கதைவேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 6,225 
 

வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க படத்துல நல்ல கதை கதைவசனகர்த்தா தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், உங்க நண்பர் பாரிதான் என்னை அனுப்பி வைச்சார் என்றவன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். அதை அலட்சியமாக வாங்கிப்பார்த்தேன். பாரிதான் எழுதியிருந்தான் இவனைப்பற்றி ஆஹா ஓஹோ ! என எழுதியிருந்தான்.

நான் அந்த கடிதத்தை எடுத்து என் டேபிள் மேல் வைத்துக்கொண்டு தம்பி இப்ப எனக்கு தேவைப்படாது, தேவைப்படும்போது கூப்பிடுறேன், உன் முகவரியை சொல்லு என்று பேனாவை எடுத்து குறித்துக்கொண்டேன்.

வந்தவன் முகம் ஒரு முறை வாடி பின் நான் முகவரி கேட்டு குறித்துக் கொண்டதால் பரவசமாயிற்று.

நண்பன் பாரியைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என் பால்ய கால நண்பன், என்னுடன் சென்னைக்கு ஒன்றாக இரயிலில் ஏறி வந்தவன். நாங்கள் இருவரும் ஏறாத இடமில்லை, பார்க்காத தொழில்லை, பின் நான் எப்படியோ ஒரு டைரக்டரின் உதவியாளனாகச் சேர்ந்து யார் யாரோ கையை காலைப்பிடித்து ஒரு புரொட்யூசரின் படத்தை டைரக்ட் செய்ய அந்த படம் நன்றாக ஒட “டைரக்டர்” என்ற முத்திரையை வாங்கி விட்டேன். அதற்குப்பின் எடுத்த ஆறு படங்களில் நான்கு படங்கள் வெற்றி பெற்றதும் ஓரளவு புகழையும், பணவசதியையும் ஏற்படுத்திக்கொண்டேன்.

இதற்கிடையில் பாரி ஒரு அரசியல்வாதியிடம் சேர்ந்து எடுபிடி வேலைகள் செய்து பின் இவனே எம்.எல்.ஏ வாக ஆகி கட்சியில் நன்கு வள்ர்ந்துவிட்டான்.

இப்பொழுது சென்னையில் ஒரு பெரும் அரசியல் புள்ளியாகிவிட்டான். அவன் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் மந்திரி பதவி கிடைப்பதற்கு கூட வாய்ப்புண்டு என் பேசிக்கொள்கிறார்கள். அவன் சிபாரிசு பண்ணி இந்த பையனை அனுப்பி இருப்பதால் நிச்சயம் இந்த பையன் விசயமுள்ளவனாகத்தான் இருக்கவேண்டும்.

ஒரு வாரம் ஓடிவிட்டது, படப்பிடிப்பு வேலைகள் நடப்பதால் பாரியை பற்றியும், அந்த பையனைப்பற்றியும் மறந்து விட்டேன், தீடீரென்று ஒரு போன்கால் பேசியது பாரிதான் ‘என்ன சாமி’ சாமினாதன் என்ற என் பெயரை சாமி என்றுதான் கூப்பிடுவான், நான் அனுப்பிச்ச பையனை வேலைக்கு சேர்த்துக்கிட்டயா? என்று கேட்டவுடன் தான் எனக்கு அந்த பையன் ஞாபகம் வந்தது. சாரிப்பா வேலையில மறந்து போயிட்டேன் கண்டிப்பா அந்த பையனை சேர்த்துக்கறேன் என்று உறுதி கூறி போனை வைத்தேன். மறுநாள் அந்த பையனின் முகவரிக்கு ஆளனுப்பி வரச்சொன்னேன். வந்தான். தம்பி உன் பேர் என்ன? ரஹீம் சார் என்றான், பாரிக்கு உன்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். சார் எங்கப்பா அவர்கிட்ட உதவியா இருந்தாரு, திடீருன்னு ஒரு நாள் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு. அப்ப இவருதான் எங்க குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்தாரு, நான் டிகிரி முடிச்சுட்டு வேலை தேடிக்கிட்டு இருந்தேன், ந்ல்லா கதை எல்லாம் எழுதுவேன்.இதையல்லாம் பாரி சார்கிட்டசொன்னேன் அவர்தான் சரி நீ இந்த தொழிலேயே போ அப்படீன்னு உங்ககிட்ட அனுப்பி வச்சாரு. பட.. பட.. வென பேசி முடித்தான்.

சரி உன் கதையை சொல்லு பார்ப்போம் கதை கேட்க தயாரானேன். அவன் நாசுக்காக இங்க உட்காரலாமா சார் என்று சொல்லி உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தான். நான் அவன் சொல்லும் கதையையும், அவன் முகபாவங்களையும் இரசிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்டமாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. சரி தம்பி நீ சொன்ன இரண்டாவது கதைய கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டா ! என்று சொல்லி அவன் கையில் 2000/ரூ அட்வன்ஸ்சாக வைத்துக்கொள் என்று தந்தேன். பையன் கண்கலங்க ரொம்ப நன்றி சார் என்று சொல்லி திரும்பியவன் எதிரில் என்னைப் பார்க்க வந்த டைரக்டர் புட்டையாவை பார்த்ததும் வணக்கம் சொன்னான்.

ஒரு நிமிடம் இவனை உற்றுப்பார்த்தா புட்டயா தம்பி உன் பேர் என்ன?என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு என் நண்பன் பாரியில் ஆரம்பித்து என்னிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்கியது வரை முடித்தான். புட்டயா தன் சட்டைப்பையிலிருந்து விசிட்டிங் கார்டு எடுத்துக் கொடுத்து நாளை வந்து என்னைப்பார் என்றார். அவனும் மீண்டும் என்னைப்பார்த்து கும்பிடு போட்டு புட்டையாவுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பிச்சென்றான். புட்டயா பின் எதிரில் வந்து உட்கார்ந்தார். இருவரும் இன்றைய சினிமா நிலவரம் முதல் அரசியல் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு பின் கிளம்பிச்சென்றார்.

பாய் வந்தவன் சார் டைரக்டர் புட்டயா படத்துல அந்த பையன் ஹீரோவா புக்காகிட்டானாம். அதனால கதை சொல்ல நேரமில்லையாம், வாங்கிய அட்வான்ஸ் பற்றி பேசவேயில்லயாம். சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் என்று பணத்தை கோயில் உண்டியலில் போட்டதாக நினைத்துக்கொண்டேன்.

ஆறு மாதங்கள் ஓடிவிட்டன், என்னுடைய டைரக்சனில் ஒரு படம் வெளிவந்து சுமாரகத்தான் ஓடியது, ஆனால் டைரக்டர் புட்டயாவின் படம் நல்ல ஓட்டம் ஓடியது. அதில் நடித்த இந்த பையன் பெரிய அளவில் பேசப்பட்டான். தயாரிப்பாளர் ராஜன் என்னை முதன் முதலில் டைரக்டர் ஆக்கியவர் என்னிடம் ஒரு படம் பண்ணசொன்னார். அவர் சொன்னால் மறுக்கவா முடியும், ஆனால் அந்த படத்தில் ஹீரோவாக இந்த ரஹீம்தான் நடிக்கவேண்டும் என்று கண்டிஷன் போட்டார், நான் தயங்கினேன் சார் இந்த பையன் இப்ப ரொம்ப பிசி’ நமக்கு ஒத்து வருவானா? நான் அவனிடம் பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன், நாளை நீ போய் அவனைப்பார், என்று அவன் விலாசத்தை கொடுத்தார். அவன் கொடுத்த பழைய விலாசம் மாறிப்போய் இருந்தது.

மறு நாள் அவனைக்காண சென்றேன் “டிப் டாப்’ ஆக உடையணிந்த ஒருவனால் வரவேற்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டேன். சார் இப்ப வந்திடுவாரு உட்காருங்க’ என்று சொல்லி போய்விட்டான்.அரைமணி நேரம் கழித்து ரஹீம் வெளியே வந்தான்.

நல்ல உடை அணிந்திருந்தான். என்னைப்பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டு எதிரில் உட்கார்ந்தான். உங்க புரொடியுசர் பேசினாரு, ஆனா இப்ப நல்ல கதை உள்ள படத்துலதான் நடிக்கனும்னு இருக்கேன் அதனால நீங்க முதல்ல கதைய சொல்லுங்க, எனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்றேன் என்றான். இப்பொழுது நான் அவனுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

“காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *