ஆன்டி…இந்தப்புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு…!
எதிர் வீட்டு மாலா சொன்னபோது தெய்வானைக்கு முகம் மலர்ந்த்து.
அன்று மாலை கல்லூரி விட்டுவரும்பொழுது வழியிலிருந்த கோயிலில் சாமி கும்பிடப்போன மாலா, எதிர்வீட்டு தெய்வானை ஆன்டியைப் பார்த்ததும் வலியச் சென்று பேச்சு கொடுத்து அவர்கள் கூடவே வீடு வந்து சேர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தலை வேதனையில் துடித்துக் கொண்டிருந்த தெய்வானையைப் பார்த்ததும் தனது வீட்டிலிருந்து தைலம் எடுத்து வந்து நீவி விட்டாள் மாலா.
ஆறுமாதம் கழிந்திருத்து. எதிர் வீட்டிலிருக்கும் மாலாவை கோயிலுக்கு அழைத்தாள் தெய்வானை. அவள் முடியாது என்று ஒரேயடியாக மறுத்தாள்.
‘மாலா, தலை வலிக்குது. தைலம் எடுத்து வந்து தடவி விடறியா…? கேட்டும் கேட்காதது போல் இருந்தாள் மாலா.
‘இவளுக்கு என்ன ஆச்சு…?’ தன்னைத்தானே நொந்து கொண்டாள் தெய்வானை.
ஆனது இதுதான். ஆறு மாதத்திற்கு முன்பு எதிர் வீட்டிலிருந்த மாலாவை நல்ல பெண்ணாக இருக்கிறாளே என்று மகனுக்கு திருமணம் செய்து மருமகள் ஆக்கியிருந்தாள், தெய்வானை.
– 23-11-11