கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 17,167 
 

ஸார்! நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; வரலை. அம்மா அப்பாவுக்குக் கவலையா இருந்தேன். எங்க குடும்பத்திலே சங்கீதம் கிடையாது. ஆரத்தி எடுக்கறபோது கூட எங்கம்மா பாடினது கிடையாது. எங்கப்பா நியூஸ் கேக்கறதுக்கு மட்டும்தான் ரேடியோ வைத் திருப்புவார். அப்படி இருக்க எனக்கு எங்கேயிருந்து இந்த வாத்தியத்தின் மேலே மோகம் வந்தது? அது ஆச்சர்யம்.

எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு… நியூஸூக்கு ஒரு நிமிஷம் பாக்கியிருக்கிறபோது ரேடியோவிலே ஒத்தை வீணை மட்டும் வெச்சான். அப்பதான் தெளிவா எனக்கு ஆசை ஏற்பட்டுது. அது, ரஞ்சனி ராகம்னு கேள்விப்பட்டிருக்கேன்.

மறுநாள் உள்ளூர் ராமய்யங்காரிடம் போய், ”ஸ்வாமி! இந்த வீணை வாத்யம் கத்துக்கறதுக்கு எத்தனை நாளாகும்?”னு கேட்டேன்.

“யார் கத்துக்கணும்?” என்று கேட்டார்.

“நான்தான்” என்றேன்.

“முதல்லே நீ சிகரெட் குடிக்கிறதை நிறுத்தணும். வேஷ்டி கட்டிக்கொண்டு வரணும். வீணை தெய்விகமான வாத்யம். அதை அணுகறதுக்கு முன்னாலே மனுஷனுக்குச் சுத்தம் வேணும்…” அப்படி இப் படின்னு சொன்னார். மாசம் நாப்பது ரூபாய் கேட்டார்.

அப்பா கிட்டப் போய், ”அப்பா, நான் வீணை கத்துக்கலாம்னு இருக்கேன்”னேன்.

“போடா, போய் மளிகைக் கடையிலே பொட்டலம் மடி. செப்டம்பருக்குப் படிக்கத் துப்பில்லை. வீணை கத்துண்டு என்ன வெங்கடேச பாகவதருக்கு சுருதி போடப் போறயா?” என்றார்.

அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன். ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு பீஹாரிலே என்னவோவா இருக்கான். “உன் சகோதரன் போல நீயும் முன்னுக்கு வரவேண்டாமா? இண்டஸ்ட்ரியல் லய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலே சேர்ந்து, ஏதாவது தொழில் கத்துக்கொள்ளேன். அதுக்கு வேணா பணம் அனுப்பறேன்”னு பதில் எழுதி, நிறையப் பொன்மொழிகளும் எழுதி இருந்தான். ‘சரி, தொழில் கத்துக்கறேன்; பணம் அனுப்பு’ன்னு எழுதினேன். பணம் அனுப்பலை. ஒரு அப்ளிகேஷன் ஃபாரம் அனுப்பினான்.

அம்மா கிட்ட கேட்டுப் பார்த்தேன். ”என்கிட்ட ஏதுடா காசு? ஒண்ணு செய்யேன். ஏதாவது வேலை பார்த் துக்கொள். அதிலே வர காசை நீ ஒண்ணும் எங்க கிட்டே கொடுக்க வேண்டாம்” என்றாள். வேலையாவது கிடைக்கிறதாவது!

தைரியமா ஒரு காரியம் செஞ்சேன். ஒரு காயலான் கடையிலே எங்க வீட்டுச் சைக்கிளை வித்துட் டேன். திரும்பி வந்து அப்பா கிட்ட, மைதானத்திலே சைக்கிள் தொலைந்து போய்விட்டதுன்னு சொன்னபோது அவருக்கு ரொம்பக் கோபம் வந்துட் டுது. நான் சொல்றது பொய்னு அவ ருக்குச் சந்தேகம். ”வா, போலீஸ்லே போய்க் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க லாம்”னார். ஜாஸ்தி பொய் சொல்ல வரலை. இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கக் கேட்க, எனக்குக் கழண்டு போச்சு.

அப்பா “எங்கேடா காசு?” என்றார். பனியனுக்குள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தேன்.

“எதுக்குடா வித்தே?” என்றார்.

“வீணை வாங்க” என்றேன்.

அப்பா போலீஸ் ஸ்டேஷனிலே என்னை அடிக்கலை. வீட்டுக்கு வந்ததும் அடிச்சார். அம்மா தடுத்து, “அவனுக்கு வர மாசிக்கு இருபது வயசாகப் போறது. அவனை அடிச்சா ஏதாவது ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆய்டும். பேசாம விட்டுடுங்களேன். கத்துக்கட்டுமே! அவனுக்குப் புத்தி அதிலேதான் போறதோ என்னவோ” என்றாள்.

“அப்பா, என்னை அடிக்க உங்க ளுக்கு உரிமை இருக்கு. நான் உங்களுக்கு உபயோகமில்லாம சுமையா இரக்கேன். ஆனா, நீங்க இந்தக் காசை கடன் மாதிரி எனக்குக் கொடுங்க. மாசாமாசம் கணக்கு வெச்சுக்குங்க. எப்படியாவது பிற்காலத்திலே சம்பாதிச்சு உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.

அப்பா சிரித்தார். அப்பாவையும் குற்றம் சொல்ல முடியாது. மூத்த பையன் வசதி வந்ததும், அப்பா அம்மாவை மறந்துட்டான். சௌக்கியமா சௌக்கியமான்னு கடுதாசி எழுதுறானே ஒழிய, காசா, பணமா… ம்ஹும்! நான்தான் இருக்கவே இருக்கேன். நாங்க மூணு பேரும் அப்பா பென்ஷனிலே வாழணும். அதனாலே எப்படியாவது என்னை ஒப்பேத்தி விடணும்னு ஆசைப்படறார். நானானால் வீணை வாசிக்கணும் என்கிறேன்!

அப்புறம், ராமய்யங்கார் கிட்ட அப்பா பேசி, அதட்டி கிதட்டி மாசம் இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார். நான் வீணை கத்துக்க ஆரம்பிச்சேன்.

இதுலே பாருங்க ஸார்… என் னுள்ளே ஒரு புயல் இருந்து, அதற்கு வெளியே வர ஒரு வாய்ப்பு கிடைச்சாப்பலே ஆய்டுத்து. நான் ஆரம்பிச்ச விதமே தப்பு. எனக்கு வாத்தியம் கையாளத் தொடங்கின வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கு. வாத்தியத்தை விழுந்து சேவிக்கச் சொன்னார். ‘மாய மாளவ கௌள’ வின் சுரங்களை எல்லாம் புள்ளி வெச்சு மார்க் போட் டிருந்தது. அந்த வீணையிலே ராமய்யங்கார் இதுதான் ‘ஸ’ன்னு தட்டினார். என் கை விரலை மடக்கி அழுத்தி நாதம் பண்ணச் சொன்னார். எப்படி அழுத்தறதுன்னு தெரிஞ்சப்புறம், இரண்டு சுரம் பிசிறில்லாமல் சுத்தமாகக் கேட்டப்புறம், எனக்குச் சைக்கிள்லே பாலன்ஸ் கிடைச்சாப்பலே ஆய்டுத்து. அதையே 108 தடவை வாசிக்கச் சொல்லிட்டுப் பின்கட்டுப் பக்கம் போனார். அவர் போன உடனே மற்ற சுரங்களைத் தேட ஆரம் பிச்சேன். அந்தப் பெரிய கம்பியைத் தட்டிப் பார்த் தேன். அதிலே ஒரு ஸ்வரத் தைப் பிடித்துக்கொண் டேன். அது இனிமையா இருந்தது.

திரும்பி வந்த வாத்தியார் கேட்டுண்டே வந்தார். கோபித்துக் கொண்டார். ‘நிதானம் வேணும். சாதகம்கிறது இந்த மாதிரி கன்னா பின்னா என்று தேடித் தேடி வாசிக்கிறதில்லை’ன்னு சொல்லி, சங்கீதத்திலே இருக்கிற ஆதார சுரங்களைப் பத்திச் சொன்னார். அஸ்தி வாரம் கட்டறதைப் பத்திச் சொன்னார். பொறுமை வேணும் என்றார்.

எனக்குப் பொறுமை இல்லை. அதுதான் என் கிட்டே இருந்த தவறு. அந்தச் சரளி ஜண்ட வரிசைகளையும் வர்ணங்களையும் நிதானமா பொம்மனாட்டி மாதிரி ஒவ்வொரு தடவையும் தாளக் கம்பிகளைச் சிதற அடிச்சுண்டு வாசிச்சுப் பழகப் பொறுமையில்லை. ஏதோ நாளன்னிக்குச் செத்துப் போய்விடப் போகிறேன், அதுக்குள்ள இந்த வாத்யத்தைக் கரை காண வேணும்ங்கறாப்போல அவசரம். நோட்டிலே எழுதி நெட்டுருப் போட முடியல்லை. அவரோட சேர்ந்து வாசிக்க முடியல்லை.

இரண்டு மாசம் பார்த்தார். எங்கப்பாவைக் கூப்பிட்டார். சொன்னார்… “உங்க பையனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அவனுக்குச் சங்கீதம் வராது ஸ்வாமி, உங்க பணம் வேஸ்ட்!”

எனக்கு அழுகை வந்தது. அப்படிச் சொன்னதால் இல்லை. என்னை வீணை வாத்யத்திலிருந்து பிரிச்சுப்புட்டார். என் விரல் பழகறதுக்கு முன்னே, என் மனசிலே வடிவம் வடிவமா இருக்கிற ஆசைகள் எல்லாம் விரல் வழியா ரூபம் பெறு வதற்கு முன்னாலே என்னைப் பிரிச்சுட்டார்.

அப்பதான் எனக்கு வேலை கிடைச்சுது. அதுவும் அப்பாவினாலேதான். உள்ளூர் கோ-ஆப ரேடிவ் ஸ்டோர் பிரஸிடெண்ட்டைத் தெரியும். அதிலே ஒரு கிளார்க்குக்கு டைபாய்ட் வந்து ரெண்டு மாசம் லீவ் போட்டிருந்தான். அந்த லீவ் வாகன்ஸியில் எனக்கு மன்றாடிக் கிடைச்சது. கிலோ 4-66 பைசா மேனிக்கு 6 கிலோ 75 கிராம்னு டெஸிமல் கணக்குப் போட ஆரம்பிச்சேன். எழுதறபோது ஆறு அஞ்சு முப்பது, ஆறு ஏழு நாப்பத்தி ரண்டுனு பெருக்கல் மெதுவா மெதுவா ராகமா மாறும். மாறி மனசில் சஞ்சாரம் பண்ணும். அந்தப் பெயரில்லாத, நம்பரில்லாத வடிவங்களைத் தேடுவேன். கணக்கிலே நிறையத் தப்புப் பண்ணி ராத்திரி 9.30 வரைக்கும் கூட்டிக் கழித்தும் சரியா வராது. அவாளுக்குப் பொறுமை இழந்து போக, எனக்கு வேலை போச்சு! அப்புறம் நானே சொந்த முயற்சியா முனிஸிபாலிடி சேர்மன் கிட்ட போய்க் கெஞ்சிக் கேட்டு, அவர் ஓனராக இருக்கும் பெட்ரோல் பங்க்கில் கணக்கு எழுதற வேலை கிடைச்சது. மறுபடி பெட்ரோல் டீஸல் லிட்டர் கணக்குத்தான். கொஞ்சம் கவனமா இருந்தேன். இந்த வேலை கொஞ்சம் நிலைச்சுது. அம்மா என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பித்து விட்டாள்.

நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்கு முதல் காரணம் வீணை. ‘அம்மா! எனக்கு சூட் வேண்டாம்; ரிஸ்ட் வாட்ச் வேண்டாம்; அவாளை ஒரு வீணை வாங்கிக் கொடுத்துடச் சொல்லு. வாத்தியார் காட்டற பொண்ணுக்குத் தாலி கட்டறேன்’னு சொல்லிட்டேன். அம்மா சிரிச்சா. எனக்குக் கல்யாணம் நடந்தது. நெருப்பிலே நெய்யை விடற போது நாதஸ்வர சங்கீதத்திலே ஆழ்ந்து, தவில் கருவி மாதிரி உருளுவதைக் கவனிச்சுண்டு, அவ பட்டுப் புடவையெல்லாம் நெய்யாக்கின ஒரே மாப்பிள்ளை நான்தான்னு நினைக்கறேன். அந்தப் பாவிப் பயல் மலய மாருதத்தை அப்படி வாசிச் சான்.

என் கல்யாணம் நடந்தது. அதுக்கு முன்னாலேயே ஒரு நல்ல தஞ்சாவூர் வீணையா வாங்கியாச்சு! புதிய வீணை. புதிய பெண். இரண்டும் எனக்கு மிகவும் புதுசு. இரண்டும் பெரிய சப்ஜெக்ட்! வீணையைப் பத்தியாவது பரிச்சயம் உண்டு. பெண்ணைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளே படுத்துக்குற சந்தர்ப்பம் வந்தபோது, அந்த வீணை ஓரத்திலே இருந்தது. மூணு மணி நேரம் அவள் சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஸ்வரங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் அவள் உட்கார்ந்திருந்தது ஞாபகம் வந்தது. அவள் கண்களில், ‘என்னை வாசியுங்களேன்’ என்று சொன் னது போல இருந்தது.

ஒரு வீணைக்காக கணவனான என் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்? கல்யாணம் என்கிறது ரொம்பப் பெரிய பொறுப்பு, ஸார்! எனக்கு அது முதல்லே தெரியலை. ஆனா, ஒரு வாரத்துக்குள்ளே, “நாம எப்ப தனியா குடித்தனம் போகப் போறோம்?”னு கேட்டப்போ தெரிஞ்சது. பெட்ரோல் பங்க் கிளார்க் எப்படி வாடகை கொடுத்துண்டு தனியா இருக்க முடியும்? அம்மாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் சரிப்பட்டு வரலை. அம்மாவைப் பத்தி அவ புகார் சொல்றது எனக்குப் பிடிக்கலை. என் அம்மா அம்மா தான். சீதாதேவியே மாமியாரா இருந்தாக்கூட ஒரு மருமகள் புகார்தான் சொல்வாள் போலிருக்கு. ஆதி காலத்திலிருந்தே ரஃபா இருக்கிற உறவு போலிருக்கிறது இது. நான் இதை யெல்லாம் கவனிக்கிறதில்லை. வீணை வீணை வீணைதான். காலையிலே அவசர அவசர மாகப் பல்லைத் தேய்த்து விட்டுக் காபி சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன். ஒன்றரை மணி நேரம் சாதகம். அப்புறம் பங்க்குக்குப் போய் வந்த உடனே… எட்டு மணி வரை. ஒரு சினிமா கிடையாது; விளையாட்டுக் கிடையாது. பெண்டாட்டிக்கு எப்படி இருக்கும்!

என் முதல் பெண்ணுக்கு ‘ரஞ்சனி’ன்னு பேர் வெச்சேன். ரேடியோவிலே ஆடிஷனுக்குப் போய் வந்தேன். மிருதங்கத்துடன் வாசித்துப் பழக்கமே இல்லை. ”முழுசா மூணு நாலு கீர்த்தனம் வாசிக்கக் கத்துட்டு வாங்க”னு சொன்னான், அந்த அதிகாரியோ யாரோ. ‘சரிதான், போய்யா’னு வந்துட்டேன். எனக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்? ஆனால், என் வாசிப்பிலே நிச்சயம் இம்ப்ரூவ்மென்ட் இருந்தது.

பேசாம கணக்கு எழுதிண்டு இருந்தேனா இல்லையா? இந்தச் சிதம்பரம் வந்து வெறுப்பேத்திட்டுப் போய்ட்டான். சிதம்பரம் என் பழைய பள்ளிக்கூடச் சிநேகிதன். பட்டணத்திலே செயலா இருக்கான். ரொம்ப நாளைக்கப்புறம் தகப்பனாரைப் பார்க்க லீவிலே வந்தான். என்னை வந்து பார்த்தான். ”இப்ப என்ன பண்றே நீ?” என்றான். ‘பெட்ரோல் பங்க்கிலே கணக்கு எழுதறேன், கூடவே வீணை வாசிச்சிண் டிருக்கேன்’னேன். வாசிச்சுக் காட்டச் சொன்னான். ஒரு பாட்டு வாசிச்சேன்.

“என்னடா இது, இந்த மாதிரி வாசிப்பை வெச்சுண்டு பெட்ரோல் பங்க்கிலே கிளார்க்கா இருக்கியா? உன் வாசிப்பு என்ன லெவல் தெரியுமா? இப்ப முன்னணிலே இருக்கிறவாள்ளாம் (கையைக் கீழே காட்டி) இங்கே இருக்கான்னா நீ (உத்தரத்தைக் காட்டி) அங்கே இருக்கே! மெட்ராசுக்கு வாடா, ஒரு சபையிலே வாசி, போதும். காட்டுத் தீ மாதிரி பரவிடுவே. காசு, புகழ் வரும். பாவிப் பயலே, என்னமா வாசிக்கறே?” என்றான்.

அவன் சொன்னதிலே ஒண்ணும் பொய்யோ, முகஸ்துதியோ இல்லேங் கறது தெரிஞ்சது. கிளம்பறபோது கூட அப்பாகிட்டே என்னைப் பத்தி ‘ஓஹோ ஓஹோ’ன்னு சொன்னான். ‘உங்க வீட்டிலே இருக்கறது ஒரு ஜீனியஸ்’னு சொன்னான். அப்பா மெட்ராஸ்லே மல்லாக்கொட்டை என்ன விலை விக்கறதுன்னு விசாரிச்சார்.

அவன் போனப்புறம், எனக்குக் கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. போய்த் தான் பார்க்கலாமேனு பட்டுது. பெட்ரோல் பம்புக்கும், டீஸல் பம்புக் கும், கம்ப்ரெஸ்ஸருக்கும், பேரேடு புத்தகத்துக்கும் பிரியா விடை கொடுத்துவிட்டு, சம்பளப்பாக்கியை எண்ணி வாங்கிண்டு (87 ரூபாய் சொச்சம்) வடக்கே சூலமில்லாத ஒரு நாளிலே பெண்டாட்டி குழந்தை வீணை சகிதமாகக் கிளம்பிட்டேன். சாமான் ஜாஸ்தி எடுத்துக்கொண்டு போகல்லே; ஏராளமான நம்பிக்கையைத்தான் எடுத்துண்டு போனேன்.

பழைய மாம்பலத்திலே ஒரு வீட்டிலே, ஒரு ஓரத்திலே இடம் பார்த்து வெச்சான் சிதம்பரம். சின்ன ரூம். வீணை வாசிக்கணும்னா க்ராஸா உக்கார்ந்தாத்தான் முடியும். அப்புறம் சிதம்பரம் தனக்குத் தெரிஞ்ச சபா செக்ரட்டரிகளையெல்லாம் என்னை அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்தி வெச்சான்.

எனக்குச் சான்ஸ் வந்து, நான் செய்த முதல் கச்சேரியைப் பத்திச் சொல்றேன். என் டர்ன் எப்ப வந்தது தெரியுமா? பஸ்ஸூக்கு நாழியாயிடும்னு எல்லோரும் எழுந்து போனதற்கப்புறம் லேட்டா வந்தது. கொடுத்த ஒண்ணே கால் மணி நேரத்துலே ஒரு பாட்டே பூரணமா வாசிக்கமுடியலே. மிருதங்கக்காரர் வேறு கொஞ்சம் ஸீனியர் ஆசாமி போல இருக்கு. என்னை பூச்சியா மதிச்சுத் தட்டிண்டிருந்தார்.முன் வரிசையில் யாரையோ பார்த்து அடிக்கடி சிரிச்சிண்டிருந்தார். நான் என்ன என்னவோ செய்ய இருந்தவன் எப்படி எப்படியோ காட்ட இருந்த திறமைகள் எல்லாம் அந்தச் சோம்பேறித்தனமான காலி நாற்காலி ராத்திரி யிலே கரைந்துவிட்டன. ஒரு ப்ரஸ் ஆளு வரப்போறார் வரப்போறார்னு எல்லாரும் எதிர்பார்த்திண்டிருந்தா. அவர் வேற ஏதோ பரதநாட்டியக் கச்சேரிக்குப் போயிட்டாராம். என் கச்சேரி முடிஞ்சதும் ஒரே ஒரு வய சானவர் வந்து என்னைத் தட்டிக் கொடுத்து, “நானும் எவ்வளவோ கேட்டிருக்கேன். நீ ரொம்ப ரொம்பப் பேஷா வாசிக்கிறே. இந்த நூற்றாண் டின் மகாமேதை நீ”னு சொன்னார்.சொன்னா என்ன? பரவலா என் கச்சேரி ஏதும் சலனம் உண்டு பண்ணினாப் போல தெரியல்லே.

என்னவோ பட்டணம் பட்டணம்னு சொல்றாங்க. பிரதானம் வந்துடும், கச்சேரிக்கு 700, 800 எல்லாம் சர்வசாதாரணமா கிடைக்கும், அப்படி இப்படிங்கறாங்க. நான் ஒரு வருஷம் பூரா முயற்சி பண்ணிப் பார்த்தேன். அலையா அலைஞ்சேன். ஃப்ரீயா வாசிச்சேன். பத்து பேருக்கு வாசிச்சேன். தனியா வாசிச்சுக் காண்பிச்சேன். ஒரே ஒரு தடவை வார பத்திரிகையிலே என்னைப் பத்தி ‘புது விதமான பாணிகள் எல்லாம் கையாள்றார்’னு வந்தது. ஒரு சினிமா நடிகையைப் பத்தின புது விதமான போட்டோ தகவலுக்குப் பக்கத்திலே சின்னதா ஒரு ஓரத்திலே வந்திருந்தது. என்னைப் பத்திப் போட்டிருந்தை நிறையப் பேர் படிச்சிருப்பாங்களானே சந்தேகம். என் வாசிப்பைக் கேட்ட எல்லாருமே, “புதுவிதமாத்தான் வாசிக்கிறார். புரியாத ராகங்களிலே தைரியமா விளையாடறார். இருபத்து நாலு வயசுக்கு அற்புதமான வாசிப்பு”ன்னு ஒரு மனதாத்தான் சொல்றா. எல்லோருக்கும் என் திறமையோட ஆச்சர்யம் தெரியறது. என் வித்வத்தைப் பற்றி ஒருத்தருக்கும் சந்தேகமில்லை. முன்னுக்கு வரவேண்டியவர்னு சாமர்த்தி யமா பேறாங்க. ஆனா, எப்படி முன்னுக்கு வரது? எவ்வளவு நாள் பெண்டாட்டியோட தங்க நகைகள் தாங்கும்? வேறு என்ன வழி இருக்கு சொல்லுங்களேன்! என் கலையைப் பற்றிச் சந்தேகமிருந்தா வீட்டுக்கு வாங்க. 34-ஏ, கவரை ஸ்ட்ரீட், புள்ளையார் கோயிலுக்குப் பக்கத்திலே…வாசிச்சுக் காட்டறேன். கேளுங்க.

எங்கே ஸார் தப்பு? திரும்பிப் போயிடட்டுமா?

இவ்வளவு விஸ்தாரமா எழுதறனே, கடைசியிலே உங்க கிட்ட கைமாத்தா அஞ்சு பத்து கேக்கப் போறேன்னு நினைச்சுக்காதீங்க. இல்லை, ஸார். பகவான் என்னை அவ்வளவு தூரம் கொண்டு போகலே. கடைசியிலே வழி காட்டிட்டான். என் பணக் கஷ்டம் தீர்ந்துபோச்சு, என் வீணையாலே! எப்படின்னு சொல்றேன்.

நான் குடியிருக்கிற வீட்டு மாடி யிலே ஒரு 30, 32 வயசுக்காரக் கிறிஸ்தவர் இருக்கார். பேர் பெர்னாண்டஸ். பாச்சலர். ரொம்ப நல்ல மாதிரி. அவர் ஒரு நாள் வந்து, “சார், நீங்கதான் தினம் தினம் வாத்தியம் வாசிக்கிறீங்களா?” என்று கேட்டார். “ஆமாம்”னேன். “என்ன வாத்தியம், சித்தாரா?” என்றார். “இல்லை, வீணை”ன்னு சொன்னேன். “சித்தார் மாதிரியே வாசிக்கிறீங்களே! ரொம்ப வேகமா இனிமையா இருக்குது ஸார்” என்றார். “தாங்க்ஸ்” என்றேன். ”சித்தார் வாசிப்பீங்களா”னு கேட்டார். “அதுவும் கம்பி வாத்தியமா?”ன்னேன். “ஆமாம். மாடிக்கு வாங்க. என் கிட்டே ஒரு சித்தார் இருக்குது”ன்னு கூட்டிண்டு போனார். அந்த ஆறு கம்பி வாத்தியம் வீணையை விடச் சின்னதாக இருந்தது. கம்பி அமைப்பு தலைகீழா இருந்தது. கீழ்க் கம்பி சின்னதா இருந்தது. கீழ்க் கம்பி முன்னாலேயும், மேல் கம்பி கடைசிலேயும்! வாசிச்சு வாசிச்சுப் பார்த்தேன். அரை மணியிலே அந்த வாத்தியத்தை அலட்சியமா வாசிக்க ஆரம்பிச்சேன். அவர் ஆச்சர்யப்பட்டார். “இன்னிக்குதான் முதல்லே வாசிக்கிறீங்களா, இதை?” என்று கேட்டார். ‘ஆமாம்’னேன்.

“உங்களுக்கு மேற்கத்திய சங்கீதம் பிடிக்குமா?”

“ஜாஸ்தி கேட்டதில்லை..”

“ஸார், நீங்க எதிலே வேலை செய்யறீங்க?” என்று கேட்டார்.

“எனக்கு வேலையே கிடையாது” என்றேன்.

“அப்ப, உடனே என்னோட வாங்க”ன்னார். கூடப் போனேன்.

தி.நகர்லே ஒரு வீட்டு மாடியிலே கீத்துக் கொட்டாய் போட்டிருந்தது. அதிலே பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்திருந்தாங்க. பெர்னாண்டஸ் அந்தக் க்ரூப்புக்கு என்னை அறிமுகப்படுத்தினார். “வாத்தியார்கிட்ட விஷயம் இருக்கு. வீணையில் பூந்து விளையாடறாரு”ன்னார்.

அந்த இடத்திலே விதவிதமான வாத்யங்கள்ளாம் இருந்தது. எல்லாம் மேற்கத்திய வாத்தியம். அந்த வாத்தியங்களோட பேரேல்லாம் எனக்குப் பிற்பாடு அத்துப்படி ஆயிடுத்து. டபிள் பேஸ், எலெக்ட்ரிக் வேலையா மூணு சித்தார், ஸாக்ஸ் (காலுக்குப் போட்டுக்கறது இல்லை. ஸாக்ஸபோன். இதிலே டெனர், ஆல்டோன்னு ரெண்டு ஜாதி) ட்ரம்பெட், லாட்டின் தாள வாத்தியங்கள், அக்கார்டியன், அப்புறம் நம்ம தேசத்து சிதார், ஸரோட், தப்லானு ஒரே கதம்பம்.

அந்தக் கோஷ்டி ஃபிலிம்லே பின்னணி வாசிக்கிறாங்களாம். சில பார்ட்டிகள்லேயும் வாசிக்கிறாங்களாம். அட்வர்டைஸ்மென்ட் வேலைகள் வேற செய்யறாங்களாம். அவங்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதாம். என்னைக் கேட்டாங்க. ‘ஈக்வலா மாச வரும்படியை பேர் பண்ணிப்போம். 150, 200க்கு மாசம் தரோம்’ னாங்க. சம்மதிச்சேன்.

சமீபத்தில் நான் ஒரு ஸோலோ ரிக்கார்ட் கூடக் கொடுத்திருக்கேன், ஸார்! வீணையில்தான். நீங்க கூட ரேடியோவிலே கேட்டிருப்பீங்களே…அதிலே முதல்லே டங் டங் டங் டங் டங்னு கீழ்த் தந்தியைத் தட்டறேன். அது முடிஞ்சதும், அந்த ஆள் “மணி ஐந்தாகிவிட்டதே! என் தலைவலி இன்னும் தீரவில்லையே” என்கிறான்.உடனே அந்தப் பெண், “கவலைப்படாதீர்கள். ஒரு வில்லை — மாத்திரை சாப்பிடுங்கள்” என்கிறாள். நான் உடனே படபடவென்று சந்தோஷமாக கமாஸ் வாசிக்கிறேன். அவர்கள் இருவரும் சேர்ந்து “எப்பொழுதும் உங்கள் வீட்டில் ஒரு புட்டி — மாத்திரைகளை வைத்திருங்கள்” என்கிறார்கள். அரை நிமிஷம் கூட இல்லை ஸார், அதற்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். யார் ஸார் சொன்னது, கலை சோறு போடாதுன்னு?”.

– 1969

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *