அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை, சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக் கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார்.
அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது. அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால் திறமைசாலி.முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறுவை நிபுணர்.
“இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் வெச்சுக்கலாம்!’ என்று மனைவியிடம் சொன்னவர், “உங்க தங்கச்சிக்கு இதேபோல ஆபரேஷன் நடந்ததே!’ என்றார்.
“ஆமா! நீங்கதானே சார்.. அவளுக்கு குடல்வால் ஆபரேஷன் பண்ணினீங்க?’ என்றாள் மனைவி.
“அப்பல்லாம்.. நான் ரொம்ப பயத்தோடதான் ஆபரேஷன் பண்ணினேன்… ம்ஹூம்!’ என்று பெருமூச்சு விட்டார்.
அதன்பின் ஆபரேஷனுக்கான செலவுகளைப் பேசிவிட்டு கிளம்பினேம்.
வெளியே வந்ததும். இந்த டாக்டர் வேண்டாம் என்றேன் மனைவியிடம்.
ஆபரேஷன் பண்ணுவதற்கு பயந்துக்கற டாக்டர் எப்படி தைரியமா பிரச்னைகளை அணுக முடியும்! ஆபரேஷன் சமயத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா? என கேட்டேன்.
என் தங்கைக்க குடல்வாசல் ஆபரேஷன் ஆனது.. நீங்க உட்பட யாருக்குமே தெரியாது. கல்யாணத்தை நிச்சயம் பண்ணி, இன்னும் பதினைஞ்சு நாள்தான் இருக்குன்னும்போது எவ்ளோ ஜாக்ரதையா ஆபரேஷன் பண்ணணும்?
அதைத்தான் பயந்து கிட்டே செஞ்சேன்னு சொல்றாரு. பயம்கறது ஒவ்வொருத்தருக்கும் தொழில்ல இருக்கணும்! இல்லைன்னா அஜாக்கிரதை ஆளைத் தின்னுடும் – மனைவியின் வரிகள் எனக்கு நல்ல ஆலோசனை.
– பிரகாஷ் வர்மா (மார்ச் 2014)