எதிர்பாராதது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 11,219 
 
 

தேவகிக்கு மூக்கின் மேல் வந்த கோபம் முகமெல்லாம் சிவப்பாக்கியது. ‘சே! எவ்வளவு நட்பாக பழகிய தோழி…? இப்படி சித்ரா உள்ளுக்குள்ளேயே இருந்து குழி தோண்டி விட்டாளே! எனக்கு கிடைக்க வேண்டிய வேலை உயர்வு (புரமோசன்) எப்படி அவள் கௌசல்யாவிற்கு கொடுத்தாள். நேரடி விவாதத்தில் எனக்குத் தானே அதிக அதிக மதிப்பெண்கள் என்று சொன்னாள்’.

முகத்தின் கோபத்தை மறைக்க தண்ணீரை முகத்தில் அறைந்து கழுவிவிட்டு கையிலிருந்த கைக்குட்டையால் அழுந்த துடைத்துக்கொண்டு கழிவறையிலிருந்து தன் இருக்கைக்கு வந்தாள்.

”உதவி மேலாளர் – கௌசல்யா” என அறிவிப்பு பலகையில் போட்டிருந்தனர். ’ஹு..க்கும்’ என தலையை உதறிக் கொண்டு அரைநாள் விடுமுறை எடுப்பதற்கு எழுதிக்கொடுத்துவிட்டு பையைத் தூக்கிக் கொண்டாள்.

தன் அறையிலிருந்து வெளிவந்த சித்ரா “என்ன தேவகி! ஏன் அரைநாள் விடுமுறை? ஏதாவது தலைவலியா? அப்படி என்ன இருந்தாலும் விடுமுறை எடுக்க மாட்டாயே!… வீட்டிலே ஏதாவது நிகழ்வுகள்… அதுவும் என்னிடம் சொல்லாமல் எடுக்க மட்டாயே! என்னாச்சு….?” என்று கேட்டாள்.

”ம்..மேடம் கொஞ்சம் அவசர வேலை இருக்கு”

என்னிடம் சொல்லக்கூடாத அவசர வேலை என்னம்மா?” சித்ரா கனிவோடு கேட்டாள்.

”எல்லாம் கண்டிப்பாக சொல்ல வேண்டுமோ” என்று கத்தினாள் தேவகி.

தேவகி நீ இப்படி கத்தி நான் பார்த்ததேயில்லை. என்னாச்சு!” கையைப் பிடித்தாள் சித்ரா.

”இனியும் என்னாகணும். வர்றேன்” விறுட்டென்று கைகளை உருவிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.

ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டு “எங்கே இருக்கீங்க.. என்னது… வீட்டுக்கு கொஞ்சம் அவரசமா வர்றீங்களா?” எனக் கணவனை கை பேசியில்

அழைத்துவிட்டு பழக்க தோசமாக எதிர்முனையில் பதிலை கூட எதிர் பார்க்காமல் அணைத்து விட்டு வந்திறங்கினாள்.

அவள் வீட்டிற்குள் நுழையும் முன் மகன் ஆர்யா பள்ளிச் சீறுடையில் அப்பாவின் இருச்சக்கர வாகனத்திலிருந்து இறங்கி “அம்மா நான் தான் முதல் மதிப்பெண். என் வகுப்பில் எனக்கு கோப்பை கொடுத்தார்கள் என்று ஓடி வந்தான்.

உன் கோப்பையை கொண்டு உடைப்பில் போடு” என்று அவனைத் தள்ளி விட்டுக் கதவை திறந்தாள்.

”என்ன தேவகி? ஆர்யா எவ்வளவு ஆர்வமா ஓடிவந்தான்” என்றான் சீனு, தேவகியின் கணவன்.

”ஆமா! இங்கே என் வேலை உயர்வே போச்சு. இனி என்ன வேண்டும்?”

”என்ன சொல்றே?” என்றான் சீனு சற்று அதிர்ச்சியுடன்

“இந்த வருடம் கலந்துரையாடலிலே எங்கள் அலுவலகத்திலே நான்தான் அதிக மதிப்பெண் வாங்கியிருந்தேன். அப்படியிருந்தும் எனக்கு உதவி மேலாளர் பதவி தராமல்… அந்தச் சித்ரா… தான் நிர்வாக இயக்குனர் என்கிற அகம்பாவத்தில் அப்படியே ஜால்ரா அடிக்கிற கௌசல்யாவிற்கு போட்டுக் கொடுத்திடா.

இந்த வருடமும் வேலை உயர்வு (புரமோசன்) போச்சு. மாடு மாதிரி உழைச்சதுக்கு எனக்கு வேணும்”. அவன் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

”அப்பா… அம்மா ஏன் அழுகிறாங்க” என்றான் புத்தக பையை மேசையில் வைத்த ஆர்யா.

”அது ஒன்றுமில்லை… உனக்கு பசிக்குதா?” என்று மகன் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டான். சீனு.

“அம்மா கொடுத்த டிபனை சாப்பிட்டேன்.. நான் ராஜனோடு கொஞ்சம் விளையாடுகிறேனே” என் சீறுடையைக் கூட கழற்றாமல் வெளியே ஓடினான் ஆர்யா.

“சித்ரா.. உனக்கு தோழி மாதிரி என்று சொன்னாயே தேவகி…?” உடைமாற்றிக்கொண்டு படுத்திருந்த தேவகியின் தலையை நீவி விட்டுக்கொண்டே கேட்டான் சீனு.

”வெளிவேசம்.. சும்மா தோழி மாதிரி இருந்துட்டு சொந்தக்காரி கௌசல்யாவிற்கு உதவி மேலாளர் பதவியை கொடுத்துவிட்டாள். ஏங்க நான் இனியும் அங்க வேலைக்கு போகணுமா? இனியும் என்னால் அங்கே ஒழுங்கா வேலை செய்யமுடிமாண்ணு தெரியல….”

“நீ என்ன முடிவெடுத்தாலும் சரி.. எனக்கு பசிக்கிறது… உனக்கு எப்படி எதிர்லே உள்ள கடையிலே பிசா வாங்காவா! உனக்கு ரொம்ப பிடிக்குமே!” என்றான் சீனு.

”சரி அப்படியே சாயங்காலத்துக்கும் நீங்களே ஏதாவது செய்யுங்க.. நான் சாப்பிட்டுவிட்டுத் தூங்குறேன்” கோபத்தில் கத்திவிட்டுத் திரும்பவும் படுத்துக்கொண்டாள்.


மறுநாள் எல்லோரும் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே பிந்திவந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் தேவகி.

இயக்குனர் சித்ராவின் பணியாள் வந்து “உங்களை சித்ரா அம்மா கூப்பிடுகிறார்கள்” என்றான்.

”வர்றேன் போய்ச் சொல்லு” என்று பையில் வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு வந்த தேனீரை அருந்தினாள். வேண்டுமென்றே சித்ராவின் அறைக்குப் போகாமல் நேரத்தை வீணடித்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தாள்.

திரும்பவும் பணியாள் அருகில் வர, அறையைத் திறந்துகொண்டு வெளியே வந்த சித்ரா “தேவகி கொஞ்சம் வருகிறாயா?” என்று அழைத்தாள்.

“மேடம், நான் உங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவள். கொஞ்சம் மரியாதை கொடுத்து கூப்பிடுங்கள்” என்று வேகமாகக் கூற, அனைவரின் கண்களும் அவளைத் திரும்பி பார்க்க “சரி மேடம், கொஞ்சம் என் அறைக்கு வருகிறீர்களா?” என சித்ரா அழைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

பின் தொடர்ந்து உள்ளே வந்த தேவகியிடம் “என்னாச்சு.. தேவகி. நாம் பத்து வருடமாக பழகுகிறோம். திடீரென்று… எனக்குப் புரியவில்லை? என்ன பிரச்சனை?” என்றாள் சித்ரா.

“இனியும் என்ன ஆகணும் சித்ரா? உதவி மேலாளர் பதவி எனக்குத்தான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் உன் உறவுக்காரி கௌசல்யாவிற்கு போட்டு கொடுத்து விட்டாய்! சரி பரவாயில்லை. நான் வெறும் தோழிதானே…?” என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த கவரை கொடுக்க எத்தனித்த போது…

”ஓ! போ! இதுக்குத்தானா இந்த ஆர்ப்பாட்டம்? தேவகி உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தபடி நம் பொது மேலாளர் வெளிநாடு செல்கிறார். அவர் இடத்தில் உன்னை ”பொது மேலாளர்” ஆக்கியிருக்கிறேன்” என்று அருகிலிருந்த பெயர் பலகையை தூக்கிக்காட்டினாள் அதில் ”மிஸஸ். தேவகி சீனிவாசன் – பொது மேலாளர்” என எழுதியிருந்தது.

”ஆமாம் கையிலே என்ன கவர்?” என்று சித்ரா கேட்க, “அது ஒன்றுமில்லை” என்று கிழித்து கூடையில் போட்டுவிட்டு ”மிக்க நன்றி சித்ரா” என கூறிவிட்டு தேவகி அமைதியாக வெளியேறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *