கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 3,283 
 

வேலையை முடித்து விட்டக் களைப்பு. கையில் காசில்லை. பெட்டிக் கடைக்கு வந்து ஒரு பீடியை வாங்கி தொங்கும் கயிற்று நெருப்பில் பற்றவைத்துக் கொண்டு அங்கு கிடந்த தினசரியை எடுத்து விரித்தேன்.

இரண்டாம் பக்கத்தில் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது.

‘இந்த புகைப்படத்தை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கிறதே. ! ‘யோசித்துக் கொண்டே அந்த படத்திற்கும் கீழிருக்கும் விளம்பரத்தைப் படித்தேன்.

‘என்னுடைய பர்ஸ் தவறிவிட்டது. அதில் இந்த மாதம் 30ந் தேதி வேலைக்குச் செல்ல வேண்டிய நேர்முகத் தேர்வின் அழைப்புக் கடிதம் இருக்கிறது. தயவு செய்து பர்ஸை எடுத்தவர்கள், பார்த்தவர்கள் அந்தக் கடிதத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தால் என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியம் கிடைக்கும். மேலும்…கடிதத்தைக் கொண்டுவந்து கொடுப்பதற்கான சிறு அன்பளிப்புத் தொகையையும் தங்களுக்கு அளிக்க தயாராய் இருக்கிறேன். ! ‘அதன் கீழே முகவரி தெளிவாக இருந்தது.

படித்து முடிக்கவும்…

‘அட ! இந்த பர்ஸ் நம் கையில் இருக்கிறதே ! ‘என்கிற நினைப்பு வரவும் சரியாக இருந்தது.

இந்த பர்ஸ் எனது கைக்கு வந்தது எதிர்பாராதது.

நான் தபால்காரன். பெட்டிகளில் சேர்ந்திருக்கும் தபால்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வரும் ஊழியன். நான்கு நாட்களுக்கு முன் எனது ஏரியாவில் ஒரு பெட்டியைத் திறந்து கை விட்டேன்.

வழ வழவென்று ஏதோ தட்டுப்பட்டது.

“ஐயோ பாம்பு !!” என்று பயந்து ,அலறி கையை வெடுக்கென்று வெளியே இழுத்தேன்.

ஆச்சரியம்! உள்ளிருந்து எந்த பாம்பும் வரவில்லை.

ஏன்.. என்ன காரணம்…? தபால்களையும் சேகரிக்க வேண்டுமே…! – குனிந்து பார்த்தேன்.

பர்ஸ் !

எந்த புண்ணியவானோ…பையிலிருக்கும் கடிதத்தை எடுத்துப் போடும் நினைப்பில் பர்சைப் போட்டுவிட்டு சென்று விட்டானா…? தெரிந்து செய்தானா..? தெரியாமல் செய்தானா..?

கடிதத்திற்குப் பதில் தவறுதலாக இதைப் போட்டிருந்தால்… கை விட்டு எடுக்க முடியாது. தபால் அலுவலகம் வந்து விபரம் தெரிவித்து….என்னை அழைத்து வந்து எடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை.

மாறாக கடிதம் போட்ட நினைப்பிலேயே சென்றிருந்தால்…. தேவை அறிந்து பாக்கெட்டில் கை விடும்போது உண்மை தெரியும். !

”ஐயோ…!!..” அலறி அடித்து வரவேண்டும் ! – எப்போது வருவான்….?!

இல்லை !….பாக்கெட் அடித்தவன் தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு ….பர்ஸ் தேவை இல்லை உரியவனிடம் போய் சேரட்டுமென்று விளையாட்டாகவோ யோக்கியமாகவோ போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும் !

– இப்படி பலவாறாக நினைத்து கடிதங்களோடு சேர்த்து எடுத்து பிரித்தேன்.

பளிச்சென்று பாஸ்போர்ட் சைசில் சிரித்த முகத்துடன் இளைஞன் புகைப்படம் .

அட ! மறதிக்கார படவா..! போட்டது எதுன்னு தெரியாம போன பரதேசி..! – பட்டென்று எனக்குள் இந்த வார்த்தைகள்தான் உதயமாகியது.

பணம் வைக்கும் அறைகளைப் பிரிக்க…பைசா இல்லை.

பிக்பாக்கெட் பரதேசி வேலை ! – புரிந்து விட்டது.

தூக்கி தூர தெருவில் எறியாமல் திருட்டு நாய் ஏன் பெட்டியில் கொண்டு வந்து போட்டது…? – எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே….

அடுத்த அறை தடுப்பை விரித்தேன். வெள்ளைத்தாள். பிரித்தேன். வேலைக்கான நேர்முக அழைப்புக் கடிதம்.

‘ம்ம்ம். ! திருடனுக்கு நல்லெண்ணம். தபால்காரர் கொண்டு சேர்த்து விடுவார் என்கிற புத்தி ! – புரிந்தது.

அட மடப்பயலே…! உன் புத்தி சரி. சைதாப்பேட்டை பெட்டியில் போட்டால் அது அமிஞ்சிக்கரை ஏரியாவுக்கு போக… அது என்ன தபால்தலைகள் ஒட்டிய கடிதமா, பார்சலா…? நினைப்பு வர….

கிடக்கட்டும் கழுதை என்று சைக்கிள் பெட்டியில் போட்டால்…. இதோ வெகுமதி. !

தகவல் தெரிவிக்காமல் நேரடியாக சென்று கொடுத்துவிட்டு திரும்பினால் அவன் கொடுக்கும் வெகுமதி மாதத்தின் மிச்ச நாட்களை ஓட்ட உதவும்.

உடனே வீட்டிற்குச் சென்று சைக்கிள் பெட்டியைத் திறந்து…பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு…பேருந்து ஏறி….நின்று கசங்கி….அமிஞ்சிக்க்கரை நிறுத்தத்தில் இறங்கி பாக்கெட்டிற்குள் கை விட்டேன்.

பர்ஸ் இல்லை! பேண்டில் பிளேடு போட்ட கிழிசல்! அதிரிச்சி ! அதிரிச்சி!!

‘எனக்கு சம்மானம் கிடைக்காமல் போகட்டும். இந்த பர்சின் கதி…?

குப்பைத் தொட்டிக்குப் போகுமா…? அனாதையாக வீசி எறியப்பட்ட வீதியில் கிடைக்குமா..? மீண்டும் எந்த தபால் பெட்டிக்காவது போகுமா..? எப்படியாவது இது உரியவன் கையில் உரிய நேரத்தில் கிடைத்து அவன் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்குமா…? வீட்டிற்குப் பேருந்தில் செல்ல உரிய பைசா இல்லையே..! எப்படி செல்ல…? ‘

அப்படியே நின்றேன். !!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *