நண்பனின் திருமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 9,114 
 

கார் வந்துவிட்டது. ஐந்து மணி நேரத்திற்கு வாடகை பேசப்பட்டிருக்கிறது. முன் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டு ஜானுவை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். பின் ஸீட்டில் அம்மா, பெரியக்கா, சின்னக்கா மடியில் குழந்தையுடன் அமர்ந்துகொண்டனர். மழை தூறிக்கொண்டிருந்தது. ‘கிஃப்ட் எடுத்துக்கிட்டாச்சா?’ மீண்டும் ஒரு முறை கேட்டுத் தெரிந்துகொண்டேன். மணி ஏழாகியிருந்தது. எப்படியும் திரும்பி வர பத்து மணியாகிவிடும். சொந்த ஊரிலிருந்து நிறைய பேர் வந்திருப்பார்கள். அத்தனை பேரிடமும் பேசிவிட்டுக் கிளம்ப நேரமாகி விடும்.

இன்று ராமுக்கு திருமணம்.

வண்டி புறப்பட்டு விட்டது. மடியில் ஜானு அமைதியாக அமர்ந்திருந்தாள். ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் திடீரென பெரியக்காவின் குரல் கேட்டது போல இருக்கவே, திரும்பனேன். ‘கூப்பிட்டியா?’

‘எவ்வளவு நேரமா கூப்பிடறது!’

‘ஓ. கேக்கல. என்ன?’

‘என்ன எதாச்சும் ஸ்டோரி கான்டஸ்ட்டா?’

‘ஹி ஹி. ஆமாம். எப்படி கண்டுபிடிச்சே?’

‘மூஞ்சியிலயே தெரியுது’

‘ஐ சீ’. அசடு வழிந்தேன்.

‘அந்த மிஸ்டரி கதை நல்லாருந்தது. ப்ரைஸ் கடச்சிதா?’

‘ம்’

‘இந்த முறை என்ன?’

‘ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி’

‘கதை யோசிச்சிட்டியா?’

‘இன்னுமில்ல’

‘ம்’

‘ஏதாச்சும் கதை சொல்லேன். எழுதறதுக்கு’

‘ம்’

‘நான் ஒரு கத யோசிச்சேன். கேளேன்.’

‘சொல்லித் தொல’

‘ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுலேர்ந்து திக் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணு தைரியசாலி. ஒரு பொண்ணு ரொம்ப கோழை. கோழைய வந்து சித்தி ரொம்ப கொடும பண்றா’

‘எஹ்?’

‘கேளு. சித்தி ரொம்ப கொடும செய்யுறா. அவளால தாங்க முடியாம ஃப்ரெண்டுகிட்ட அழறா. இருபது வருஷமா இதே கத. ஒரு நாள் கொடும தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறா. அந்த அதிர்ச்சியுல ஃப்ரெண்டுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் வந்துடுது. அவளோட ஸ்பிளிட் செத்து போன ஃப்ரெண்டு மாதிரி பிஹேவ் பண்ணுது. சித்திய பழிவாங்குது. சித்திய கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடறா’

பின் ஸீட்டில் பயங்கிர அமைதி.

‘ரெண்டு பேருக்கும் காம்மனா இன்னொரு ஃப்ரெண்டு இருக்கா. அவ ஒரு டாக்டர். அவ வந்து கோர்டுல வாதாடி ஜெயிக்கிறா. ஆனா அவளுக்கு மட்டுமே உண்மை தெரியும், இந்த பொண்ணுக்கு ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி இல்லேனு. அவ நட்புக்காக செய்யுறா. எப்படி’

சின்னக்காவின் குழந்தை அழ ஆரம்பித்தது.

‘சரி விடு’ என்றேன்.

‘நம்ம ஜானுவயும் ஸ்ரீயயும் வெச்சு எழுதேன்?’

ஜானுவுக்கு வயது ஆறு மாதம். ஸ்ரீக்கு வயது நான்கு மாதம். முறையே பெரியக்கா சின்னக்காவின் மகள்கள். இருவரும் எதிரேதிரே தத்தம் மகள்களை தூக்கிக்க்கொண்டு நின்றால், இரு குழந்தைகளும் ‘ஆ ஊ’ என்று பேசிக்கொள்கின்றன.

‘ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ்! ஃப்ரெண்ட்ஸ் இல்ல’

அக்கா சிரித்தாள். ‘இல்லனா இவளோட ஃப்ரெண்ட் ஒருத்தி இருந்தாளே’ (சின்னக்காவைப் பார்த்து கை காட்டியிருப்பாள்) ‘அந்த மார்வாடிப் பொண்ணு.. ரெண்டு பேரையும் வெச்சு எழுது’

‘ம் ம் எழுதலாம்’

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் அம்மா சன்னமான குரலில் கேட்டாள். ‘ராம் பத்தியே எழுதேன். அவன் தான் உன்னோட ஃப்ர்ஸ்ட் ஃப்ரெண்ட்..’

‘ஆமால்ல..’ என்று மனசு சொன்னது.

ராமின் குடும்பமும் நாங்களும் ஒரே வீட்டில், முறையே கீழ் போர்ஷனிலும் மேல் போர்ஷனிலும் குடியிருந்தோம். 1980களின் முதல் பாதியில் சந்தித்துக்கொண்டோம். வீட்டு உரிமையாளரிடம் ஏற்பட்ட சச்சரவுகளில் ஒன்றாக கை கோர்த்தோம். ராமின் அப்பா டாக்டர். என்னுடைய அம்மா டீச்சர். இன்று வரையும் ராமின் வீட்டில் எல்லாரும் அம்மாவை ‘டீச்சர்’ என்றே அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் ராமின் அப்பாவை ‘டாக்டர்’ என்றே அழைத்தோம்.

‘ஃபேமிலி ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையை நான் முதன் முதலில் படித்து அம்மாவிடம் அது என்னவென்று அர்த்தம் கேட்டபொழுது, ராமின் குடும்பத்தினரையே அம்மா அடையாளம் காட்டியிருக்க வேண்டும். அப்பா அப்போது (கட்சியில்) இருந்தார். கட்சி அலுவலகத்தில் பெரும் பகுதி கழிந்தது. ராஜா வீட்டு கன்னுக்குட்டி. நிறைய பணம். நிறைய நண்பர்கள். நிறைய எதிரிகள். அம்மா எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தார். அப்போது அம்மாவுக்கு இருந்த ஒரே துணை ராமின் குடும்பத்தினர். அப்பா மறைந்த பின், அவர்கள் துணை இன்னும் முக்கியமானதானது. (நேற்று அப்பாவின் 13ஆவது நினைவு நாள் என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது. zoozooக்களை படம் பிடித்து அதன் மீது ஏதேதோ கிறுக்கத்தனமாக எழுதியபடி நாள் கழிந்தது.)

ராம் எனக்கு நண்பனா என்பதில் எனக்கு சந்தேகங்கள் உண்டு. என்னை விட இரண்டு வயது மூத்தவன். நாங்கள் பள்ளிக்கு செல்லும் போதோ, ட்யூஷன் செல்லும் போதோ, விளையாடப் போகும் போதோ, நான் ராமின் முழுப்பொறுப்பில் விடப்பட்டேன். எங்கள் குடும்பங்களுக்கு நெருக்கமாக இல்லாதவர்கள், எங்களை அண்ணன், தம்பி என்றே நினைத்தார்கள். நானும் பல நாட்கள் அவனை அண்ணா என்றே அழைத்திருக்கேன். பின்னர் ‘ராம்’ என்றழைக்கத் தொடங்கிய நாளில் அவன் எனக்கு முழு நண்பனாகியிருக்கலாம்.

இருவரின் அம்மாக்களின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, மாடியில் கிரிக்கெட் விளையாடும் உத்தியை கண்டுபிடித்தோம். ப்ளாஸ்ட்டிக் பந்து, இல்லை துக்கு பந்து. (எங்கள் ஊரின் தொழில் நெசவு. அதில் கழிவாக எறியப்படும் துணிகளை வைத்து செய்யும் பந்து).பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பந்து பறந்து, பக்கத்தில் புதரென மண்டிக்கிடக்கும் கார்பரேஷன் இடத்தில் விழும். பாம்புகள் அதிகமென்பதால் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். அந்த இடத்தை ஒரு நாள் சுத்தம் செய்த போது, அள்ளி அள்ளி பந்துகளை எங்கள் காம்பவுண்டுக்குள் கொட்டினார்கள். நாங்கள் இருவரும் ஓடி ஓடி அவற்றை பொறுக்கியது இன்னும் நினைவிருக்கிறது.

இன்று அவனுக்குத் திருமணம்.

நடுவில் எதுவோ சரியாக இல்லாமல் போய்விட்டது. அவன் பனிரெண்டாவது வகுப்பு செல்கையில் அவன் மட்டும் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் வீடு பார்த்துச் சென்றான். அப்போது ஏற்பட்ட தொடர்பின்மை வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் முற்றிலுமாக தொடர்பு அறுந்தது. கிட்டதட்ட எட்டு வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன்.

நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.

எதைப் பற்றி எழுதுவது? சைக்கிள் பூட்டு எதற்கென்று தெரியாமல் பல காலம் முழித்து, என்னைப் பின்னால் வைத்து அவன் ஓட்டி சென்று பொழுது, பூட்டைப் போட்டு சைக்கிளை நிறுத்திய கதை உண்டு. இல்லை பெரியக்காவுடன் ரசம் வைத்த கதை. இல்லை அந்த ட்யூஷனில் இருந்த அந்தப் பெண் அவனை காதலித்தது (?!) பற்றியும், இவன் மறுத்ததும், அப்போது பிரபலமாக இருந்த ‘ரோஜாப்பூ கீழ விழ்ந்தா, செடியோட ஒட்டி வைக்க முடியாது’ என்ற ‘பூவே உனக்காக’ வசனத்தை சொல்ல சொல்லி அடம் பிடித்த கதை உண்டு. (அவள் என்னை ‘மச்சினராக’ பாவித்தது கிளைக்கதை).

பெரியக்காவும் சின்னக்காவும் ராமின் அண்ணாவுடனான நினைவுகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கலாம்.

போய் இறங்கியதுமே ஒரு விதமான அதிர்வு தொடங்கிவிட்டது. ஏழெட்டு வருடங்கள் கழித்து நிறைய பேரை பார்க்கப் போகிறேன். ராமின் அண்ணனும் அண்ணியும் வரவேற்றார்கள். சம்பிரதாய கேள்விகள், நலம் விசாரிப்புகள், ‘ஃபோனே பண்றதில்ல’ கோபங்கள். மண்டபமெங்கும் புன்சிரிப்புகள். ‘இது அபி தானே?’ என்ற சந்தேகப் பார்வைகள். சின்னக் குழந்தையாக பார்த்தவர்கள் வளர்ந்து நம் முன் நிற்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. (நான் பள்ளிக்கூட பேருந்துக்கு காத்திருக்கையில் ஒரு குட்டிப்பையனுடன் விளையாடுவான். அந்தப் பையனின் அம்மா நான் நிச்சயம் இன்று வருவேன் என்பதற்காகவே அவனை அழைத்து வந்திருந்தார்!) எத்தனை மக்கள்! எத்தனை நினைவுகள்.

மேடையில் ராம் பிரகாசமாகத் தெரிந்தான். ஷெர்வானி மிகப் பொருத்தமாக இருந்தது. நிறைய எடை கூடிவிட்டான். அவனுக்கும் என்னைப் பார்த்ததும் இப்படி நிறைய தோன்றும். தூரத்திலேயே என்னைப் பார்த்து விட்டு கையசைத்தான். மணப்பெண்ணிடம் ஏதோ சொல்கிறான். மேடையேறியவுடன் கட்டியணைத்துக்கொண்டான். இத்தனை வருட தொடர்பின்மையும் ஒரு நொடியில் உடைந்துவிட்டது என்றே தோன்றியது. ‘ச்சே! பாக்கலனா என்ன! பேசலானா என்ன!’ மனசு சொன்னது. அவன் குரல் பத்து வருடங்களுக்கு முந்தைய ஒலியைக் கொண்டிருந்தது.

பூரிப்பாக இருந்தது. நிச்சயம் அவனை வைத்து ஒரு கதை எழுத வேண்டும்.

மேடையை விட்டு இறங்கியதும் குமாரண்ணனைப் பார்த்தேன். ‘அபி! ஆளே மாறிட்டே’ என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றார். ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை பெரியவர் அமர்ந்திருந்தார். மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவரிடம் என்னை நிறுத்தினார். ‘இவன் தான்’ என்றார்.

பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. முயற்சி செய்து தோற்றுப்போனார். நான் அவரிடம் குனிந்து கொண்டேன். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கு. அவருக்குப் பின்னால் அவரின் தம்பி போன்ற ஒருவர், மகன்கள், மனைவி எனப் பலர் என்னை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். என் கன்னங்களை தயங்கி தொட்டுப் பார்த்தவர், ‘நான் உங்கப்பாவோட ஃப்ரெண்டு’ என்றார்.

உடலில் மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கண்கள் ஏனோ கலங்கின. அதில் பல சிறுகதைகள் ஒரு தொடர்கதையும் அடங்கியிருந்தன.

– ஜூலை 2009 (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *