தட்சணின் 26-வது மரணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 9,921 
 

‘என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?’ என்கிற வாசகத்தோடு தனது 26-வது தற்கொலைக் கடிதத்தை எழுதி முடித்தான் தட்சணாமூர்த்தி. இந்தச் சமூகத்தின் மீது கருணை காட்டி இத்தனை காலம் வாழ்ந்தது போதும் என்கிற சலிப்பு மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது.

தான் அமர்ந்திருந்த பீட்ஸா கார்னரில் சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தான். எல்லோரும் ஏதோ ஒன்றைப் பேசிச் சிரித்தபடி சந்தோஷமாக இருந்தார்கள். ‘மரணத்துக்கு அஞ்சும் கோழைகளே… ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இன்னும் சில மணி நேரங்களில் இந்த வீரன் மரணத்தைச் சென்றடைவான். அதன் பின் நீங்கள் விரும்பினாலும் அவனைக் காண இயலாது’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் இதை வாய்விட்டுச் சொல்லி இருந்தால்கூட யாரும் நம்பப்போவதில்லை.

ஒருமுறை, இதே பீட்ஸா கார்னரில் கைகளைப் பலமாகத் தட்டியபடி தான் அமர்ந்திருந்த சோபாவின் மீது ஏறி நின்று ‘டியர் ஃப்ரெண்ட்ஸ்… ஐ வான்ட் டு டை’ என சீரியஸாகத் துவங்க… ‘இஸ் இட்? யு ஆர் ஸோ க்ரேஸியா…’ என்றாள் சந்தன கலர் இன்னர் அணிந்த ஜீன்ஸ் பெண். அந்த அவமானத்தில் கூனிக் குறுகி இரண்டொரு முறை தற்கொலை எண்ணத்தையேகைவிட்டு இருந்தான் தட்சணாமூர்த்தி.

யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இந்த முறை எந்தக் கண்ணாமூச்சி ஆட்டமும் இல்லாமல் மரணம் நிச்சயம். ஆர்டர் செய்திருக்கும் சிக்கன் பர்கரைத் தின்று ஒரு ஐஸ் லெமன் டீயைக் குடித்துவிட்டால், தனக்கும் இந்தச் சமூகத்துக்குமான தொடர்பு முடிந்துவிடும்.

இனி வாழ்வதற்கான புறக் காரணங்களோ, அகக் காரணங்களோ எதுவும் தனக்கு இல்லை என்பதை தட்சணாமூர்த்தி மிகத் தெளிவாக உணர்ந்திருந்தான். ஆனபோதும் தன் மரணம் இந்தச் சமூகத்தை ஓர் உலுக்கு உலுக்க வேண்டும் என விரும்பினான்.

மரணம் சலித்தவர்கள் வேறென்ன செய்துவிட முடியும் வாழ்வதைத் தவிர…

‘வாழும் மானுடமே.. உனக்கான அனுதாபத்தோடு விடைபெறுகிறான் தட்சண்’ எனத் துவங்கி 26 பக்க உரைநடையும், மரணம் குறித்த இரண்டு குறுங்கவிதைகளோடும் கூடிய ஒரு மரண சாசனத்தை எழுதி முடித்தான்.

தான் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை மறு வாசிப்பு செய்தபோது, அது இலக்கியத் தரத்தோடு அமைந்திருப்பதாக உணர்ந்தான். நாளைய இலக்கிய உலகம் கடித இலக்கியத்தின் உப பிரிவாக தற்கொலைக் கடித இலக்கியத்தை உருவாக்கி, அதைத் தோற்றுவித்தவர் தட்சணாமூர்த்தி எனக் கொண்டாடும் என்றே தோன்றியது அவனுக்கு.

மன்னிக்க வேண்டும் வாசகப் பெருமக்களே…

ஆர்டர் செய்த சிக்கனும் பர்கரும்… ஐஸ் லெமன் டீயும் வந்துவிட்டால், இந்தச் சமூகத்துக்கும் தட்சணுக்குமான தொடர்பு அறுந்துபோகும். அதற்குள் தட்சணின் வாழ்க்கையை ஒரு பார்வை பார்த்து வரலாம்.

நான் கலெக்டர் ஆவேன், நான் போலீஸ்ஆவேன் எனக் குழந்தைகள் எதிர்காலம் குறித்துச் சொல்வதுபோல… தட்சணாமூர்த்தி தற்கொலை பண்ணிச் சாவேன் என்பதை லட்சியமாகக்கொண்டு இருக்கிறான். தற்கொலை எண்ணம் நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஒரு நண்பனைப்போல தட்சணோடு பயணப்படுகிறது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது ‘எனக்கு வாழப் பிடிக்கவில்லை. சாகப்போகிறேன்’ என எழுதிவிட்டு வீட்டைவிட்டு ஓடினான் தட்சண். தேடிப் பிடித்து அவனை இழுத்து வந்து காலில் கிடந்ததைக் கழற்றி அடித்தார் அப்பா சரவணப்பெருமாள். பின் கழுத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு குனியவைத்து இரண்டு கால்களிலும் மாறி மாறி அடித்தார். ‘நாலு வார்த்தை எழுதினா, அதுல மூணு தப்பு விடுவி யாடா?’ எனக் கேட்டபடியே அடித்தார்.

அழுது ஓய்ந்த பிறகு தான் எழுதிய முதல் தற்கொலைக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தான் தட்சண். அப்போதுதான் அப்பா ஏன் காலிலேயே அடித்தார்என்பதற்கான அர்த்தம் புரிந்தது. ‘எனக்கு வழப் பிடிக்கவில்லை, சகப் போகிறேன்’ என எழுதி இருந்தான் தட்சண்.

ஒவ்வோர் அனுபவமும் ஒரு பாடம். தற்கொலைக் கடிதம் என்பது வெறும் எழுத்தாக இல்லாமல் உணர்வுகளைத் தூண்டும்விதமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக, பளீரெனத் தெரியும் அளவுக்கு அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாதென்பதைப் புரிந்துகொண்டான்.

அடுத்த தற்கொலைக் கடிதம் அவனுக்கு வருமானத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டது.

‘வாழப் பிடிக்கவில்லை…
மீண்டும் உன் கருவறைக்குத் திரும்ப முடியாது
ஆகவே
கல்லறை செல்கிறேன் அம்மா!’

அம்மாவின் பார்வையில் படும்படி இந்தக் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தலைமறைவானான் தட்சண். அவனைத் தேடிக் கண்டுபிடித்து கையில் ஐயாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, ‘இஷ்டம் போல் செலவு செய் மகனே… தற்கொலை மட்டும் செய்துகொள்ளாதே’ எனக் கண்ணீர் மல்க வேண்டினாள் தட்சணின் அம்மா லட்சுமி. அதன் பிறகு, “ச்சே… என்னடா வாழ்க்கை இது?” எனச் சாதாரணமாகச் சலித்துக்கொண்டால்கூட, தட்சணுக்கு 500. 1,000 எனப் பணம் கிடைத்தது.

லட்சுமி அம்மாள் வெளியூர் சென்றிருக்கும் சமயத்தில்கூட தொலைபேசியில் அழைத்து, “அம்மா… செத்துப்போகலாம்போல இருக்கு. என் அக்கவுன்ட்ல அஞ்சாயிரம் ரூபா போட்டுவிடு” என்பான் தட்சண்.

அடிக்கடி இப்படிப் பொய்யாய் மிரட்டுகிறான். தட்சண் உயிருக்குப் பயந்த கோழை என்று மட்டும் தயவுசெய்து யாரும் தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். மரணத்துக்குப் பயந்த கோழைகள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மரணத்தை எதிர்க்கும் வீரர்கள் தற்கொலை செய்கிறார்கள். இதுதான் தட்சணின் தாரக மந்திரம்.

தட்சண் வெறுமனே பூச்சாண்டி காட்டுபவன் மட்டுமல்ல. 25 முறை உறவுகளை எல்லாம் நெஞ்சு பதறச்செய்யும் அளவுக்கு மிக நேர்மையாகத் தற்கொலைக்கு முயன்றவன்.

இயற்கை, பொதுப் பணித் துறை, ரயில்வே துறை, மின் வாரியம், மகா சமுத்திரம் இவை யாவும் தட்சணின் மரணத்துக்கு எதிரானதாக இருந்திருக்கின்றன.

ஒருமுறை உதக மண்டலத்தின் மலை உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்யும் முடிவோடு புறப்பட்டான். நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னொரு முறை தண்டவாளத்தில் தலைவைத்து வீரச் சாவடைய எண்ணினான். ரயில்வே நிர்வாகம் அந்த வழித் தடத்தில் மீட்டர் கேஜை பிராட் கேஜ் ஆக்குவதற்கான பணிக்காக போக்குவரத்தை நிறுத்தி இருந்தது. ஏழாவது மரணத்தை மின் அதிர்ச்சிச் சாவாக மாற்ற எண்ணி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி வயரில் கைவைத்தால்… இடையறாத மின்வெட்டு.

இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் தன் லட்சிய வேட்கையில் இருந்து துளியும் விலகவில்லை தட்சண். மரணம் என்று ஒன்று நேருமானால், அது தற்கொலையாக இருக்க வேண்டும் என்கிற உறுதி குலையாமல் இருந்தான்.

அடுத்த முறை அவன் திட்டமிட்டது துறை சாரா இயற்கை மரணம். அந்த மரணத்துக்கு அவன் ஒரு பெயரிட்டான். கடல் கலத்தல்.

கடலில் ஐக்கியமாவதுதான் தன்னைப்போன்ற மனிதர்களுக்குச் சரியான முடிவு என்று தீர்மானித்தான். உலக மக்களுக்கு இந்தக் கடல் கலத்தல் ஒரு புதிய வழிமுறையாக இருக்கட்டும். அதீத ஜனத்தொகைப் பெருக்கத்தால் திணறும் உலகத்தைச் சமனிலைப்படுத்தும் மாற்று யோசனையாக தன் மரணத்தைப் பயன்படுத்த எண்ணினான் தட்சண்.

“உலக மானிடர்களே..! மரணத்துக்காகக் காத்திருக்காதீர்கள். பேருந்து இருக்கைக்கு முண்டியடிக்கும் நீங்கள்… திரையரங்க டிக்கெட்டுக்கு முண்டியடிக்கும் நீங்கள்… மரணத்தை மட்டும் எப்படி நிதானமாக எதிர்கொள்கிறீர்கள்? கடமை எதுவுமின்றி கடனே என வாழ்ந்துகொண்டு இருப்பவர்களே… வாருங்கள் கடல் கலப்போம்” என நீண்டதொரு கடிதம் எழுதி சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, இது வெறும் மரணமல்ல… உலகைப் புரட்டிப்போடக்கூடிய புனிதப் பயணம். ஆகவே, திருச்செந்தூர் கடலுக்குச் சென்று கடல் கலக்கலாம் என முடிவெடுத்தான் தட்சண்.

‘சனிப் பொணம் தனிப் பொணமாகப் போகாது’… இந்தப் பழமொழியில் நம்பிக்கை இல்லை என்றாலும் ஓசோன் ஓட்டையை அடைக்கும் தன் யோசனைக்கு ஓப்பனிங் மாஸ் வேண்டும் என்பதால் தன் தற்கொலை நாளை சனிக்கிழமையாகத் தேர்ந்தெடுத்தான். முதல் நாள் திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டான்.

“என்ன தம்பி வேண்டுதல்?” எனக் கேட்டபடியே மொட்டையடித்தார் பெரியவர்.

“ஓசோன் படலத்துல ஓட்டைய அடைக்கணும்” – தட்சண் இதை சீரியஸாகச் சொல்லவும், வினோதமாகப் பார்த்தார் பெரியவர்.

‘பாருங்க… பாருங்க… உலகமே நாளைக்கு என்னை வினோதமாப் பாக்கப் போகுது’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

‘பத்திரிகையாளர்கள் முழுமையாக எனது கடிதத்தைப் பிரசுரிக்கவும்’ என்கிற பின் குறிப்புடன் தனது மரண சாசனத்தை ஒரு பாலிதீன் கவரில் வைத்துச் சுற்றி, தன் உடலோடு இணைத்து இறுகக் கட்டிக்கொண்டு கடற்கரைக்கு வந்த தட்சண் பேரதிர்ச்சிக்கு உள்ளானான். அன்று கடல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்வாங்கி இருந்தது.

தற்கொலை என்பதே கண நேர முடிவுதானே. சட்டென மனம் மாறிய தட்சண் மொட்டைத் தலையுடன் ஊர் திரும்பினான். அவனுக்கு மரணத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தன்னைக் கண்டு மரணம் இத்தனை அச்சத்துடன் விலகி ஓடுவதற்கு என்ன காரணம் என்பது விளங்காமல் இருந்தான்.

கடைசியாக அவன் எடுத்த முயற்சி நெடுஞ்சாலை விபத்து மரணம். அதிலும் அன்று பாரத் பந்த் என்பதால் இரண்டொரு சைக்கிள்கள் மட்டுமே கடந்து சென்றன. அவன் காத்திருந்த சாலையில் ‘பால் அவசரம்’ வாகனம்கூட கடந்து செல்லவில்லை.

தற்கொலைக்கு முயன்ற துவக்க காலத்தில், அதற்கெனப் பிரத்யேகக் காரணங்களைக் கற்பித்துக்கொண்டு இருந்தான் தட்சண். வரவுக்கும் செலவுக்குமான மேத்ஸ் வொர்க்-அவுட் ஆகவில்லை. காதலில் கெமிஸ்ட்ரி சரியில்லை. நண்பர்களோடு பிசிக்ஸ் இணங்கவில்லை. உறவுகளோடு ஒன்றிப்போகும் பயாலஜி இல்லை. இப்படி ஏதோ ஒரு காரணம் இருந்தது.

மரணம் தன்னை ஏமாற்ற, மரணத்தின் மீது அவனுக்கு கோபம் வந்தது. பாரதி கூப்பிட்டதும் வந்த மரணம் தான் கூப்பிட்டு வரவில்லையே என்கிற ஆத்திரம் வந்தது. ‘வேறெதுவும் காரணமில்லை நண்பர்களே… சாவதற்காகச் சாகிறேன்’ என்றெல்லாம்கூட எழுதிவைத்துப் பார்த்தான். எதற்கும் மரணம் மசிவதாகத் தெரியவில்லை.

இந்த முறை மரணத்தை விடுவதில்லை என்கிற தீர்மானத்தோடு சயனைடு வாங்கிவைத்திருந்தான். பர்கர் வந்ததும் அதில் சயனைடைக் கலந்து சாப்பிட்டுவிட வேண்டியது என்கிற தீர்மானத்தோடு இருந்தான்.

சர்வர் பர்கரைக் கொண்டுவந்து வைத்ததும், ‘சமூகத்தீரே… ஒருகணம் இந்த ஆன்மாவுக்காக அமைதிகொள்ளுங்கள். இதோ தட்சிணாமூர்த்தி புறப்படுகிறான்…’ எனத் தனக்குள் சொன்னபடி பாக்கெட்டில் இருந்த தற்கொலை சாசனத்தை மேஜை மீது எடுத்துவைத்தபோது எதிரே ஓர் இளைஞன் வந்து அமர்ந்தான். கண நேரத்துக்குள் தட்சண் வைத்த சாசனத்தை எடுத்துக் கிழித்துப்போட்டான்.

தட்சண் அடங்க இயலாத கோபத்தோடு எழுந்தான். சாசனத்தைக் கிழித்த இளைஞன் அமைதியாக சிரித்தபடி – “கோபப்படாதீங்க. இந்தச் சாசனத்துக்கு இப்ப அவசியமில்லை. நீங்க இப்ப சாகப்போறதில்லை” என்றான்.

தட்சண் சிரித்தான். “பைத்தியக்காரா… ஒரு நொடியில் மரணம் ஏற்படும்விதமாக சயனைடு வாங்கிவைத்திருக்கிறேன். இனி ஆண்டவனே நினைத்தால்கூட என் மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது” என்றான் சிரித்தபடியே.

இளைஞன் கலங்கிய கண்களுடன் – “சயனைடுன்னு சொல்லி உங்களை ஏமாத்திட்டாங்க. அது காபிப் பொடியும் கஞ்சாவும் கலந்த பொடி. அதைச் சாப்பிட்டா மரணம் வராது மயக்கந்தான் வரும்” என்றான்.

தட்சண் வேறெப்போதும் இத்தனை குழம்பியது இல்லை. முதல்முறையாக தட்சணுக்கு தன் லட்சியத்தில் தோற்றுப்போவோமோ என்கிற பயம் எழுந்தது. மெல்லிய குரலில், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீ யார்?” என்றான்.

இளைஞன் வாய்விட்டுக் கதறி அழுதான். “என்னை மன்னிச்சிருங்க. நான்தான் உங்க மரணம். உங்ககிட்ட தோத்துட்டேன். தயவுசெஞ்சு இதை வெளில சொல்லாதீங்க. மரணத்தோட மானத்தை வாங்காதீங்க…” எனக் காலில் விழுந்து கதறினான்.

தட்சண் செய்வதறியாது திகைத்து நின்றான்!

பின் இணைப்பு:

தட்சணின் மரண சாசனக் கவிதை!

மரணம் மிக அழகானது
நான் மரணத்தை நேசிக்கிறேன்
நீங்கள் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள்
மரணம் என்னை மௌனமாக்கும்.

நீங்கள் என் மீது ஆளுமை செலுத்து
வீர்கள்
மரணம் என்னை அரவணைக்கும்
உங்கள் கைகளில்
எனக்கெதிரான ஆயுதங்கள்
மரணத்தின் கைகளில்
எனக்கான கருணை.

உங்களைப்போல்
மரணம் என்னை அச்சுறுத்துவதில்லை
என்னைச் சந்தேகிப்பதில்லை
என்னைக் கண்ணீர் சிந்தவைப்பதில்லை
ஆகவே, நான் மரணத்தை நேசிக்கிறேன்.

மரணத்தைத் தவிர வேறெதுவும்
உங்களிடமிருந்து என்னைக் காப்பாற்ற முடியாது
ஆகவே, நான் மரணத்தை நேசிக்கிறேன்!

– டிசம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *