அருள்நாயகம் மாஸ்டரும் அயின்ஸ்டீனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 8,064 
 

அம்மா கிணற்றடியில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு சடக் சடக்கென்று நடந்து வந்தார். தலையை துவட்டிவிட்டு குனிந்தபோது தலை முடி நிலத்தை தொட்டது. கூரையில் இருந்து உருவிய ஒரு கறுப்பு தடியினால் அம்மா முடியை அடிக்கத் தொடங்கினார். அவர் சிக்கெடுப்பது அப்படித்தான். தண்ணீர் துமி பறந்து என்னைத் தொட்டபோது அது சுகமாக இருந்தது. சூரியனும் எனக்கு பின்னால் நின்று அந்தக் காட்சியை பார்த்தான். ஒரு வட்டமான வானவில்லை அம்மா உண்டாக்கியிருந்தார்.

அந்த நாள் நல்லாக ஞாபகம் இருக்கிறது. என் வாழ்க்கையில் முக்கியமான நாள். அம்மாவின் தலை முடி ஈரம் காய்வதற்கிடையில் என் வாழ்க்கை மாறும். முன்பு நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரேயடியாக மறைந்துபோகும். இனிமேல் அந்த பழைய வாழ்க்கை எனக்கு கிடைக்காது.

அருள்நாயகம் மாஸ்டர் படலையை திறந்துகொண்டு உள்ளே வந்தார். ஏதோ காற்றடித்துக் கொண்டுவந்து விட்ட பிராணிபோல அவர் இருந்தார். தலை கலைந்துபோய் கிடந்தது. கறுப்பாக, ஒல்லியாக, உயரமாக, வெள்ளை சட்டையில் அவர் அசைந்து அசைந்து நடந்தார். அந்த அசைவு காற்றுத் தள்ளி அவர் வருவது போலவே இருந்தது.

அருள்நாயகம் மாஸ்டருக்கும் எனக்கும் ஒருவித தொடர்பும் கிடையாது. அவர் அடுத்த வகுப்பை படிப்பித்தவர். சயன்ஸ், கணிதம் பாடங்களில் அவரை வெல்லமுடியாது என்று சொன்னார்கள். என்னுடன் ஒரேயொரு முறை பேசியிருக்கிறார். ஆகவே அவர் என்மேல் முறைப்பாடு கொண்டு வந்திருக்கமாட்டார். நான் தைரியமாக நின்றேன். அம்மா சேலை மாற்ற உள்ளே ஓடினார்.

விசயம் இதுதான். அந்த தவணை முடிந்தவுடன் அவர் எங்கள் கிராமத்து பள்ளிக்கூடத்தை விட்டு பல மைல்கள் தூரத்தில் இருக்கும் மிஷன் பாடசாலைக்கு மாற்றலாகிப் போகிறார். அந்த வருடம் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் வாங்கியது நான்தான். என்னையும் மிஷன் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்படி கேட்க வந்திருந்தார். நான் இனிமேல் வீட்டிலிருந்து படிக்கப் போகமுடியாது; விடுதியில் இருந்துதான் படிக்கவேண்டும்.

அப்படித்தான் நான் மிஷன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். நான் படித்தது சிறிய ஓலைக்கூரைப் பள்ளிக்கூடம். மிஷன் பள்ளிக்கூடம் பெரிய பெரிய தூண்களையும், உயரமான விதானங்களையும் கொண்டிருந்தது. பழைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிவர நான்தான் போவேன். வெளியே மரத்தடி கடையில் தேநீர் வாங்கி மூக்குப்பேணியில் பிடித்தபடி திரும்பவேண்டும். புதுப் பள்ளிக்கூடத்தில் பாடசாலைக்கு உள்ளேயே கடை இருந்தது. அதன் பேர் tuck shop என்றார்கள். இடைவேளையின்போது மாணவர்களும், ஆசிரியர்களும் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டார்கள்; பானங்களை குடித்தார்கள்.

என்னுடைய வகுப்பிலே பல பெண்கள் படித்தார்கள். அவர்கள் பெயரிலே மலர் இருக்கும். நேசமலர், அற்புதமலர், உள்ளக்கமலம். சிரித்தால் திருப்பி சிரித்தார்கள். நின்று கதைத்தால் இடது பக்கமும், வலது பக்கமும் தலையை அசைத்துப் பார்க்காமல் திடகாத்திரமாக நின்று பேசினார்கள். மற்றப் பள்ளிக்கூடங்களில் நடப்பதுபோல அவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லவில்லை. பெயரிலே மலர்கள் இருந்தாலும் தலையிலே மலர்களைச் சொருகவில்லை. புத்தகங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி மார்பை மறைக்கவில்லை. எல்லாம் அற்புதமாக இருந்தது.

ஆனால் இந்த அற்புதம் என்னுடன் வகுப்புக்குள் நுழைய மறுத்துவிட்டது. வழக்கமாக முதல் வரிசை, மூன்றாவது மேசையில் இருக்கும் நான் மெதுமெதுவாக கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டேன். ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் படாரென்று எல்லாக் கைகளும் உயரும். என்னுடையதைத் தவிர. கணிதத்தில் என்னைவிட ஆள் இல்லை என்ற இறுமாப்பில் நான் இருந்தேன். ஆனால் இங்கே எளிமையான ஒரு கணக்கு கூட என் மூளைக்கு எட்டாத தூரத்தில் நின்றது.

அருள்நாயகம் மாஸ்டர் இங்கேயும் என்னுடைய வகுப்புக்கு கிளாஸ் எடுக்கவில்லை. அடுத்த வகுப்பில்தான் படிப்பித்தார். எப்பொழுது என்னைச் சந்தித்தாலும் “என்ன, நல்லாய் படிக்கிறியா?” என்று கேட்பார். நானும் “படிக்கிறேன் சேர்”என்பேன். அவ்வளவுதான். கிராமத்தில் ராசா மாதிரி படித்த என்னை இங்கே கொண்டு வந்து திசை தெரியாத பள்ளிக்கூடம் ஒன்றில் இறக்கிவிட்டு ஒரு பொறுப்பும் இல்லாமல் திரிந்தார். சில சமயங்களில் எனக்கு எரிச்சலாக வரும்.

என்னைப் போன்ற மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்தார்கள். ஆசிரியர்களிலும் பலர் அப்படியே. அருள்நாயகம் மாஸ்டர் இரண்டாவது மாடியில் ஒரு சின்ன அறையில் தங்கியிருந்தார். எப்படி மூளையைப் போட்டு அடித்தாலும் விடுக்கமுடியாத ஒரு கணிதத்தை தூக்கிக்கொண்டு ஒரு நாள் அவருடைய அறைக்கு போய் கதவைத் தட்டினேன். அது மேலுக்கும் கீழுக்கும் இரண்டு பாதியாகத் திறக்கும் கதவு. அவர் குனியப் பஞ்சிப்பட்டு மேல் பாதியை மட்டும் திறந்தார். நான் கால்களை எட்டி வைத்து கடந்து உள்ளே குதித்தேன். ஏதோ வெகுநேரம் என்னை எதிர்பார்த்தவர்போல “வா வா “என்றார். அன்றுதான் அவருடைய அறையை நான் முதல் தடவையாக பார்த்தேன்.

ஒரு சின்ன மேசை. ஒரு படுக்கை. புத்தக அடுக்கு நிறைய புத்தகங்கள். தரையிலும் புத்தகங்கள். படுக்கையிலும் புத்தகங்கள். கமலா மார்க்கண்டேயா என்பவர் எழுதிய புத்தகம் ஒன்று பாதி படித்தபடி மேசையில் குப்புறக் கிடந்தது. மறுபடியும் படுக்கையிலே சுருண்டுபோய் உட்கார்ந்து புத்தகத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார். என்னை பொருட்படுத்தவில்லை. அரைக்கை பனியனில் மெலிந்துபோன றால்போல தோற்றமளித்தார்.

நான் கொண்டு வந்த கணிதத்தைக் காட்டினேன். அதை அப்படியே வாங்கி வைத்தார். “உனக்கு ராமானுஜனைத் தெரியுமா?”என்றார். எனக்கு திக்கென்றது. நான் எப்பொழுது அவரிடம் அகப்பட்டாலும் ஒரு மேதையைப் பற்றியோ, ஒரு விஞ்ஞானியைப் பற்றியோ ஒரு மணித்தியாலம் பேசாமல் காரியம் நடக்காது. “இல்லை, சேர்” என்றேன்.

“என்ன கொடுமை, பார். அவர் ஒரு முப்பது வருடத்துக்கு முந்தித்தான் இந்தியாவில் இறந்துபோனார். அவரைப்போல ஒரு கணித மேதை இந்த உலகத்திலேயே கிடையாது. இன்றைக்கும் அவர் எழுதி வைத்ததை படித்து புரிந்துகொள்ள முடியாமல் பெரிய பெரிய வெள்ளைக்கார கணித விற்பன்னர்கள் எல்லாம் திக்குமுக்காடுகிறார்கள். அவர் இங்கிலாந்தில் இருந்த கணிதப் பேராசிரியர் ஹார்டிக்கு என்ன எழுதினார் தெரியுமா?”

“தெரியாது, சேர்.”

“என்னுடைய கடும் உழைப்பை முதல் முதல் மதிக்கும் ஒரு நண்பரை உங்களில் பார்க்கிறேன். நான் அரைப்பட்டினியாக இருக்கிறேன். என்னுடைய மூளையை பாதுகாக்க எனக்கு உணவு தேவை.”

“எவ்வளவு கேவலம். என்ன வெட்கக்கேடு. இந்தியாவின் மாபெரும் கணித மேதைக்கு சாப்பிட உணவில்லை.” அருள்நாயகம் மாஸ்டரின் குரல் தழுதழுக்க தொடங்கிவிட்டது. ஒரு மணி நேரம் கழித்து திரும்பியபோது நான் எடுத்துச் சென்ற கணிதம் புத்தம் புதுசாக ஒரு வரிகூட எழுதப்படாமல் அப்படியே இருந்தது.

எங்கள் வகுப்பில் படித்த பெண்களில் எனக்கு மிகவும் பிடித்தவள் அமலோற்பலம். வகுப்பிலே எப்பொழுதும் கையை தூக்கிவைத்தபடியே இருப்பாள். எல்லாக் கேள்விகளுக்கும் அவளுக்கு விடை தெரியும். ஆசிரியர் கேட்காத கேள்விகளுக்கும் அவளிடம் பதில் இருந்தது. சுருட்டி வைத்திருக்கும் ஒரு கொப்பியில் அத்தனை பாடத்துக்கும் நோட்ஸ் எடுப்பாள். வகுப்புக்குள் நுழைந்ததும் புத்தகத்தை மேசையிலே ஒரு அடி உயரத்தில் இருந்து போட்டுவிட்டு அமர்வாள். சில வேளைகளில் எனக்குப் பக்கத்திலும் உட்காருவாள். அவள் வாய் ஏதாவது ஒன்றை மென்றபடி இருக்கும். எதற்காக புத்தகத்தை உயரத்தில் இருந்து போடுகிறாள் என்று கேட்டால் “இன்றைக்கும் g வேலை செய்கிறதா என்று பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு வாயை திறந்து சிரிப்பாள். பாதி அரைத்த உணவு வாயினுள் இருக்கும். அப்போது அவள் மிக அழகாக தென்படுவாள்.

அமலோற்பலத்தின் நடை விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது. தாட் தாட் என்று நிலம் அதிர முன்னுக்கு அடி எடுத்து வைத்தால், அவளுடைய வட்டமான ஆடை நியூட்டனின் விதிகளை மீறி பக்கவாட்டில் ஆடும். ஒரு விலை மதிக்க முடியாத தருணம் என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. அவளுடைய இயற்பியல் குறிப்புகளை கடன் வாங்கமுடியுமா என்று சும்மா கேட்டேன். சுருட்டி வைத்த கொப்பியை தருவாள் என்று எதிர்பார்த்தால் அவள் பளபளக்கும் ஒரு மொனிட்டர்ஸ் கொப்பியை தூக்கி நீட்டினாள். விடுதிக்கு கொண்டுபோய் பிரித்துப் பார்த்த எனக்கு கிலி பிடித்தது. அதிலே மணி மணியாக எழுதி வைத்திருந்தாள். ஆசிரியர் சொல்லாத எத்தனையோ விசயங்கள் இருந்தன. இவள் வகுப்பிலே எடுத்த குறிப்புகளை வைத்து, புத்தகத்தையும் படித்து, நாளாந்தம் புதிய குறிப்புகள் தயாரிக்கிறாள். அதை என்னிடம் தயக்கமில்லாமல் தூக்கி தந்திருக்கிறாள்.

நான் கொப்பியை திருப்பி கொடுக்கும்போது ராமானுஜனை அவளுக்கு தெரியுமா என்று கேட்டேன். “அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான்” என்றாள். நான் விழுந்து விழுந்து சிரித்தேன். பிறகு ராமானுஜனைப்பற்றி ஒரு மணிநேரம் பிரசங்கம் செய்தேன். அவளுக்கு தெரியாத ஒரு விசயம் எனக்கு தெரிந்ததில் ஒரு பிடி கிடைத்திருந்தது. அன்று இரவு படுக்கப்போகும்போது அருள்நாயகம் மாஸ்டரைப் பார்த்து இப்படியான புதுவிசயங்களை உருவ வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவளைப் பிரமிக்க வைக்க இதைவிட சிறந்த வழியில்லை.

இந்தக் காலங்களில் அருள்நாயகம் என்ற பெயர் எல்லோருக்கும் மறந்துபோய் அவரை “லூசன்” என்று அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். அவர் பிடித்து வந்த மாணவன் என்ற முறையில் எனக்கும் கொஞ்சம் அவப்பெயர் அதனால் ஏற்பட்டது. ஆனால் அதைக் களையும் வழி எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அப்போதுதான் நடந்து முடிந்த தவணைப் பரீட்சையில் எனக்கு கிடைத்த மதிப்பெண்களின் கூட்டுத் தொகை சில மாணவர்கள் ஒரு பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணிலும் பார்க்க குறைவாக இருந்தது. இந்த மனுசன் தன்னையும் கெடுத்து என்னையும் கெடுத்தாரே. ஆனால் எந்தப் பள்ளிக்கூடத்திலும் மாணவர்கள் தீர்க்கதரிசிகள். அவர்கள் லூசன் என்று பெயர் வைத்தது முற்றிலும் சரி என்பது சில நாட்களில் நிரூபணமானது.

எங்களுக்கு வழக்கமாக கணிதப் பாடம் எடுக்கும் ஆசிரியர் அன்று வரவில்லை. அவருக்கு பதிலாக இவர் வந்தார். கழுத்து வரைக்கும் பட்டன் போட்ட சட்டை அணிந்திருந்தார். சிலர் என்னை திரும்பி பார்த்தார்கள். மாஸ்டர் எடுத்த வீச்சு ஒரு கணிதக் கேள்வியை கரும்பலகையில் எழுதினார். எங்கள் வகுப்பிலே இரண்டு கரும்பலகைகள் தொங்கும். ஒன்றை மேலே தள்ளினால் மற்றது கீழே வரும். வலது கையில் சோக்கட்டியை எடுத்துப் பிடித்து, முழுசாக ஒரு நிமிடம் கரும்பலகை முன் நடனமாடிவிட்டு, கணிதத்துக்கு விடையை எழுத ஆரம்பித்தார். பலகை நிரம்பியதும் அதை மேலே தூக்கிவிட்டு மற்றதில் எழுதினார். மாணவர்கள் வேகமாக கொப்பிகளை நிரப்பினார்கள். மீண்டும் அதை மேலே தள்ளிவிட்டு அடுத்ததில் எழுதினார். இப்படி எழுதிக்கொண்டே போனார், ஆனாலும் விடை கிடைத்தபாடில்லை. வகுப்பு முடியும்வரை கிடைக்கவில்லை.

அந்த வாரக் கடைசியில் அவரைத் தேடிப் போனேன். அவர் தோளிலே ஒரு வெட்டுக்கிளி இருந்தது அவருக்கு தெரியவில்லை. என்னை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் குனிந்து வேகமாக எழுதிக்கொண்டிருந்தார். எழுதி முடித்த தாள்கள் அவர் காலடியில் குவிந்து கிடந்தன.

“என்ன சேர் எழுதிறியள்?”

“Fermat’s Last Theorem பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கு நிரூபணம் எழுதிக் கொண்டிருக்கிறேன். 17ம் நூற்றாண்டில் இருந்து இந்தப் புதிர் விடுபடவே இல்லை. இன்னும் 50 பக்கங்கள் எழுதினால் நிரூபித்துவிடுவேன்.” மாஸ்டர் பேசத் தொடங்கினார். அப்படி தொடங்கினால் நிறுத்த முடியாது. மழை ஓய்வதுபோல தானாக ஓய்ந்தால் சரி.

நான் கதையை மாற்ற “சேர் இது யாற்ற படம்” என்று கேட்டேன். கைப்பிடி வைத்த ஒரு கதிரையில், இரண்டு கைகளும் வெளியே தொங்க, கால் நிலத்தில் படாமல் ஒரு கிழவி உட்கார்ந்திருந்தார். அவருடைய பாட்டியாக இருக்கலாம். ஆனால் அவர் அம்மா என்றும், தான் ஒரே பிள்ளை என்றும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தன்னுடைய தாயார் தங்கள் கிராமத்து பஸ் தரிப்புக்கு வந்து தனக்காக காத்துக் கொண்டு நிற்பார் என்றும் சொன்னார். “கடந்த இரண்டு கிழமைகளாக நான் வீட்டுக்கு போகவில்லை” என்றார். “ஏன் சேர் போகவில்லை.” சிறிது நேரம் அவர் கவனம் எங்கோ போய் மீண்டது. “இந்த நிரூபணத்தை முடிக்காமல் எப்படி வீட்டுக்கு போக முடியும்?”

“சேர், முன்னூறு வருடங்களாகக் கண்டுபிடிக்கமுடியாத நிரூபணத்தை மூன்று வாரங்களில் எப்படி சேர் உங்களால செய்ய முடியுது.”

சேர் என்னைப் பார்த்தார். அவர் விழிகள் சுழன்று மேலுக்கு போயின. ஆழ்ந்து யோசித்தார். உடம்பு சிலிர்த்து அசைந்தது.

“இரவிலே என் காதுகளில் கணித வழிகள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன” என்றார். நான் அவசரம் அவசரமாக விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

அடுத்த வாரம் அமலோற்பலத்திடம் Phrenology என்றால் என்னவென்று கேட்டேன். அவளுக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த வாரம் உலகத்திலேயே பெரிய வகுபடா எண் என்னவென்ற கேள்வியை வீசினேன். அந்த எளிய கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. ரொபின்சன் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் அதைக் கண்டு பிடித்திருந்தார். மூன்றாவது வாரம் உலகத்திலேயே ஆதியான கணிதப் புத்தகம் எது என்று கேட்டேன். மௌனமாக இருந்தாள். எகிப்தில் எழுதப்பட்டது என்ற குறிப்பும் தந்தேன். அப்படியும் அவளுக்கு தெரியவில்லை.

அமலோற்பலத்தை வியப்பில் ஆழ்த்துவதுதான் என் வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக மாறியிருந்தது. அதற்காக நான் அருள்நாயகம் மாஸ்டருடைய அறைக்கு அடிக்கடி போய்வந்தேன். ஒரு முறை போனபோது எவெரெஸ்டின் உயரம் ஆறு புள்ளிகளில் இருந்து கணிக்கப்பட்டது என்றும், அந்த அளவையில் தவறு இருக்கிறது என்றும் தான் அதை திருத்துவதில் இறங்கியிருப்பதாகவும் அறிவித்தார். அதுவும் சிறிது காலம்தான். கடைசியாக நான் பார்த்த ஒரு நாள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார்.

அது 1955ம் ஆண்டு. அந்த ஆண்டுதான் அயின்ஸ்டீன் இறந்தார். பள்ளிக்கூடக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடவேண்டும் என்று தலமையாசிரியருடன் வாதாடினார். அவர் மறுக்க அது பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது.

“அயின்ஸ்டீன் ஆர்? ஒரு ஜீனியஸ். 19ம், 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞான மேதை. நியூட்டனுக்கு பிறகு மனித அறிவை எட்டாத உயரத்துக்கு தூக்கிவிட்டவர். சுவிட்சர்லாந்தில் ஒரு சிறிய அலுவலகத்தில் அவருக்கு சின்ன உத்தியோகம். ஒரு நாள் வழக்கம்போல அலுவலத்துக்கு நடந்துபோய்க் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் மிசெல் பெசோவுடன் பேசியபடி மணிக்கூண்டுக் கோபுரத்தை கடந்தார். அப்பொழுது ஒரு பொறி தட்டியது. எங்கிருந்து, எப்படி அந்தப் பொறி வந்தது என்று அவருக்கு தெரியவில்லை.

“காலம் என்பது மாறாதது அல்ல; வேகத்துக்கு தக்க அது மாறும். பிரபஞ்சத்திலேயே ஆகக்கூடிய வேகம் ஒளியின் வேகம். அதனிலும் கூடிய வேகம் ஒன்றுமில்லை. ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒரு மனிதனுக்கு வயது கூடுவதே இல்லை. என்ன மகத்தான கண்டுபிடிப்பு. அப்போது அவருக்கு 21 வயதுதான்.” அருள்நாயகம் மாஸ்டர் மறுபடியும் தேம்பி அழத் தொடங்கினார். ஒரு ஆசிரியர் அழும்போது மாணவன் என்ன செய்யவேண்டும்? எனக்கு தெரியவில்லை.

அதன் பிறகு காரியங்கள் மளமளவென்று நடந்தன. ஒரு நாள் மத்தியான வெய்யிலில் பள்ளிக்கூடம் ஸ்தம்பித்து நின்றது. எல்லோரும் மைதானத்தை நோக்கி ஓடினார்கள். அங்கே அருள்நாயகம் மாஸ்டர் நின்றார். அவருடைய வேட்டியின் ஒரு நுனி அவிழ்ந்து நிலத்திலே இழுபட்டது. இரண்டு பக்கமும் இரண்டு மாணவர்களின் கழுத்தை நெருக்கிப் பிடித்திருந்தார். அவர்களுக்கு வயது 12 இருக்கும்; எதையோ அண்ணாந்து பார்த்தார்கள். அங்கே நீலமான காயத்தில் ஒரு ஓட்டை வழியாக சூரியன் எரிந்துகொண்டிருந்தான். சுற்றிவர பள்ளிக்கூட மாணவர்கள் அச்சத்துடன் நின்றார்கள்; ஆசிரியர்களும் நின்றார்கள்; பிரின்ஸ்சிப்பலும் நின்றார்.

நான் பின்னர் அந்த மாணவர்களை தேடிப்பிடித்து என்ன பார்த்தார்கள் என்று விசாரித்தேன். வியாழன் கிரகத்தை சுற்றிவரும் சந்திரன்களை தாங்கள் எண்ணியதாகச் சொன்னார்கள். “எத்தனை?” என்று கேட்டேன். “இருபது.” “எப்படி அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?” “அவர் கழுத்தை திருகிக்கொண்டிருந்தார்” என்றார்கள்.

அடுத்து வந்த வெள்ளிக்கிழமை செல்வநாயகம் மாஸ்டரை ஒரு காரிலே போட்டு, அவருடைய சாமான்களையும் நிரப்பி அனுப்பி வைத்தார்கள். அவரை எங்கே கொண்டுபோய் விட்டார்கள்? வீட்டிலா, பஸ் தரிப்பிலா? அதற்குப் பிறகு அவர் திரும்பவில்லை. அவரைப் பற்றிய தகவல்கூட ஒருவருக்கும் தெரியவில்லை.

நான் பாடசாலையில் படித்த கடைசி வருடம் ஒரு செய்தி வந்தது, அவர் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார் என்று. அதுவும் மிக ரகஸ்யமாகவே பரவியது. “லூசன் செத்துப் போனான். லூசன் செத்துப் போனான்.” அந்தச் செய்தியின் உண்மை, பொய் யாருக்கும் தெரியவில்லை. எங்கேயோ பிறந்த அயின்ஸ்டீனுக்காக சண்டைபிடித்த அவருக்கும் அரைக்கம்ப கொடி இல்லை; இரங்கல் கூட்டம் இல்லை. அந்த வார முடிவில் நடந்த ஸ்கூல் அசெம்பிளியில் ஒரு வார்த்தை இல்லை. இலையான் ஒன்று பறந்து ஒரு சாளரம் வழியாக வந்து, அடுத்த சாளரம் வழியாகப் போனதுபோல அது மறக்கப்பட்டது.

நான் அமலோற்பலத்தை வியப்படையச் செய்வதை நிறுத்தி வெகு நாளாகிவிட்டது. நானாகவே சில விசயங்களை கற்றுக் கொண்டேன். ஆரியபட்டா “பை” என்பதன் மதிப்பை தசம் நாலு தானத்துக்கு கண்டு பிடித்ததை படித்தேன். பேர்ஃபெக்ட் நம்பர் என்றால் என்ன என்பது எனக்கு புரிந்தது. அடுத்த வகுபடா எண்ணைக் கண்டு பிடிக்க ஆயிரம் கணிதவியலாளர்கள் உலகம் முழுக்க அல்லும் பகலும் பாடுபடுவதை பத்திரிகைகளில் படித்தேன். ஒரு நாள் Fermat’s Last Theorem என்றால் என்ன என்பது பற்றியும் புத்தகத்தை படித்து அறிந்து கொண்டேன்.

– 2009-11-17

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *