பந்தக்காலு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 6,335 
 

அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி.

ஆமாம்,,,,,,பெண்குழந்தைபிறந்திருக்கிறதாமே, சந்தோசம்,வாழ்த்து க்கள். தங்க ளுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை. மனைவி கருவுற்றவுடன் ஸ்கேன் பார்த்து பெண் குழந்தை என்றவுடன் கலைத்து, “இனியும் கலைத்தால் மனிவியின் உயிரு க்கு ஆபத்து” என்கிற டாக்டரின் எச்சரிக்கையினால் கலைக்காமல் விட்டு பிறந்த பெண் குழந்தை.

உங்கள் கூற்றுப்படி உங்களை தட்டுக்கேட்க ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை பொய்யாக்கப்பிறந்த குழந்தை. இனி அடுத்ததாய் ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரிவீர்கள் அப்படித்தானே நண்பரே.?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பணியில் சேர்ந்த முதல்நாள் “சார் ப்யூன்போஸ்ட்” என உங்களிடம்தானே “அப்பாயிண்மெண்ட் ஆர்டரை” கொடுத்தேன்.

பின் வந்த நாட்களில் நமது ரூம் வாசப் பேச்சுகளில் இதெல்லாம் கேலியும், கிண்டலுமாக இடம் பெறுமே,

“டேய் கொரங்குப்பயலே, ப்யூன் போஸ்ட்டுன்னு வந்த பைய இப்ப இவ்வளவு பேச்சு பேசுறயேடா” “டேய் பகலிலேயே பசுமாடு தெரியாத பையன் நீயீ”ஆரம்ப நாட்களில் நமது பேச்சும், பழக்கமும் இப்படித் தான் இருந்தது. அப்புறம் போகப்போக எல்லா விஷயங்களுக்குள்ளும் சென்றோம். பகிர்ந்து கொண்டோம்.

அலுவலகம், ரூம் என வித்தியாசமில்லை. இடத்தை விட்டு விட்டு பொருள், ஏவல் அடிப்படையில் எல்லாம் பேசினோம். எங்கெங்கோ கிடந்த இரு விதைகள் காற்றில் இழுத்து வரப்பட்டு ஓரிடத்தில் விழுந்து மண்பிளந்து, துளிர்த்து, முளை விட்டு, கிளை பரப்பி நின்றது போல் நம் நட்பும், நட்பின் ஊடாக வந்த அந்த உறுத்தலான விஷயமும்தான் நம்மை பிளவு படுத்திவிட்டது என நினைக்கிறேன்.

அது ஒரு பெண். முப்பது வயதில் புது நிறத்தில் இருந்தாள். அவள் கட்டுகிற அடர் நிற சேலை,ரவுக்கையை போல் அவளது மனமும் இருந்ததாக அறிகிறேன். கணவனை விட்டு பிரிந்து பிறந்த வீட்டில் இருந்தவளை நீங்கள் ஆள ஆரம்பித்துவிட்டீர்கள்.

அவளும் உடன்பட்டாள். காரணம் கேட்டபோது சொன்னீர்கள்”எனக்கு தினமும் ஒரு பெண் வேண்டும் என. ஆடு வேண்டும்,கோழி வேண் டும் என சாமி வந்தவர்கள் சொல்வது போல நீங்கள் சாதாரணமாகவே சொன்னீர்கள். சரி போகட்டும் என விட்டு விடவோ, ஒத்துக் கொள்ளவோ முடியவில்லை.

“நான் அந்த பெண்ணிடம் பேசட்டுமா? உங்களை தின்று தீர்க்க வேண்டாம்” என கேட்டேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்.அப்புறம்தான் ஒரு விஷயத்தை தெளிவு செய்தீர்கள் என்னிடம்.  “இங்கு மட்டுமல்ல, நான் வேலை செய்கிற ஊர்களிலெல்லாம் ஒவ்வொரு பெண்ணை வைத்திருந்தேன், கிட்டத்தட்ட குடும்பமே நடத்தினேன்” என்றீர்கள்.

அதெப்படி இருந்திருக்க முடியும்?எந்த நேரம் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிபோவீர்கள், எந்த நேரம், எந்த ரூபத்தில் ஊர்க்காரர்களால் பிரச்சனை வரும் என்கிற எதிர்பார்ப்புடனும், கவலையுடனும் இருப்பவள் எப்படி மனம் ஒன்றி உங்களுடன் குடும்பம் நடத்தி இருப்பாள். உங்களது செயலை ஞாயப்படுத்த உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்ட சமாதானம்.அப்படித்தானே?

நாம் இருவரும் வேலை பார்த்த ஊரிலும் அதே மாதிரியான உங்களின் பழக்கம் தொடர்ந்தது. உங்களின் அவள் வந்து போக வசதியாய் நம் ரூம் பக்கத்திலேயே ஒரு ரூமைப் பிடித்தீர்கள். ரூம் என்ன ரூம் வீட்டைத்தானே அப்படி சொல்லிக்கொண்டீர்கள்.

ந்த ரூம் கிடைக்கும் முன் பத்துக்கும், நாலுக்குமாய் உள்ள ஒரு செவ்வக டைப் வீடு. சமையலறையிலிருந்து, குளியல்ரூம்வரை அதற்குள்ளாகவே எல்லாமும் அடங்கிவிட்ட அதன் மாடியில் தட்டு, முட்டு சாமான்கள் போடுவதற்காகவே கட்டியது போல் ஒர் அறை. அதில்தான் நான் தினமும் படுத்துக் கிடப்பேன். தட்டுமுட்டு சாமான்களோடு சாமான்களாய் அதன் தூசியை சுவாசித்துக் கொண்டு கிடப்பேன்.

டேய் முன்ன மாதிரி இல்லடா, இப்பயெல்லாம் அவ டெய்லி வர்றேங்குறா, கொஞ்சம் அட்ஜஸ்ட்பண்ணிக்கோடா”என்றீர்கள். இரண்டு பேரும் ஒன்றாய் தங்கியிருந்த ரூமில் உங்களது தாகத்திற்காய் அவளை பலிகடா ஆக்கிக் கொண்டு “அட்ஜஸ்ட்” என்கிற பெயரில் ஏதாவது செய் என்றீர்கள்.

விளைவு மாடி ரூம் உறக்கம்.ஒன்னுக்குகூட கீழே இறங்கி வர முடியாமல் சங்கடப்பட்டு, சங்கடப்பட்டு, மனம்வெம்பிஅவஸ்தையோடு படுத்துக் கிடப்பேன்.

ஒரு நாள் என்னை தேள் கடித்து விட்டது. பொறுத்துப் பார்த்தேன். வலிதாங்க முடியவில்லை. கீழே இறங்கி வந்து விட்டேன். முதலில் சப்தம் போட்டு விட்டு அப்புறம்தான் கேட்டீர்கள். என்ன என. அவளும் வெறித்தாள். ஒன்றும் சொல்லவில்லை. டாக்டரிடம் போய்விட்டு வந்து சொன்னேன். ” ரொம்பவலிக்குதா” அவள் கேட்டாள். என் பார்வையின் நெருப்பு அவளை சுட்டிருக்க வேண்டும். போய் விட்டாள்.

அதன் பிறகு நண்பா, நீங்கள் என்னை மாடிக்கு போகவிடவில்லை.கீழேயே படுத்துக் கொண்டோம். இருவரின் நீண்ட மெளனத்திற்க்குப் பிறகு விடிய விடிய பேசினோம். உங்களது செயலுக்கு ஞாயம் கற்பித்து வந்த வாதங்கள் எனது பேச்சை அமுங்கச் செய்து விட்டது. பின் என்ன செய்ய? விடிந்தும் விட்டது.

அவளின் ஆளுமையோ,உங்களின் ஆளுமையோ,அல்லது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுமை செலுத்தினீர்களோ தெரிய வில்லை.”அவள்தான் எனது வாழ்க்கை”என்றீர்கள்.

அது எப்படி சரியாகும் என நான் கேட்ட கேள்வி இருவருக்கு மிடையே பெரிய வாக்கு வாதமாகி “அது என் சொந்த விஷயம் நீ தலையிடாதே” என சொல்ல வைத்தது. விலகிக் கொண்டேன் மனமில்லாமல். நம் இருவருக்குமிடையில் மனக்கசப்பு, பேச்சின்மை, பிரிவு தொடர்ந்தது. அவளுக்கும், உங்களுக்கும் உறவு வலுத்தது முன்பை விட உங்களுக்கு சந்தோசம், எனக்கு வருத்தம், ஊருக்கு பொறாமை.”அரசு உத்தியோ கிஸ்தன்”“பணம்” அவளே சம்மதிச்சிப்போறா”, என்கிற பிரச்சனைகள் இவைகளை காட்டி நீர்த்துப்போகும். அப்புறம் என்ன? இம்மா திரியான ஓர் நாளில் எனக்கு ட்ரான்ஸ்பர் வந்தது. அடுத்த சில மாதங்களில் உங்களுக்கும் ட்ரான்பர் வந்ததாய் அறிந்தேன்.

அவளை என்ன செய்தீர்கள் தெரியவில்லை.இப்பொழுது மனைவி, குடும்பம் என செட்டில் ஆகி விட்டீர்கள். பெண் குழந்தையும் பிறந்தாகி விட்டது. அடுத்த ஓரிரு வருடங்களில் இன்னொரு குழந்தை. அது ஆணோ,பெண்ணோ பெற்றுக் கொண்டு நாமிருவர் நமக்கிருவர் என வாழ்வை கழிப்பீர்கள். அப்படித்தானே நண்பா?

ஆனால் நண்பா, இப்பொழுது அந்த பெண்ணை நினைவில் வைத்திருப்பீர்களோ இல்லையோ தெரியாது. அலுவலக வேலை நிமித்தமாய் மதுரை சென்ற போது அவளை பார்க்கிறேன். கையில் அழகான குழந்தை.

நண்பா உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டனும்”

நண்பா நீங்களும் அந்த பெண்ணும் பேசிக்கொண்டதை அசந்தர்ப்ப விதமாக கேட்டுள்ளேன்.

ஏனோ நண்பா அந்த பெண்ணை பார்த்ததும் மின் வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள்.

பார்க்காதது போல் போன என்னை அவள்தான் கூப்பிட்டு நிறுத்தினாள். கோவிலுக்கு வந்ததாயும், செளகரியமாய் இருப்பதாயும் சொன்னாள்.

இந்த பையன் அவருக்கு பொறந்ததுதான்” என்றாள். வேறென்ன முடிக்கிறேன் நண்பா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *