விவாகரத்து

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 5,050 
 

நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல.

இன்னிக்கி காலைல நான் கண்கள் எரிச்சலுடன் முழிச்சப்போ, என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல வந்து நின்னாரு.

“நீ என்ன முடிவு பண்ணியிருக்க? சரின்னு சொல்லப்போறியா அல்லது இல்லைன்னு மறுக்கப் போறியா?”

எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “நீங்க இப்ப ஆபீஸ் போங்க, நான் சத்தியமா சாயங்காலம் உங்களுக்கு பதில் சொல்றேன்” என்று பயத்துடன் சொன்னேன். இப்படிச் சொல்லவே எனக்கு அருவருப்பாக இருந்தது.

“நானே உனக்கு சாயங்காலம் நாலு மணிக்கு போன் பண்ணுவேன். எனக்கு நீ சரின்னு சொல்ற பதில்தான் வேணும். அப்படி இல்லைன்னா நடக்குறதே வேற…” என்று மிரட்டிவிட்டுச் சென்றார்.

நான் மெதுவாக எழுந்து சென்று பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக மூன்று மணி நேரங்கள் அடித்துப் போட்டாற்போல தூங்கினேன். பிறகு நிதானமாக எழுந்து குளித்துவிட்டு மொபைல் ஆப்பில் மதிய உணவு ஆர்டர் செய்தேன்.

அப்புறம் என் அப்பாவுக்கு போன் பண்ணி “அப்பா ப்ளீஸ் இனிமேல் அவரோட என்னால வாழ முடியாதுன்னு…” கதறினேன்.

அப்பா கோபப்படுவார்ன்னு நெனச்சேன். ஆனா அவர் “சரிம்மா.., உனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக்கிட்டு சீக்கிரம் புறப்பட்டு வா” என்றார்.

உடனே என்னோட கல்விச் சான்றிதழ்கள் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டி, ஓலா பிடித்துக் கிளம்பினேன். .

ஓலாவில் அமர்ந்தபடி என் கணவருக்கு ஒரு மெசேஜ் ‘என்னால் முடியாது நான் என் வீட்டுக்குப் போகிறேன்’ என்று அனுப்பிவிட்டு மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டேன். வீட்டுக்கு வந்தேன்.

நான் காதலித்து ஆசையுடன் மணந்துகொண்ட கணவனைப் பிரிந்து வந்துவிட்டேன்.

என் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டில் ரமேஷை சந்தித்தேன். அவரிடம் காதல் வயப்பட்டேன். அவரின் அருகாமை எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வையும் நிம்மதியையும் எனக்கு எப்போதும் தரும். என் பெற்றோர்களும் எங்கள் காதலை அங்கீகரித்தனர்.

நாங்க அடிக்கடி ஒண்ணா வெளியே போவோம்; மணிக்கணக்கில் வாட்ஸ் ஆப்ல கொஞ்சுவோம். என்னோட வாழ்க்கையே ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. காதலிக்கும்போது இனித்த வாழ்க்கை, திருமணத்திற்குப் பின் அவருடன் கசக்க ஆரம்பித்தது.

படிப்படியா எங்களோட உறவுல சமத்துவம் இல்லைன்னு எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. நான் இதை ரமேஷிடமிருந்து சற்றும் எதிர் பார்க்கவில்லை.

எங்களோட உறவு என் பெற்றோரின் உறவு மாதிரி மாற ஆரம்பித்தது. ஒரே ஒரு வித்தியாசம், என் அம்மா என்ன நடந்தாலும் அமைதியா இருப்பாங்க. ஆனா என்னால அப்படி இருக்க முடியாது.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என் அப்பா அம்மாவிடம் கத்துவாரு. சில நேரத்ல அம்மாவை கைநீட்டி அடிப்பாரு; அப்ப அம்மா அழுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்யமாட்டாங்க.

ஆனா எனக்கும் ரமேஷுக்கும் வாக்குவாதம் வந்தா அது பெரிய சண்டையில் வந்து நிக்கும். செக்ஸில்கூட என்னிடம் எப்பவுமே அவர் வன்முறையைக் கையாளுவார். இணங்காவிடில் கூச்சல் போடுவார். பெட்ரூமில் நான் அவரை சந்தோஷப் படுத்தறது இல்லைன்னு அடிக்கடி புலம்புவார். ஆபாசப் படங்கள் பார்த்து சில வித்தைகள் கத்துக்கோன்னு எனக்கு அறிவுரை சொல்லுவார். அவைகளை அவருக்காக மெனக்கிட்டு முயற்சித்தாலும் எனக்கு வலி மட்டுமே மிஞ்சும்.

பெண்மைக்கு உரிய மரியாதையோடு என்னை அணுகவே மாட்டார். கணவன் மனைவி கலவி என்பது புரிதலுடன் கூடிய எவ்வளவு ஆசையான, ஆர்வமான, நளினமான விஷயம்? அதை அவருக்கு விளக்கிச் சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டார்.

“உன்னை என்னிக்காவது நான் கைநீட்டி அடிச்சுட்டா நீ என்ன செய்வ?” என்று ஒருமுறை என்னைக் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். என்னோட கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “அன்றைக்கே உங்களைவிட்டு நான் பிரிஞ்சிடுவேன்..” என்றேன்.

“ஓ அப்படீன்னா நீ என்னை உண்மையா காதலிக்கலை… காதல்னா எப்போதும் எந்த நிபந்தனையும் இருக்கக் கூடாது..”

அவர் இப்படிச் சொன்னதும், அவர்கூட நான் ஒரு மாதம் பேசவில்லை.

எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. பலமுறை நான் இந்த உறவை முறிச்சுக்கலாம்னு முயற்சிப்பேன். ஆனா ஒவ்வொரு வாட்டியும் அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்பார். அன்று இரவே என்னை ஆக்ரோஷமாக முயங்குவார். அவரை நிரந்தரமா விட்டுட்டுப் போயிடனும்னு நான் நினைப்பேன். ஆனா அத ஏன் உடனே செயல்படுத்த முடியலைன்னு எனக்குத் தெரியல.

நாங்கள் இருவருமே விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டதால் எங்களுக்குள் கோர்ட் மூலமாக சீக்கிரம் விவாகரத்து கிடைத்தது. என் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் எங்களுடைய பிரிவுக்கு காரணம் கேட்பார்கள்.

ஒரு உண்மையை இப்போது சொல்கிறேன். எந்த ஒரு விவாகரத்திலும் சம்பந்தப்பட்ட இருவரும் உண்மையான காரணத்தை வெளியில் சொல்லவே மாட்டார்கள். இவளும், அவனும் ஒருத்தர் மீது ஒருத்தர் பழிபோட்டு கேட்பவர்களிடம் கூசாமல் பொய் மட்டும் சொல்வார்கள். இவளுடைய உறவினர்களும்; அவனுடைய உறவினர்களும் அந்தப் பொய்யை நம்பிக் கொண்டிருப்பார்கள். அனால் உண்மை சம்பந்தப்பட்ட அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒரு வருடம் ஓடிவிட்டது…

நான் இப்போது ஒரு பள்ளியில் டீச்சரா இருக்கேன். நான் குழந்தைகளுக்கு வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது என் பெற்றோர் எனக்குப் போன் பண்ணி, என்னோட அடுத்த கல்யாணத்தைப் பத்திப் பேசுவாங்க. உன்னோட தங்கச்சிங்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா? என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவாங்க.

வீட்டுல ஏதாவது தப்பு நடந்தா, நான் வாழாவெட்டியாக இருப்பதைத்தான் காரணமா சுட்டிக் காட்டுவாங்க. நான் வாழாவெட்டியாக இருப்பதால் அம்மாவுக்கு உடல்நிலை ரொம்ப மோசமா போயிடிச்சி.

ஆனால் நான் டீச்சராக சம்பாதிப்பதால், மறுகல்யாணம் செய்து கொள்ளாமல், குழந்தைகளுடன் குழந்தையாக எப்போதும் சந்தோஷமாக இருக்கவே விரும்பினேன். நான் நன்கு படித்த பெண். என்னால சம்பாதிக்கவும், தனியா வாழவும் முடியும்.

என்னை என் குடும்பமும் இந்தச் சமூகமும் எப்படிப் பார்க்கும்னு எனக்குத் தெரியும். எனக்கு நான் விரும்பிய விவாகரத்தும் கிடைத்து விட்டது. ஒரு மாலை நேரக் கல்லூரியில் இடமும் கிடைச்சிருக்கு. நான் இப்போ படிச்சுகிட்டே வேலையும் செய்யறேன்.

காதல் மேலேயும், உறவுகள் மேலேயும் இருக்கிற நம்பிக்கை நிச்சயமாக என்னுள் சிதைந்துவிட்டது. அவருடனான அந்தக் கடைசி இரவை என்னால் மறக்க முடியல. ஆனா அதையெல்லாம் மறந்துட்டு என் வாழ்க்கையை அமைதியா தொடர நான் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்.

என்னை நானே நேசிக்க ஆரம்பிச்சதும் நான் நிச்சயமா புதிய பலத்துடன் வீறுகொண்டு எழுவேன்…

அன்று அம்மாவை சோதித்த டாக்டர் அம்மாவின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று சொன்னார்.

அம்மா இறப்பதற்கு முந்தைய நாள், கண்களில் நீர் வழிய என்னிடம் “இப்பவாவது உண்மையைச் சொல்லு… ஏன் அவனை டிவோர்ஸ் பண்ண?” என்றாள்.

இறக்கப் போகிற அம்மாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று என் உள்மனதில் தோன்றியது.

அம்மாவிடம் குனிந்து மெதுவான குரலில் “அவர் எப்பவுமே என்னை பெட்ரூமில் மிருகத்தனமாக, கேவலமாக, அசிங்கமாக நடத்துவார்மா… அன்றைக்கு அவர் என் ஆசனவாயின் வழியாக புணர்ச்சி செய்தேயாக வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தம் செய்தார். அதனால்தான் அவரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தேன்…”

அம்மா நான் செய்தது சரி என்பதுபோல் தலையை அசைத்தாள்.

அது போதும் எனக்கு.

Print Friendly, PDF & Email

1 thought on “விவாகரத்து

  1. sensitive matter has been handled in a gentle manner. Pleasure from the Woman doubles only when she is also in the enjoyment. Otherwise, it tantamounts to rape and tresspass. The author has defined subtly that woman is not a dumb spectator to her own sexual activity!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *