சுற்றமும் நட்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,701 
 

ஒரு மாதத்திற்குப் பிறகு, அன்றுதான் ஊரிலிருந்து திரும்பி வந்தேன். எனது நண்பன் அரங்கநாதன் இறந்து விட்டான் என்ற செய்தி என் காதில் விழுந்தது. காலனைக் காலால் உதைத்தானாமே, அந்த சிவனை வழிபடுவதில் சாட்சாத் மார்க்கண்டேயனைக் கூடத் துக்கியடித்துக் கொண்டிருந்த அவனுக்கா இந்த கதி?

‘குழந்தையைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டு பாலூட்டும் அதன் தாய், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாற்றும்போது அது வீறிட்டு அழுகிறது. மீண்டும் தனக்குப் பாலூட்டுவதற்காகத்தான் அன்னை அவ்வாறு செய்கிறாள் என்பதை அறிவதில்லை. அந்தக் குழந்தையின் அழுகையைப் போன்றதுதான் மனிதன் மரணத்தைக் கண்டு மனம் பதைப்பதும்’ என்கிறார் கவியரசர் தாகூர். ஆனாலும் அவனையறிந்த இதயம் சும்மாயிருக்கிறதா? என்னவெல்லாமோ எண்ணி எண்ணி ஏங்குகிறது….

என்னுடைய நிலை இப்படியென்றால் அவனுடைய சுகதுக்கங்களில் என்னைவிடச் சிறப்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்த அவன் மனைவியும் மக்களும் எந்த நிலையில் இருப்பார்கள்? – அவர்களைப் போய்ப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்பட்டேன்.

வழியில் சதாசிவம் வந்து கொண்டிருந்தார். அரங்கநாதனின் அத்தியந்த நண்பர் அவர் என்னைக் கண்டதும் உங்களுக்குச் சமாச்சாரம் தெரியுமா என்று அவர் ஆரம்பித்தார்.

“தெரியும்; அரங்கநாதன்.

‘ஆமாம், என்ன அநியாயம் பாருங்கள். இன்னும் அவர் மறைந்துவிட்ட மாதிரியே எனக்குத் தோன்றவில்லை. அடடா, என்ன தங்கமான குணம் கேட்கும் போதெல்லாம் நூறும் இறுநூறுமாகக் கொடுத்துக் கொண்டே யிருப்பார். இனிமேல் அவரைப்போல் எனக்கு யார் உதவப் போகிறார்கள்?’ என்றார் அவர்.

‘ம் என்ன செய்யலாம்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! என்று உலக வழக்கத்தை யொட்டி உதட்டைப் பிதுக்கிவிட்டு, நான் மேலே நடையைக் கட்டினேன்.

அரங்க நாதனின் வீடு நெருங்கிற்று. முன்னிருந்தகளை இப்போது அந்த வீட்டிற்கு இல்லை; பட்டப் பகலிலேயே இருளடைந்து கிடந்தது. உள்ளே நுழைந்தேன். கலகலப்பே யில்லை; வெறிச்சென்றிருந்தது. அவருடைய மூத்த குமாரனான விநாயகம் மட்டும் சோகமே உருவாய்க் கூடத்தில் உட்கார்ந்திருந்தான்.

என்னைக் கண்டதும் அவன் கண்களில் துளித்த நீரைக் கைக்குட்டையால் துடைத்து விட்டுக்கொண்டே, ‘வாருங்கள்’ என்றான். அவனுடைய கையை அனுதாபத்தோடு பற்றி, ‘அழாதே, விநாயகம் அவன் விருப்பம் அப்படியிருந்தால் அதற்கு நாம் என்ன செய்யலாம்?’ என்று நான் அவனுக்கு நம் வழக்கத்தை யொட்டி வானத்தைக் காட்டினேன்.

அவன் அதைப் பார்த்து விட்டு ஆளை விடாமல், “ஒரு விஷயம் கேளுங்கள்” என்னிடம் அவர் எதைச் சொன்னாலும் மற்றவர்களைப் போல் நான் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதே இல்லை. இல்லாத விதண்டாவாதமெல்லாம் செய்வேன். அவர் கொஞ்சமாவது கோபித்துக் கொள்வார் என்கிறீர்களா? மாட்டவே மாட்டார்; குலுங்க குலுங்கச் சிரித்துக் கொண்டே ‘டேய், விநாயகம் உனக்கு வாதம் செய்வதில் நல்ல திறமை யிருக்கிறது; நீ வக்கீல் வேலைக்குத்தான் படிக்க வேண்டும்’ என்பார். நானும் இப்போது படிக்கும் பிஏயை முடித்ததும் அப்படியே படிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டு அவர் போயே போய்விட்டார் என்றான்.

இந்தச் சமயத்தில் அங்கே வந்த விநாயகத்தின் பாட்டி, ‘இத்தனை நாளா எங்கேடாப்பா, போயிட்டே. அத்தனை சிநேகமாயிருந்து, கடைசியா ஒரு முறை அவன் முகத்தைப் பார்க்கக் கூட நீ கொடுத்துவைக்கலையே, உங்க வீட்டுக்கு ஆளைக்கூட அனுப்பி வைத்தோம். நீ ஊரிலேயே இல்லையாமே!…ம்…. என்னவோ, ‘அவர்’தான் என்னை அமங்கலியாக்கிட்டுப் ‘போறேன்’னு போய்விட்டாரே, இவனாவது என்னை எடுத்துப் போட்டுவிட்டுப் போவான்னு பார்த்தேன்; பாழும் தெய்வம் மோசம் பண்ணி விட்டது என்று இல்லாத தெய்வத்தின் மேல் பழியைப் போட்டுக் கொண்டே அவள் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டாள்.

தர்ம சங்கடமாகப் போய்விட்டது எனக்கு. எழுந்து நின்றேன். எதிர்த்த அறையிலிருந்து விநாயகத்தின் தாயார் என்னைக் கண்டதும்

‘கோ’வென்று கதற ஆரம்பித்து விட்டார். அவர் ஆணாயிருந்தாலும் ‘அட அது கிடக்கு விட்டுத் தள்ளப்பா இது போனால் இன்னொன்று… ‘ஜம்’ மென்று கல்யாணம் செய்து கொண்டால் போச்சு என்று ஊர் வழக்கத்தை யொட்டி உற்சாகப்படுத்தியிருப்பேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அவள் பெண்ணாயிருந்துவிட்டாரே, என்ன செய்வது? மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு ‘அழாதே, அம்மா, அழாதே மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலே இருக்க போகிறான்? என்று அந்தக் காலத்தில் வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தேன்.

‘ஐயோ, மஞ்சள் குங்குமத்தோடு போய்ச் சேரலாமென்று இருந்தேனே என்னுடைய தலையெழுத்து இப்படி ஆகிவிட்டதே? இந்தப் பாவிக்கு தலைவலி காய்ச்சல் என்றால் அவர் என்ன பாடு படுத்துவார்? அங்கேயும் இங்கேயுமாகக் குட்டி போட்ட பூனைபோல ஓடி ஓடிவருவாரே! இனிமேல் அப்படி யார் எனக்காக அலையப் போகிறார்கள்?’ என்றாள் அவள் விம்மலுக்கும் விக்கலுக்கும் இடையே.

அதைப்பார்க்கச் சகிக்காமல் நான் முகத்தைத் திருப்பினேன். ‘என்ன இருந்தாலும் அந்தப் பாழும் தெய்வம் என்னை இப்படி அனாதையாக்கி விட்டிருக்க வேண்டாம் என்னவோ, இத்தனை நாளும் என் கையைப் பிடித்தவர் என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கும்போதெல்லாம் ‘அண்ணா இருக்கிறார்’ என்று கொஞ்சம் தைரியமாயிருந்தேன். இப்போது அதுவும் போய்விட்டது’ என்றாள் விநாயகத்தின் அத்தை.

என்னால் முடிந்தவரை அந்த அம்மாவையும் ஒருவாறு தேற்றிவிட்டு வீடு திரும்பினேன்.

வழியில் என் சிந்தனை சுழன்றது. சதாசிவமோ ‘கேட்டபோதெல்லாம் இனி யார் எனக்குக் கடன் கொடுக்கப் போகிறார்கள்’ என்று வருந்துகிறார்.

விநாயகமோ, ‘வக்கீல் வேலைக்குப் படிக்க முடியாமற் போய்விட்டதே’ என்று வருந்துகிறான்.

அம்மாவோ, “என்னை எடுத்துப் போடாமல் எனக்கு முன்னால் போய் விட்டானே” என்று வருந்துகிறாள்.

மனைவியோ, ‘என்னுடைய உடம்புக்கு ஏதாவது வந்தால் இனிமேல் கவனிப்பதற்கு யாரும் இல்லையே’ என்று வருந்துகிறாள்.

தங்கையோ, ‘அண்ணா இருக்கிறார்!’ என்று இனிமேல் தைரியமாய் இருப்பதற்கில்லையே!’ என்று வருந்துகிறாள்.

எல்லாம் அவரவர்களுடைய சொந்த நலனைப் பற்றி – அவனால் தாங்கள் அடைந்த அடையவிருக்கின்ற நன்மைகளைப் பற்றி.

அப்படியானால் இவ்வுலக வாழ்வை நீத்த அந்த அரங்க நாதனைப் பற்றி….

வருந்துவார் யார்?

இந்தக் கேள்விக்கு ‘கேள்விக் குறி’க்கு உங்களில் யாராவது ‘முற்றுப் புள்ளி’ வைக்க முடியுமா?

எப்படி முடியும்? சுற்றமும் நட்பும் சூழ இருப்பதே சுயநலத்துக்காகத் தானே!

அந்த ‘சுயநல’த்தை மனிதன் செத்தாலும் விட மாட்டார்கள் போல் இருக்கிறது!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *