கோயில் விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 4,877 
 

(இதற்கு முந்தைய ‘சொட்டைப் பூனை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

அக்கா பூனை பால் குடிப்பதைப் பார்த்து தம்பியும் பால் குடிக்கலாயிற்று. மதியமாவது அம்மா பூனை வந்துவிடும் என்று பார்த்தால் வரவேயில்லை. போனது போனதுதான். அதுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அப்புறம் வரவேயில்லை. குட்டிகள் பசியெடுத்தால் நேராக சமையலறை வாசலுக்கு வந்து கத்தத் தொடங்கிவிடும்.

அன்று முதல் காலை தூங்கி எழுந்தவுடன், மதியம் ஒன்று முப்பது, இரவு எட்டு முப்பதுக்கு குட்டிகள் ‘டாண்’ என்று தவறாமல் ஆஜராகிவிடும். பாலை குடித்துவிட்டு தொட்டிகளில் விளையாடிக்கொண்டு, தூக்கம் வந்தால் தூங்கிக்கொண்டு என்று தாமாகவே வாழ அதுகள் பழகிக்கொண்டன. நான் அதுகளிடம் “ஏண்டா பசங்களா, உங்க அம்மா எங்கடா? உங்க அம்மாவும் ‘மானத்து ஆஸ்பத்திரி’க்குப் போயிட்டாளா?” என்று கேட்பேன்.

குட்டிகள் கொஞ்சம் பெரிதானபின் பால் சாதம் போட ஆரம்பித்தோம். பால் சாதத்தைப் பிசைந்து தட்டில் போடுவதற்குள், மேங் மேங் என்று கத்தித் தீர்த்துவிடும். சாப்பாட்டு நேரத்தில் பிரிட்ஜைத் திறந்தால் உடனே அவைகளுக்குத் தெரிந்துவிடும். அவைகளுக்கு வெண்கலக் குரல் வேறு. ஒரு கச்சேரியே பண்ணிவிடும். சிலசமயம் அவைகள் இப்படி ராகமாகக் கத்தும்போது என் அக்காவும் சேர்ந்துகொண்டு, “சா..பா…சா என்று சுருதி சுத்தமாக கத்துங்கடா..” என்று சங்கீதம் சொல்லித்தர முயற்சி செய்வாள். உடனே என் அக்காவின் கணவர் “போதும் போதும் அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க உன்னை கிறுக்கு என்று நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்” என்பார்.

இந்த இரண்டு பூனைக்குட்டிகளையும் பார்க்கும்போது எனக்கு நானும் என் அக்காவும் கல்லிடைக்குறிச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த நாட்கள் ஞாபகத்தில் வரும். தாத்தா விடிகாலையிலேயே எழுந்து எங்களுக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் செய்துவிட்டு நாங்கள் தூங்கி எழுந்தவுடன் காபி கொடுக்கும்வரை இருப்பார். பிறகு பெருமாள் கோயிலுக்கு கிளம்பிச் சென்று விடுவார். நாங்களோ குளித்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூல் போவோம். மாலையிலும் நாங்கள் ஸ்கூல் விட்டு வரும்வரை தாத்தா வீட்டில் இருந்து காபி கொடுத்துவிட்டு மறுபடியும் பெருமாள் கோயிலுக்குப் போய்விடுவார். நாங்கள் இருட்டும் வரை சன்னதித் தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவோம். இருட்டியவுடன் மற்ற வீட்டுப் பிள்ளைகளை அவர்களின் அம்மாக்கள் விளையாடியது போதும் என்று அழைத்துப் போய்விடுவார்கள். எனக்கும், அக்காவுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்கப் பயமாக இருக்கும் என்பதால் நாங்கள் தாத்தாவைத் தேடி கோயிலுக்குப் போய்விடுவோம்.

கோயிலுக்குப் போய் அங்குள்ள தூண்களில் செதுக்கி இருக்கும் ஏதேனும் சிலைக்கு அபிஷேகம் செய்வது, அர்ச்சனை செய்வது என்று ‘கோயில் விளையாட்டு’ விளையாடிக் கொண்டிருப்போம். பசிக்கும்போது மட்டும் தாத்தாவிடம் போய்ச் சொல்லுவோம். அவர் ஏற்கனவே எங்களுக்காக தயிர்சாதம் கொண்டு வந்திருப்பார். அதைச் சாப்பிட்டுவிட்டு பிரகாரத்தில் படுத்துத் தூங்கி விடுவோம். கோயிலைப் பூட்டும்போது தாத்தாவும், அங்கேயே வேலை செய்யும் ஒருவரும் எங்களைத் தூக்கிக் கொண்டுவந்து வீட்டில் படுக்க வைப்பார்கள். தற்போது பெருமாள் கோயில் பிரகாரம் சிமென்ட் நடை பாதையாக மாறி இருக்கிறது.

எங்களை வளர்க்க தாத்தா இருந்ததுபோல, இந்தப் பூனைக் குட்டிகளுக்கு பகவான் எங்களை அனுப்பி வைத்தாற்போலும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

மேலும் சில மாதங்கள் போயின. குட்டிகள் இன்னும் கொஞ்சம் பெரிதாக வளர்ந்து விட்டபடியால் காம்பவுண்டு சுவரின் மீது தானே ஏறவும் இறங்கவும் தெரிந்துகொண்டு அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு ‘விஸிட்’ செய்யத் தொடங்கின. அங்கே யாராவது அசைவம் சமைத்தால், கத்தி கத்தி அவர்களைத் தொந்திரவு செய்து வாங்கிச் சாப்பிடவும், பக்கத்தில் உள்ள ஒரு காலி மனையில் ஓணான் போன்றவற்றை பிடித்துத் தின்னவும் முயற்சித்துக் கொண்டிருந்தன. அதுவும் இந்த பூனைகளுக்கு ‘மீன்கள்’ என்றால் கொள்ளை ஆசை. மீன் வாசனைக்கு சொக்கிப் போய்விடும்.

அதுகூட ‘தேன்நிலா’தான் ஓணான் பிடிக்கும். அதன் ஆரஞ்சு தம்பிக் குட்டிக்கு ஒரு பூச்சியைக் கூட பிடிக்கத் தெரியாது. ஏதாவது பூச்சியோ, கரப்பானோ சுவரில் போய்க் கொண்டிருந்தால்கூட அது பரப்பிரும்மாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும். ‘தேன்நிலா’ ஓணானைப் பிடித்துத் தொட்டி மறைவில் வைத்துச் சாப்பிடுவதை தூரத்தில் உட்கார்ந்தபடியே வேடிக்கை பார்க்கும். சில சமயங்களில் ‘அக்கா’ போனால் போகிறதென்று ஓணானின் கால் பகுதியின் குட்டியூண்டு துண்டை விட்டுவிட்டுப் போகும். ஆரஞ்சு அதைத் தின்றுவிட்டே ஒருநாள் முழுவதும் தூங்கித் தூங்கி வழியும்,

இப்படியே குட்டிகள் நாளொரு விளையாட்டும் பொழுதொரு தூக்கமுமாக வளர்ந்து கொண்டிருக்கையில் தீபாவளி வந்தது. தீபாவளியன்று எங்கே போய் என்னத்தைத் தின்று தொலைத்ததுகளோ தெரியவில்லை, வீட்டைச் சுற்றியும் வீட்டின் பிரதான வாசலிலும், மாடிப்படிகளிலும் என்று எங்கே பார்த்தாலும் வாந்தி எடுப்பதும், பேதியாகியும் ஒரே அசிங்கமாகப் பண்ணி வைத்திருந்தன. நாற்றம் குடலைப் புரட்டியது. இதில் மழைவேறு நச நசவென்று பெய்து தன் பங்கிற்கு நாற்றத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது.

மாடியில் குடியிருப்பவர்களிடமிருந்து ஒரே புகார். ஏற்கனவே சில நாட்களாக குட்டிகள் காலை வேளைகளில் பால்காரர் மாடிவீட்டு வாசலில் வைத்துவிட்டுப் போகும் பால் பாக்கெட்டை ஓட்டை போட்டு பாலைக் குடித்து விடுவதாக புகார்வேறு சொல்லியிருந்தார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் இப்படி அசிங்கம் பண்ணியிருப்பதைப் பார்த்து கடுப்பாகி, “பூனைக் குட்டிகளை உங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து வளருங்கள்… இப்படி வெளியே விடாதீர்கள்” என்றார்கள்.

“நாங்கள் எங்கே பூனைகளை வளர்க்கிறோம்? வீட்டில் இவ்வளவு லவ்பேர்ட்ஸ்களை வைத்துக்கொண்டு யாராவது பூனைகளை வளர்ப்பார்களா? ஏதோ அதுகளின் அம்மா அனாதையாக இவைகளை இங்கே விட்டுவிட்டுப் போயிடுத்தே என்று பாவம் பார்த்து கொஞ்சம் பால் ஊத்தறோம்… அவ்வளவுதான்.”

“அப்படியானால் இனிமே பாலோ, சாப்பாடோ கொடுக்காதீங்க. ரெண்டு மூணு நாள் லங்கணம் போட்டா அதுகளாகவே வேறு எங்காவது போயிடும்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

இவ்வளவு அமளிக்கும் காரணமான குட்டிகள் எங்கே என்று பார்த்தால், மழைக்குப் பயந்துகொண்டும், உடம்பு சரியில்லாமலும் மாடிப்படி வளைவின் ஒரு மூலையில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பயந்துபோய் படுத்தக் கிடக்கின்றன. அதிலும் ஆரஞ்சுக் குட்டியின் நிலைமை மோசமாக இருந்தது. வேலைக்காரி வந்ததும் எல்லா அசிங்கங்களையும் பினாயில் ஊற்றிக் கழுவித் தள்ளிவிட்டோம். குட்டிகள் அந்தச் சமயத்தில்கூட எழுந்து ஓட முயற்சி செய்யவில்லை. பார்க்க பாவமாக இருந்தது. மாடிப்பக்கம் எச்சரிக்கையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, கொஞ்சம் பாலை ஒரு தட்டில் ஊற்றி தட்டை அவைகளின் பக்கம் தள்ளி வைத்தோம். ம்ஹூம்… குடிக்கவேயில்லை. என் அக்கா ஒரு இங்க் பில்லர் மூலமாக பாலை புகட்ட முயன்றாள். அப்படியும் பாலைக் குடிக்காததோடு ரொம்பவும் பயந்து இன்னும் சுவற்றுடன் ஒடுங்கிக் கொண்டன. தீபாவளிப் பட்டாஸு சத்தம்வேறு காதைப் பிளந்தது.

ஒரு நிமிஷம்கூட சும்மாயிராமல் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குட்டிகள் இரண்டும், தலையைத் தூக்கிப் பார்க்கக்கூட சக்தியற்று துவண்டுபோய் கிடப்பது மிகவும் வேதனையாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *