இடப்பெயர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 5,631 
 

மேற்கு மலை தொடரில் அந்த மலை பிரதேசத்தில் சூரியனின் கதிர் வீச்சு ஓய்ந்து போய் தன் வீச்சை சாய்த்து வீசிக்கொண்டிருந்தான்.அனேகமாக மணி மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கலாம்.

வாகன புகைகளோ, அல்லது அவைகளின் ஒலிகளோ எதுவுமே கேட்காத அந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாய் இருந்தாலும் புதிதாய் வருபவர்களுக்கு அச்சத்தை தரக்கூடியதாகவே இருந்தது அந்த இடம்.

அந்த இடத்தில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளாய் உள்ளே செல்லும் காடு மலை உச்சி வரை பரந்து, உயரமான மரங்களால் நிறைந்து பல்வேறு விலங்குகள் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசமாய் இருக்கிறது.

அந்த அடர்ந்த காடு தொடங்குவதற்கு முன்புறம் இருந்த சம்வெளி ஒரு காலத்தில் அங்கு ஏராளமான காடு வாழ் மக்கள் வசித்து வந்திருக்கிறார்கள் என்ற ஆதாரங்களுக்கு அங்கு கிடக்கும் சிதிலமான சுவர்களும், அவர்கள் வளர்த்துவிட்டு வேறு வழியில்லாமல் விட்டுப்போன பழ மரங்களும், பூச்செடிகளும், மற்றும் வாழை தோப்பும், இவைகள் மனிதன் அந்த இடத்தை விட்டு சென்று இருபது வருடங்கள் ஆகியிருந்தாலும், நாங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சாட்சியம் கூறிக்கொண்டு அவைகள் இருந்து வந்தன.

அவைகள் வழக்கம்போல் பருவத்தில் பூத்து காய்த்து கனிந்து மனிதர்களுக்கு பயன்படாமல் அந்த பழ வாசனைக்கு தேடி வரும் யானை, கரடி போன்ற மிருகங்களுக்கு உணவாகிக்கொண்டிருந்தன. மிச்சம் மீதிகளை இரண்டு மைல் தள்ளி வசித்து கொண்டு இருக்கும் காடு வாழ் மக்கள் பறித்து செல்வர்.

எங்கு பார்த்தாலும் பச்சை புதர்களாகவும், மரம், செடிகளாலுமே பரந்த அந்த பகுதிக்கு மனித நடமாட்டமே இல்லாது சுற்றுப்புறம் விலங்குகளின் அலறல்களும் பறவைகளின் கூவல்களும், பூச்சிகளின் ரீங்காரங்களுமே கேட்டுக்கொண்டிருக்கும்.

அவர்கள் ஏன் காலி செய்து விட்டு பின்புறம் இரண்டு மைல் தள்ளி வந்தார்கள் என்று போன தலைமுறையில் வாழ்ந்த காட்டு வாழ் மக்களுக்கு தெரியும்.

பின்புறம் இரண்டு மைல் தள்ளி இவர்கள் தற்போது வசித்து கொண்டிருக்கும் பகுதிக்கு வந்தால் வெறும் புல்தளங்களால் விரிந்த ஒரு நிலப்பரப்பு. அந்த இடத்தில் முப்பது நாற்பது குடிசைகள் கோரைப்புற்களால் வேயப்பட்டு இருந்தது.அவைகளில் வசிப்பவர்களில் வயது முதிர்ந்த ஒரு சிலர் முன்னர் இருந்த இடத்தை விட்டு ஏன் காலி செய்து இங்கு குடி வந்தோம் என்று அறிபவர்களாக இருக்கலாம்.

இந்த குடில்கள் கூட முன்பு இங்கு வசிக்கவந்த புதிதில் இவர்களாக ஏற்படுத்திக்கொண்டது. இங்கு வந்து இருபது வருடங்கள் ஆகியிருந்தது.இதுவரை வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டுதான் இருந்தது. .

வனத்துறை, அவர்கள் சுயமாக வாழ தடை எதுவும் செய்யவில்லை என்றாலும், சில விஷயங்களில் கடுமையாகத்தான் இருந்தன. வேட்டையாடுதல், நகரங்களுக்கு மரங்கள் கொண்டு போவது,காட்டில் விளையும் அரிய வகை பொருட்களை பாதுகாப்பது இவைகளை கடுமையாக பின்பற்றின. என்றாலும் அவர்கள் வந்து செல்ல பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்திருந்தது. இந்த மக்களுக்காக காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் வந்து எட்டி பார்த்து யாராவது இருந்தால் உதிர்த்து விட்டு ஐயையோ இருட்டி விட்டதே ! யானையோ புலியோ வழியில் நின்றிருக்கும் என்று பயந்து ஓடி விடும் பயணிகள் பேருந்து ஒன்று கடமைக்காக வந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்து வந்து நிற்குமே தவிர ஆட்கள் அதில் வந்து இறங்குவார்களா என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும். வார முதல் நாளான திங்கள் மட்டுமே அந்த மலை அடிவாரத்தில் நடக்கும் சந்தைக்கு வந்து அந்த மலை வாழ் மக்கள் காய்கறிகளையும், வேறு ஏதே ஏதோ பொருட்களை வாங்கி செல்வர். மற்ற நேரங்களில் வனத்துறைக்கு தெரியாமல் தேன், ஒரு சில மிருகங்களை வேட்டையாடி மலை அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு விற்று காசாக்க அந்த மலைச்சரிவுகளில் நடந்தே வந்து செல்வார்கள்.

அன்று மாலை மூன்று மணி இருக்கும் இளைஞம் ஒருவன் அந்த குடியிருப்பையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான்.அவன் எப்படி வந்தான் என்று தெரியவில்லை, காலையில் பேருந்தில் வந்திருந்தாலும் அங்குள்ள காட்டு மக்களின் கண்ணில் பட்டிருப்பான், மாலை ஆறு மணிக்கு மேல்தான் பேருந்து அங்கு வரும். அப்படி இருக்க, இந்த வேளையில் அவன் அந்த காட்டை நோக்கி நடந்து சென்றது அங்கிருந்த சூழ்நிலைக்கு வித்தியாசமாய் இருந்தது.

அது மட்டுமல்ல, அவனின் தோற்றம் நாகரிகமாய் இருந்தது. வயது இருபதுக்குள் இருக்கலாம். அவன் வேக வேகமாக நடந்து அந்த குடியிருப்பை தாண்டி சென்று கொண்டிருப்பதை பார்த்தால் அந்த காட்டுக்குள் நுழைவதற்கு அவசரப்படுபவன் போல் இருந்தது.

அந்த குடியிருப்பில் இருந்து வெளியே ஏதேச்சையாக வந்த சின்ன குயிலிக்கு தூரத்தில் காட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் இவனின் முதுகுப்புறம் கண்ணில் பட்டது. காலுக்கு குழாயும், கலராய் சட்டையும் போட்டுக்கொண்டு இந்த காட்டுக்குள் ஆட்கள் வருவதை இத்தனை வருடங்களாக இவள் கண்டதில்லை. மலை அடிவாரத்திற்கு சந்தைக்கு போகும்போது பார்த்திருக்கிறாள்.ஆச்சர்யத்துடன் அவன் காட்டுக்குள் மறைவதை பார்த்துக்கொண்டிருந்தவள் அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது போல் உள் புறம் திரும்பி மயிலா மயிலா..கூப்பிட்டாள்.

இவளின் சத்தம் கேட்டு இரண்டு வீடு தள்ளி இருந்த மயிலா வெளியே வந்தாள். யாரோ காட்டுக்குள்ள போயிட்டிருக்காங்க, சின்னக்குயிலி சொல்லவும்

யாரு? என்றாள்

தெரியலை நாட்டுக்காரன் மாதிரி தெரியுது.

ஆம்பளை யாருமில்லை, வரட்டும் போய் பாக்கலாம், சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் கணவனுக்கு ராகி களி கிண்டுவதற்கு உள்ளே சென்று விட்டாள்.

மாலையில் ஆண்கள் வரும்போதே காட்டு பன்றி வேட்டையாடி கொண்டு வந்து விட்டதால், சின்ன குயிலிக்கு அதை பங்கு பிரிப்பதிலும், சமைப்பதற்கும் பொழுது சரியாக இருக்க மாலையில் ஒரு ஆள் காட்டுக்குள் நுழைந்ததை மறந்தே விட்டாள்.

காலையில் காட்டுக்குள் போட்டிருக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கை எடுத்து வர கணவனோடு கிளம்பியவளுக்கு நேற்று காட்டுக்குள் ஒருவன் நுழைந்து சென்றதை

பார்த்தது ஞாபகம் வந்தது. கணவனிடம் சொன்னாள். முகத்தை சுருக்கிக்கொண்டு கேட்டவன், பக்கத்தில் இருக்கும் நாலைந்து பேரை கூப்பிட்டு நேத்து யாரோ காட்டுக்குள்ள பூந்தாங்களாமா என்று சின்னகுயிலி சொன்னதை சொன்னான்.

உடனே அவர்களுக்குள் ஆலோசனை நடந்தது. யார் அது? நேற்று போனவன் இதுவரை ஏன் வெளியே வரவில்லை? இறுதியில் காட்டுக்குள் நுழைந்து தேடி பார்த்து விடுவது என்று முடிவு செய்தனர். நான்கைந்து இளைஞர்கள் பட்டாளம் காட்டுக்குள் நுழைந்தது.

அந்த மேற்கு மலை தொடர்ச்சி காடு சாதாரணமானது அல்ல. போக போக உள்ளே அடர்த்தியாகவும் இருளாகவும் இருக்கும். காட்டில் வசிக்கும் இவர்களே தேவையில்லாமல் உள் புறமாக நுழைய மாட்டார்கள். தேனெடுப்பதற்கு மட்டும் உள் புறமாய் உள்ள மலைச்சிகரங்களில் சென்று தேன் எடுத்து வருவர் ஒரு ஆளைத்தேடி உள்ளே செல்வது இளைஞர்களுக்கு புதியது. இருந்தாலும்

காட்டுக்குள் நுழைந்தவர்கள், தேடி தேடி உள்புறமாக நீண்ட தூரம் சென்று விட்டார்கள்.ஆள் யாரும் இருப்பதற்காக அறிகுறியே காணப்படவில்லை.இனி தங்கியிருந்தால் மிருகங்களின் நடமாட்டம் அதிகமாகிவிடும் என்று திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டனர்.

சின்னக்குயிலி அடித்து சொன்னாள், நான் பார்த்தேன் ஒரு ஆள் உள்ளே நுழைந்ததை, ஆனால் அவள் சொன்னதை நம்புவதற்குத்தான் ஆட்கள் இல்லை, “மயிலாவும்” சின்னகுயிலி சொன்னதை மட்டும் கேட்டேன், ஆளை பார்க்கவில்லை என்று சொல்லி விட்டாள்.

சரி இத்தோடு விடுவோம் இந்த பிரச்சினையை என்று அவரவர்கள் வேலையை பார்க்க கிளம்பினர். ஆனால் சின்ன குயிலி மட்டும் மனதுக்குள் அதெப்படி? தான் கண்ணால் பார்த்தது பொய்யா? இரண்டு மூன்று நாட்கள் கேட்டுக்கொண்டே இருந்து பின் மறைந்தும் விட்டது.

இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருக்கும் நள்ளிரவில் இயற்கை உபாதைக்கு வெளியே வந்த சின்னக்குயிலி சற்று தூரத்தில் நான்கைந்து வெளிச்சப்புள்ளிகள் வரிசையாக நகர்ந்து செல்வதை கண்டாள். அப்படியே திகைத்து நின்றவள் அவசர அவசரமாய் உள்ளே வந்து கணவனை எழுப்பினாள். நல்ல தூக்கத்தில் இருந்த அவள் கணவன் என்னமோ ஏதோவென்று எழுந்தான். அவனிடம் தான் கண்டதை சொல்ல அவள் கணவன் வெளியே வந்து அவள் சுட்டி காட்டிய இடத்தை பார்க்க கரும் இருட்டாகத்தான் அங்கு இருந்தது. மனைவியிடம் கோபித்துக்கொண்டான்.

சின்னக்குயிலிக்கு ஒரே மர்மமாய் இருந்தது, அதெப்படி இப்பொழுதுதானே பார்த்தேன் சற்று தூரத்தில் வரிசையாய் வெளிச்சம் சென்றதை. மனதுக்குள் குழப்பத்துடன் படுத்தாள். இனி நாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள், கணவனே நம்ப மறுக்கிறான், மற்றவர்கள் எப்படி?

இரண்டு நாட்கள் நகர்ந்திருக்கும், விடியற்காலை நேரம் “எல்லோரும் வெளியே வாங்க” ஏதோ ஆட்கள் சத்தம் கேட்டு அங்கு வசிக்கும் ஆண்,பெண் குழந்தைகள், அனவரும் வெளியே வந்தவர்கள் எதிரில் பத்திருபது பேர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி நின்றனர்.

“உங்களுக்கு எச்சரிக்கை பண்ணறதுக்காக இங்க வந்திருக்கோம், பயப்படாதீங்க உங்களை நாங்க ஒண்ணும் செய்ய மாட்டோம், அதே நேரத்துல போலீஸ் கிட்ட எங்களை யாராவது காட்டி கொடுக்க நினைச்சா அப்புறம் நடக்கறதே வேறே” கர்ஜித்தான் அந்த கூட்டத்தின் நடுவில் நின்றவன்.அந்த நேரத்திலும் கர்ஜித்துக்கொண்டிருந்தவன் சட்டையின் நிறம் அன்று காட்டுக்குள் நுழைந்தவன் இவன்தான் என்பது நினைவுக்கு வந்தது. அப்படியானால் இவ்வளவு நாள் இந்த காட்டுக்குள்தான் இருந்திருக்கிறான், அதெப்படி நமக்கு தெரியாமல் அதுவும் இத்தனை பேர் இங்கே சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள்?

அரை மணி நேரத்தில் வந்தது போலவே அனைவரும் விறு விறுவென காட்டுக்குள் நுழைவதை இங்குள்ளவர்கள் பிரமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அன்று முழுக்க குழப்பமான மன நிலையிலேயே அவர்கள் இருந்தனர், வனத்துறைக்கு சொல்லி விடலாம்? சொன்னால் இவர்கள் திரும்பி வந்து நம்மை சுட்டு விட்டால் என்ன செய்வது? சொல்லாவிட்டால் வனத்துறையும், போலீசும் நம்மை சும்மா விடமாட்டார்கள். அங்கு இருந்த வயதில் “மூத்தவர்” எல்லாம் பேசாம இருங்க ஜோலியை பாக்கலாம் என்று சொன்ன பின்னால் கலைந்து சென்றார்கள்.

இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்கள் இருக்கும், இரவு கவிழத்தொடங்கும் நேரம் “எல்லாரும் வெளியே வாங்க” அதட்டல் குரல் ஒலிக்க அங்கு வசித்த அனைவரும் வெளியே வர காக்கி சீருடையுடன் நாற்பது ஐம்பது பேர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர்.

இந்த ஏரியாவுல ஆளுக நடமாட்டம் இருக்குதா? இதுவரைக்கும் உங்க முன்னாடி யாராவது தட்டு பட்டிருந்தா தாராளமா சொல்லலாம். அதிகாரி போன்றிருந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

யாரும் பதில் சொல்லாவிட்டாலும் கண்கள் தானாக சின்ன குயிலி பக்கம் சென்றதை தடுக்க முடியவில்லை. நல்ல வேளை சொல்லிக்கொண்டிருந்த அதிகாரி இதை கவனிக்கவில்லை.

அவர்கள் எதுவும் பேசாமல் அங்கு நின்று கொண்டிருந்த காவலர்களையே பார்த்துக்கொண்டு நின்றனர். அதிகாரி மேலும் ஏதேதோ பேசிக்கொண்டு போனார்.

உங்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம் நடத்த உள்ளோம்,மேலும் அரசாங்கம் இந்த இடத்துக்கு சூரிய ஓளி விளக்குகள் போட ஏற்பாடு செய்துள்ளது. இன்னும் பல வசதிகளை உங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்போகிறோம். நீங்கள் மட்டும் எங்களுக்கு

ஒத்துழையுங்கள், இந்த காட்டுக்குள் யாராவது வெளி ஆட்கள் தென்பட்டால், உடனே எங்களுக்கு தகவல் தெரியுங்கள், உங்கள் வசதிக்காக மலை அடிவாரத்திலேயே காவல் நிலையம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

சற்று நேரத்தில் அந்த காவல் படை அங்கிருந்து நகர்ந்து அவர்கள் சென்ற காட்டுக்குள்லேயே நுழைந்தனர்.

இனி நிம்மதி அவ்வளவுதான் என்று ஒவ்வொருவர் மனதிலும் தோன்ற அவரவர் குடிலுக்குள் நுழைந்து கொண்டனர்.

அடுத்து வந்த ஒரு மாதத்திற்குள் அந்த அடர்ந்த காட்டுக்குள் திடீர் திடீரென வெடி சத்தம் கேட்டது. அப்பொழுதெல்லாம் இங்குள்ள ஆண்கள் காட்டுக்குள் இருந்தால் அவர்கள் உயிரோடு வரவேண்டும் என்று பெண்கள் இறைவனை வேண்டிக்கொள்வார்கள்.

துப்பாக்கியோடு அந்த குழுக்களும், அவர்களை விரட்டிக்கொண்டு காவல் வீர்ர்களும், அடிக்கடி இவர்களை இம்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு நாள் வழக்கம்போல இவர்களை எச்சரித்து விட்டு போக வந்த ஆயுத குழு அந்த இட்த்தை பார்த்து அதிர்ச்சியாகி விட்டது. காரணம் அங்கு அவர்கள் குடியிருந்த வீடுகள் வெறிச்சோடிப்போய் ஒருவர் கூட இல்லாமல் கிடந்தது.

அவர்களை விரட்டிக்கொண்டு அடுத்து வந்த காவல் துறையும் அங்கு ஒருவரும் இல்லாத்தை கண்டு திகைத்து போய் விட்டது. எங்கு போனார்கள்?

மீண்டும் அவர்கள் ஒரு இடப்பெயர்ச்சி செய்து இன்னும் இரண்டு மைல் தள்ளி தங்களுடைய குடியிருப்பை மாற்றியிருந்தார்கள். அவர்கள் வசித்த இடம் காலப்போக்கில் செடி கொடிகளால் சூழப்பட்டு, அந்த இடத்தில் விளைந்திருந்த பழமரங்கள் விலங்குகளுக்கு உணவாகக்கூடும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *