“குக், கூ!” குயிலிக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 3,224 
 

அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு பல்வேறு அனுபவங்களைப் பெறுவது ஆச்சரியமாக…. இருக்கிறது.‍ மாலை நேரம்.இருள் மெல்ல, மெல்ல மங்கலாகக் கவியத் தொடங்கி இருந்தது.வீதிப்புறத்தில் சிறிய தொலைவிலிருந்து ” குக் கூ ,குக் கூ ! ” குயில் கூவுற குரல் கேட்டது.குயில் கூவுறாக்கும் என சீலன் நினைத்துக் கொண்டான்.” என்ன ஒரு கூவல் ! ,இது , ஒரு சிறுமி ஒருத்தி குயிலைப் போலக் கூவுறாள்.நல்ல குரல் வளம்.இவளைக் கண்டுப் பிடித்து சினிமாப்பாடல்களை பாட பழக்கினால்.கலக்குவாள்”என்றார் அம்மா.அம்மா,அராலிப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற மங்களம் ஆசிரியை .அவனும் அந்த பள்ளிக்கூடத்திலே தான் பத்தாம் வகுப்பைக் குறைத்து ஒன்பதாம் வகுப்பாக்கி இருந்த புதியகல்வித் திட்டத்தில் படித்திருந்தான்.பிறகு எங்கெங்கோ…?அதை பிறகுப் பார்ப்போம்.சும்மா சொல்லக் கூடாது. குயிலே தோற்று விடும்.அந்த மாதிரிக் கூவல் .அவன் உடனேயே வெளியே ஓடிப் போய் வீதியில் பார்த்தான்.அது மண் ஒழுங்கை,சிறிது சென்ற பிறகு ,மற்ற ஒழுங்கையை அடைந்து விடும்.சந்தியில் குடி நீர்க்குழாய் இருக்கிறது.அது சற்றுத் தொலைவு.இருள் கூட கூடி விட்டிருந்தது.சென்று வலது,இடது பார்த்து கண்டுப் பிடிப்பது சிரமம்.சிறுமி என்பதால் கூவி விட்டு ஓடி இருப்பாள். அது சரி ! ,குரல் சிறுமியின் குரல் ? என்பதை எப்படி கண்டு பிடித்தார்?.ஆச்சரியம் தான்.பெரிசுகளிற்கு இந்த விளையாட்டு சரி வராது.

தொடர்ந்து பலநாட்கள் தொடர்ச்சி …என்றில்லை, அந்தக் கூவல்கள் இருள் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருந்தன.கண்டு பிடிப்பது சுலபமாக இருக்கவில்லை. அம்மாவிற்கு நிருபர் மூளை,அந்தக்குயிக்காரி யார் என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.” ரீச்சர் ,இவள் நல்லாய்க் கூவுவாள்” எனச் சுகந்தியை அவள் தோழி சொல்லிக் காட்டிக் கொடுத்து விட்டாள். கறுத்த சிறுமி, கறுப்பென்றால் அதிகம் கலரைச் சேர்த்து விடாதீர்கள்.எல்லாருக்கும் பிடிக்கக் கூடியக் கறுப்பு தான். “நீயா ,அந்தக் குயில்”என அம்மா, அவளை ஆச்சரியத்துடன் அழைத்து விசாரித்தார்.அம்மாவை எல்லாச் சின்னப்பிள்ளைகளிற்கு மட்டுமில்லை,பெரிய மாணவர்களிற்கும் நன்கு பிடிக்கும்.அம்மா,படிப்பிக்க வந்த நாளே,பேருந்திலிருந்து உள்ளே நன்கு தள்ளி இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு நடந்துச் செல்கிற போது, சிறுவர்களிற்கு யார் எனத் தெரியாது,கிராமத்திற்கு வந்திருக்கிற புதியவராக இருக்க வேண்டும் என நினைத்த உதயன், தனது நண்பர்க்குழாமுடன் ஒரு மதகிலிருந்து கடந்து போக “மெல்லப் போ, மெல்லப் போ மெல்லிடை என்னவாகும்..”எனப் பாடினான்.

அம்மாவிற்கு சிரிப்பென்ற சிரிப்பு.அச்சமயம் அம்மா,ஒரு சுற்று பருத்தே இருந்தார்.அவர் ஒல்லி உடல்வாகுடையவர் இல்லை, பருத்தால் எப்படி இருக்கும்.அம்மாவை தோழிகள் கூட “குண்டம்மா “என்ற பட்டம் சூட்டி சிலவேளை அழைக்கிறவர்கள்.அதற்காக ஆகக் குண்டு என்றில்லை.கட்டையன் நெடுவல்.ஒல்லி,குண்டு ..இப்படித்தானே மனிதர்கள் பிறக்கிறவர்கள்;இருக்கிறார்கள்.பள்ளிக்கூடத்திற்கு வந்த பிறகே,பெடியள்களிற்கு அம்மாவை ரீச்சர் எனத் தெரியும்.அம்மாட வகுப்பு ஒன்றிலே உதனும் இருந்தான்.பள்ளிகூடத்தில் குழப்படிக்காரன் எனப் பேர் எடுத்தவன்.அம்மா,அவனை அழைத்து “எனக்கு முதல் நல்ல வரவேற்பு அளித்தவன் இவன் தான்,”எனக் கூறி “டேய், உனக்கு நல்ல நகைசுவை உணர்வு இருக்கிறதடா,இப்படித் தான் அப்பப்ப தோன்றிறதையும் வெளியில் துணிவாகத் தெரிவித்து விடவும் வேண்டும்.நீ எல்லாத்தையும் நோட்புக்கிலே எழுதி ,எழுதி வந்தாலே பெரிய நகைச்சுவை எழுத்தாளனாக வந்து விடுவாய் “என்று பாராட்டினார்.அவன் பிறகு நாடகங்களில் நடித்தும் கலக்கினான்.பாடசாலையிலிருந்த பாடக்கூடிய மாணவர்களையும் கண்டு பிடித்தார்.பாரதி பாட்டுக்காரன் சரஸ்வதிப்பூசை நேரங்களில் நல்லச் சினிமாப்பாடல்களை.., ” கற்பகவள்ளியின் பொற்பதம் பிடித்தே…” பாட வைத்து கலகலப்பூட்டினார்.அம்மாவிற்கு சிஸ்யப்பட்டாளம் என்று ஒன்றே ஏற்பட்டு விட்டு இருக்கின்றது.

பள்ளிக்கூடத்தில் நாடகங்களைப் பழக்கி மேடை ஏற்றுகிற ஆசிரியர்களும் இருந்தார்கள்.ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் கூட இருந்தார்.வாசிப்புப்பிரியராக இருந்தால் புதினப்பத்திரிகைகளில் அவரின் சிறுகதைகள்,நாவல்களை வாசிக்கலாம்.‌ ஈழத்தமிழர்கள் தான் பள்ளிப்புத்தகங்களை விட்டு வேற புத்தகங்களைத் தொட்டு விடாத கிணற்றுத்தவளைகளாக இருப்பவர்களாச்சுதே. நீங்கள் அப்படியே இருங்கள்.மிக மிக நல்ல ஒழுங்கு என்பது அது தான் !.உங்களிற்கு, அரசியலும் தெரியவரப் போவதிலை; விடுதலையும் தெரியப் போவதில்லை ; சிங்களவர்கள் , தமிழர்களைக் கொல்கிறதும் தெரியப் போவதில்லை ; நல்ல மனிதர்களும் கண்ணில் தெரியப் போவதில்லை. அராலிக் கூடத் தெரிய வரப்போவதில்லை.பள்ளிகூடத்திலே தான் இதற்கான ஊக்குவிப்புகள் நிகழ வேண்டும். இல்லாதிருப்பதன் ஒரு விளைவு தான் இது. சிங்கள நிலங்களிலே இருக்கிற இனவாத‌ இராட்சதப் புழுக்கள் தமிழ் நிலங்களைச் சாப்பிட்டு வருவதால் அது ஏற்பட வாய்ப்பில்லை .ஆனால், நாம், மாற்றங்கள் நோக்கியே பயணிக்க வேண்டும் !.

