கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,368 
 

வீட்டு சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம் கேட்டான் இளமதியன்.

மகாலிங்கம் எடுத்து தந்தார். தாத்தா… இது மாதிரி புதுசு எனக்கு வாங்கி குடுங்க தாத்தா… ஆர்வமாய் கேட்டான் இளமதியன்.

இது இப்போ கிடைக்கிறதில்லப்பா… அந்த காலத்துல பனை மரம் ஏறி ஓலை வெட்டி போட்டு அந்த ஒலையில பெட்டி செய்தாங்க. இப்போ பனை மரம் ஏறுறவங்க கிடைக்காததனால ஓலைப்பெட்டி முடையிற தொழில யாரும் செய்றதில்ல.

விளக்கம் சொன்னார் மகாலிங்கம்.

அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு என்ன செய்வாங்க… மறு கேள்வி கேட்டான் இளமதியன்.

வேறு ஏதாவது தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க…

இது மாதிரிதானே தாத்தா பட்டாசு தொழிலும் வயிற்று பொழைப்புக்கு பட்டாசு தொழில் செய்யறாங்க. இந்த தொழிலே இல்லாம போனா அவங்க வேற தொழில் செஞ்சு பொழைச்சுக்குவாங்க. உயிருக்கு ஆபத்தான பட்டாசு தொழில் மூலமா பல பேருக்கு வேலை கொடுக்கிறதா நினைச்சுக்கிட்டு பட்டாசு தொழில நடத்தறீங்களே. அத நிறுத்த கூடாதா….

அவனது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமாகி பட்டாசு தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிடத் தீர்மானித்தார் மகாலிங்கம்.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *