அன்று வீடு அமர்க்களப்பட்டது . திவ்யா நாணமும், புன்சிரிப்புமாய் அமர்ந்திருக்க, தங்கை நித்யா அவளை கிண்டலடித்து சிவக்க வைத்துக்கொண்டிருந்தாள்.
‘அக்கா, நீ இன்னைக்கு ரொம்ப சூப்பரா இருக்க…… டாலடிக்கிற போ’
‘ச்சீ போடி’ என சிணுங்கினாள் திவ்யா. திவ்யாவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள். தாய் புவனா சமயலறையில் கேசரியும், பச்சியுமாய் ஜமாய்க்க, தந்தை சேகரோ பரபரப்பாய் இங்குமங்கும் வீட்டை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார்.
‘சின்ன குட்டி வாடாமா… அப்பாக்கு உதவி பண்ணுடா செல்லம்’ என நித்யாவை அழைத்தார். சேகருக்கு இரண்டுமே பெண்குழந்தைகள் என்று வருத்தம் இல்லை. சொல்லப்போனால் அவருடைய இரண்டு பெண்களும் அவர் தம் கண்மணிகளே.
‘என்னப்பா நீங்க’ என்று சிணுங்கிய போதும் தந்தையுடன் சேர்ந்து வேலை செய்தால் நித்யா.
மாப்பிள்ளை சேகர் தன் உறவினர் புடை சூழ வந்தான். திவ்யாவின் பெற்றோர் இருவரும் பரபரப்பும், புன்னகையுமாய் வரவேற்றனர்.
சிறிது நேரம் உபசரிப்பிலும், உரையாடலிலும் கழிய, சேகர் தன் மனைவியையும், இரு பெண்களையும் அறிமுகம் செய்து வைத்தார். திவ்யாவையும், நித்யாவையும் மாற்றி மாற்றி பார்த்த சேகர் தன் தாயின் காதில் எதோ கிசுகிசுத்தான். அவளும் வாயெல்லாம் பல்லாக,
‘உங்க ரெண்டாவது பொண்ணு முதல் பொண்ண விட கலரா இருக்கு. என் பையனுக்கு உங்க ரெண்டாவது பொண்ணு நித்யாவ தான் புடிச்சிருக்காம்…’ என இழுத்தாள்.
சட்டென அதிர்ந்தது திவ்யாவின் குடும்பம். ‘அக்கா…’என விசும்பிய நித்யா கண்களில் நீருடன் உள்ளே ஓடி விட்டாள். திவ்யாவின் முகத்தில் சலனமில்லை. கோபமாய் பேச வாய் திறந்த சேகர், திவ்யாவின் பார்வையில் நிறுத்தினார். புன்னகையை உதட்டுக்கு கொண்டு வந்த திவ்யா,
‘சந்தோசம் ஆன்டி ‘ என்று கூறி அனைவரையும் அதிர வைத்தாள்.
‘நீங்க, உங்க பையன் ரெண்டு பேருமே வெளிப்படையா பேசறீங்க. அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’
‘ஆமாம், ஆமாம்….’என தலையை உருட்டிய தாயையும், மகனையும் வெறுப்புடன் பார்த்தார் சேகர்.
‘உங்க பையன் பக்கத்துல உட்கர்ந்திருக்கரே, அவர் யார் ஆன்டி?’
‘அது ராஜேஷ், சேகரோட நண்பன்’ என்றவள் இதை நீ ஏன் கேட்கிறாய் என்ற கேள்வியுடன் திவ்யாவை பார்த்தாள். திவ்யவோ, சற்றும் அயராமல் அதே புன்சிரிப்புடன்,
‘உங்க பையனை விட அவர் பெர்சனாலிட்டியாய் இருக்கார்’ என்றதும் தான் தாமதம் வெடித்து எழுந்தான் சேகர்.
‘என்ன? என்னை அவமான படுத்திறியா?’ எகிறி குதித்தவனை நிதானமாய் பார்த்தவள்,
‘அப்போ முதல்ல நீங்க என்னை அவமான படுத்தினதை ஒத்துக்கொள்கிறீர்களா?’
கூர்மையான கேள்வி தாக்க அதிர்ந்தவன் பதில் ஒன்றும் கூற முடியாது வெளியேற, அவன் பின்னே அவனது உறவினர் கூட்டம் சென்றது.
‘நல்லா பொண்ண வளர்த்திருக்காங்க…..’ திட்டியவாறு வந்த கூட்டம் கலைந்து சென்றது. சென்றவர்களை வெறித்த திவ்யா தந்தையிடம் திரும்பினாள்,
‘அப்பா நான் செஞ்சது தப்பாப்பா?’
‘இல்லடா கண்ணா…. நீ செஞ்சது தான் சரி’ என்று மகளை தோளோடு சாய்த்து கொண்டார். கண்கலங்கிய புவனாவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. ஓடி வந்த தங்கை நிதயாவும், திவ்யாவை கட்டிகொண்டாள்.
ஒரு வாரம் விரைந்தோடி சென்றது………..
அன்று ஞாயிற்று கிழமை… அனைவரும் டிவி முன் அமர்ந்திருந்தனர். காலிங் பெல் சத்தம் கேட்டு, கதவை திறந்தார் சேகர்.
‘சார், நான் ராஜேஷ், இவங்க என்னோட பெற்றோர்.’
குழப்பத்துடன் வரவேற்று உபசரித்தனர் சேகர்-புவனா தம்பதியர்.
‘நாங்க உங்க பொண்ணு திவ்யாவ பெண் கேட்டு வந்திருக்கோம்’ என ராஜேஷின் பெற்றோர் அறிவிக்க, இனிதாய் அதிர்ந்தனர்.
‘அதுக்கு முன்னாடி நான் திவ்யா கிட்ட தனியா பேசணும்’ என்றான் ராஜேஷ்.
தனி அறையில் அவர்களை அனுப்பி விட்டு டென்சனுடன் இருந்தனர் குடும்பத்தினர்.
‘திவ்யா, அன்று என் நண்பன் செய்தது மிக பெரிய பிழை. அது உன்னை எவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு என்னால புருஞ்சுக்க முடியுது’ என்றவனை விழி விரிய நோக்கினாள் திவ்யா.
அவன் முகத்தில் தெரிந்த பாவம் அவள் மேல் உள்ள கரிசனத்தை சொன்னது. அது அவள் மனதை மென்மையாய் வருடியது.
‘கொஞ்சம் கூட கலங்காம பதிலடி கொடுத்தீங்களே, உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.’ என்ற போது அவன் முகம் புன்சிரிப்பில் மலர, திவ்யாவின் முகமும் பூவாய் மலர்ந்தது. கனிவும் , காதலுமாய் நோக்கிய ராஜேஷ் சட்டென முகம் வாடி,
‘ஆனால், ஒன்னு தான் மனசுக்கு கஷ்டமா போச்சு’ என்றான். சட்டென மூண்ட கவலையுடன் கேள்வியாய் அவள் நோக்க,
‘அவனை மூக்குடைக்கத்தானே, அவனை விட நான் பெர்சனாலிட்டினு பொய் சொன்னீங்க?’ குறும்பாய் கேட்டு சிரித்தவனை இமை கொட்டாமல் பார்த்த திவ்யா,
‘ ஆமாம்’ எனவும் அவன் அதிர்ந்தான்.
‘தோற்றம் மட்டும் இல்லை….. அவரை விட எல்லா விதத்திலும் நீங்க உயர்வுதான்’ என அவள் முடிக்க, அவன் வாய் விட்டு சிரித்தான்.அவளும் அவனுடன் இணைந்து கலகலவென சேர்ந்து சிரிக்க, வரவேற்பறையில் டென்சனாய் அமர்ந்திருந்த அனைவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
இனி எல்லாம் சுகமே!
நன்றாக இருக்கிறது. திவ்யாவுக்கு ஜே!