தவசீலன் , இயக்கத்தில் சேரமுதலே, இந்தத் ‘தோழர்’என்ற வார்த்தையை பல ரஸ்ய நாவல்களில் …அறிந்திருந்தான்.”ஓட்டம்,சைபீரியாம்கார்த்தியா”நாவல் தோழமையை அழகாக விளங்கப்படுத்துற ஒரு நாவல்.தாய்,மற்றும் வீரம் விளைந்தது…நாவல்களும் கூட தோழர்களின் அசைவியக்கத்தைக் கூறுகிற நாவல்கள்.’தோழர்’ என்பதற்குப் பல தகமைகள் வேண்டியிருந்தன.ஆனால்,வாசிப்பு பிரியர்களில்லாத சேர்ந்த நிறைய பெடியள்களிற்கு இயக்கம் சொல்லித் தான் தோழர் என்ற சொல்லே தெரியும்.தோழமை ஒருவித சகோதரத்துவத்தை வளர்த்துக் கொண்டு தான் வந்தது.ஆனால்,புத்திசாலித்தனமாக மனிதப் பலவினங்களை விலத்தி தம்மை வளர்த்து வாரவர்கள் என்ற விளக்கம் அவர்களிற்கு ஏற்பட்டிருக்கவில்லை.அதனாலே ,விமர்சனங்களும் அவர்களுக்குக் குறைவில்லை.இருந்தாலும், மக்களின் தோழனாக ..அவர்களின் செயல்களும் விதந்தோதப்பட்டுக் கொண்டிருந்தன.சீலனுக்கும் விடுதலைப் பற்றிய மார்சிச அறிவு குறைவு தான்.அவனும் இயக்கத்திலே இருந்து தான் அவற்றைக் கற்க வேண்டியவனாக இருந்தான்.தலைவர்கள் அறிவுடைய பிரிவாக வளர்த்தெடுக்க விரும்பினர்.ரஸ்யாவில் தொன்னூறு வீதமானவர்கள் கல்வி அறிவுடையவர்கள்.எல்லா விடுதலை அமைப்பினருக்கும் ரஸ்யப் புரட்சி தான் அடிப்படை.

தோழர்களின் வேலைத்திட்டங்கள்,செயற்பாடுகள் பிரச்சனைப்படுற,அனாதரவாக நிற்கிற பெடியள்,பெட்டைகளை எல்லாம் கவர்ந்தன.அவர்களை நாடுகிற போது ,அவர்களின் பிரதிநிதியாக சார்ப்பாக நின்று தீர்க்க முயல, நம்பிக்கைகள் கண்ணாமுஞ்சியாக எல்லை மீறி வளர்ந்தன.மல்லிகைக் கிராமத்தில் வீட்டுவேலைக்கு என இருந்த சந்தியா,மலையகச் சிறுமியிற்கு ,சிறிய வயசு,அவள் வயசொத்தப் பிள்ளைகள் செல்லமாக வளர ,தன்னிடம் வேலை வாங்குவது ஒரு மனத்தாங்கலை ஏற்படுத்தி இருந்தது.சீலனின் இயக்கத்தோழர் அண்ணா ஒருவரிடம் “என்னைக் கொடுமைப்படுத்துறார்கள்”என முறைப்பாடு செய்திருக்கிறாள்.இயக்கத்திடம் மகளிர் பிரிவும் இருந்தது.சில இடங்களில் இப்படியான மலையகச் சிறுவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் இயக்கத் தோழர்களாகவும் மாறி இருக்கிறார்கள் .மகளிர் பிரிவு இருந்தாலும், பெண்கள் விசயம் கஸ்டமானது. தோழர்களே மகளிருடன் பிழங்குவதை விலத்திக் கொண்டிருந்தனர்.எனவே ,வீட்டுகாரரிடம் பொறுப்பாளர் சில தோழர்களுடன் சென்று விசாரித்திருக்கிறார்.வீட்டுகாரர் மோசம் என்றில்லை. அவளை பள்ளிக்கூடமும் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.ஆனால்,உறவினர் இல்லாத…நிலமை மன உறுத்தலை ஏற்படுத்தும் தானே.ஆகச்சிறிய வயசு. அவர்களும் நல்லவிதமாக பிழங்குவதாகக் கூற ,”ஏதும் பிரச்சனை என்றால் தோழர் அண்ணாவிடம் கூறலாம்”என்று சிறுமிக்கும் தெரிவித்து,”மக‌ளிர் பிரிவிடம் கொண்டு செல்லாமல் நடவுங்கள்”என வீட்டுக்காரருக்கும் கூறி தீர்த்திருந்தார்கள்.கிராமத்தில் எந்த செய்தியும் எல்லாருக்கும் தெரிந்து விடும்.அது ,குயிலிக்கும் தெரிய வர‌ அயலிலிருந்த சீலன் அண்ணா நல்லவர் என்ற எண்ணம் விழ,அந்த வீட்டடியாலே போற போது கூவி இருக்கிறாள். ” சீலன் அண்ணை , நல்லவர் எனக் கேள்விப்பட்டேன். அது தான் உங்க வீட்டடியிலே வாரப் போது கூவுறேன்” என்றாள் கபடமில்லாமல்.காகம் இருக்க, பனம்பழம் விழுந்த கதை !

அவனுடைய அரசியல் அமைப்புக்குழுவும் பரவாய்யில்லை தான்.கிராமத்தவர் பிரச்சனைகளிற்கு சம்பந்தப்பட்டவர்களை ஏதாவது கோயில் தேர்முட்டியில்,அல்லது வாசிகசாலையில் கூட்டி நேரே கதைக்க வைத்து தீர்ப்பதில் நாட்டம் கொண்டிருந்தது.மேலிடத்திற்குப் கொண்டுச் சென்றால் சாம,தான தண்ட முறைகளை எல்லாம் பாவிப்பார்கள் என்று எச்சரிக்க , அச்சத்தின் காரணமாக ஓரளவு பொது நியாயத்திற்கு உடன்பட்டு தீர்த்துக் கொண்டார்கள் தான்.ஆனால்,சிலருக்கு தோழர்களை விட இயக்க நடைமுறைகள் நன்கு தெரிந்திருந்தன.அது சிக்கலையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது . மேலிடம், அவர்களை முகாமிற்கு கூட்டிச் சென்றே தீர்க்க வேண்டியிருந்தது.கத்திக் குத்துக்களை நிகழ்த்துற சண்டியர் எவருக்குமே பெடியள் பயப்படவில்லை.எல்லை மீறினால் விசாரணை கூட இல்லாமல் வெடி விழுந்து விடும்.சண்டியரிடமிருக்கிற ஆயுதங்களை விட இப்ப‌, இவர்களிடம் ஆயுதங்கள் கூட இருந்தன. கப்சிப் தான். ரயில் வண்டி, பாதையிலும் , பாதையை விலத்தியும் ஓடிக் கொண்டிருந்தது.

அம்மா,அவளிடம் பேட்டியே எடுத்து விட்டார். “எடியே அப்படியே குயிலே கூவுறது போல …என்னையே ஏமாத்தி விட்டாயே,எங்கையடி இப்படிக் கூவப் பழகினாய்?”என்று கேட்டார்.அவளுக்கு உற்சாகம் பீரிட்டது.ரீச்சரே பாராட்டுறாரே!.”எல்லாத்திற்கும் இவள், தான் காரணம்”என்று தோழியைக் காட்டினாள். அவள் சிரித்துக் கொண்டாள். ” எங்க வீட்டிலே ,மாமரத்திலே ,குயில் வந்தமர்ந்து கூவுறதை நானும் இவளும் பார்த்தோம்.அது கொஞ்ச நேரம் அங்க ,இங்க பார்த்து ஆறுதலாவே கூவத் தொடங்கும்.அதோட சேர்ந்து கூவ வாய் எடுத்தேன். இவள் ‘கூவாதே’ என‌ வாய்யைப் பொத்தித் தடுத்து விட்டாள் .குயிலுக்கு எப்பவும் போட்டி பிடிக்காது. வராமல் வேற இடத்திற்குப் போய் விடும் ‘…எனச் சைகையால் பேசினாள். கூவுறதைக் கலைக்காமல் கேட்டே வாரோம். “குயில் ரீச்சர்”, இப்பவும் பாடம் எடுக்கிறார் தான்”என்று கூறிச் சிரித்தாள்.குடவைக் கிணறுப் பக்கம் வார போது,வயற்புறம் வார போதே கூவுவேன்.அப்பவே, நல்லாய் இருக்கிறது என்றாள்.அப்படியே பயிற்சி எடுக்கிறேன்.இவளும் கூவிப் பார்த்தாள். திருப்தி இல்லை. என்னையே கூவப் பழக்கிறாள்.எனக்கு வீட்டிலேயும் இரண்டு ரீச்சர்கள். “என்றாள்.

அம்மாவிற்கு சிரிப்பு வந்தது.”எல்லாருமே நல்லவர்கள் தானே.சீலனிடம் அப்படி என்னத்தைக் புதிதாய்க் கண்டாய்?என்று கேட்டார்.”அந்த அண்ணைமார் சந்தியாவிற்கு பிரச்சனை என்ற போது ,வீட்டிலே போய் கதைக்கவில்லையா?.” என்று அவரையேக் கேட்டாள். இவர் அவனை ஒரு திசை மாறிய பறவை எனக் கவலைப்படுறவர். இந்த அயலிலே, இவனுக்கு மட்டும் என்ன வந்தது? அவன் மட்டத்திலே ஒருத்தருமே இயக்கம் எனப் போய் இருக்கவில்லை.எப்பவுமே இவன் குழப்புறவன். அவள் சீலனை அல்ல ,பொதுவாக‌ இயக்கத் தோழர்களையே நல்ல அண்ணைமார் என்று நினைக்கிறாள்.

அவர், இவர்களின் சிறுபிள்ளை புரட்சியை ,வேளாண்மையை வீடு வந்து சேருமா? எனவேக் கவலைப்படுகிறார். பெருமூச்சும் விடுகிறார் .

“சுட்டி , நீ கூவு !நான் ரசிப்பேன்.போய் இருந்து பாடத்தையும் நல்லாய் கவனி.கூவுறது போல உன்னால் படிப்பிலேயும் கலக்க முடியுமடி”என்று அன்புடன் சொல்லி பாடம் நடத்தினார்.அவருள் முதல் தடவையாக ‘பெடியள், ஒருவேளை விடுதலையை வென்று விடுவார்களோ?’என்ற எண்ணம் ஏற்பட்டது. படிக்கிற பெடியள்களை ஆயுதம் தூக்கிப் போராட வைத்த அரசாங்கம் இராட்சதப்புழுவாக‌ கொளுத்துப் போய்க் கிடக்கிறது . நம்பிக்கை வரவில்லை. பாரமான பொருட்களைத் தூக்க மாட்டாத இவர்களா ஆயுதங்களைப் போய்த் தூக்கப் போறார்கள்? .ஆனால்,சுகந்தியைப் போல , இவர்களுக்கே தெரியாத மனித ஆற்றல்களை தோழர்கள் வெளிப்படுத்த,வெளிப்ப‌டுத்த …உடலும் ,மனமும் உறுதிப்பட சமமாகப் போராட்டத் தொடங்கி விடுவார்களோ?மனிதர்களாக உருப்பெற்று விடுவார்களோ. போராட்டத்தையும் தளும்பாதுப் பாதுகாத்தால் தானே…அடுத்தச் சந்ததி நடத்தி முடிப்பார்கள். இயக்க மோதல் என்று ஒன்று எழுவதும் அச்சமூட்டுகிறது உரமாகப் போக இருக்கிற தன் மகனை நினைத்து கவலையும் ஏற்பட்டது. அவரும் இறந்து விட்டார். என்னால் தனித்தும் ஒன்றும் செய்ய முடியாது.

அவர் நினைக்கிறதும் சரியே !, சிங்கள ஆமிகளுக்கும் பலம் தீடிரென குதிர்ந்ததில்லை தான். பயிற்சியாலே, பயிற்சியாலே தான் ஏற்பட்டது.அரசாங்கம் அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து பழக்கிறது. இறந்தாலும் இறால் போட்டு மீன் பிடிப்பது போல‌ பெனிவிட்சுகளையும் அள்ளி வழங்குகின்றது‌. இலங்கையின் “கதாநாயகர்கள்” எனப் பழைய கைமுனுப் பட்டங்ளையும் வழங்கி போதையிலேயே வைத்திருக்கின்றது. ‘தமிழுக்கு அமுதென்றுப் பெயர்..’என்ற பாடலை, ‘ஈழம்’என்ற சொல்லை.. வானொலியில் ,தொலைக்காட்சியில் எல்லாம் தடைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்தத் தடைகளே தமிழர்களை வெளிநாடுகளில் ஊடகத்துறையில் சக்கைபோட வைக்கிறது. எல்லாம் குழப்ப‌ நிலை தான். ஒருவேளை, ஒரு காலத்தில்…. வென்றெடுத்தும் விடலாம்.’தனிச்சசிங்களம்’ என்ற ஆகங்காரம் அழிய மாட்டாதது. அதைக் கைக்கட்டி,வாய்ப் பொத்தி நிற்க வைத்தால் தான் உண்டு கடவுள், எல்லா மனிதர்களை சமமானவர்களாகவே படைத்தவர். இவர்களுள்ளும் எவரையும் வீழ்த்தக் கூடிய ஆற்றல்களும் இருக்கின்றன தான். சகதோழர்களால் அவை,பட்டை தீட்டப்பட்டு,தீட்டப்பட்டு இனம் கண்டு,கண்டு என்றோ ஒரு காலத்தில் விஸ்பரூபமாகவும் வெளிப்படவும் செய்யலாம். அதற்குள் இந்த இராட்சதப்புழுக்கள், எவ்வளவு தமிழ் மண்ணைத் தின்று விடப் போகிறதோ ? கடவுளின் கணக்கு எப்படி,எப்படி எல்லாம் இருக்கிறதோ? “சிவ,சிவா.!”எனக் கடவுளிலே பாரத்தைப் போட்டு விட்டு ஆசிரியப் பணியில் கவத்தைச் செலுத்தினார் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *