது நடப்பது உறுதி என்று ஏற்பட்ட உடனே, நான் ஒருவிதமான அமைதி பெற்றேன். இனி நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; தங்கம் வெற்றி பெற்றுவிட்டாள்; இனியும் நாம் இது விஷயமாகச் சிந்தித்து சிதைய வேண்டியதில்லை என்று மனதை ஒருவாறு திருப்திப்படுத்திக் கொண்டேன்! ஒருநாள் பூஜாரி இல்லாத சமயமாகப் பார்த்து, நான் உன் அப்பாவை என் அருகே வருமாறு அழைத்தேன். கை கால்கள் கட்டப்பட்டே இருந்தன. அவர் அருகே வந்தார். என் கண்களில் நீர் தாரை தாரையாக வந்தது. அவர் என் பக்கத்தில் உட்கார்ந்தார். அவர் மனமும் கொஞ்சம் இளகியதுபோல் தெரிந்தது. அவருடைய முகத்தை நான் இமை கொட்டாமல் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “தங்கம் ஜெயித்துவிட்டாள். இனி நான் உங்கள் கலியாணத்தைத் தடுக்கப் போவதில்லை. என்ன இருந்தாலும் அவள் என் தங்கைதானே. அவள் சுகப்படட்டும். நான் இனி அது விஷயமாகத் தலையிட மாட்டேன்; வீணாக வேதனைப் பட்டேன். விபரீதமான பழி ஏற்பட்டது எனக்கு. உங்களுக்கே தெரியும் எனக்குப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. எல்லாம் மனக் குழப்பந்தான் காரணம் என்பது” என்று சொன்னேன். எப்படியோ அந்தச் சமயம் அவருடைய மனம் இளகிற்று. “வருத்தப்படாதே ரங்கம்” என்று தேற்றினார். என் கட்டுகளை அவிழ்த்தார்; ஏறக்குறைய இரண்டு வருஷங்களாக என்னை அவர் அன்புடன் நடத்தியதில்லை. அன்று அவர் என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் போலவே நாங்கள் நடந்து கொண்டோ ம். இரண்டு வருஷக் கவலையையும் மறந்தேன்; களித்தேன். என் நாதனை மீண்டும் பெற்றேன். விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்; விபூதித் தட்டும், வேப்பிலைக் கொத்தும் சீந்துவாரற்றுக் கூடத்திலே கிடந்தன. நாங்கள் படுக்கை அறையில் பல காலமாகப் பேச மறந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் அவர், “உன் அப்பாவின் மிட்டா இனி எனக்குத்தான். தங்கத்தை வேறு எவனாவது கலியாணம் செய்துகொண்டால் பாதி மிட்டா பறிபோகும். இப்போது ரங்கமும் தங்கமும் எனக்கு! மிட்டாவும் எனக்கு!” என்றார் வெற்றிச் சிரிப்புடன். “‘நமக்கு’ என்று கூடச் சொல்லக்கூடாதா?” என்று நான் கேட்டேன். “சந்தேகம் என்ன, நமக்குத்தான்! நான் மிட்டாதாரன் என்றால் உனக்குத் தானே பெருமை” என்றார். பொழுது புலர்ந்தது, என் வாழ்விலும் ஒரு புதுமலர்ச்சி பிறந்தது என்று நினைத்தேன். அன்று பலரும் என்னைப் பாராட்டினார்கள், பேய் நீங்கிவிட்டதென்று. மாலையில் பேய் மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டது.

அத்தியாயம்-6

ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் தங்கையாகப் பிறந்தாளே, அந்தத் தங்கம், அவள் காதுக்கு எப்படியோ எட்டிவிட்டது, நானும் உன் அப்பாவும் சமாதானமாகப் போய்விட்ட விஷயம். எனக்குப் பேய் நீங்கவிட்டதென்றும் பழையபடி புருஷனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும், யார் மூலமாகவோ கேள்விப்பட்டாள். உடனே அவள் பேயை என் மீது ஏவிவிட்டாள். உன் அப்பாவேதான் பேயாக வந்தார். வரும்போதே என் தலை மயிரைப் பிடித்து இழுத்து முதுகில் அறைந்து என்னைக் கொடுமைக்கு ஆளாக்கினார்.

காலையில் கடைக்குப் போனவர், தங்கத்தைப் பார்த்து விட்டு வர அங்கே சென்றிருந்தார். அவள் அவருக்கு என்ன கலகம் செய்தாளோ எனக்குத் தெரியாது. ஒருவாறு யூகித்துக் கொள்ளத்தான் முடிந்தது. மாலையில் வீட்டுக்குள் நுழைந்த போதே அதிக கோபத்தோடு காணப்பட்டார். சங்கடமெல்லாம் தீர்ந்துவிட்டது என்று எண்ணியிருந்த எனக்கு, உன் அப்பா அவ்வளவு கோபமாக உள்ளே வந்தபோது கொஞ்சம் பயமாகவே இருந்தது.

“என்னங்க ஒரு மாதிரியா இருக்கறீங்க” என்று நான் வாஞ்சையுடன் கேட்டேன். என்னைச் சுட்டுவிடுவதுபோல முறைத்தார். “என்ன கோபம்?” என்று கேட்டுக்கொண்டே அவருடைய கரத்தைப் பிடித்தேன். உதறித் தள்ளிவிட்டு, “அந்தத் தளுக்குக் குலுக்கு இங்கே வேண்டாம்” என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. “நீலி” என்றார். நான் நேரே சமையற்கட்டு சென்று, அவருக்கு இலை போட்டுவிட்டு வந்து சாப்பிடக் கூப்பிட்டேன். “இனி உன் கையால் சோறு போட்டு நான் சாப்பிடுவேன் என்றா நினைக்கிறாய், கள்ளி! நான் என்ன மானங்கெட்டவனா?” என்று ஆத்திரத்தோடு கூறினார். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மரம் போல் நின்றேன்.

“பேய் பிடித்துக் கொண்டால் என்னடி! ஊரிலே, பேய் எவ்வளவோ பேருக்குப் பிடிக்கிறது. பிடித்தால் உன்னைப் போலவா கெட்டார்கள் அவர்களெல்லாம்?” என்றார். “என்னென்னவோ பேசுகிறீர்களே, எனக்கு விளங்கவில்லையே, நான் என்ன கெட்டுவிட்டேன்” என்று கேட்டுக் கொண்டே அழுதேன். “வாயை மூடடி விபசாரி” என்றார். ஆயிரம் தேள் ஏககாலத்தில் கொட்டியது போலாகிவிட்டது எனக்கு, அந்தப் பேச்சு கேட்டதும். விபசாரி! நான் விபசாரி! அவர் வாயால் அவ்விதம் கூறக் கேட்டேன். பழிபாவமறியாத என்னை, திக்கற்ற என்னை, விபசாரி என்று கூறினார்.

“தெய்வமே! இது என்ன பேச்சு!” என்று அலறிக் கேட்டேன். “தெய்வம்! உனக்கு?” என்று அவர் கர்ஜித்தார். முன்பெல்லாம் என்னிடம் அவர் காட்டிய கோபத்துக்கும் இம்முறை காட்டியதற்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுகொண்டேன். உண்மையிலேயே அவர் என்மீது அடங்காத கோபங் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து நான் பயமடைந்தேன். தம்பி! நான் ஒரு தவறும் செய்துவிடவில்லை. மாசு மறுவற்ற மனம் கொண்ட நான் கொடுமையை அனுபவித்து வந்தவள், என்னை அவர் விபசாரி என்று தூற்றவில்லை, குற்றம் சாட்டினார். நான் என்ன செய்வேன். காலைப் பிடித்துக் கொண்டு, “இப்படிச் சொல்லலாமா? நானா விபசாரி? நீங்களா அப்படிச் சொல்வது? என்னை என்னென்ன பாடுபடுத்தினாலும் சரி. அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லவேண்டாம்” என்று கெஞ்சினேன். யாரோ வருகிற சப்தம் கேட்டது.

“போதும் உன் வேஷம், போ உள்ளே. வருகிறான் ஒருவன். அவனை விசாரிக்கப் போகிறேன். உள்ளே இருந்து கேள், உன் யோக்கியதையை. அவன் வெளிப்படுத்துகிறான் பார்” என்று கூறி என்னைக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார் ஒரு அறைக்குள். கதவையும் சாத்தி, வெளியே தாள் போட்டுக் கொண்டார். அவரும் புதிதாக வந்தவனும் சில நிமிஷங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தனர். வந்தவன் அடக்கமாகவும் அச்சத்துடனும் பேசலானான். உன் அப்பா ஆத்திரத்துடன் அதிகார தோரணையில்தான் பேசினார்.

“முதலியாரு கூப்பிட்டதாக முருகன் சொன்னான். ஓடி வந்தேன். என்ன விசேஷமுங்க.”

“ஏ! அந்தக் கள்ளக் கும்பிடு போடவேண்டாம். மறைக்காமல் நான் கேட்பதற்கு ஜவாப் சொல்லவேண்டும். துளியாவது மறைத்தால் தோலை உரித்துவிடுவேன்.”

“எஜமான்! ஏன் இம்மாங்கோவமாப் பேசறீங்க? என்ன கேட்கப்போறீங்க? நான் எதுக்காக, எதைத்தான் மறைக்கப் போகிறேன்.”

“சரிடா, கதையெல்லாம் அளக்காதே. உண்மையைச் சொல்லிட்டா என்ன நடக்குமோன்னு பயப்படாதே.”

“பயம் ஏனுங்க நமக்கு? நான் என்ன தப்புச் செய்தேன். மனுஷனுக்கு மனுஷன் பயம் ஏனுங்க?”

‘பளீர்! பளீர்’ என்று அறையும் சத்தம், “ஐயோ! ஐயோ! சாமி! முதலியாரே!” என்று அவன் அழுகிற சத்தம், “படவா! பயமா இல்லை? மனுஷனுக்கு மனுஷனா! பயம் இல்லாமத் தானேடா பயலுக தலைகால் தெரியாம ஆடறீங்க” என்று உன் அப்பா கூவுவது, இவைகளைக் கேட்டு, நான் அறைக்குள்ளே அடைபட்ட நிலையிலே, ஒன்றுந் தோன்றாமல் மருண்டேன்.

“நடந்ததைச் சொல்லணும், நாவை அடக்கிப் பேச வேணும்.”

“ஆவட்டுங்க.”

“பூஜாரி புண்ணியகோடியும் நீயும் இரண்டு நாளைக்கு முன்னே குடிக்கப் போனிங்களேல்லோ?”

“அவன் குடிச்சானுங்க, நான் வேறே வேலையா அந்தப் பக்கம் போனேன்.”

மறுபடியும் பளார் என்ற சத்தம். அவன் அழுதுகொண்டே, “ஆமாங்க! போனோம், குடிச்சோம்.”

“கழுதே! குடிக்கிற நாய் குடிக்கிறதில்லைன்னு ஏண்டா பொய் பேசறே.”

பூஜாரியும் அவனும் சேர்ந்து குடித்துப் புரண்டால் இவருக்கு என்ன? ஏன் அவனைக் கூப்பிட்டு வந்து அடித்து அதைக் கேட்கவேண்டும்? என்னை அநியாயமாக விபசாரி என்று கூறினதற்கும் குடிகாரனை அடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே விளங்கவில்லையே என்று நான் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

“கள்ளுக்கடையிலே என்னடா பேச்சு நடந்தது, உனக்கும் அவனுக்கும்?”

“ஒண்ணுமில்லைங்களே.”

“உடம்பு ஊறுதா! உள்ளதைச் சொல். புண்யகோடி என்ன சொன்னான் உன்னிடம்?”

“எதைப்பத்திங்க?”

“எதைப்பத்திங்க? எதைப்பத்திப் பேசினீர்கள்னு நான் துரைகளுக்குக் கவனப்படுத்தணுமா?” மறுபடியும் அடி கொடுக்கும் சத்தம்! இந்தத் தடவை சத்தம் தப்பு தப்பு என்று கேட்டது. “செருப்பு அறுந்துவிடும் இப்போ” என்றார் உன் அப்பா. அதிலிருந்து அவனைச் செருப்பினால் அடிக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

“டே! பூஜாரிப் பயல், என் சம்சாரத்தைப் பத்தி என்ன பேசினான்?” என்று கேட்டார். நான் பயந்து கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு, அவன் வாயிலிருந்து என்ன பதில் வருகிறது என்று உற்றுக் கேட்டேன். ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடிகள் பதில் இல்லை.

“டே!” உன் அப்பாவின் குரல், அதுவரை நான் எப்போதும் கேட்டறியாத கடுமையுடன் இருந்தது அந்தக்குரல்.

“எப்படிச் சொல்றதுங்க?” அவன் அழுகுரலில் சொன்னான்.

“சொல்லு! சொல்லாவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன். நீயும் அந்தப் பூஜாரியும் கள்ளுக்கடைக்குப் போய் என்னென்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்! மறைக்காமல் சொல்லு. விடமாட்டேன் உன்னை.”

“அவன், குடி வெறியிலே என்னமோ சொன்னானுங்க!”

“அதைத்தாண்டா சொல்லச் சொல்கிறேன் உன்னை!”

“உங்க எதிர்லே சொல்லக்கூடிய பேச்சு இல்லிங்களே அந்தப் பாவி சொன்னது.”

“வீணாக உதைப்பட்டுச் சாகாதே, உள்ளதைச் சொல்லு.”

“அம்மாவைப் பத்தி அவன் குடிவெறியில் என்னென்னமோ உளறினான்.”

“அம்மா! அந்தக் கழுதை முண்டையைப்பத்தி என்னடா சொன்னான், அந்த நாய். சொல்லுடா முழுதும்.”

“புண்யகோடிப் பயலுக்குப் பொம்பளைப் பைத்தியம் ஜாஸ்திங்க. தெரிஞ்சவங்க, அதனாலேதான் மந்திரத்துக்குக் கூப்பிடுவதில்லைங்க.”

“அவன் சொன்னதைச் சொல்லுடா, கதை பேசியே காலத்தை ஓட்டாதே.”

“அம்மாவைப்பத்திக் குறைவாகப் பேசினானுங்க. ரொம்ப ஷோக்குடா, அந்தப் பொம்பளை. கிட்டத்தட்ட முடிஞ்சு போன மாதிரிதான். புண்யகோடிகிட்ட எந்தப் பொம்பளையடா இஷ்டப்படாமே போவான்னு என்னென்னமோ உளறினானுங்க.”

படுபாவி! என்னைப் பற்றிக் கள்ளுக்கடையில் கண்டபடி பேசி, என் கணவர் என் மீது சந்தேகப்படும்படி செய்துவிட்டாயே. நீ நாசமாய்ப் போக என்று நான் பூஜாரியை திட்டினேன்; கைகளை முறித்துக் கொண்டேன். ஆனால் எவனோ குடிகாரன் என்னமோ உளறினால், அதற்காக என்னைக் கொடுமைப் படுத்துவதா உன் அப்பா, என்று எண்ணினேன். அவன் சொல்லி வந்ததை நிறுத்திக் கொண்டான். மேலும் சொல்லும்படி உன் அப்பா கட்டளையிட்டார். அவன் மளமளவென்று பேசலானான்.

“புண்யகோடி, அம்மாவுக்குப் பேயோட்ட வந்தானாம். அம்மா அழகிலே அவனுக்கு ஆசை பிறந்ததாம். மெதுவாகப் பூஜை செய்கிறமாதிரி, கையைப் பிடிப்பதும், கண்ணைத் துடைப்பதுமாக இருந்தானாம். முதலிலே அவனுக்குப் பயமாகத் தான் இருந்ததாம். பிறகு, அவனை மந்திரிக்கச் சொல்லிவிட்டுத் தனியாக விட்டுவிட ஆரம்பிச்சிங்களாம். அவனுக்குத் தைரியம் பிறந்துதாம். சேஷ்டை செய்வானாம். அம்மா கூவுவாம்! அவன் அதெல்லாம் பேயின் கூச்சலுன்னு சொல்றதாம் உங்களிடம். விபூதி பூசுவதாகச் சொல்லிக்கொண்டு, கிட்டே போவானாம். பேய் எழுந்து ஆடப் போவுது என்று சொல்லிக் கொண்டு அம்மாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொள்வானாம். இன்னும் ஒரு பத்து நாளையிலே முடிஞ்சுவிடும்னு சொன்னாங்க. அம்மாவுக்கு வந்துங்க வலது மார்லே துவரம் பருப்பு அளவுக்கு மச்சம் கூட இருக்கிறதாம்.”

“அட பாதகா! உண்மையிலே அப்படித்தான் எனக்கு மச்சம் இருக்கிறது. காம
சேஷ்டையா செய்து கொண்டு இருந்தாய், மந்திரிப்பதாகச் சொல்லிக்கொண்டு” என்று நான் அந்தப் பூஜாரியைச் சபித்துக்கொண்டிருந்தேன் உள்ளே. பேச்சு நின்றுவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து உன் அப்பா, “டே! புண்யகோடியும் நீயும் பேசினபோது யார் இருந்ததுகூட குறிப்பாகச் சொல்ல முடியுமா” என்று கேட்டார். “உங்க மாமனார் வீட்டுத் தோட்டக்காரன் இருந்தான்” என்றான் அவன். “சரி! நீ போ! அந்தப் புண்யகோடிக்குச் சொல், நாளைக்கு இந்த ஊரிலே அவனை நான் கண்டால், தலை இராது என்று சொல்லி விடு. போ” என்று உத்தரவிட்டார். அவன் போய்விட்டான். நான் உள்ளே இருந்து, “அபாண்டம்! பழி! அநியாயம்! அந்த நாசமாய்ப் போனவனைக் கொன்றால்கூடத் தோஷமில்லை. கதவைத் திறவுங்கள். பூஜாரியை விளக்குமாற்றாலே அடிக்கிறேன்” என்று நான் கூவினேன். எனக்குப் பேய் பிடித்ததாகக் கூறி அந்தப் புரட்டனை அவர் தான் அழைத்து வந்தார். அந்தப் பாதகன், என்னைப் பற்றிக் கெட்ட நினைப்பு வைத்தால் நான் என்ன செய்ய முடியும் அதற்கு. நான் கெஞ்சினேன், அழுதேன், கதவைத் திறக்கும்படி. உள்ளே இருந்து கதவைத் தடதடவென்று தட்டினேன். கதவை அவர் திறக்கவில்லை. உற்றுக் கேட்டேன். கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது.

என்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டார் உன் தந்தை! சொந்த வீட்டிலேயே கைது செய்யப்பட்டேன். ஒரு குற்றமும் செய்யாத நான், எவனோ பூஜாரி, குடிவெறியில் எதையோ உளறினால், அதற்காக என்னை இப்படிக் கொடுமை செய்வதா? பெண் இனத்தின் தலை மீது இருக்கும் இந்தப் பெரிய ஆபத்தைப் பற்றி யார் கவலை எடுத்துக் கொள்கிறார்கள்? உலகிலே, எதை எதையோ சீர்திருத்தம் செய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ கொடுமைகளை நீக்க வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமை இருக்கிறதே, ஆண், பெண்ணைப் படுத்தும் பாடு, இதனை நீக்குவதற்கு யார் வேலை செய்கிறார்கள். பரமசாது, தர்மவான், ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படாதவர், கௌரவமான குடும்பத்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட உன் தகப்பனாரிடம் நான் இந்தக் கொடுமைப்பட நேரிட்டது என்றால், குடியனிடம் குணங்கெட்டவனிடம் சிக்கிய பெண்கள், எவ்வளவு பாடுபடுவார்கள்! நமது ஊர்களிலே பார்க்கிறோமே இந்தக் கோரத்தை. குடித்துவிட்டுக் கூத்தாடும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் வடிக்கும் கண்ணீரை யார் கவனிக்கிறார்கள்? அவள் வாயாடி, புருஷனுக்கு அடங்குவதில்லை. அவன் தான் குடிகாரன் என்று தெரியுமே, அதற்கேற்ற படிதானே இவள் நடந்துகொள்ள வேண்டும் என்று, பெண்ணுக்குப் புத்தி கூற வருவார்களே தவிர புருஷனைக் கண்டிக்கத் துணியமாட்டார்கள். அதிலும் உன் அப்பா, ஊருக்குப் பெரியவர்; ஊர் பஞ்சாயத்து அவரிடம் வரும். அப்படிப்பட்டவரை யார் கண்டிப்பார்கள்? மேலும், எனக்குப் பேய் பிடித்து ஆட்டுகிறது என்று வதந்தி வேறு, ஊர் எங்கும் பரவி விட்டது. ஆகவே என்னை அவர் என்ன கொடுமை செய்தாலும் கேட்பார் கிடையாது.

என்னை அறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார். நான் திகைத்துப் போனேன். கதவைத் தடதடவென்று தட்டினேன்; கோவெனக் கதறினேன்; இப்படி அவதிப்படுவதைவிட, உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் இருந்தால் தானே பதில் பேச. என்னைப் பூட்டிவிட்டு நேரே என் அப்பாவிடம் ஓடி இருக்கிறார். அங்கு போய் என்ன சொன்னாரோ தெரியாது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என் அப்பா வந்தார். கதவு பூட்டினது பூட்டியபடி இருந்தது; உள்ளே நான் கொஞ்சம் மயக்கத்தோடு, தரையில் படுத்துக் கிடந்தேன். வெளியே பேசும் குரல் கேட்டு, எழுந்து நின்றுகொண்டு, கதவைத் தட்டினேன். என் அப்பா பேசினார் கதவைத் திறக்காமலே.

“ரங்கம்! என்னம்மா இப்படிச் செய்கிறாயே” என்றார். மகனே! உன் தாத்தா, என் அப்பா என்னைக் கேட்டார், ‘ஏனம்மா இப்படிச் செய்கிறாய்’ என்று. நான் செய்தது என்ன? புருஷனின் கொடுமைக்கு ஆளாகிப் புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை இம்சித்தவரைக் கேள்வி கேட்டுக் கண்டிக்க வேண்டிய என் தகப்பனார், என்னைக் கண்டிக்கலானார்.

“அப்பா! கதவைத் திற” என்று கூறினேன்.

“திறக்கிறேன்; ஆனால் ஒன்றும் நீ அமர்க்களம் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என் மீது ஆணையிட்டுச் சொல் திறக்கிறேன்” என்றார்.

“என்னப்பா இது! நீங்களும் அந்தப் பாவிபோலவே நடந்து கொள்கிறீர்கள்” என்று கேட்டேன். என் புருஷர் பேசலானார்.

“கேட்டீர்களா, நான் பாவி! உங்களுக்குத் தெரியாது மாமா, ரங்கம் பேசின பேச்செல்லாம். இதுவரை நான் இப்படி ஒரு பெண் பேசிக் கேட்டது இல்லை” என்றார். என் அப்பாவோ சற்றுச் சோகமாக,

“என்னப்ப செய்யலாம்! அவளா பேசுகிறாள். ரங்கம் பரமசாதுவல்லவா? உனக்கே தெரியுமே! இவ்வளவு காலமாக அவளோடு நீ குடித்தனம் செய்யவில்லையா? நீங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதைக் கண்டு நான் எவ்வளவோ ஆனந்தப்பட்டேன். என்ன செய்யலாம்! ரங்கம் தன் பழைய நிலையில் இருந்தால், இப்படி ஏன் நடக்கப் போகிறது? எல்லாம் அதன் சேஷ்டை. அவள் என்ன செய்வாள்?” என்றார். அதாவது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் போக்குக்கு நான் பொறுப்பல்ல என்று என் கணவனிடம் வாதாடினார். உன் அப்பா அதற்கு, “மாமா, இதற்கு என்ன தான் வழி?” என்று கேட்டார். “நான் விசாரித்து வைத்திருக்கிறேன். இந்த ஊர் மந்திரக்காரர்கள் பிரயோஜனமில்லை; நாற்பதாவது கல்லிலே பனையவரம் என்றோர் கிராமம் இருக்கிறதாம். அங்கே ஒரு பக்கிரி இருக்கிறானாம். அவன் நாற்பது நாள் பூஜை நடத்தி, ரட்சை கட்டுகிறானாம்! எப்படிப்பட்ட பிரம்மராட்சசாக இருந்தாலும் நொடியிலே போய்விடுமாம்” என்றார். எனக்குச் சிரிப்புத்தான் பொங்கிற்று. உரக்கச் சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருந்த நான், “ஐயோ, ஐயோ” என்று அலறினேன்.

என் கணவனும் அப்பாவும் எனக்குப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. அதன் சேஷ்டையாலேயே நான் உளறுகிறேன் என்று பேசுகிறார்கள். அதே குற்றம் சாட்டியே என்னைக் கொடுமைப்படுத்தினார், உன் அப்பா. நான் என்ன செய்தேன்? அவர்கள் கூறுவது முற்றிலும் சரி என்பதுபோல நடந்து கொண்டேன்! ஒருத்தி சிரித்துக்கொண்டே இருந்து விட்டு திடீரென்று ‘ஐயையோ’ என்று அலறினால் என்ன எண்ணுவார்கள். உண்மையிலேயே பேயாட்டம் என்று தானே நினைப்பார்கள்? ஆனால் ஏன் நான் அவ்விதம் செய்தேன்? கணவனின் பேராசைக்குக் குறுக்கே நிற்கும் என்னை அவர் கொடுமைப்படுத்துகிறார்; அதற்கு ஏதாவது சாக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக, எனக்குப் பேய் பிடித்துக் கொண்டதாக வீண் புரளி செய்துவந்தார். அந்தப் புரளியை ஆதரிப்பது போல, சிரித்துக் கொண்டே இருந்த நான் திடீரென்று அலறினேன். எனக்கென்ன கொழுப்பா! நான் சுவரின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு பாழாய்ப்போன தேள் இருந்து என்னைக் கொட்டிவிட்டது. அதனால் நான் அலறினேன்.

சிரித்துக் கொண்டே இருந்த நான், ‘ஐயையோ!’ என்று அலறியதும் என் அப்பா, “என்னம்மா ரங்கம்!” என்று பதை பதைத்துக் கேட்டார். நான் அலறியபடி “ஐயையோ! அப்பா! தேள் கொட்டிவிட்டது!” என்று கூறினேன். “அப்பா, தேள் கொட்டிவிட்டதாமே. அலறுது பார்” என்று என் அப்பா சொன்னார். உன் அப்பாவோ, சிரித்துக் கொண்டே, “நீங்கள் ஒரு பைத்தியம் மாமா! தேளும் இல்லை, பாம்பும் இல்லை. அவள் சிரித்ததும் பேயின் சேஷ்டை, அதுபோலவே அழுததும் பேயின் சேஷ்டைதான். இப்படித்தான் சிரிப்பு, அழுகை, தூற்றுவது, கொஞ்சுவது, மிரட்டுவது, பயந்து பேசுவது என்று பலரகம் நடந்தபடி இருக்கும்” என்றார். உள்ளே நான் துடியாய்த் துடித்தேன். வலி தாங்காது கூவினேன். கொட்டியது காலிலே, ஆனால் வலியோ உடலெங்கும். வியர்த்துவிட்டது; மார் அடைப்பது போலாகிவிட்டது. “ஐயோ அப்பா! சத்தியமாகத் தேள் கொட்டிவிட்டதப்பா! மார் அடைக்கிறது; பிராணன் போகிறது; உங்களைக் கும்பிடுகிறேன். கொஞ்சம் கதவைத் திறவுங்கள்; கொலை பாதகம் செய்யாதீர்கள்” என்று நான் கதறினேன். “ஒரு வேளை தேள்தான் கொட்டிவிட்டிருக்குமப்பா! அலறுவது தெரியவில்லை! கதவைத் திற” என்றார் என் தகப்பனார். பிடிவாதமாக உன் அப்பா, “உங்களுக்கு ஒன்றும் தெரியாது மாமா! இதெல்லாம் பேயின் பாசாங்கு. நான் சதா அனுபவிக்கிறேன். எனக்கல்லவா தெரியும் அந்த சேஷ்டைகள். கொஞ்ச நேரம் அழுதான பிறகு தானாக அடங்கிவிடும்” என்று கூறினார். எப்படியடா மகனே அடங்கும்! தேள் கொட்டினதால் விஷம் ஏறத் தொடங்கிற்று. கொட்டின இடம் நெருப்புப்பட்டது போல எரியலாயிற்று. கால் முழுதும் குடைச்சல்; மார்வலி; மயக்கம் வரலாயிற்று; அலறினேன். துடித்தேன்; ஓவென அழுதேன். வெளியே இருந்துகொண்டே என் அப்பா அழுதார். “என்ன கண்றாவியம்மா இது! உன்னை எவ்வளவு அருமையாக வளர்த்தேன். இது என்ன கோரம்” என்று கதறினார். “அப்பா! அப்பா!” என்று கூவினேன். “அடேயப்பா! தேளாக வேணும் இருக்கட்டும், இல்லை பேயின் சேஷ்டையாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் சரி. என்னால் ரங்கம் துடித்து அழுவதைக் கேட்டுச் சகிக்கமுடியவில்லை. தயவுசெய்து கதவைத் திற; நான் என் குழந்தையைப் பார்த்தாக வேண்டும்; என்னால் இனி ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது” என்று கூறிக்கொண்டே என் அப்பா சிறு குழந்தையைப் போல் அழுதார். அவ்வளவு வேதனையிலும் எனக்கு அவருடைய அன்பின் போக்கு ஆனந்தமூட்டிற்று. எது எப்படி இருப்பினும், அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதல்லவா என்று எண்ணிச் சந்தோஷப்பட்டேன். உன் அப்பாவுக்குப் பாபம், என்னை உண்மையாகவே தேள் கொட்டிவிட்டது என்று தெரியாது. நான் அறையை விட்டு வெளியே வரத் தந்திரம் செய்கிறேன் என்றே அவர் எண்ணிக் கொண்டார். ஆகவே அவருக்குக் கதவைத் திறக்கத் துளியும் சம்மதமில்லை. என் அப்பாவின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. “ஏ! ரங்கம்! சும்மா இருக்கமாட்டாயா?” என்று மிரட்டினார். “ஐயோ! என்னை வெளியேவிட்டு வெட்டிப் போட்டுவிடுங்கள்! உள்ளேயிருந்து உயிர் துடிக்க என்னால் முடியாது. குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். தேள்தான் கொட்டியது, வாயிலே நுரை தள்ளுகிறது; இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருந்தால் உயிர் போகும்; ஐயோ! தண்ணீர் ஒருமுழுங்கு தண்ணீர்! மார் அடைக்கிறது” என்று நான் துடிதுடித்துக் கேட்டேன். என் அப்பாவால் என் கதறலைக் கேட்டுத் தாங்க முடியவில்லை. ஒரே ஆத்திரம் பிறந்துவிட்டது. “யாரடா அவன் மடையன்! உள்ளே உயிர் வேதனையோடு ஒரு பெண் கதறிக் கொண்டிருக்க, செக்கு உலக்கைபோல் நின்று கொண்டிருக்கிறாயே! உன் மனம் கல்லா? மனைவி உள்ளே துடிதுடிக்க வெளியே நின்றுகொண்டு வீண் பேச்சுப் பேசுகிறாய். கதவைத் திறக்கிறாயா உடைக்கட்டுமா இந்தக் கதவை. பேயாக வருவதாக இருந்தாலும் சரி, என் மகளை நான் இந்த க்ஷணம் பார்த்தாக வேண்டும். திற கதவை” என்று கர்ஜனை செய்தார். ஒரு தேளா, ஓராயிரம் தேள் கொட்டி வலி இருந்தாலும் என்ன! அந்தக் கிழவரின் வீராவேசமும் அன்பும், என்னை ஆனந்த சாகரத்திலாழ்த்திற்று. கொடுமைகள் மலை மலையாய்க் குவிந்தாலும், என் அன்புள்ள அப்பா இருக்கு மட்டும் எனக்குக் கவலையில்லை என்று நான் எண்ணிப் பூரித்தேன் – என் தகப்பனாரின் கோபாவேசத்தைக் கண்ட உன் தகப்பனார் கொஞ்சம் பயந்து போனார் என்பது அவர் பதிலிலே நன்றாகத் தெரிந்தது! “மாமா! என் மனம் கல்லுமல்ல, இரும்புமல்ல! ரங்கம் கதறுவது கேட்டு எனக்கும்தான் பதறுகிறது. என்மேல் நிஷ்டூரம் வேண்டாம். பேயின் சேஷ்டைதான் இது. இந்தச் சமயத்திலே கதவைத் திறந்தால், உண்மையாகவே ஆபத்து நேரிடும்” என்றார் கொஞ்சம் பணிவாகவே. என் அப்பாவின் குரலிலே துக்கம் தோய்ந்திருந்தது. “அப்பா! உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை உனக்கு எப்படி இல்லாமற் போகும். என்ன ஆபத்து வந்தாலும் சரி, கதவைத் திறக்கத்தான் வேண்டும். உனக்குத் திகிலாக இருந்தால், சாவியைக் கொடு என்னிடம்; நான் கதவைத் திறக்கிறேன். நீ வெளியே போய் இரு” என்றார். “மாமா! இப்படிப் பேசாதீர். உமக்குமட்டும் ஆபத்து வரலாம், எனக்கு வரக்கூடாது என்பதா என் எண்ணம்” என்று கூறினார். இரண்டோ ர் நிமிஷங்களிலே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தைரியமாகப் பேசினாரே தவிர, என் அப்பாவுக்குக் கொஞ்சம் அச்சம் இருந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பதற்கு முன்பு அவர், “அம்மா! ரங்கம்! ரங்கம்!” என்று வாஞ்சையுடன் கூப்பிட்டார். அதாவது சாந்தி கூறினார். கதவு திறக்கப்பட்டது. வெளிச்சம் உள்ளே விழுந்தது. அதுவரை என்னை ஏய்த்துக் கொண்டிருந்த தேள் கதவு இடுக்கைவிட்டு, சரசரவென்று சுவரில் ஏறக் கண்ட நான் தாவி வெளியே வந்து, என் தகப்பனாரின் கைத்தடியை எடுத்தேன், தேளை அடிக்க. நான் தடி எடுத்ததுதான் தாமதம், இருவரும் பெருங் கூச்சலிட்டுக் கொண்டு, கூடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டார்கள்.

– தொடரும்…

– திராவிடநாடு, 1947.

– ரங்கோன் ராதா (நாவல்), முதற் பதிப்பு: 2002, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *