கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 23,539 
 

விழுப்புரத்தில் அன்று மாலை நிகழ இருந்த கூட்டத்தில் பேசுவதற்காக என் உரையை எழுதிக்கொண்டு இருந்த நேரத்தில், முத்துசாமி கைபேசியில் அவசரமாக அழைத்தான்.

”என்னடா?” என்றேன்.

”மச்சான், சீக்கிரமா வாடா. பெரியப்பா போயிட்டாரு…” என்று உடைந்து அழுதான். ஒரு கணம் எதுவும் புரியவில்லை.

”என்னடா சொல்றே?” என்று அதிர்ச்சியில் நானும் சத்தமிட்டேன்.

சுவரொட்டி”பெரியப்பா போயிட்டாருடா…” என்று மீண்டும் அழுதான். அந்த வார்த்தையைத் தவிர, வேறு எதையும் அவனால் சொல்ல முடியவில்லை. போட்டது போட்டபடி சுலோசனாவிடம் விவரத் தைச் சொல்லிவிட்டு, அவர் வீடு இருந்த ஐயனார் கோயில் தெருவுக்கு ஓடினேன்.

”பெரியப்பா… பெரியப்பா!” என்று மனம் அரற்றிக்கொண்டு இருந்தது.

ஊரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் தென்பட்ட சின்னச் சின்ன வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டி வாசகங்கள்தான் எனக்குள் இருந்த கவிஞனைத் தூண்டிவிட்டது. வீரியமான அந்த வாசகங்களை எழுதியவர் ஓர் ஆலைத் தொழிலாளி. ‘சுவரொட்டி’ சொக்கலிங்கம் என்று அவருக்குப் பெயர். ஊரில் எல்லாரும் அவரைச் செல்லமாக பெரியப்பா என்றுதான் அழைப்பார்கள்.

தெருமுக்கு திரும்பியதுமே அந்தக் காட்சி கண்ணில் அறைந்தது. வடக்குத் திசையைப் பார்த்த மாதிரி போட்டிருந்த பெஞ்சில் சொக்க லிங்கம் பெரியப்பாவின் உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த துணி காற்றில் படபடத்தது. அது பறந்துவிடாதபடி அவர் கால் அருகில் இருந்த மாலையை இழுத்துவிட்டான் முத்துசாமி. அந்த பெஞ்சில் உட்கார்ந்துதான் பெரியப்பா செய்தித்தாள் படிப்பார்… வண்ணங்கள் குழைப்பார்… சுவரொட்டி கள் எழுதுவார்… சாப்பிடுவார்… பேசுவார்… தூங்கு வார். கடைசியில், அவர் மரணமும் அந்தப் பெஞ்சிலேயே நிகழ்ந்துவிட்டது. அசைவற்று இருந்த அவருடைய உடலைப் பார்க்கப் பார்க்க என் உடல் நடுங்கிச் சிலிர்த்தது.

அவர் மரணத்தை நம்ப மறுத்தது மனம். நேற்று இரவு நெடுநேரம் வரைக்கும் அரசியல் பேசிய பிறகு, ”சரி… போய்ப் படுக்கற வேலையைப் பாருங்கப்பா. நான்தான் ஒத்தக்கட்ட. கேப்பாரும் கெடையாது… மேய்ப்பாரும் கெடையாது. நீங்கள்லாம் அப்படியா? என்னைக்காச்சும் ஒருநாள் ஒங்க பொண்டாட்டிங்க வந்து இங்க வந்து நின்னு கண்ண கசக்கறாப்புல வெச்சிக்கக் கூடாது…” என்று சிரிப்பும் கேலியுமாகச் சொல்லி வழிஅனுப்பிவைத்தவர், காலையில் இந்த உலகத்திலேயே இல்லாமல் போய்விட்டார்.

ஆறுமுகம், ஏழுமலை, சின்னத்தம்பி, தணிகாசலம் எல்லோரும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தார்கள். அழுகையையும் அதிர்ச்சியையும் தடுக்கவே முடியவில்லை.

சுவரொட்டி2” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு… ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு…” கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டான் முத்துசாமி.

பெரியப்பாவுக்குக் குடும்பம் இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்னாலேயே குடும்பம் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டது. அரசியல்வாதிகளின் நியாயமற்ற நடவடிக்கைகளைக் கிண்டல் செய்தும் கேள்விக்கு உட்படுத்தி யும் அவர் எழுதிய சுவரொட்டி வாக்கியங் கள்… காவல் நிலையம், சிறைச்சாலை, நீதி மன்றம் போன்றவற்றின் படி ஏறவைத்ததை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் விரும்பியபடி சகித்துக்கொண்டு வாழும் வாழ்க்கையை, அவரால் வாழ முடியவில்லை. தினமும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வந்து விசாரிப்பதும், முகம் தெரியாத ஆட்கள் எல்லோரும் மிரட்டிவிட்டுச் செல்வதும், அவர்களுக்கு அவமானமாக இருந்தது. பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், கண் மறைவான ஊருக்கு அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள்.

பெரியப்பாவின் அடக்கத்துக்கான வேலைகளை நாங்களாகவே எடுத்துக்கட்டிச் செய்யத் தொடங்கினோம். வெயில் ஏறுவதற்கு முன்னால் துணிக் கூரைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆறுமுகமும் ஏழுமலையும் அந்த வேலைக்காகப் போனார்கள்.

”எங்க தெருவுல சந்தனப்பொட்டுக்காரர்னு ஒருத்தர் இருக்காருடா. இந்த வேலையில பெரிய எக்ஸ்பர்ட். எல்லாத்தையும் ஒரே ஆளா நின்னு பாத்துக்குவாரு. அவரைப் புடிச்சிரலாம். அதான் நமக்கு வசதி…”- தணிகாசலம் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொண்டோம். இரண்டு சக்கர வாகனத்தில் சென்று அவனே அவரை அழைத்து வந்தான்.

”நாளைக்குக் காலைல சாம்பல் வாங்கற வரைக்கும் என் பொறுப்பு. எதுக்கும் கவலைப் படாதீங்க…” என்றார் அவர். அவர் நெருங்கிவந்து பேசும்போது வெற்றிலை வாசம் வீசியது. வங்கியில் இருந்து பணம் எடுத்துவந்து, அவரிடம் தந்தான் முத்துசாமி. மின் தகனம், மாலைகள், பறை, வண்டி. பூ அலங்காரம், பாடை எல்லாவற்றையும் அவர் பம்பரமாகச் சுழன்று கவனித்தார். கண்ணீர் அஞ்சலி வாசகத்தை எழுதிக்கொடுக்கும்படி என்னைக் கேட்டான் முத்துசாமி. எழுதிக் கொடுத்ததும் அதை எடுத்துக்கொண்டு அவனும் சின்னத் தம்பியும் அச்சகத்துக்குப் போனார்கள்.

”நம்ம போக்குல எடுத்துகட்டிச் செய்யுறோமே… அவரு குடும்பத்துக்குச் சொல்ல வேணாமா?” தணிகாசலம் தயங்கித் தயங்கிக் கேட்டான்.

”எந்த ஊரு, எந்த எடம்னு எதுவும் தெரியாம எப்பிடிடா அவங்களுக்குச் சொல்லி அனுப்பறது?” என்று பதில் சொன்னாலும்கூட, அளவுக்கு மீறிச் செய்கிறோமோ என்று எனக்கும் ஒரு கணம் தோன்றத்தான் செய்தது.

சில கணங்கள் பேச்சில்லை. தெருவில் இருப்பவர்கள் ஒன்றிரண்டு பேர்களாக வந்து பார்த்துவிட்டு, மதில் ஓரமாக ஒதுங்கி நின்று சிறிது நேரம் தமக்குள் பேசிக்கொண்டார்கள். பெரிய கூட்டமே திரண்டு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. வெயில் உச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.

மாலை போட்டு வணங்கிவிட்டு மௌனமாக சில கணங்கள் நின்றார் ஒரு பெரியவர். அப்புறம் அவராகவே, ”நாங்கள்லாம் அந்தக் காலத்துல சுதேசி மில்லுல ஒண்ணா வேலை பாத்தவங்க. எண்பத்தொண்ணுல ஸ்டிரைக் வந்து ஆலைய மூடற வரைக்கும் ஒண்ணாதான் இருந்தோம். அவர் எழுதற தட்டிய, ஆலை ஜனங்கள் எல்லாம் சினிமா பாக்கறாப்புல அப்போ கூடி நின்னு பார்க்கும்…” என்று சொல்லிக்கொண்டார்.

சுவரொட்டி3நேரம் கடக்கக் கடக்க… எந்த எண்ணமும் புரளாதபடி மனம் உறைந்துவிட்டதாகத் தோன்றியது. பாடையின் மீது மலர் அலங்காரம் செய்யத் தோதாக மூங்கில் பட்டைகளை அறுத்துக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அருகில் சின்னச் சின்ன நாய்க் குட்டிகள் சுருண்டு படுத்து இருப்பதைப் போல சணல் உருண்டைகள் கிடந்தன. அவற்றையட்டி பத்துப் பன்னிரண்டு பூக்குடைகள். டயர் வண்டியை இழுத்து வந்தவர்கள் ஓரமாக நிறுத்திவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து பீடி பற்றவைத்தார்கள். தேநீர் வாங்கிவந்து எல்லோருக்கும் கொடுத்தார் ஒருவர்.

தயிர்க் கூடையோடு தெரு முனையில் திரும்பிய ஒரு அம்மா, குடிசையின் முன் இருந்த சூழ்நிலையைப் பார்த்து, அப்படியே உறைந்து நிற்பதைப் பார்த்தேன். அருகில் இருந்த வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் அந்த அம்மா விசாரிப்பது தெரிந்தது. பிறகு, புடைவை முந்தானையால் வாய் பொத்தி, சிறிது நேரம் அங்கு இருந்தபடியே பார்த்தார். அப்புறம் தயிர்க் கூடையோடு பெரியப்பாவின் அருகில் வந்து நின்றாள். கண் கலங்கி தன் கூடையில் இருந்து சுவர் ஓரமாகக் கவிழ்த்துவைக்கப்பட்டு இருந்த செம்பு நிறைய மோரை ஊற்றிவைத்துவிட்டு, கை குவித்து வணங்கிய பின் நகர்ந்து சென்றாள்.

மனம் பொங்கியபடி இருந்தது. ”என்கூட இருப்பதையே அவமானமா நெனச்சு என் குடும்பம் என்னைவிட்டுப் போயிருச்சு. சாப்பாட்டுக்காகத்தானே குடும்பத்தை நாம அண்டிக்கெடக்கணும். சரி, அந்தச் சாப்பாடே வேண்டாம்னு முடிவெடுத்து, விட்டுட்டேன். வெளையாட்டா… இதோ இருபது வருஷம் பறந்துபோச்சு. வெறும் மோர், டீ, காப்பி, தண்ணி, பழங்கள்னு பழகிட்டேன். இன்னைக்கு வரைக்கும் நம்ம வண்டி சிக்கல் இல்லாம ஓடுது…” ஒருமுறை பெரியப்பா சொன்ன வார்த்தைகள் நினை வில் படர்ந்தன. அது கடற்கரை முழுதும் பாலிதீன் பைகள் குப்பையாக இறைக்கப்படு வதைக் கண்டித்து, உடல் முழுக்க ஆடையில் சின்னச் சின்ன சுவரொட்டிகளை குண்டூசிகளால் குத்திக்கொண்டு காந்தி சிலையில் இருந்து டியூப்ளே சிலை வரைக்கும் மாறி மாறி அவர் நடந்த நாள்.

‘பாலிதீன் பைகள் – மரணத்தின் வலைகள்’, ‘பாலிதீன் கழிவு – உலகுக்கே அழிவு’, ‘மட்காத குப்பை பாலிதீன்… மண்ணுக்குக் கேடு பாலிதீன்’ ‘அமுதம் என்று நஞ்சை எடுக்காதே… சுலபம் என்று பாலிதீன் பை கொடுக்காதே…’ அவர் உடல் முழுதும் அந்த வாசகங்கள். முதல் இரண்டு நாட்கள் அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும் கேலிப் பொருளாக நினைத்துச் சிரித்துக் கிண்டல் செய்தார்கள். மூன்றாவது நாள் அவரை எதிர்கொண்டவர்கள் அசாதாரணமான அமைதியோடு கடந்துபோனார்கள். நான்காவது நாள், அது பத்திரிகையில் பெட்டிச் செய்தியாக வந்தது. ஐந்தாவது நாள், கடற்கரையோர விற்பனையாளர்கள் அவரைக் கரையோரம் நடக்க அனுமதிக்கவில்லை. அடித்து விரட்டினார்கள். அதுவும் செய்தியானது. அடுத்த நாள் அவர் அடிபடும்போது தற்செயலாகப் பார்த்துவிட்ட கல்லூரி மாணவர்கள் குறுக்கிட்டுத் தடுத்தார்கள். அந்த வார இறுதியில் கடற்கரையில் யாரும் எதையும் பாலிதீன் பைகளில் விற்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்றோர் உத்தரவை அரசு பிறப்பித்தது.

”சரியா வந்துருக்கா பாருடா…” வண்டியைப் பூவரச மரத்தோரம் நிறுத்திவிட்டு வந்த முத்துசாமி, சுவரொட்டியைப் பிரித்துக் காட்டினான்.

தளும்பிய கண்ணீர்த் துளிகளை விரலால் வழித்து உதறியபடி ”சரியா இருக்குடா. ஒட்டுறதுக்கு சரியான ஆளைப் புடிச்சி அனுப்பிவெச்சுடு…” என்றேன். இடைவிடாத பறையலியின் முழக்கத்தில்… அடிவயிறு அதிரத் தொடங்கியது.

”சடங்கு சாங்கித்தியம் ஏதாச்சும் செய்யணுங்களா தம்பி..?”- சந்தனப்பொட்டுக்காரர் வந்து கேட்டார்.

”அதெல்லாம் வேணாம்…” என்றேன்.

”அப்ப… கொள்ளி?” என்று உடனே அடுத்த கேள்வியைக் கேட்டார்.

கொஞ்சம்கூட யோசிக்காமல், ”நானே வைக் கிறேன்…” என்று சொன்னேன்.

என் பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. மௌனமாகச் சில கணங்கள் என்னையே பார்த்தார். பிறகு ”சரி, புது வேட்டி வாங்கியாறேன்… கௌம்பும்போது அதைக் கட்டிக்கணும்…” என்று சொல்லிவிட்டு, பறை முழங்கிக்கொண்டு இருந்த கம்பத்தை நோக்கி நடந்தார். பறையைக் காய்ச்சுவதற்காகக் குவித்து எரிக்கப்பட்ட எருமுட்டை புகைந்துகொண்டு இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பேச்சோடு பேச்சாக, ”இவ்ளோ அழகா வாசகங்கள் எழுதறீங்களே… நீங்க ஏன் கவிதை பக்கம் போகலை?” என்று கேட்டபோது, மர்மமான ஒரு புன்னகை அவர் உதடுகளில் நெளிந்தது.

”என் நாட்டம் கவிதை கிடையாது. சமூக விழிப்பு உணர்வுதான் நம்ம உலகம்…” என்று மெதுவாகச் சொன்னார். அவர் காதோர நரைமுடி வெள்ளிக் கம்பிகளாகப் பறந்துகொண்டு இருந்தன. வெளுத்த புருவம். உருண்ட விழிகள். அழுத்தமான மூக்கு. ”ஆனா… நீ எழுதணும். உனக்குக் கவிதை வருது. சீக்கிரமா நீ ஒரு தொகுப்புப் போடு. அதுக்கு நான் முன்னுரை எழுதறேன்…” என்று சொல்லிவிட்டு அவர் சிரித்தது, இன்னமும் என் ஞாபக அலமாரி யில் இருக்கிறது.

20 வயதில் சுதேசி மில்லில் வேலைக்காகச் சேர்ந்தார் அவர். தொழிற்சங்கத்துக்காக வகை வகையான சொல் அடுக்குகளோடு, அவர் உருவாக் கிய சுவரொட்டி வாசகங்கள் அவர் மீது மற்றவர் களின் கவனம் குவியக் காரணமாக இருந்தன. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் எல்லாவற்றிலும் அவருடைய சுவரொட்டிகள் முக்கியத் துவம் பெற்றன. கவித்துவம் நிரம்பிய சொற்சேர்க்கைகளை அவர் மனம் தன்னிச்சையாக உருவாக்கின.

பொய்க் காரணம் காட்டி ஒரு தொழிலாளி வேலையைவிட்டு நீக்கப் பட்டதையட்டி நிகழ்ந்த போராட் டத்தின்போது… ஆலை வாசலில் திரும்பிய பக்கம் எல்லாம் வண்ண வண்ண மைகளில் அவருடைய வாசகங்களைத் தாங்கிய தட்டிகள் வைக்கப்பட்டு இருந்ததைச் சொல்லிவிட்டு, பழைய நினைவுகளில் சிறிது நேரம் மூழ்குவது பெரியப்பாவின் வழக்கம். ‘நிர்வாகத்தின் தந்திரத்தால் நீதி தேவதை கண்ணிழந்தாள்’, ‘வேலையைப் பறித்தது நிர்வாகம்… நேர்மை இழந்தது பரிதாபம்’, ‘பொய்மையில் வெற்றி முளைக்காது… போலியின் நாடகம் நிலைக்காது’ கண் மூடிய கோலத்தில் அந்தப் பழைய வாசகங்களை அவர் மனப்பாடமாகச் சொல்லும்போது ஆச்சர்யத்துடன் கேட்டபடி பல சமயங்களில் உறைந்து நின்றிருக்கிறேன். அந்தப் போராட்டம்தான் ஆலையில் அவர் முக்கியப் புள்ளியாக மாறியதற்கு வழி வகுத்த திருப்புமுனை. அந்தப் போராட்டத்தின் காரணமாக வேலையைத் திரும்பப் பெற்ற இளைஞன், சில மாதங்களுக்குப் பிறகு நிர்வாகத்தின் கையாளாக மாறி, அவருக்கு எதிராகச் சாட்சி சொல்லி, வழக்குகளைச் சந்தித்து மீண்டதைப் போல பல கதைகளை எவ்விதமான புகார் தொனியும் இல்லாமல் சொல்வது அவருக்கு மட்டுமே சாத்தியமான குணம்.

ஆலைக்கு வெளியே பொதுவாழ்விலும் தன் சுவரொட்டி வேலையை அவர் தொடங்கியபோது, கடுமையான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது. சாலையோர மதுக்கடையை அகற்றுவதை ஒட்டி அவர் எழுதி ஒட்டிய சுவரொட்டிகள், தொடக்கப் பள்ளி எதிரில் வாகனப் போக்குவரத்து ஒழுங்கை வலியுறுத்தி எழுதப்பட்ட சுவரொட்டிகள்… எல்லாமே நியாயத்தின் குரலாக அமைந்தவை. இறால் பண்ணையை எதிர்த்து, நிறுத்தாமல் போகிற பேருந்துகளைக் கண்டித்து, புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை எதிர்த்து, பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான நிலத்தை வளைத்து மதில் எழுப்பிக்கொண்ட அரசியல் வாதியை அம்பலப்படுத்தி… என அவர் எழுதிய சுவரொட்டிகள் ஆயிரத் துக்கும் மேல் இருக்கும். இரவும் பகலுமாக ஒரு பக்க வெள்ளைத் தாள்களில் எழுது வார். மை உலரும் வகையில் வாசலில் அடுக்கி வெயில்படும்படி வைப்பார். பிறகு, வாளியில் பசையோடு தெருத் தெருவாக நடந்து அவரே சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு வருவார். ஒட்டுவதை யாராவது தடுத்தால், அட்டைகளில் ஒட்டி மரக் கிளைகளில் தொங்க விடுவார். விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையங்களுக்கு அவர் அழைக்கப்படுவதும் அடிபடுவதும் வாடிக்கையான விஷயங்களாகிவிட்டன.

பெரியப்பாவின் முகத்தில் வந்து உட்கார்ந்த ஈக்களை விரட்ட நெருங்கிச் சென்றபோது… காதோரமாக கன்னத்தில் ஒட்டிக்கொண்ட அட்டையைப் போலத் தெரிந்த கரிய தையல் தழும்பின் மீது பார்வை பதிந்தது. ஸ்டேஷனில் ஒருமுறை இடுப்பு நிக்கரோடு நிற்கவைத்து இன்ஸ்பெக்டர் அறைந்ததில் தடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தபோது, அருகில் இருந்த அலமாரி கைப்பிடியில் மோதிக் கிழிபட்டதில் உருவான காயம். இன்னும் மார்பில், முதுகில், தொடையில், தோளில் பல தழும்புகள்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு கசப்பான பின்னணி இருந்தது. பற்றற்ற குரலில் அவர் சொன்னதுஎல்லாம் நினைவில் பொங்கி அலைமோதின. ”இந்த நாட்டுல கெட்ட வார்த்தைங்கள பேசறதுல ஒரு போட்டிவெச்சா… போலீஸ்காரங்களுக்குதான் மொதல் மெடல் கெடைக்கும்…” என்று விரக்தியான சிரிப்போடு பெரியப்பா சொன்ன வார்த்தைகள் காதருகில் மீண்டும் ஒலிப்பதுபோல இருந்தன.

ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்தி அவர் எழுதி ஒட்டிய சுவரொட்டிகளால் சமீப காலமாக அதிகாரத் தரப்பின் எதிர்ப்புகளும் ஆத்திரமும் ஒட்டுமொத்தமாக அவர் மீது குவிந்தன. ஆனால், அவரை யாருமே பொருட்படுத்தவில்லை. வழக்கமாக ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி நடைபெறும் விசாரணைகூட நடை பெறவில்லை. பத்து நாட்கள் கழித்து, ஏரிக்கரைப் பக்கம் வாக்கிங் போனவரை அறிமுகம் இல்லாத ஆட்கள் அடித்துத் தள்ளிவிட்டுப் போய்விட்டார் கள். பெரியப்பா மயங்கிக்கிடந்த தகவலை, அந்தப் பக்கமாக ஆடு ஏற்றிக்கொண்டு சைக்கிளில் போன சாயபு ஒருவர் சொன்ன பிறகுதான் ஊர்க்காரர்களுக்குத் தெரியவந்தது. ஒரு மாதத் துக்கும் மேல் மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவம் பார்த்த பிறகுதான் பிழைத்துவந்தார். நடமாடும் நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் பிடித்தன.

”ஒரு ஆளைக் கூடவா அடையாளம் தெரியலை? நல்லா யோசிச்சிச் சொல்லுங்க பெரியப்பா…” என்று பல முறை விசாரித்துவிட்டோம். அவரிடம் இருந்து ஒரு வார்த்தைகூடப் பதிலாகக் கிடைக்கவில்லை.

”எடுத்துரலாமா?”

சந்தனப்பொட்டுக்காரர் நெருங்கிவந்து அடங்கிய குரலில் கேட்டார். குடிசையின் பக்கவாட்டுச் சுவரையட்டியபடி சாக்குத் திரை மறைவில் இரண்டு குடங்களில் தண்ணீர் இருந்தது. ஒரு பானைத் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டேன். தலையைத் துவட்டிக் கொள்ள முத்துசாமி துண்டைக் கொண்டுவந்து கொடுத்தான். கட்டிக்கொள்ள புது வேட்டியைக் கொடுத்தார் சந்தனபொட்டுக்காரர்.

நாங்கள் ஆறு பேர். தெருக்காரர்கள் ஆறு பேர். அவ்வளவுதான் கூட்டம். மனபாரத்தால் எங்களால் அழக்கூட முடியவில்லை. பெஞ்சில் இருந்த அவரை ஒரு சிலையைப் போலத் தூக்கி வந்து, பூ அலங்காரத்துக்கு நடுவில் இருந்த பாடையில் கிடத்தி, பூப்பல்லக்கைத் தூக்கி வண்டி மீது வைத்தோம். கயிற்று உறியில் வைக்கப்பட்ட கொள்ளிச்சட்டியைக் கொண்டுவந்து என் கையில் கொடுத்துவிட்டுச் சென்ற£ர் சந்தனப்பொட்டுக்காரர். பறையலி அதிர்ந்தது. வண்டி நகர்ந்தது. வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள் மக்கள்.

பத்து வருஷங்களுக்கு முன்னால் என் கவிதையைப் பாராட்டி அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் திடீரெனத் துல்லியமாக நினைவில் மோதின. அன்று முதல் ஒவ்வொரு கவிதைக்கும் என்னை அவர் பாராட்டிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகள்… அந்த உணர்ச்சிகள்… அருவிபோல நினைவுகளில் பொங்கி வழிந்தபடி இருந்தன.

தகன மையத்தில் இறக்கிவைத்ததும் இரும்புத் தண்டுகளால் இணைக்கப்பட்ட மின் பலகைக்குப் பெரியப்பாவின் உடலை மாற்றிவைத்தார்கள். பதிவு வேலை களை வேகவேகமாக முடித்துவிட்டு ரசீது வாங்கிவந்தான் முத்துசாமி. சம்பிரதாயமாக கொள்ளிச் சட்டியைப் பெரியப்பாவின் கால் அருகில் வைத்துவிட்டு, சுற்றி வரச் சொன்னார் சந்தனப்பொட்டுக்காரர். மூன்று சுற்று முடிந்ததும் காலைத் தொட்டு வணங்கச் சொன்னார். பிறகு மாலைகள் அகற்றப்பட்டன.

”கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க…”

நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மின்னல் வேகத்தில் அந்த முகத்தைத் துணியால் மூடிவிட்டு சந்தனப்பொட்டுக்காரர் விலகிக்கொள்ள, அருகில் நின்றிருந்த மின் மயானப் பணியாளர் தண்டவாள அமைப்பின் மீது பலகையைப் பொருத்தி, விசையை அழுத்தினார். சத்தத்தோடு உயர்ந்த உலைக் கதவின் இடைவெளிக்குள் பலகை முன் நகர்ந்து, பெரியப்பாவின் உடலைக் கிடத்திவிட்டு, போன வேகத்தில் வெளியே வந்ததும் உலைக்கதவு மூடிக்கொண்டது. வெறுமையான பலகையைக் கண்டதும் இதயம் உச்சவேகத்தில் துடித்தது. ஆறுமுகமும் ஏழுமலையும் சத்தம் போட்டு அழுதார்கள்.

”காலயில வந்து ரசீதக் காட்டி சாம்பல வாங்கிக்கலாம்…”

பணியாளர் சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து எல்லோரையும் அனுப்பிவிட்டுத் திரும்பினான் முத்துசாமி. வெளியே வந்து தகன மையத்தின் மதிலையட்டி இருந்த அரச மரத்தடியில் காணப்பட்ட சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்ததும், அவன் வெடித்து அழ ஆரம்பித்தான். சில நிமிடங்கள் பைத்தியம் பிடித்துக் குழம்பிவிட்டது போல மனம் மரத்துப்போயிருந்தது. ”காலையில ஆறு மணிக்குலாம் நான் வந்து சாம்பல வாங்கிவைக்கிறேன். ஏதாச்சும் வண்டியோட வந்தீங்கன்னா, திருக்காஞ்சிக்குப் போய் கரைச்சுட்டு வந்துரலாம்…” என்று சொல்லிவிட்டுப் போனார் சந்தனப்பொட்டுக்காரர்.

பெரியப்பாவை நினைத்தபோது பொங்கிய வருத்தத்துக்கு அளவே இல்லை. அவருடைய உண்மையான மரணம் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே நிகழ்ந்துவிட்டது. இன்று நிகழ்ந்தது வெறும் உடல் மரணம்தான். அப்படி ஓர் எண்ணம் ஓடியபோது உடலே நடுங்கியது. ஆங்கிலப் பள்ளி வாகனங்கள் சாலையில் வரிசையாகக் கடந்து செல்வது தெரிந்தது. வெயிலின் கடுமை வெகுவாகக் குறைந்திருந்தது. வீட்டை நோக்கி மௌனமாக நடக்கத் தொடங்கினோம்.

ஒரு சின்ன தரைப் பாலம். தேர்தல் சின்னம் எழுதப்பட்டு இருந்த அந்தச் சுவரில் எங்கள் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி தெரிந்தது. அடுத்தடுத்து திரைப்படச் சுவரொட்டிகள். சுவர் விளிம்பில் சின்னதாக மூன்று சுவரொட்டிகள் தெரிந்தன. சுய உணர்வே இல்லாமல் நடந்துகொண்டு இருந்த என் தோளை அழுத்தி அவற்றைப் பார்க்கும்படி கண்ணாலேயே சொன்னான் ஆறுமுகம். அந்த வாசகங்களைப் பார்த்ததுமே என் மனம் பொங்கியது. ‘ஆற்று மணலை அள்ளாதே… இயற்கை அன்னையைக் கொல்லாதே’, ‘திரண்ட மணல் எமது செல்வமடா… அதைத் திருட நினைப்பது பாவமடா’, ‘அன்னமிட்ட வீட்டில் கன்னம் வைக்காதே… ஆற்று மணலை அள்ளத் திட்டமிடாதே’. ஒவ்வொரு எழுத்திலும் பெரியப்பாவின் முகம் நிறைந்து இருப்பதைப் போலவே தோன்றியது.

”கொலகாரப் பசங்களுக்கு அந்த தெய்வம்தான் கூலி குடுக்கணும்டா…”- வெடிப்பதுபோலச் சொன்னான் ஏழுமலை.

அவனை அமைதிப்படுத்தும் விதமாக அவன் கையைப் பற்றி அழுத்தியபடி நடையைத் தொடரத் தூண்டினேன். எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடியாதபடி வேதனையில் கொந்தளித்தபடியே இருந்தது மனம். அடுப்பில் வைத்த கூழ்ப் பானையைப் போல. நடக்க நடக்கத்தான் அது அடங்கும் என்று தோன்றியது.

வழி நெடுக, தரைப் பாலங்கள், வீட்டுச் சுவர்கள், வாகனங்கள், மரங்கள், குப்பைத் தொட்டிகள் என விட்டுவிட்டு கண்ணில்பட்ட இடங்களில் எல்லாம் தெரிந்த சுவரொட்டிகளில் பெரியப்பாவின் முகம் தோன்றியபடி இருந்தது, பிரகாசமாக!

– மார்ச் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *