கருக்கொண்ட மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 300 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் பத்து

‘பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்’ அங்குரார்ப் பணம் செய்வதற்கு முன் அதன் புனிதமான நோக்கங்கள் பற்றி துண்டுப் பிரசுரம், அங்கத்துவப்படிவம் முதலியன ‘கொம்பி யூட்டர் மூலம் மிகக் கவர்ச்சியாக தயாரித்து அவசரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்து நிர்வாக சபைகளுக்கும், தனிப் பட்டவர்களுக்கும் அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. 

அறுவடைக்குப் பின் கிரிபண்டா ஒரு புத்தம் புதிய ‘டொயோ ட்டா’ வேன் வாங்கக்கூடிய அளவுக்கு, அந்த ஆண்டு ‘பட்ஜெட் டில்’ ஒரு சிறு சமாளிப்பு, எவரையும் பாதிக்காத முறையில் பிரதேசத்தைச் சுற்றி கிராமம் கிராமமாக பிரச்சாரம் கனல் பறந்து கொண்டிருந்தது. அமரதாசவின் நண்பர்களும், ஹலீம்தீன் நண்பர்களும் முழுமூச்சாய் செயற்பட்டனர். தேர்தல் காலங் களில், கடைசி கட்டத்தில் வாக்கு வேட்டைக்கு ஆலாய்ப் பறப் பது போல் இருந்தது அது. ஆனால் உண்மையான புரிந்துணர் வுடன் ஒவ்வொரு கிராமத்திலும் அங்கத்தவர்கள் சேர்ந்த வண்ண மிருந்தனர். கணிசமான அளவு அங்கத்தவர்கள் அணி திரண்டனர். அது ஒரு புறமிருக்க… 

கிராமத்தில் குளக்காட்டுப் பிரதேச, விவசாயம் தொடர்பாக, விவசாயக் கழகத்திற்கு, நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமான பங்குப்பணம் சேர்ந்து விட்டிருந்தது. 

காடு வெட்டும் படலம்மும்முரமாக இயங்கிக் கொண்டிருந் ததால்… அபூதாலிப் விவசாயிகள் கழகத்தின் பொருளாளன் என்ற முறையில் அவ்வப்போது சேரும் தொகைகளுக்கு பற்றுச் சீட்டு கொடுத்து பணத்தை உடனே கிராமிய வங்கியில் வைப்பு செய்வதிலும், செலவுகளுக்கு தேவையான பணத்தை மீட்ப திலும் மிகக் கவனமாய் இயங்கிக் கொண்டிருந்தான். பெரும் பாலும் காடு வெட்டும் வேலை முடியுந்தறுவாயில் இருந்தது. சிங்கள முஸ்லிம் கிராமவாசிகள் இப்பொழுது குளத்தைத் தற்காலிகமாகத் திருத்தி, உழவுக்குத் தேவையான நீரை சேர்ப்ப தற்கு ஆயத்தமானார்கள். 

அரசாங்கம் செய்வதாயிருந்தால் அந்தக் குளத்தை நிரந்தர மாகக் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் குளக்காட்டுப் பிரதேசத்திற்கு ஒரு மாய்மைப் பிரச்சினை தொக்கி நிற்பதால் இப்போதே ஒன்றும் நிரந்தரமாகச் செய்வதற்கில்லை. 

“…நமட முன்னவங்க இங்க சேன கொத்தி அல்லாட்டி வயல் வேல செஞ்சதற்கு தடயங்கள் கிடக்க.?” என்று ஊரவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை பகர்வதற்கு இனித் தான் ஆதாரங்கள் தேட வேண்டும். அப்படியே இருந்தாலும் உரிமை கோர முடியாது. அரசாங்கத்திற்குரிய காடு. அரசேகாணி இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் நியாயமானது. 

ஹலீம்தீன், அமரதாச குழுவினர் இப்படித்தான் யோசித்தனர். வானம் பார்த்த பூமிக்கு ஆதரவாக கார்மேகங்கள் அவ்வப் போது வட்டமிட்டு மாரிகாலத்தின் வருகைக்கு “இதோ நான் வரப்போகிறேன். நான் தயார். நீங்கள் தயாரா…? விவசாயப் பெருமக்களே, உங்கள் வயல்களுக்குப் பொழியட்டுமா….? உங்கள் விவசாய முயற்சிகள் வெல்லுமா…? வெல்க” என்று கட்டியம் கூறின. 

சில நாட்களுக்குப் பிறகு ‘ஏதோ ஒரு பிரச்சினை என்று கேள்விப்பட்டதும் அன்று காலையிலேயே ஹலீம்தீனும் யாசீ னும் அவசரமாக அமரதாசவைச் சந்திக்கப் போயிருந்தார்கள். 

மகன் இப்படி பரபரப்புடன் சென்றது அப்துல் மஜீதுக்கும் யோசனையாய் இருந்தது. 

நண்பகல் பதினொரு மணியளவில் கிரிபண்டாவின் வேன் வந்து பள்ளி வாசலுக்கு அருகில் நின்றது. 

கிராமசேவகர், கிரிபண்டா, அமரதாச, ஹலீம்தீன், யாசீன் முதலியோர் இறங்கி வருவதைக் கண்டதும் அப்துல் மஜீத் பரபரப்படைந்தார். ‘எங்கேயோ ஏதோ ஒரு பிழை நடந்தி ருக்கு…’ என்று அவரது உள்மனம் குறுகுறுத்தது. 

எல்லாரும் வந்து இருக்கை கொண்டனர். சற்றுநேரத்தில் சமதுவும், சவாலும் வந்து சேர்ந்தனர். கமரும், சேகுவும் வந்து கொண்டிருந்தனர். 

கிராமசேவகர் எல்லார் முன்னிலையிலும் குளக்காட்டுப் பிர தேசம் சம்பந்தமாக தமக்கு கிடைத்துள்ள ‘பெட்டிசனின்’ உள்ளடக்கத்தை எடுத்துரைத்தார். 

‘நாம் நமது எல்லைப் பிரச்சினையை ஒதுக்கிவிட்டு, ஒருங் கிணைந்து, கிராம சேவகரின் அனுமதியைப் பெற்று, நாமே குளக்காட்டைப் பிரித்து, காடு வெட்டி முடித்திருக்கும் இவ் வேளையில் இப்படி ஒரு பெட்டிசனை எழுதியது யாராயிருக்க லாம்? என்பதே அனைவரது மூளையையும் குடைந்து கொண்டிருந்தது… 

சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள அம்முறைப் பாட்டை ஒரு முறை கிராமசேவகர் வாசித்துக்காட்டினார். 

அவ்வுள்ளடக்கத்தின் சுருக்கம் இதுதான் – 

குளக்காட்டுப் பிரதேசம் சிங்கள கிராமத்திற்குரியது. அங்கு முஸ்லிம் கிராமவாசிகளுக்கு காடுவெட்டவோ, விவசாயம் செய்யவோ எவ்வித உரிமையும் இல்லை. 

அவ்வாறு செய்ய முனைந்தால் அது தண்டனைக்குரிய பார தூரமான குற்றம். 

கிராமசேவகர் உடனடியாக விசாரணை செய்து தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும். அப்புறம் பொலிசில் முறைப்பாடு பதிந்து ஆதாரங்களுடன் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். 

முஸ்லிம் கிராமவாசிகள் சில மூத்த சிங்களவர்களை தமது கைக்குள் இணைத்து, குளக்காட்டுப் பிரதேசத்தை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, காடுவெட்டி விவசாயம் செய்ய எத்தனிப்பு கள் நடக்கின்றன. இது முழு சிங்கள கிராமத்தினதும் ஏகோபித்த விருப்பத்தோடு அல்ல. இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது. 

எல்லைகளை நிர்ணயிக்க வேண்டுமானால் நில அளவை யாளர்களைக் கொண்டு, முழு குளக்காட்டுப் பிரதேசத்தையும் அளந்து ஒரு நிரந்தரமான எல்லையை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். அதைவிட்டு வெறுமனே காடு முழுவதையும் சம மாகப் பிரித்துக் கொள்வது என்பது சூழ்ச்சிகரமான செயல். 

தற்பொழுது தாமே சமமாகப் பிரித்துக் கொண்டதை அப்ப டியே விட்டு விட்டால் காலப்போக்கில், அல்லது அடுத்தடுத்த தலைமுறைகளில் அவையே நிரந்தரமான எல்லை நிர்ணயமாக நிலைத்து விடும். 

தற்போது கிராம சேவகராயிருக்கும் தாங்களும், தங்களுக்கு முன் இருந்தவரும் அவருக்கு முன் இருந்தவரும் குளக்காட்டு எல்லையை அளந்து, உத்தியோக பூர்வமாக, ஒரு நிரந்தர ‘கொங் கிறீட்’ கல்லை அடையாளமாக நடுவதற்கு பின்னிற்பதன் மர்மம் என்னவோ.”

அந்தப் பெட்டிசனில் அதற்கு மேல் எழுதியிருப்பவை அனைத் தும் அபாண்டங்கள். அவற்றை பகிரங்கமாக வாசிக்க கிராம சேவகர் விரும்பவில்லை. 

இறுதியில் கிராம சேவகர்கள் மீதும் குற்றம் காணும் தோரணை இருப்பதால் அவர் உள்ளூர உசாராகிவிட்டிருந்தார். 

சற்றுநேரம் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. மௌனம் கணங்களாய் நீடித்துக் கொண்டிருந்ததை அவரே உடைத்து, ஹலீம்தீனின் முதுகுகளில் தட்டிக்கொடுத்து, தைரியமூட்டும் வார்த்தைகளை உதிர்ந்தார். 

“நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள். நேர்மையும் சத்திய மும் எங்கள் பக்கம் இருக்கிறது…அத்துடன் என்னைப் பொறுத்த வரையில் ஓரளவு துணிச்சலும் இருக்கிறது. இந்தமாதிரி மொட் டைக் கடதாசிகளுக்கு நான் பயப்படப் போவதில்லை. அப்படி இல்லாவிட்டால் நான் இந்தத் தொழிலுக்கு வந்திருக்க மாட் டேன். ‘ராஜகாரிய’ சரியாக செய்ய வேண்டும். நான் இன்று தொடக்கம் இது குறித்து நடவடிக்கை எடுப்பேன். ஆனால் நீங்கள் எல்லாரும் குழம்பிவிடாமல் ஓர் உதவி செய்யவேண் டும்….. அதுதான் நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். கொஞ்சம் பொறுமையாக…. அது உங்களால் முடியுமா…? கேள்விக்குறியோடு நின்றார் கிராம சேவகர். 

“…ஓ…நாங்க தயார். என்ன செய்ய வேணும்…?” அப்துல் மஜீத் குறுக்கிட்டார். 

எல்லாரும் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டனர். 

இதில் அடிநாதமாக ஒலிப்பது எல்லைப் பிரச்சினை. உரிய விதத்தில் தீர்த்து அடையாளம் போட்டு விட்டால் எல்லாவற் றிற்கும் விடிவு பிறந்து விடும். நீங்களும் எனது அனுமதியைப் பெற்றுத்தான் பெருந்தொகையான பணத்தைப் போட்டு காடு வெட்டியிருக்கிறீர்கள். நானும் அனுமதி அளித்தது சும்மா…. இல்ல… தகுந்த ஆதாரத்துடன்தான்…. ஆக நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் நீங்கள் காடு வெட்டுவதை நாளை தொடக்கம் நான் சொல்லும் வரைக்கும் நிப்பாட்டி வைத்தால்… இதன் பின்னணியை நன்கு படித்து ஆராய்ந்து, சுமுகமான முறையில் குளக்காட்டு பிரதேச எல்லையை அடையாளம் கண்டு நிரந்தரமாக கொங்கிறீட் தூண்களை போட்டு விடுவேன். எக்காலத்திலும் பிரச்சினை வராதபடிக்கு நீங்கள் செலவழித்த பணத்திற்கும் நஷ்ட ஈடுகேட்டு வழக்குத் தொடரவும், நானே பொறுப்பு. நீங்கள் பட்ட சிரமம் இலேசானதல்ல.ஆனால் அப்படி ஒன்றும் வராது…. நீங்கள் காட்டை பிரித்திருக்கும் முறையும் நூற்றுக்கு நூறு சரி…. உங்கள் அனுபவத்தில் ஒரு துளியேனும் நில அளவையாளர்களுக்கு இல்லை… ஆகவே தான் நான் சொல்றன் நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்…. உங்கள் பொறுமையும் ஒத்துழைப்பும் தான் தேவை… 

“எங்கட பெட்டிசன் வேலை செய்யுது…..” என்று அவர்கள் ஆனந்தப் பட்டுக் கொண்டிருக்கட்டும். அதற்கு நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து உண்மையை நிலை நாட்டிவிட்டால் அந்த உண்மை பெட்டிசன்காரர்களை சுட்டெரித்துவிடும்….” 

உணர்ச்சிவசப்பட்ட ஒரு நீண்ட பிரசங்கத்தையே நிகழ்த்தி விட்டு கிராமசேவகர், புறப்படுவதற்காக நாற்காலியை விட்டு எழுந்தவர், ஹலீமைப் பார்த்து ‘ஹலீம்தீன் இது ஒரு அலுவலக விடயம். இதைத் தீர்க்கலாம். இதற்காக ஊரைக் கூட்டி, கிராமம் முழுக்க எல்லாருடனும் கலந்து பேச வேண்டிய அவசியம் இல்ல… அப்படிச் செய்வதால் விவசாயிகள் வீணாக உணர்ச்சி வசப்பட்டு மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமை யும். பெட்டிசன்காரர்களின் நோக்கமும் அதுவாகத்தானிரு க்கும்… சில விஷயங்களை ‘டிஸ்கஸ்’ பண்ணக் கூடாது. சரியாக ஒரு வாரத்தில் நீங்களும் அமரதாசவும், பின்னேரத்தில் காரியால யத்திற்கு வாருங்கள். 

கிராமசேவகருடன் கிரிபண்டா,அமரதாச,சமதுவிதானை யாசீன் முதலியோரை ஏற்றிக் கொண்டு ‘டொயோட்டா’ வேன் மிக அவசரமாகப் புறப்பட்டது. 

அத்தியாயம் பதினொன்று 

மறுநாள் மாலை சிங்கள கிராமத்து நிர்வாகிகள் கிரிபண்டா வின்தலைமையில் அப்துல் மஜீதின் இல்லத்திற்கு வந்திருந்தனர். ‘நாங்க வயலுக்கு அடிக்கிற கிருமிநாசினி போலத்தான் இந்த ‘பெட்டிசன்’ இரு கிராமங்களுக்கு இடையில மலர்ந்துள்ள புரிந்து ணர்வையும் மனித நேயத்தையும் முளையிலேயே கொன்று போடவே இந்தப் பெட்டிசன எழுதியிருக்கிறாக.” 

கிரிபண்டா தன் கருத்தை முன் வைத்தான். அமர, பிங்காமி, விக்டர் போன்றோரும் வேறு வேறு கோணங்களிலிருந்து தமது அபிப்பிராயங்களை சமர்ப்பித்து இந்த அற்பத்தனமான செயலி னால் எவரும் மன ஆதங்கம் கொள்ளத் தேவையில்லை என்று வலியுறுத்தினர். 

“குணத்திலக்கா சரிப்பட்டு வர மாட்டான் என்று சமரசிங்கா இப்பொழுது உக்குராலவை பொக்கட்டுக்குள் போட்டு வைத்தி ருக்கிறான். அவனும் ஓரளவு படித்தவன்தான். ஆனால் அவர்கள் தான் எழுதினார்கள் என்று கூறுவதற்கும் நாம் இன்னும் ஆராய வேண்டியிருக்கு.”

‘உக்குராலவிடம் துவேஷம் கிடையாது. ஆனால், அது சாய்ற பக்கம் சாய்ற மாடு. தனக்கென ஒரு சிந்தனைத்தெளிவு இல்லை. சமரசிங்காவுக்கு எப்படியும் ஒரு ‘சப்போர்ட் வேணும் அவ்வளவுதான். இந்தப் பெட்டிசனுக்கு ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை பெறப்பட்டிருக்கலாம். எங்கட கிராமங்களில் சட்டத்தரணிகள் இன்னும் தோன்றவில்லை. அனுராதபுர நகரத்திற்குப் போயிருக்கலாம். காலப்போக்கில் எல்லாம் வெளிச்சத் திற்கு வரத்தான் போகின்றன. கிராம சேவகர் சொன்ன மாதிரி இவ்விடயமாக நாம கண்ட கண்ட எடங்களில் கூட்டம் கூடி ஆராய்ந்து பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கப்படா. வெளியில் அக்கறையில்லாதவங்க போல காட்டிக் கொண்டு உள்ளுக்கு நாம அதிக அக்கறையுடன் அணுகி இப்பிரச்சினையிலிருந்து நாம விடுவித்துக் கொள்ள வேணும்…”

இப்படியாக அவர்களுடைய கருத்துக்கள் தொனித்தன. 

யார் எழுதின எண்டு மண்டையப் போட்டு உடைக்கத் தேவையில்லை. இதன் மூலம் நாம் எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கு…”

“அது சரி…. அந்த நிலையிலிருந்து தான் நாம பரிசீலனை செய்ய வேணும்” 

“எதற்கும் நாம உறுதியாக இருக்க வேணும்…..நாகரிக மாகப் பழிவாங்க பெட்டிசன் ஒரு நல்ல ஆயுதம்”. 

“ஒரு சாதாரண பெட்டிசனுக்காக நாம பின் நிற்கவோ…. எடுத்த ஒருமைப்பாட்டு முயற்சிகளில் தளர்ந்து விடவோ கூடாது…… ” நீண்ட நேரம் அளவளாவிய சிங்கள கிராமவாசிகள் புறப்படுவதற்கு முன் கிரிபண்டா கூறினான்; 

“இப்படியான பெட்டிசன்களுக்கு அடிமைப்பட வேண் டாம். இன்று எங்கு பார்த்தாலும் சின்னத்தனங்கள் கூடி, கூடிப் போய் பெருந்தன்மைகளை மூடி மறைத்து விட்டன. தோண்டித் தோண்டிப் பார்க்கும் அளவுக்கு பெருந்தன்மையான செயல்கள் வயல்களுக்கு அடியில் புதைபொருளாகிக் கொண்டிருக்கு.” 

என்று கிரிபண்டா அனுபவ வாயிலாக கற்று, கூறியது ‘பெருந் தன்மைக்கு ஒரு வரைவிலக்கணம் போல் அமைந்தது. 

கிரிபண்டாவின் வேன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந் ததைப் பலரும் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

சிறிது நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் உரையாடல்கள் தொடர்ந்தன; 

யாசீன் கூறினான்- 

“கிராம சேவகர் பண்டாரமிக நல்ல மனிதர். மனித நேயமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆள். முந்தி உள்ளவர்களிலும் பார்க்க எவ்வளவோ நேர்மையாக வேலை செய்றவர்…”

“சென்ற வருட இறுதியில் தான் மாற்றலாகி வந்தவர். மலைநாடு கொத்மலையைச் சேர்ந்தவராம்…” என்று அறிமுகப் படுத்தினான் ஹலீம்தீன். 

அவர் பதவியேற்ற ஓரிரு மாதங்களில் நாம நம்மடமாய்மை பிரச்சினையை எழுத்துமூலம் கொடுத்திருந்தா கரியம், இந்த நேரம் ஒரு சுமுகமான முடிவு கிடைத்திருக்கும். நாமதான் விட்டு விட்டோம்… 

“இப்பவும் ஒண்டும் மோசம் போக இல்ல…ஒரு கடித த்தை… அனுராதபுரம் போய் கொம்பியூட்டர் செய்து கொண்டு வந்து கொடுத்து…. கொஞ்ச கால அவகாசம் கொடுத்தா… எல்லாம் சரியா வரும். 

ஹலீம்தீனின் குரலில் உறுதியான நம்பிக்கை தொனித்தது.

நடைமுறையிலுள்ள அல்லது ஆளும் கட்சி அல்லது அரசு வகுக்கும் சட்டதிட்டங்களைகிராம மட்டத்தில் அமுலாக்கவும், மக்கள் மத்தியில் சமாதானத்தை நிலை நாட்டவும் அயராது பாடுபடுபவர் கிராம சேவகர் பண்டார. 

“நாம கிராம சேவகரின் அனுமதிக் கடிதத்துடன்தான் ஒப்பந் தம் எழுதி கைச்சாத்திட்டிருக்கிறோம்…. இது பெட்டிசன் காரர்களுக்குத் தெரியாது….” என்றான் யாசீன். 

ஹலீம்தீன் ஒரு யோசனை கூறினான். 

நாம அந்த ஒப்பந்தத்தோட இணைத்துக் கொள்ள வேண்டி… நாமும் ஓர் ஆழமான கடிதத்தை எழுதி… தேவை ஏற்பட்டா ஒரு சட்டத்தரணியின் ஆலோசனையோட தயாரித்து இரகசியமாக ஒவ்வொரு பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட கிராமவாசிகளிடமிருந்து கையொப்பத்தையும் எடுத்து விட வேண்டும்…. 

“அப்படிச் செய்வதால… முஸ்லிம்கள் ஒரு சில சிங்கள கிராம வாசிகளை கைக்குள் போட்டுக் கொண்டார்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்து விடலாம்”-… என்றான் சமது விதானை. 

“வேறு என்ன திருத்திக் கொள்ள வேண்டியிருக்கு…?” என்று கேட்டான் கமர். 

“சேவயர கொண்டு அளந்து நிரந்தரமாக எல்லைகளுக்கு கொங்கிறீட் தூண்கள் போட்டுவிட்டா வேறு பிரச்சினைகள் ஒன்றும் இல்ல….” என்றான் சேகு. 

“அதுக்குத்தான் கிராமசேவகர் உந்தப்பட்டுள்ளார்…”

“…அத்துடன் அனைத்து சிங்கள கிராமவாசிகளின் ஏகோ பித்த கருத்தாக அது இருக்கும்” என்றான் யாசீன். 

“…ஆக நிரந்தர மாய்மையும் கையொப்ப வேட்டையும் வெற்றிகரமாக முடிந்து விட்டா எல்லாம் சரி… ஆதாரங்கள்…. தவிர அந்தப் பெரிய பெட்டிசனில் வேறு ஒன்றும் இல்ல….” என்றான் அன்சார்டீன். 

“எல்லாம் நன்மைக்குத்தான் நடக்குது, குளக்காட்டு பிர தேசத்திற்கு ஒரு நிரந்தர மாய்மைய போட வேணும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. எந்த நேரமும் கிராமசேவகரோட இருக்கணும்…. அவருக்கு உதவி செய்யணும்….. எப்படியும் போட்டு விட்டால் அது நிரந்தர நிம்மதி…. இது விசயமா வரும் செலவுகளுக்கு நான் பொறுப் பேற்கிறன்….” என்றார் அஹ்மதுலெப்பை

மற்றுமொரு சந்தேகம் எழுந்தது. 

“காடு வெட்டி இரு பகுதியாரும் துப்பரவாக வெளிசாக்கிப் போட்டாங்க. இப்ப பிரிக்கிற நேரத்தில, வெளிசாக்கின பகுதி அவர்களுக்கோ…. அவகட பகுதி எங்களுக்கோ வந்தாகரியம் என்ன செய்ற..?” 

“செலவுப்பணம், செலவுப்பணம். ” உறுதியாக சொல்லி விட்டார் பண்டார. 

அன்று இரவு ஒன்பது மணி தொடக்கம் பன்னிரண்டு மணி வரைக்கும், சகல கிராமவாசிகளும் இல்லங்களில் இருக்கும் நேரத்தில் ஒப்பந்தத்திற்கான கையொப்ப வேட்டை வெற்றி கரமாக நடந்து முடிந்தது. இச்சந்தர்ப்பத்தில் சேகு தனது அபி மான கவிஞரின் இரண்டடிகளை நினைவு கூர்ந்தான்: 

இரவில் கிடைத்தது இன்னும் விடியவில்லை…. ”அப்படிச் சொல்லக் கூடாது” என்றான் அன்சார்டீன். 

“அப்ப எப்படிச் சொல்ல வேணும்…..?” 

“இரவில் கிடைத்தது, விரைவில் விடியும்…..” என்றான் அன்சார்டீன். 

எல்லாரும் சிரித்து ரசித்தனர். 

“அட… சேகுவுக்கு எதிராக மற்றுமொரு புதுக்கவிஞரா?” என்று அவனுக்குக் கோபமூட்டினர் நண்பர்கள். 

சிங்கள கிராமத்திலும் கையொப்ப வேட்டை வேறு விதமாக எடுப்பதாக உறுதியளித்துச் சென்றிருந்தனர். 

திட்டமிட்டிருந்தபடி அன்று ஹலீம்தீனும் அமரதாசவும் கிராமசேவகர் பண்டாரவைச் சந்திக்கச் சென்றிருந்தனர். ஆனால் அவர் தனது அலுவலகத்தில் இருக்கவில்லை. 

என்றாலும் அவர்களுக்காக ஒரு கடிதம் இருந்தது. “மறு அறிவித்தல் வரும் வரைக்கும் குளக்காட்டுப் பிரதேசத்தில் எவரும் காடு வெட்டச் செல்ல வேண்டாம்……” என்று மட்டுந் தான் அந்த நிருபத்தில் உருண்டையான சிங்கள எழுத்துக்களில் அழகாக எழுதப்பட்டிருந்தது. 

இரு தஸாப்தங்களுக்கு மேலாக கிராம சேவகர் எவரும் முக்கியத்துவம் கொடுக்காத, கொடுக்க விரும்பாத, அல்லது பாராமுகமாக இருந்துவிட்ட இப்பிரச்சினையை, பண்டார மிக அக்கறையுடன் பரிசீலனை செய்கிறார் என்றால் அது அவரது மேலான கடமையுணர்வுதான். சாக்குப் போக்குகளைச் சொல்லி சும்மா தட்டிக் கழித்துவிட்டு, சிங்கள முஸ்லிம் கிராமங்களுக் கிடையில் உள்ள நட்புறவுக்கு குந்தகம் விளைவிக்க அவர் கால்கோலாக இருந்து விடக்கூடாது என்று மனமாற விரும்புகி றார். தனிப்பட்ட முறையில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டு மென்பதே அவரது இலட்சியம். 

“எப்படியும், கிராமசேவகர் மாய்மை விடயமாகத்தான் அனுராதபுரம் சென்றிருக்க வேணும்” என்று ஹல்தீனும் அமர வும் ஊகித்துக் கொண்டனர். 

“அஹ்மதுலெப்பை சொல்ற மாதிரி நாங்க இருவருமே இவ்விடயத்தில் அவருடன் ஓடியாடி உதவினால் விசயம் சுருக்கா முடியலாந்தானே…. ” என்றான் ஹலீம். 

“கிராம சேவகரையே கேட்டுப் பாப்பம்…..” அமரதாச வுக்கும் அது விருப்பம்தான்….. ஆனால் இருவருமே போக வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீண்கட்டுக் கதைகள்…. கசிலிகள் உண்டாகி பெட்டிசன்களாக உருவெடுக்கும்.” 

அன்று ஹலீம்தீன் கிராமத்திற்குத் திரும்பியதும் நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர். 

“கிராம சேவகரை சந்திக்கப் போன விசயம் என்னவாம்…?” என்னும் கேள்விக் குறிதான் அவர்களது முகங்களில் வழிந்தது. அது கேள்விச் சரமாக ஒலி வடிவம் பெறுவதற்கு முன் அவன் அவர்களுக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு 

“இன்றைய புரோகிராம்… தெரியுந்தானே?” என்று வினவினான். 

“என்ன…?” “என்ன…?” வென்று எல்லாரும் விழித்தனர். “நான் நினச்சது சரி… இந்தப் பெட்டிசன் வந்து எல்லாரை யும் குழப்பிக் கிடக்கு… சரி… சரி…. அந்திக்கு எல்லாரும் வாங்க… வூட்ட வாங்க… புதிய அலுவலகத் திறப்பு… மறந்துட் டீங்களா…? 

“அலுவலகத்தையே மறந்துட்டீங்க…. இனி நான் என்ன. சொல்லக்கிடக்கு” 

எல்லாருக்கும் அழைப்பு விடுத்துவிட்டு, ஹலீம்தீன் வீட் டுக்கு நடந்தான். 

அவன் மறைந்த பின் யாசீன் கூறினான். 

“பாத்தீங்களா… நானும் மறந்து போனன்… அசம்பாவித மாக… அல்லது அசாதாரணமாக ஒன்டு நடந்துவிட்டா அதி லேயே நின்று விடுகிறோம்… அடுத்த விசயத்தை நாங்கள் மறந்து விடுகிறோம். திட்டமிட்டு வேலை செய்ய நாங்கள் இன்னும் பயிற்றப்பட வில்லை என்பதையே இது காட்டுகிறது…” 

பள்ளிவாசலிலிருந்து கிட்டத்தட்ட நூறடி தூரத்தில் ஹலீம்தீன் இல்லத்திற்குச் செல்லும் பாதை சிரமதானம் மூலம் அகல மாக்கப்பட்டு சிரமமின்றி வாகனப் போக்குவரத்திற்கு அமைக்கப் பட்டிருந்தது. கொங்கிறீற் கற்களும் ஆற்றுமணலும் கலந்து பதித்து, தார் ஊற்றி, ‘ரோலர்’ மூலம் உருட்டி செப்பனிட்டு அழகு படுத்தப்பட்டிருந்தது. பாதை சீராக்கப்பட்டு விட்டதும், அப்துல் மஜீத் இக்கிரிகொல்லாவையிலிருந்து ஒரு டிராக்டர் வண்டி வாங்க திட்டமிட்டுள்ளார். 

வீட்டிலும் சில திருத்த வேலைகள் இடம் பெற்றிருந்தன. வீட்டோடு சேர்ந்தாற்போல் இருபத்தைந்தடி நீளமும் இருபதடி அகலமும் உள்ள ஒரு நீள்சதுர வடிவில், அலுவலக பாவிப்புக் காக புதிய அறை கட்டப்பட்டிருந்தது. அவ்வறையின் ஒரு பக்கச் சுவரோடு நீண்ட சுவர் அலுமாரி உருவாக்கப்பட்டிருந்தது. நண்பர்களின் நூலகத்திற்காக. 

இருபது பேர் தாராளமாக இருந்து கருத்தரங்கு நடாத்த வசதி யாக தளபாடங்களும் வந்து சேர்ந்தன. சுவரில் பல பெரியார் களின் படங்கள். சித்திலெப்பை, டீ.பி.ஜாயா, சி.டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர, டாக்டர் பதியுதீன் மஹ்மூத் என்று. கிராமத் தின் வரைபட மொன்றும் பெரிதாகப் போடப்பட்டிருந்தது. 

வீட்டின் மறுகரையில் இரும்புக் கம்பித் தூண்கள் தட்டி, தகரத்தால் கூரை போடப்பட்டிருந்தது. கொண்டுவரப்படும் புதியடிராக்டர் வண்டியின் உறைவிடமே அது….. 

இரு தினங்களுக்கு முன்புதான் அப்துல் மஜீதின் ‘மௌலூத் மஜ்லிஸும் விருந்து பசாரமும் இடம் பெற்றிருந்தன

வழக்கம் போல் வெள்ளாமை வெட்டி கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்ததும் ஊரவர்கள் அனைவருக்கும் அப்துல் மஜீத் அன்புசால் அழைப்பு விடுப்பார். 

இன்று மாலை ஹலீம்தீன் தனது புதிய அலுவலக அறை திறப்பு என்ற ரீதியில் நண்பர்களுக்கு ஒரு விசேட தேநீர் விருந்து பசாரம் ஏற்பாடு செய்திருந்தான். 

அவனது தோழமைக்குரிய அனைத்து நண்பர்களும் வந்திருந் தனர். 

சிங்கள கிராமத்திலிருந்து அமரதாச நண்பர்களும், விஷேட மாக பியசீலியும் யசவத்தியும் சமுகமளித்திருந்தார்கள். 

“கிராமவாசிகளின் குறைபாடுகளை கவனிப்பதற்காக இவ் வலுவலகம் இயங்கும்…” என்று ஹலீம்தீன் எளிமையாக எடுத்துரைத்தான். அனைவரும் வாழ்த்தினர். ‘புதிய அலுவல கத்தினூடாக புதிய பாதை….’ என்று பாராட்டினர். 

அப்துல் மஜீத் தம்பதிகளுக்கு சிங்கள கிராமத்திலிருந்து பெண்பிள்ளைகள் விஜயம் செய்தது பெரிதும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ஹலீம்தீனின் தங்கை ஜெஸ்மின் அவர்களை ஓடியாடி ஆர்வத்துடன் கவனித்து, அவர்களுட னேயே இருந்தாள். 

விருந்துபசாரத்திற்கு மத்தியில் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. 

சிங்கள கிராமத்தில் குளக்காட்டுப் பிரதேச எல்லைப் பிரச் சினை தொடர்பாகவும் ஒப்பந்த அடிப்படையில் காடு வெட்டி விவசாயம் செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் நடாத்திய கையொப்ப வேட்டை பெரு வெற்றியளித்துள்ளது என்னும் புதிய தகவலை அமரதாச வெளியிட்டான். 

முஸ்லிம் கிராமத்தைப் பொறுத்தவரையில் இரண்டே நாட் களில் எல்லாரும் கைச்சாத்திட்டிருந்தனர். 

சந்தேக நபர்களான சமரசிங்க, உக்குரால… ஆகியோர் உட்பட சிலரிடம் கையொப்பம் வாங்க எவரும் செல்லவில்லை. பெட் டிசன்காரர்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் என்று இனங் காணப்பட்டனர். சந்தேகத்தின் பேரில்தான்

ஆனால் எத்தகைய எதிர்ப்பு தோன்றினாலும் தொண்ணுறு வீதமானோர் கையொப்பமிட்டு தமது உடன்பாட்டை தெளி வாகத் தெரிவித்திருப்பதால் எதுவும் தலை தூக்காது என்பது உறுதியாகி விட்டது. 

“இனி கிராமசேவகர் ஒரு நல்ல முடிவுடன் வரும் வரைக் கும், நாம குளக்காட்டு விடயங்களை பிற்போட்டு விட்டு, உடனடியாக ‘பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் அங்கு ரார்ப்பண விடயமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்…” என்று ஹலீம்தீன் வேண்டினான். 

“பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா கிராமங் களுக்கும் துண்டுப் பிரசுரங்களும் அங்கத்துவப் பத்திரங்களும் அனுப்பப்பட்டிருக்கின்றனவா…?” 

இப்படிப் பொதுவாக ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. 

நிச்சயமாக…. பிரமாணங்கள் சட்டதிட்டங்கள் உட்பட எல்லாம், எல்லாக் கிராமங்களுக்கும் தபாலிலும் நேரடியாகவும் அனுப்பப்பட்டு, மிக்க பொறுப்புடன் பத்திரங்கள் நிரப்பப் பட்டு வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றன…” இதை இரு சாராரும் ஒப்புக் கொண்டனர். 

“தற்போது கிராமத்தை நிர்வகிப்பவர்கள் மட்டுந்தானே, பிரதேச விவசாய முன்னேற்றச் சங்கத்தில் அங்கத்தவர்கள் ஆகலாம்?” 

“அப்படியொன்றும் இல்ல, விளக்கமாகச் சொல்லப்போ னால், ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகிப்பவர்களில் இருவர் தெரிவு செய்யப்பட்டு, பிரதேச விவசாயிகள் முன்னேற்றச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு பிரசன்னமாக வேண்டும். அக்கூட்டத்தில் மேற்படி சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டதும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வந்தவர்களில் இருந்து கிராமப் பிரதிநிதிகளாகவும் தெரிவு செய்யப்படுவர். 

ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தன் சார்ந்த கிராமத்தில் பாரிய கடமைகள் உண்டு. விரும்பிய, பதினெட்டு வயதுக்கு மேற் பட்ட ஆண், பெண் இருபாலாரையும் அங்கத்தவராகச் சேர்க்க வேண்டும். பத்திரம் நிரப்பப்பட்டு வருட சந்தாப் பணத்துடன் பொருளாளரிடம் சேர்க்க வேண்டும். அவர் அங்கத்துவ ‘கார்ட் கொடுப்பார்… இனி தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கென கடமைகளை விளக்கி ஒரு கருத்தரங்கம் நடாத்தப்படும். 

ஹலீம்தீனும் அமரதாசவும் போதிய விளக்கங்கள் அளித்தனர்.

“உழவர்களுக்கு இப்படியொரு சங்கம் தேவையென்று ஆலோ சனை வழங்கியவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா…?இப்படிக் கேட்டான் ஹலீம்தீன். 

“…?”

”நாவலப்பிட்டியிலிருந்து வந்து எங்கட பள்ளிக் கூடத்தில ஆங்கிலம் படிப்பிச்ச பஹார்டீன் மாஸ்டரை எங்களால் மறக்க முடியாதல்லவா?” 

இப்படிஹலீம்தீன் கேட்டதும் பலரும் தங்கள் ஞாபகங்களை மீட்டினர். 

“ஓம்…. அவரோடதானே முதல் முதல்ல மலைநாட்டுக்கு விஜயம் செய்தோம்…” என்றான் சேகு. 

“அவர்ட வீட்ட தங்கியிருந்துதான் முதல் மனிதனின் பாத அடி பதிந்த பாவாதமலைக்குப் போனோம்….” – இது அன்சார் தீனின் இனிய நினைவு. 

”வர்ணக் கோலங்கள் காட்டி கதிரவன் தன் பொன்னொ ளியை உலகத்துக்குக் காட்ட வரும் அந்தக் காட்சி எவ்வளவு அற்புதமாக இருந்தது….” என்று வர்ணித்தான் யாசீன். 

அதற்கிடையில் கமருக்கு, அன்சார்தீன் பிரயோகித்த சொற் றொடரில் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அவன் கேட்டான்- 

“அது சரி ஹலீம், அன்சார்தீன் முதல் மனிதனின் பாத அடி பதிந்த … என்று குறிப்பிட்டதற்கு விளக்கம் என்ன…?” 

“முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி உலகத்துக்கு படைக்கப் பட்ட முதல் மனிதன் யார்…?” 

“சந்தேகமில்லை, பாவா ஆதம் (அலை) தான்….” 

“அந்த முதல் மனிதன் விண்ணுலகிலிருந்து இந்த மலையின் சிகரத்தில் தான் இறங்கினார் என்பது முஸ்லிம்களின் பரம்பரை நம்பிக்கை… 

ஆதம் (அலை) அவர்களின் காலடி அடையாளங்களை தரிசிப் பதற்காக அந்தக் காலத்திலிருந்தே அராபியர் இங்கு நெருங்கிய தொடர்பு கொண்டு விஜயம் செய்துள்ளனர். இப்ப நான் அது பற்றி ஆராய முற்படவில்லை…. அந்த மலையின் சிகரத்தில் நாம் உலாவரும் போது தோட்டத் தொழிலாளர்களை சந்தித் தோம். வறுமையோடு பின்னிப் பிணைந்தவர்கள் என்று அறி முகப்படுத்திய ஆங்கில சேர் சொன்ன வார்த்தைகள் ஞாபகமிரு க்கா?” என்று ஹலீம்தீன் மீண்டும் கேட்டான். 

பதிவாகியிருந்த டேப் ரிகார்டரை தட்டிவிட்டது போல் இருந்தது சேகுவுக்கு, அவன் அப்படியே ஒப்புவித்தான். 

“மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இருப்பது போல் எங்கட பிரதேசங்களில் விவசாய பெருமக்களுக்கென, அவர்களது கிராமங்களை அபிவிருத்தி செய்ய கிராம மக்களின் குறைபாடுகளை ஆராய்ந்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, பாடுபடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு ஒரு கூட்டு முயற்சி, அதாவது ஒரு சங்கம் தேவை….” என்றுதானே குறிப்பிட்டார். 

“மிகச் சரியாக, பரீட்சைக்கு ஆயத்தம் செய்து வைத்திருப்பது போல ஞாபகம் வைத்திருக்கிறாயே. அவருடைய அந்தத் திட்டத் தின்படி தான் நாம் காலம் கடந்து ‘பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்’ என ஆரம்பிக்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்….”

எமது சங்கம் தொடர்பாக, நாம் கிராமங்களுக்கு அனுப்பிய விளக்கங்களில் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். 

“எமது முக்கிய தேவை ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதற் காக நாம் எவ்வளவுதான் தனித்தனி நபர்களாக இருந்து முயன் றாலும் தோல்வியையே தழுவிக் கொள்கிறோம். உதிரியாக நின்று குரல் கொடுப்பது செவிடன் காதில் சங்கு ஊதும் முயற்சி தான். ஆனால் விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர், சங்க நாதம் எழுப்பினால் நிச்சயம் வெற்றிக்கு மேல் வெற்றி என்பதில் சந்தேகமில்லை…”

“இரண்டு வருடங்களுக்கு முன் ஓ.எல் ஆங்கில பாடத் திற்காக ஒரு முழுநாள் கருத்தரங்கு நடத்திய ஆங்கில ஆசிரி யர்தானே…” என்று வினவினாள் பியசீலி. 

“அவரேதான்…” 

“அவர் எமது கிராமத்து பாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளார். ஜெஸ்மின் அவரிடம் கற்றவள். 

“பஹார்டீன் சேர் ஆங்கிலம் படிக்க விரும்பும் மாணவர் களுக்கு துணைநூல்களாகப் பயன் பெறட்டும் என்ற நோக்கில், அன்பளிப்பு செய்த ஐம்பது நூல்களையும் இங்கு அமைக்க விருக்கும் நூலகத்தில் போடப் போகிறோம்….” என்றாள் ஜெஸ்மின். 

யசவத்தி குறுக்கிட்டாள். 

ஜெஸ்மினுக்கு ஊர்ப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் நியமனம் ஏன் கிடைக்கவில்லை….?” 

“யசவத்தி….இது கலாநிதி பதியுதீன் மஹ்மூத் காலம் இல்லை….” என்றான் யாசீன். 

“காலப்போக்கில் கிடைக்கும். ஆனால் இக்கிரிகொல்லாவ கிராமத்தில்…”” என்றான் ஹலீம்தீன். 

“ஏன்?” என்று எவரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால்…. “அங்குதான் அவவுக்கு கல்யாணம் பேசிக் கிடக்கு….” என்று சொல்லியிருப்பான். ஆனால் பகிரங்கப்படுத்துவதற்கு ‘இன் னும் காலம் கிடக்கு’ என்று எவரும் பேசவில்லை. 

“சங்கம் செயற்படத் தொடங்கியதும் பலருக்கும் ஆசிரிய நியமனம் பெற்றுத் தரவேண்டும்….’ என்று கூறிய ஹலீம், பியசீலியின் முகத்தைப் பார்த்தான். அவளும் அர்த்தபுஷ்டியுடன் அவனைப் பார்த்தாள். 

“…இனி நான் சொல்லவந்த விசயம் என்னண்டா, பஹார் டீன் மாஸ்டரைத்தான் நாம் சங்கத்தின் ஆலோசகராக நியமிக்க இருக்கிறோம். இதில் நீங்கள் ஏதும் அபிப்பிராயம் சொல்லக் கிடக்கா….?” என்றான் ஹலீம். 

“மிகப் பொருத்தமானவர்…” என்று அனைவருமே பூரண சம்மதம் தெரிவித்தனர். 

“அப்ப சரி… அங்குரார்ப்பனக் கூட்டத்தில் அவர் மகஜர் சமர்ப்பித்து உரையாற்றுவார். 

எல்லோருக்கும் வசதியாக அநுராதபுர நகரத்தில் பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் ஒரு முழுநாள் நிகழ்வாக நடாத்தப் பொருத்தமான திகதியைத் தீர்மானித்ததோடு, அலுவலகத் திறப்பும் தேநீர் விருந்தும் கலந்துரையாடலும் முடிவுற்றன. 

அத்தியாயம் பன்னிரண்டு 

அனுராதபுர நகரத்தில் ஒரு பிரபலமான மகாவித்தியாலய மண்டபத்தில் பெருந்திரளான விவசாயிகள் குழுமியிருந்தனர். நாற்பது மைல்களுக்கு அப்பாலிருந்தும் அரசாங்க பஸ்களிலும் தனிப்பட்ட வாகனங்களிலும் விவசாயப் பெருமக்கள் நேரத் திற்கு சமுகமளித்திருந்தனர். 

மண்டபம் நிரம்பி வழிந்தது. இனி வருபவர்களுக்கு இருக்கை வசதிகள் சமாளிக்க முடியாத அளவுக்கு…

உத்தியோகபூர்வமான தலைவரைத் தெரிவு செய்வதற்கு முன், கூட்டத்தை நடாத்தத் தற்காலிகத் தலைவராக, ஓய்வு பெற்ற அதிபர் ஜனாப் கரீம் தெரிவு செய்யப்பட்டார். ‘அல் லாஹு அக்பர்’ என்ற கோஷம் மண்டபத்தைப் பிளந்தது. மறுபுறம் ‘ஜயவேவா’ என்ற குரல். 

ரொட்டவெவ தௌபீக் மௌலவியின் ‘கிராஅத் ஓதலும், சிங்கள மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழியும் பௌத்தமும் போதிக்கும் ஒரு பிரபல தேரோவின் சமய அனுஷ்டானமும் இடம்பெற்றதும், தற்காலிகத் தலைவர், கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். 

‘அனுராதபுரத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு, சிங்கள முஸ்லிம் சமூகத்தவர் ஒன்றிணைந்து ஒரு விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தை அமைக்க முன்வந்தது, காலகட்டத்தின் கட்டாயத் தேவை என்பதை இந்த மண்டபம் நிரூபித்து விட்டது. இதை அமைப்பதற்கு எமது இளைய தலைமுறையினர் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எமது எதிர்கால தேசிய நீரோட்டத்தில் எமது பிரதேச இளைஞர்களின் பங்களிப்பை இது எடுத்துக் காட்டுகின்றது. அமரதாச, ஹலீம்தீன் போன்ற இளைஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்….” 

அப்துல் மஜீத், கிரிபண்டா போன்ற ஒவ்வொரு கிராமத்தின் மூத்த தலைவர்களும் மேடையில், அதிதிகளுடன் உசாராக வீற்றிருந்தனர். 

சேகுவின் வரவேற்புரை தமிழிலும் பியசேனவின் சிங்கள மொழிபெயர்ப்பும் சுருக்கமாக இடம்பெற்றது. சேகு தனது உரையில் விவசாயிகளின் நிலையை சபைக்கு எடுத்துரைத்தான்.

“…ஒவ்வொரு முறையும் மாரி மழை பொழியத் தொடங்கி யதும் உழவன் உள்ளத்திலும் உவகை பெருக்கெடுக்கும்… பூமித்தாயின் இதயத்தானமாய் விளங்கும் வயற் பிரதேசங்களில் உழுவதிலும் விதைப்பதிலும் ஆர்வமும் ஆரவாரமும். 

எவ்வளவு கலகலப்பான நாட்கள். 

உழவு முடிவதற்கு அறிகுறியாய் மண்வெட்டியால் சரியை வாரி வரப்பைப் பூசி மெழுக, பளிச்சென காட்சி தரும் எழிற் கோலம் கண்களுக்கு பெருவிருந்தாம். 

விதைப்புகள் அரும்புகளாய், ஓரிலை ஈரிலையாய் முகிழ்த்து, நெல்மணிகளைத் தாங்கும் கதிர்க் கொத்துக்களாய் வளர்ச்சி யடைந்து, பக்குவமடையும் வரைக்கும் உழவனுக்குப் பொறுமை எங்கே…? காத்திருந்து, கண்துஞ்சாது காவலிருந்ததற்குப் பலன் கிடைத்துவிடும். 

எங்கும் அறுவடையும் சூடுமிதிப்பும் தான். தேவைக்குப் போக மீதமெல்லாம் பணமாக மாறும்போது, பெருக்கெடுத்த உவகையின் உச்சக்கட்டம். 

என்ன செய்வது? வறுமையை விரட்டியடிக்கும் சக்தி இந்தப் பணத்திற்கு மட்டுந்தானே உண்டு. 

அலட்டிக் கொள்ளாமல் வசந்த காலம் மெள்ள மெள்ள அசைந்து போனதும், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி…. 

மீண்டும் வறுமையை வரவேற்பதைத் தவிர வேறு வழி யில்லை. 

வறுமை ஒரு பொல்லாத தொற்று நோய். வருடத்திற்கு ஆறு மாதங்களேனும் நின்று பிடிக்கும். 

இதுதான் உழவன் வாழ்க்கை. 

இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். உழவன் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உழவனுக்கு எல்லா வாழ்க்கை வசதிகளும் வேண்டும். அவற்றையெல்லாம் பெறுவதற்கு ஒரு புதிய பலம் வாய்ந்த அணுகுமுறை தேவை. அதற்காகத்தான் இந்த விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் இன்று அமைக்கப்படுகிறது. 

இந்த அதி முக்கியமான நிகழ்வுக்கு இன்று வருகை தந்த ஒவ்வொருவரையும் மனமுவந்து வரவேற்கிறேன்.” 

சேகுவின் கருத்துக்கள் சபையோரை உசுப்பி விட்டது. 

“பல வருடங்களுக்கு முன் நானும் எனது தேர்தல் தொகுதி யில் மட்டும் முப்பது கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இஸ்லாமிய முன்னேற்றச் சங்கம்’ என்று அமைத்தேன்….. ஆனால் சில வருடங்களுக்கு மட்டுமே இயங்கியது. விவசாயி கள் என்று சொல்லும்போது முஸ்லிம் விவசாயிகள் சிங்கள விவசாயிகள் தமிழ் விவசாயிகள் என்று கூறு போடமுடியாது. வயலும் வயலைச் சார்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் எதிர்நோக்குவது ஒரே வகையான பிரச்சினைகள் தாம். ஆகவே, இக்காலகட்டத்தில் இந்த ஒருமைப்பாடு மிக முக்கியமானது. கடந்த காலங்களில் இரு சாராருக்குமே சரியான வழிகாட்டல்கள் அமையவில்லை. ஆகவேதான் இந்த சங்கம் சகலருக்கும் போரா டும். நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” 

தற்காலிகத் தலைவர் கரீமின் ஆழமான கருத்துரைக்குப் பின் உத்தியோகத்தர் தெரிவு பற்றிய விளக்கத்தை ஹலீம்தீன் தமிழி லும் அமரதாசசிங்களத்திலும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தனர். 

பொறுப்பான உத்தியோகத்தர்களை ஆற அமர யோசித்து, தேவையேற்படின் கலந்தாலோசிக்கவும் சகல வசதிகளும் அவ காசமும் கொடுத்திருப்பதால் அதனை நிகழ்ச்சி நிரலில் பிற் போட்டுவிட்டு பிரமுகர்களைப் பேசவிட்டனர். சிங்கள கிரா மங்களின் சார்பில் இரு நீண்ட உரைகள் இடம்பெற்றன. கிராம சேவகர் பண்டார சிங்கள முஸ்லிம் கிராமங்களின் ஒருமைப் பாட்டை வலியுறுத்தினார். அதன் முக்கியத்துவத்தையும் சில புள்ளி விபரங்களையும் வெளியிட்டார். எமது பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்கள் இல்லை. ஆனால் சிதறலாக கிட்டத்தட்ட எட்டாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தச் சங்கத்தில் அவர்களுடைய பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும். 

அதைத் தொடர்ந்து பஹார்டீன் மிக முக்கியமான மகஜரை சமர்ப்பித்து தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் உரை நிகழ்த்தினார். 

“அனுராதபுரத்தை சிங்கள மன்னர்கள் ஆண்ட காலத்தி லிருந்து… என்று அமரதாசவின் ஓர் ஆழமான ஆய்வுரையைக் கேட்டீர்கள். பின்னேரத்தில் ‘எமது மாவட்டத்தில் முஸ்லிம்கள்’ என்னும் மகுடத்தில் மற்றுமொரு ஆழமான ஆய்வை சரியான புள்ளி விபரங்களுடன் ஹலீம்தீன் நிகழ்த்தவிருப்பதால் நான் அதற்கு உதவியாக சில தகவல்களை மட்டும் முன்வைத்து மகஜரைச் சமர்ப்பிக்கின்றேன். 

அனுராதபுர மாவட்டத்திற்கு முஸ்லிம்கள் புதியவர்கள் அல்லர். பதினான்காம் நூற்றாண்டில் வியாபார நோக்கத்திற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள். அரேபியா மட்டுமல்ல, இந்தோனேஷியா, இந்தியா, பாரசீகம்… இப்படிப் பல நாடுகளி லிருந்து இங்கே வ்நதுள்ளனர். வடமேற்கு, மேற்குக் கரைகளில் இறங்கினர். கற்பிட்டி புத்தளம் முத்துச் சிலாபத்துறை மூலமாக அனுராதபுர வாயிலாக நாட்டிற்குள் வந்துள்ளனர். 

மலபார் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து வந்தவர்கள் அனுராதபுர பிரதேசத்திலிருந்து யானைகளைப் பிடித்து ஏற்று மதி செய்தவர்களின் சந்ததியினர்…. திசாவெவகம, பொன் னாரங்குளம், குப்பிச்சாய்குளம், ஆமன்னரத்மல, நாச்சியா துவ,,, போன்ற இடங்களில் குடியிருப்புகளை அமைத்துள் ளனர்….. பெருந்திரளாகக் கூடியிருக்கும் உங்களில் பலருக்கு இந்தச் சரித்தி உண்மைகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் கிராமங்களில் தொண்ணூறு வயதுடையவர்கள் இருந் தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் தரும் தகவல் கள் உண்மையானவை. அவற்றை நீங்கள் ‘டேப்ரிகார்ட்’ பண்ணி பாதுகாக்க வேண்டும்…. ஹலீம்தீனின் மூலம் முழுமையான ஆய்வுரையிலிருந்து வரலாற்றை அறிந்து கொள்ள நல்ல வாய் ப்பு . ஹலீம்தீனின் ஆய்வுரையும் ஒலிப்பதிவு செய்யப்படும். நாம் ஒவ்வொருவரும் எமது வரலாற்றுப் பின்னணியை அறிந்து ருக்க வேண்டும். ஒவ்வொருவரும் முந்திய ஐந்து தலைமுறையி னரின் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 

சமகாலத்தவர்களின் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து அவற் றைத் தீர்த்துக் கொள்வதற்கு, தனித்தனி பிரயத்தனங்கள், கிராமங்களும் கிராமவாசிகளும் செய்து, களைத்துப் போனதன் பிரதிபலிப்புத்தான் இந்த விவசாயிகள் முன்னேற்றச் சங்கம். இதன் நோக்கங்கள் துண்டுப் பிரசுரங்களில் விரிவாக ஆராயப் பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் படித்துப் பாருங்கள். எமது உடனடித் தேவைகளையே, நான் வாசிக்கப் போகும் மகஜரில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். 

இப்போது தேநீருக்கான இடைவேளை. 

அது முடிந்ததும் கலந்துரையாடல், பிறகு உத்தியோகத்தர் தெரிவு. பின்னர் சிங்கள முஸ்லிம் கிராமங்களின் உடனடித் தேவைகள் அடங்கிய மகஜர்கள் வாசிக்கப்பட்டு வேண்டிய திருத்தங்கள் செய்து நிர்வாகக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்” என்று பஹார்டீன் மாஸ்டர் தமது உரையை முடித்ததும், உத்தி யோகத்தர் தெரிவுக்காக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. 

அமரதாசவும் ஹலீம்தீனும் தலைவர்களாக தெரிவு செய்யப் பட்ட போது ‘அல்லாஹு அக்பர்’, ‘ஜெயவேவா’ கோஷம் மண்டபத்தை நிறைத்தது. தொடர்ந்து சோமரத்னவும் யாசீனும் இணைச் செயலாளர்களாகவும் சேகுவும் விக்டரும் பொரு ளாளர்களாகவும் ஏகமனதாகத் தெரிவாகினர். 

இது தவிர, ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிராமத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பிரதிநிதிகள் தெரிவாகினர். சகல அதிகாரங்களும் பதினாறு பேர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவுக்கே விடப்பட்டது. 

பிரதேச விவசாயிகள் முன்னேற்றச்சங்கத்தின் ஆலோசனைக் குழு பஹார்டீன் மாஸ்டரின் தலைமையில் மூத்தவர்களான அப்துல் மஜீத், கிரிபண்டா, கரீம் மாஸ்டர், பிங்காமி…. சமது விதானை என்று பல கிராமங்களிலிருந்தும் அங்கம் வகித்தனர். சிங்கள கிராமங்களின் தேவைகள் பற்றி பிங்காமி விரிவாக எடுத்துக் காட்டியதும் முஸ்லிம் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பஹார்டீன் மாஸ்டரும், கரீம் மாஸ்டரும் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டினர். 

நீண்டகாலமாக வசிப்பிட வசதிகள் இன்றி அல்லல்படும் முஸ்லிம் கிராமவாசிகளுக்கு, தனிக் குடியிருப்பு வசதிகள். தொழில் வாய்ப்புகள், பாடசாலைக் கட்டிடங்கள், மற்றும் குறைபாடுகள், பாடசாலை மாணவர்களுக்கு விஷேட பஸ் போக்குவரத்துக்கள், ஆசிரிய நியமனங்கள், கிராமிய முஸ்லிம் பெண்களுக்கு சுயதொழிற்றுறைகள், 

இப்படியாக….. 

கல்வி கற்ற பெண்கள் தொழில்தேடி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்கு மாற்றுத் திட் டங்கள், பிரசவ விடுதிகளுடன் அரசினர் வைத்தியசாலைகள், கிராமங்களை ஒருங்கிணைக்க வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகள் நிர்மாணித்தல், பழைய பாதைகளை சீரமைத்தல், கிராமந்தோறும் நூலகங்கள் அமைத்தல், பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களுக்கு வழிகாட்டத் திட்டங்கள்…. 

நீண்ட காலமாக உரிய காடுகளில் எல்லைப் பிர்ச்சினைகள் இரு இனங்களிடையே சச்சரவுகளையும் மனஸ்தாபங்களையும் தோற்றுவித்துள்ளன… இதற்கு ஒரு முடிவு காணல். 

பழைய குளங்கள் திருத்தப்பட்டு, புதியனவும் நிர்மாணிப் பது மிக முக்கியமானது, பல இடங்களில் இன்னும் பருவ மழையையே நம்பியிருக்க வேண்டிய நிலைதான்… 

இப்படியாக கோரிக்கைகள் நிரம்பி வழியும் மகஜர் அது. 

வி.மு.சவின் புதிய நிர்வாகக்குழு அவற்றைப் போராடிப் பெறுவதற்கு கோஷங்களுக்கு மத்தியில் அந்த நீண்ட மகஜரைப் பொறுப்பேற்றிருக்கிறது. ஒரு மணித்தியால மதிய போசன இடைவேளை முடிந்ததும், மீண்டும் கூட்டம் மண்டபத்தை நிறைத்தது. 

ஹலீமும், அமரவும் முஸ்லிம் சிங்கள வரலாறுகளை விரி வாக எடுத்துரைத்தனர். கூடியிருந்த விவசாய பெருமக்களுக்கு புதிய தகவல்களாய் இருந்தமையால் அனைவரும் நிசப்தமாய் மிக்க ஆர்வத்துடன் செவிசாய்த்தனர். விரிவுரைகள் முடிந்ததும் சபையோரிடமிருந்து பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்கு அமரதாசவும் ஹலீம்தீனும் இடையிடையே பஹார்டீன் மாஸ்ட ரும் கரீம் மாஸ்டரும் விடைகள் பகர்ந்தனர். 

“நாடு கடத்தப்பட்ட விஜயன் எழுநூறு சகாக்களுடன் கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் இலங்கைக்கு வந்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முன்னர் அராபியருக்கும் இந்த நாட்டிற்கும் தொடர்பு இருந்ததா….?” 

“ஆம்… எனது பேச்சில் குறிப்பிட்டேனே” என்றான் ஹலீம். அராபியர் தொடர்பாக மற்றுமொரு வினாவுக்கு விடையளிக்கையில்…. 

“….அனுராதபுரத்திலிருந்து எமது நாட்டிற்கு வந்த முஸ்லிம் கள் அனுராதபுரத்தில் பெரும் தொடர்புகளைவைத்திருந்தார்கள். இக்கால கட்டத்தில் இலங்கையை ஆட்சி செய்த சிங்கள மன்னர் கள், இந்திய மன்னர்களின் படையெடுப்புகளுக்கு முகம் கொடு க்க வேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் முஸ்லிம்கள் சிங் கள மன்னர்களுக்கு பேருதவிகள் புரிந்துள்ளனர். போர்ப் பயிற் சியை குறிப்பிடலாம். இதனால் அந்தக்கால கட்டத்திலேயே சிங் கள முஸ்லிம் நட்புறவுகள் பலமாக அமைந்துள்ளன” என்று ஹலீம்தீன் குறிப்பிடுகையில் சபையில் கூடியிருந்த விவசாயி களிடையே மகிழ்ச்சி ஆரவாரம் பொங்கிப் பிரவாகித்தது… 

‘நாச்சியாதுவ’ என்ற கிராமத்திலிருந்து பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞன் கேட்டான்; 

“எங்கள் கிராமத்தைப் பற்றி நீங்கள் விரிவாகச் சொல்ல வில்லையே” 

“மன்னிக்க வேண்டும்… நாம் இன்று ஒரு முக்கிய விடயத் துக்கு கூடியிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கத்தான் செய்கிறது… இங்கு நாம ஒரு சரித்திர ஆய்வரங்கு நடத்தவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அனுராதபுர முஸ்லிம்களைப் பற்றி ஒரு விஷேட மலர் வெளி யிடப்பட்டிருக்கிறது. அதில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் வாசித்தால், அனுராதபுர முஸ்லிம்களின் வரலாற்றை ஓரளவு அறிய முடியும். அந்த ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களைக் கொண்டு ஒரு ஆய்வுக் கருத்தரங்கு நடத்தினாலும் பல புதிய தகவல்களைப் பெறலாம். அத்துடன் எமது கிராமங்களில் மிகவும் வயது முதிர்ந்தவர்களைப் பேட்டி கண்டு எழுத்து மூலம் அல்லது ‘டேப் ரிகார்ட்’ செய்தாலும் கிராமங்களின் வரலாற்றுக் குறிப்புகளை பத்திரமாக பாதுகாப்பாக வைக்கலாம். எதிர்காலத் துக்கு பிரயோசனமாக இருக்கும்…. எனினும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி…. உங்கள் கேள்விக்கு மட்டும் சுருக்கமாக பதிலளித்து விட்டு நிகழ்ச்சி நிரலின் அடுத்த அம்சத்துக்குச் செல்வோம். 

“…அந்த ஆய்வின்படிக்கு அந்த முஸ்லிம் பெண்ணுக்கு நாச்சியார் என்று பெயர். நாச்சியாதுவ பற்றி ஏராளமான சம்ப வங்கள் இருப்பினும் பழைய கால குடியிருப்புகளில் நாச்சியார் மிகவும் புகழ்பெற்றவர். அவருக்கு நிறைய வயற்காணிகள் இருந்தன. அப்பிரதேசத்தில் ஒரு குளம் வேண்டுமென்று மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். அவ்வேண்டுகோளைச் செவி யுற்ற மன்னன் குளம் ஒன்றை அமைப்பதற்கு நாச்சியாரின் காணி தேவைப்படுவதால் அரசனுக்கு அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எத்தகைய மறுப்பும் சொல்லாமல் தனது பூரண விருப்பத்தைத் தெரிவித்தார் நாச்சி யார். மன்னன் மிகவும் மகிழ்ந்து, ‘நாச்சியாரும் மகளும்’ அனுமதி அளித்து விட்டார் என்று கூற அது கிராமத்திற்கும் குளத்திற்கும் பெயராக அமைந்து விட்டது. நாச்சியார் மகள் என்றால் சிங்கள மொழியில் ‘நாச்சியாதுவ’ என்பதாகும். 

காலப்போக்கில் இக்குளம் அடைபட்டு மூடப்பட்டு போன தும் மத்தியில் தேங்கிக் கிடந்த தடாகங்களையும் மல்வத்து ஓயா வின் நீரையும் அண்டியதாக முஸ்லிம் கிராமங்கள் பல உருவாகின. 

கி.பி 1904 காலப் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குளத்தின் அபிவிருத்தி வேலைகள் வகுக்கப்பட்ட போது, இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் குளத்தின் கீழ்க்கரையில் குடியேறி குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். இதுவே உங்கள் கிராமமாகிய இன்றைய ‘நாச்சியாதுவ’. 

ஹலீம்தீனின் நீண்ட விளக்கங்களைக் கேட்ட சபையோர் தம்மை மறந்து வாய்பிளந்து செவியுற்றிருந்தனர். அவ்வேளை கைக்கடிகாரத்தைப் பார்த்த ஹலீம்தீன் ….. “இனிமேலும் எமது சங்கத்தின் நாச்சியாதுவ பிரதிநிதிக்கு விளக்கம் தேவையானால் தயவு செய்து இந்தக் கூட்டம் முடிந்து பத்து நிமிடங்கள் நின்றால் அமரதாசவும் நானும் யாசீனும் விரிவான விளக்கங்கள் தரு வோம்….” என்றான். 

நிகழ்ச்சி நிரலின் படி அடுத்தடுத்து அங்குரார்ப்பண நிகழ்வு கள் மும்முரமாக சூடுபிடித்தன

மக்கள் நீண்டதூரம் பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்ய விருப்பதால் சரியான நேரத்திற்கு சகல விடயங்களும் வெற்றி கரமாக நடந்து முடிந்தன. 

விக்டரும், அன்சார்தீனும் சிங்களத்திலும் தமிழிலும் சுருக்க மாக நன்றியுரைகள் சமர்ப்பித்தனர். அப்பொழுது நேரம் சரியாக மாலை நான்கு மணி. 

கூட்டம் ஆரவாரத்துடன் கலைந்து சென்றது. இறுதியாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. 

பிரதிநிதிகளின் கடமைகள் விரிவாக ஆராயப்பட்டு சங்கத் தின் சட்டதிட்டங்கள் அங்கத்துவப் பத்திரங்கள் முதலியனவும் விநியோகிக்கப்பட்டன. 

மாதா மாதம் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற வேண்டும். ஒவ்வொரு பிரதிநிதியும் தத்தமது கிராமிய மட்டத்தில் விவ சாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரிவாக அறிக்கை மூலம் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளுக்காக பிரதேச வி.மு.ச. முன் எடுத்துச் செல்லப்படும் மாதாந்தப் பிரதி நிதிகள் கூட்டம் மாறிமாறி அனுராதபுரம், கஹட்டகஸ்திகி லியா, ஹொரவப்பொத்தான ஆகிய கேந்திர ஸ்தானங்களில் மட்டுமே நடைபெறும் என்ற முடிவுடன் அனைத்து நிகழ்வு களும் முற்றுப் பெற்றன. எல்லாரும் ஆங்காங்கே போகும் வாகனங்களைப் பிடிப்பதற்காக அவசரப்பட்டனர். கிரிபண்டா வின் வேனில் இடம் இருக்கவில்லை. அப்துல் மஜீதும், பஹார் டீன் மாஸ்டரும் பஸ்ஸில் சென்றார்கள். பஹார்டீன் மாஸ்ட ருக்கு சங்கம் சம்பந்தப்பட்ட நிரந்தர சட்டக் கோவை தயாரிப்ப தற்கும், ஒரு விவசாயிகள் சங்கம் எப்படி இயங்க வேண்டும், சங்கக் கிளைகள் உத்தியோகத்தர்கள், அதிகாரங்கள், கடமை கள்…. இவை பற்றி நிரந்தரமாக ஒரு திட்டம் வரைய வேண்டிய பாரிய கடமைகள் சுமத்தப்பட்டிருந்தன. 

ஹலீம்தீன், செயின் முதலாளி ஆகியோரின் விருந்தினராக சில நாட்கள் தங்கியிருந்து மீண்டும் மலையகம் சென்று ஒரு பிரபலமான தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர் களைச் சந்தித்து விரிவாக ஆராயவிருக்கிறார். 

கூட்டம் முடிந்ததும் எல்லாரும் போய்விட்டார்கள். சில முக்கிய பொறுப்புகளுக்காக அமரதாச, ஹலீம்தீன், யாசீன், சேகு ஆகியோர் மட்டும் இன்னும் அனுராதபுர நகரத்தில் வேலை களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாச்சியாதுவ பிரதிநிதி பௌதுல் அமீர், முக்கிரவெவ இல்யாஸ், பலீல் ஆகியோர், “எங்களுக்கு பஸ்ஸுக்கு நேரமிருக்கு, எங்களால செய்யக் கூடியது ஏதும் இருந்தா சொல்லுங்க…?என்று ஹலீம்தீனிடம் கேட்டனர். 

‘ஜஸாக்கல்லாஹ்…. சங்கத்துக்கு உதவியாயிருந்து வேலை செய்ய முன்வந்திருப்பது சந்தோஷம்… இனி ஒரு வேலையு மில்ல… ஓட்டலுக்குப் போய் டீ குடிச்சிட்டு பஸ்ஸுக்கு போற துதான்” என்றான் ஹலீம்… 

“அப்ப நாங்க வாறம்… வேண்டிய உதவிகளுக்கு எங்களை யும் கூப்பிட்டா நாங்க வருவோம்…. 

“தேவைப்படும்போது அறிவிப்போம்.” 

“அடுத்த கிழமைல ஒரு நாளக்கி உங்கட அலுவலகத்துக்கு வாறன்” என்றான் நாச்சியாதுவ பௌதுல் அமீர். 

“சங்கம் தொடங்கியாச்சி… நாங்க எல்லோரும் ஒருங் கிணைந்துதான் வேலை செய்யப் போகிறோம்…. எல்லோரும் கட்டாயம் தொடர்பு கொள்ள வேணும்….” என்றான் ஹலீம். 

பௌதுல் அமீரும் பஸ் தரிப்பை நோக்கி நடந்து விட்டான். 

ஹலீம்தீன் நண்பர்கள் மண்டபத்தை தந்துதவிய அதிபரைச் சந்தித்து உரையாடி விட்டு அவர்களும் தேநீர் அருந்துவதற்காக வெளியே நடந்தனர். 

சகல அலுவல்களையும் முடித்து விட்டு அனுராதபுரத்தி லிருந்து இரவு ஒன்பது மணிக்குப் புறப்படும் கடைசி பஸ்ஸில் கிராமத்திற்குப் புறப்பட்டனர். 

இரவு பஸ்ஸில் சனம் இல்லை. 

“வரலாற்றுக் குறிப்புகளை ஆர்வத்தோட எல்லோருமே காது கொடுத்து கேட்டாங்க…” என்றான் சேகு. 

“நாம எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்தோம்? என்ன சாதித்து விட்டோம்? இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறோம். இனியும் நாம என்ன செய்ய வேண்டும் ? எமது முன்னோர் தொடக்கி வைத்த வேட்டையில் நாம எங்கே நிற்கிறோம்? நாம தொடர்ந்து எமது பாதையில் செல்ல எம்மிடம் என்ன திட்டங் கள் வைத்திருக்கிறோம்… என்று நீ உணர்ச்சி வசப்பட்டு கேட் டது எல்லாரது மனங்களிலும் ஆழமாகப் பதிந்து விட்டது.’ என்றான் இதுவரைக்கும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்த அமரதாச. 

“எதிர்பார்த்ததை விட பெருந்திரளான கூட்டம். அமர, எத்தனை சிங்கள கிராமங்கள்…. எத்தனை முஸ்லிம் கிராமங் கள்…?” என்று கேட்டான் யாசீன். 

”நாளக்கி, கையொப்பமிட்ட புத்தகத்திலிருந்து… ஆட்களை யும்… கிராமங்களையும் எண்ணிவிடலாம்… கைச்சாத்துகளை அன்சார்தீனும் பியசேனவும் மிகக்கவனமாக எடுத்து விட்டார்கள். 

“பார்க்கப் போனா இது நாம நினைக்கிற மாதிரி லேசான வேலையில்ல… தனியாக ஒரு கந்தோரும் உத்தியோகத்தர்களும் இயங்கிக் கொண்டே இருக்கணும் போலக் கிடக்கு. போகப் போக உறுப்பினர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் போலக் கிடக்கு….” என்றான் சேகு. 

“நீ சொல்வது சரி சேகு….” என்றான் ஹலீம்தீன். 

“ஆக்கள் கூடக்கூட எமது சங்கமும் பலமடைகிறது….” என்றான் அமர. 

“எமது அலுவலகத்திற்கு இரண்டு பெண்பிள்ளைகளை அமர்த்தினால் அலுவலக வேலைகள் தடையின்றிச் சென்று கொண்டிருக்கும்….” என்று அவர்கள் தீர்மானித்தனர். 

“சிரமதான அடிப்படையில் இல்லாமல் சம்பள அடிப்படை யில் தான் நியமிக்க வேண்டும்.” என்றான் யாசீன். 

“பியசீலியையும் ஜெஸ்மினையும் அமர்த்தினால் என்ன…?” என்று ஒரு அபிப்பிராயம் எழுந்தது. 

ஆனால், அமரவும், ஹலீமும் அதற்கு உடன்படவில்லை. தங்கள் சகோதரிகளுக்கு உத்தியோகம் கொடுக்க சங்கம் தொட ங்கி விட்டார்கள் என்று ஒரு கதை கிளம்பும்… எப்படியும் ஜெஸ்மினும் பியசீலியும் ஆசிரிய நியமனங்களை எதிர்பார்ப் பவர்கள். ஆகவே ‘அதை பிறகு யோசிக்கலாம்’ என்று தற்காலிக மாக கைவிட்டார்கள். 

அடுத்த நாள் பண்டார கிராம சேவகரின் வேண்டுகோளின் படி, குளக்காட்டுப் பிரதேச மாய்மை தொடர்பாக சமர்ப் பிக்கப்பட்ட சகல நிருபங்களுக்கும் உந்துதலாக ‘பிரதேச விவ சாயிகள் முன்னேற்றச் சங்கம்’ என்று அச்சிடப்பட்ட தாளில் முத்திரை குத்தப்பட்ட மற்றுமொரு கடிதத்தை ஜீ.ஏயிக்கு சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய பணி ஒன்றும் காத்திருந்தது. அமரதாசவும் ஹலீம்தீனும் ஜீ.எஸ்இன் அம்முயற்சிகளுக்கு உதவிகளும் ஒத்துழைப்பும் வழங்கினர். 

– தொடரும்…

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *