நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 6,797 
 

அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை.

“யார்ங்க அது” என்றாள்.

“அது, நம்ம செல்வராஜ்.”

“நம்ம செல்வராஜா, அது யார்ங்க நம்ம செல்வராஜ்?”

“நம்ம எக்ஸ் ஸ்டாஃப், நம்ம கடையில வேல பாத்த பையன். அதுக்குள்ள மறந்துட்டியா நீ?”

“என்னமோ கவர் குடுத்துட்டுப் போன மாதிரியிருந்ததே? இன்விடேஷனா? அவனுக்குக் கல்யாணமாமா?”

“ஆமா” என்கிற ஒரே வார்த்தையில் நான் தப்பித்திருக்கலாம். முடியவில்லை.

நடிக்கத்தான் வரவில்லை, இழவு பொய் சொல்லவாவது வருகிறதா!

“என்னன்னு காட்டுங்களேன்” என்று என்னுடைய கையிலிருந்து கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த கரன்ஸியைப் பார்த்ததும் முகம் இறுகினாள்.

“அவன்ட்ட கைமாத்து வாங்கினீங்களா?”

எனக்கெதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு என் முகத்தை ஊடுருவினாள். அவளுடைய பார்வையை எதிர்கொள்ளத் தயக்கமாயிருந்தாலும், வார்த்தைகளை எதிர் கொண்டேன்.

“கைமாத்துன்னு சொல்லாத. அது அநாகரிகமான வார்த்த. இது கடன்.”

“ஏங்க, நம்மகிட்ட வேல பாத்த ஒர்த்தன்ட்ட கை நீட்டிக் கடன் வாங்கறதுக்கு ஒங்களுக்கு கேவலமாயில்லியா” என்றவள். சட்டென நான் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்ததும், சின்ன ஒரு பதற்றத்துடன், “ஸாரி, ஸாரி” என்றாள்.

“நா சொன்னதுல, கேவலமாயில்லியாங்கற கடைசி வார்த்தைய டிலிட் பண்ணிட்டு, சங்கடமாயில்லியாங்கற வார்த்தையப் போட்டுக்கோங்க, ப்ளீஸ்” என்றாள், என் கைகளைப் பற்றியபடி.

நான் சிரித்தேன். அவளுந்தான். தற்காலிக இறுக்கந் தளர்ந்து ரெண்டு பேரும் சிரித்து முடித்தபின், இப்போது உரையாடலைத் தொடர வேண்டியது நீதான் என்று உணர்த்துகிற மாதிரி இவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சங்கடமாத்தான் இருக்கும்மா” என்று ஒப்புக்கொண்டேன்.

“என்ன செய்றதும்மா, ரெண்டாந்தேதியோ மூணாந்தேதியோதான் அக்காட்டயிருந்து டிடி வரும். இன்னிக்கி முப்பத்தொண்ணு.”

“ஒரு மூணு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா? அவன் நம்மளப் பத்தி என்ன நெனப்பான்!”

“ஒண்ணும் நெனக்ய மாட்டான். அவன் ஒரு விஸ்வாசமான ஊழியனாயிருந்தவன். இப்ப வேற ஒரு வேலையில நல்லா சம்பாதிக்கிறான். மூணு நாள்ல நா திருப்பிக் குடுத்துருவேன்னு அவனுக்குத் தெரியும். இது ஒரு எமர்ஜென்ஸின்னும் அவனுக்குத் தெரியும்.”

“அப்படி என்னங்க எமர்ஜன்ஸி?”

“நேத்தே சொன்னேன்ல, இன்னிக்கி சாயங்காலம் க்ளப் மீட்டிங் இருக்கு. இன்னிக்கி மீட்டிங்ல மெம்பர்ஸ் எல்லாம் ஆளுக்கு ஆயிரம் ரூவா குடுக்கணும்னு சொன்னாங்க. ஆர்ஃபனேஜ் ப்ராஜக்ட்க்காக….”

“அது சரி, ஒங்க க்ளப் மெம்பர்ஸெல்லாம் வசதியானவங்க. நமக்கு இது இப்பப் பெரிய தொகையில்லியா! இந்த க்ளப்பே நமக்கு இப்ப லக்ஷரிதானேங்க! நாம நொடிச்சுப் போனவங்கன்னு ஒங்க க்ளப் மெம்பர்ஸ்க்குத் தெரியுந்தானேங்க?”

“தெரியுந்தான். ஆனாலும் என்ன ஓரங்கட்டிராம மரியாத குடுத்து வச்சிருக்காங்க. நொடிச்சிப் போனவன்னு நெத்தியில லேபில் ஒட்டிக்கிட்டு அலஞ்சேன்னா, அப்பறம் க்ளப்ல ஒரு பய நம்மள மதிக்க மாட்டான். அதுவும் போக, மை டார்லிங், இந்தக் கஷ்ட காலம் இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ தான். சினிமா ப்ரடியூஸர்ஸ் மூணுபேர்ட்ட கத சொல்லியிருக்கேன். அதுல ஒண்ணு க்ளிக் ஆனாக்கூட போதும், ஐயா எங்கேயோ போயிருவார். ஆகையினால, நீ என்ன செய்ற, எதப்பத்தியும் கவலப்படாம ரிலாக்ஸ் பண்ற. ஈவ்னிங் ரெடியாகி நாம ரெண்டு பேரும் க்ளப் மீட்டிங்க்குப் போறோம். ஓக்கே மேடம்?”

“ஓக்கே பாஸ்” என்று எழுந்து கொண்டவள் செல்லமாய் என் தலைமுடியைச் சிலுப்பி விட்டு விட்டுக் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

நொடித்துப் போனவன்! பத்துமாசம் முன்பு வரை, மூவாயிரம் சதுர அடியில், மாசம் எழுபதாயிரம் வாடகையில், அண்ணாநகரில் ஓர் ஏஸி டிப்பார்ட்மென்ட் ஸ்டோரின் உரிமையாளன்.

இன்றைக்கு, நொடித்துப் போனவன்!

வீடு, கார் எல்லாவற்றையும் விற்று, மார்வாடிக் கடன்களை அடைத்துவிட்டு, வருமானமில்லாமல், ஒரு ஸிங்கிள் பெட்ரூம் வாடகை ஃப்ளாட்டில் இப்போது வாசம்.

பம்பாயிலிருக்கிற அக்கா, தன்னுடைய டாக்டர் சம்பாத்தியத்தில், அத்தானுக்குத் தெரியாமல் மாசமாசம் அனுப்புகிற தொகையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சாபத்திலிருந்து மீண்டு, தம்பி எப்படியும் மேலே வந்து விடுவான் என்பதில் அக்காவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

அன்புள்ள அக்கா. கல்யாணமாகிப் பன்னிரண்டு வருஷங்களாகியும் குழந்தையில்லையென்பது பெரிய மனக்குறையாயிருந்தது. இப்போது அதுவே ஒரு நல்ல விஷயமாய்த் தெரிகிறது.

இவளுக்கு நான் குழந்தை, எனக்கு இவள் குழந்தை. பத்திரிகைகளுக்குக் கதையெழுதுவதில் மாசம் ஐநூறு அருநூறு கிடைக்கும். மூணுமாசமாய் அந்த வருமானமும் இல்லை. ஆறுமாசமாய் சினிமாக் கம்பெனிகளுக்கு அலைச்சல்.மூணு தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தந்திருக்கிறார்கள்.

சாயங்காலம் ஆட்டோவில் போகிறபோது, நம்ம ஆள் ரொம்ப ஆனந்தமாயிருந்தாள். “இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோதான், ஐயா எங்கேயோ போயிருவார்” என்று காலையில் நான் சொன்னதில் பூரண விஸ்வாசத்தோடிருக்கிறாள். ஆண்டவனே, இவளுடையவும் என்னுடையவும் நம்பிக்கைகளை நிறைவேற்றி வை.

“மத்யானம் நீங்க குட்டித்தூக்கம் போட்டுட்டிருந்தப்ப, ஒங்க க்ளப் ப்ரஸிடன்ட்டோட மிஸஸ் ஃபோன் பண்ணாங்க” என்று பெருமையாய்ச் சொன்னாள்.

“இன்னிக்கி சாயங்காலம் ஃபாமிலி மீட்டிங், நீங்க கட்டாயம் வரணும்னாங்க. ஏழெட்டு மாசமா நீங்க ஃபாமிலி மீட்டிங்குக்கு என்னக் கூட்டிட்டே போறதில்ல, ஏங்க? இனி ஒவ்வொரு மீட்டிங்குக்கும் நா கட்டாயம் வருவேன், என்ன?”

குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

பிறகு என் பக்கத்தில் இன்னும் நெருங்கி, என் காதருகில் கேட்டாள், “ஆமா, என்னோட தலைவர் எப்ப ப்ரஸிடென்ட் ஆகப்போறாராம்?”

ப்ரஸிடென்ட்!

ரெண்டு வருஷத்துக்கு முந்தியே என்னைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். பதவியேற்பதற்கு மூணுமாசங்களுக்கு முந்திதான் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டுக் கொண்டிருப்பது உறைக்க ஆரம்பித்தது. இந்தத் தருணத்தில் சங்கத்தின் தலைவர் பதவியையெல்லாம் எடுத்துக் கொள்வது சரிப்பட்டு வராது என்று, பாபுவிடம் விண்ணப்பம் வைத்து, அவரைத் தலைவராக்கி விட்டேன். அதன் பிறகு சுந்தரம், இந்த வருஷம் மோகன், அடுத்த வருஷம் அனந்த கிருஷ்ணா.

அனந்த கிருஷ்ணாவையடுத்து நான்தான் என்று அதிகாரபூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இனியும் நான் கழண்டு கொண்டிருந்தால் க்ளப்பிலிருந்தே கழட்டி விட்டுவிடுவார்கள்.

ஆனது ஆச்சு, இன்னும் ஒரு மூணு மாசம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தால், சினிமாவில் முத்திரை பதிக்க ஆரம்பித்து விடுவேன். கதாசிரியனாய் உள்ளே நுழைந்து, பாடலாசிரியனாய் ஓர் அவதாரமெடுக்கவும் திட்டமிருக்கிறது.

இப்பவெல்லாம் சினிமாவில் பாட்டா எழுதுகிறார்கள்? ஐயா எழுத ஆரம்பித்தால் தான் பட்டுக்கோட்டை, கண்ண தாசனுடைய பொற்காலம் திரும்பவும் தமிழ் சினிமாவில் விடியும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து, யார் கண்டது, நான் இந்த கிளப்புக்கு ப்ரஸிடென்ட்டாய் ஆகிறபோது ஒரு சினிமா டைரக்டராகவும் ஆகியிருப்பேன்! இந்த க்ளப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு இணையாய்ப் பொருளாதாரத்தில் மீண்டும் உயர்ந்திருப்பேன்.

இதை இவளிடம் சொன்னபோது, ஆட்டோ டிரைவர் எங்களை அவதானிக்க மாட்டார் என்று உறுதி செய்து கொண்டு என்னை இறுக்கிப் பிடித்துக் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தாள். என் தோளில் தலை சாய்த்து, ஹோட்டல் போய்ச் சேரும் வரை மெய்மறந்த சந்தோஷத்திலிருந்தாள்.

நட்சத்திர ஹோட்டல் போர்ட்டிகோவில் ஆட்டோவில் போய் இறங்குவது அழகாயிருக்காது என்று வெளியிலேயே இறங்கிக் கொண்டோம். முன்னரே திட்டமிட்டு, காலத்தோடு வந்து சேர்ந்து விட்டது ரொம்ப நல்லது. காரில் வந்து இறங்குகிற மற்ற அங்கத்தினர்கள் எங்களுடைய வருகையைப் பரிகாசமாய்ப் பார்க்க வாய்ப்பில்லை.

மீட்டிங் முடிவுக்கு வருகிற தருவாயில், சங்கத்தின் பொருளாளர் எழுந்து, ஒவ்வொருவரிடமும் “அந்த ஆயிரம் ரூபாயை ” நினைவுபடுத்தியபடி ஆசனம் ஆசனமாய் வந்தார். தயாராய்க் கொண்டு வந்திருந்த செக்கை எடுத்து நீட்டினார்கள் சிலர். வாலட்டிலிருந்து சலவை நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார்கள் சிலர். அடுத்த மீட்டிங்ல குடுத்துர்றேன் சார் என்றார் ஒருவர். செக்கை எழுதி மறந்து வச்சிட்டு வந்துட்டேங்க, ஒங்களுக்குக் கூரியர்ல அனுப்பிச்சிர்றேன் என்றார் இன்னொருவர்.

நான் என்னுடைய வாலட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ஆயிரம் ரூபாய்.இன்றைய நிலையில் ஆயிரம் ரூபாய் ஓர் ஆடம்பரச் செலவுதான். நெஞ்சில் ஒரு நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒரு காலத்தில் ரிஸர்வ் பாங்க் ரிலீஸாக ஐயாயிரத்துக்குக் குறையாத புத்தம்புது நோட்டுக்கள் கொலுவிருந்த வாலட்டில் இன்றைக்கு கைமாத்து வாங்கிய ஆயிரம் ரூபாய்! அதுவும் சில நிமிடங்களில் ரிலீஸாகிவிடப் போகிறது.

அட விடப்பா, இது ஒரு டெம்பரரி ஸெட் பேக் தானே! இன்னும் ரெண்டே ரெண்டு அல்லது மூணேமூணு மாசந்தானே. அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு கதாசிரியன், கவிஞன், அப்புறம் சில மாதங்களில் ஒரு டைரக்டர். தமிழ்நாடே உன்னைப் பேசப்போகிறது.

வெகு விரைவில், இங்கே உட்கார்ந்திருக்கிற எல்லாருக்கும் சமமாய், அல்லது இவர்களைவிட உயரமாய்ப் பொருளாதாரத்தில் நீ விஸ்வரூபமெடுக்கப் போகிறாய். நெஞ்சை நிமிர்த்து, வாலட்டை வெளியே எடு.

எடுத்தேன்.

பொருளாளர் என் ஆசனத்தை சமீபித்தார்.

“ஹலோ சார்” என்றார். “குட் ஈவ்னிங் மேடம்” என்றார்.

“மொதல் ஆளா வந்துட்டீங்க போலயிருக்கு! ப்ரைஸ் ஒண்ணு ஒங்களுக்கு இருக்கு. ப்ரஸிடென்ட் மறந்தாலும் மறந்துருவார், டின்னருக்கு முந்தியே நீங்க ஞாபகப்படுத்தி வாங்கிக்கிருங்க” என்று என் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு என்னைக் கடந்து போனார், அடுத்த ஸீட்டுக்கு.

“ராஜேந்தர், நீங்க் தவ்ஸண்ட் ருப்பீஸ் தரணும் ஆர்ஃபனேஜ் ப்ராஜக்ட்க்கு. காஷ் தர்றீங்களா, செக்கா?” என்றார், அடுத்த ஸீட் காரரிடம்.

“என்ன சார் இது, அவர் விட்டுட்டீங்க, என்ட்ட வந்து கேக்கறீங்க!” என்ற ராஜேந்தரிடம் பொருளாளர் சொன்னது சுற்று வட்டாரத்தில் துல்லியமாய்க் கேட்டது.

“அவரேப் பாவம் கஷ்டப்பட்டுட்டிருக்கார், அவர்ட்ட கேக்க வேண்டாம், விட்டுருவோம்னு ப்ரஸிடென்ட் சொல்லிட்டார் ராஜேந்தர். ரொம்ப ப்ரஷர் குடுத்தா க்ளப்ப விட்டு ஓடிப் போனாலும் போயிருவார்.” சுற்றிலும் சில முகங்கள் சிக்கனமாய் சிரித்தன.

என்னுடைய முகத்தில் சில வினாடிகளுக்கு முன்பு கருக்கொண்டிருந்த புன்னகை இப்போது செத்துக் கொண்டிருந்தது. வாலட் கனத்துக் கிடப்பதாய்ப் பட்டது, என் இதயத்தைப் போல. பான்ட் பாக்கெட்டிலிருந்து வாலட்டை உருவப் பணிக்கப் பட்டிருந்த கை, அதை உள்ளே தள்ளி அழுத்தியது.

என்னுடைய அந்தக் கையின்மேலே இன்னொரு கை படர்ந்து அழுத்தியதை உணர்ந்தேன்.

இவள்.

அந்தப் பக்கம் பார்வையைத் திருப்ப எனக்கு த்ராணியில்லை. மீட்டிங் முடிந்தது.பெண்கள் ஸுப்பின் பக்கமும், ஆண்கள் கோப்பைகளின் பக்கமும் நகர்ந்தார்கள்.

“போகலாமா” என்றேன், அவள் பக்கம் திரும்பாமலேயே.

“ம்” என்று சம்மதம் தந்தாள், என் புஜத்தைப் பற்றியபடி.

ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, என்னை மிக நெருங்கி உட்கார்ந்தாள். என் தலைமுடியைச் சிலுப்பி விட்டாள்.

பிறகு என்னைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு கன்னத்தோடு கன்னம் இழைய, “ச்சியர் அப் ஐ ஸே” என்று தேற்றினாள். என் கன்னத்தில் படர்ந்து பிசுபிசுத்தது அவளுடைய கண்களின் ஈரம்.

(கல்கி , 31.12.2006)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *