அன்பிற்காகத்தான் அப்பா…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 8,857 
 

வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும் செல்லும் போதும் ஒரு புத்துணர்ச்சியும், புதுவேகமும் என்னுள் ஏற்படும். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து கல்வியோடு வறுமையையும் கலந்து படித்து நான் அடைந்த உச்ச நிலை அது. சாதாரண ஏழை எளிய மக்களின் குறைகள் தீர்த்து வைப்பதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் பணி அது. இந்த அரசுப் பணிக்குத் தேர்வாகி வந்த பின்பு அரசு தரும் சம்பளத்தைத் தவிர வேறு எந்த வருவாயையும் தொட்டறியாத கைகளுக்கும் சொந்தக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் நான் ஒரு தற்பெருமைக் காரன். கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றும் மனைவி வசந்தி. எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரே மகள் ஆர்த்தி, சொந்தக் கிராமங்களில் வசிக்கும் என்னுடைய பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் தான் சொல்லிக் கொள்ளும் அளவிற்கான சுற்றங்கள். ஏறத்தாழ மாதம் ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டு நிற்கும் என் குடும்பத்தின் வருமானம். அலுவலக வேலைகளிலேயே அதிக நேரம் மூழ்கி விடும் வாழ்க்கையாகிப் போனதால் அந்தப் பணத்தைக்கூட ஒரு மாதத்திற்குள் கணக்கிட்டுச் செலவு செய்ய முடியாமல் சேமிப்பாகவே எஞ்சி நிற்கும். இப்போது சொல்லுங்கள் நான் தற்பெருமைக்காரனாக வாழ்வதில் தப்பில்லை தானே?

அன்பிற்காகத்தான் அப்பா

பத்து பைசா கொடுத்து பள்ளியின் வாசலில் விற்கும் குச்சி மிட்டாயை வாங்கிச் சுவைக்க முடியாத வறுமையோடு பள்ளியின் வாசலில் பரிதவிப்போடு தொடங்கிய வாழ்க்கை உறுதியும், உழைப்பும் இருந்தால் காலச்சக்கரம் ஒருநாள் உச்சத்தில் ஏற்றி வைக்கும் என்பதற்கான சான்றாக என்னை நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்தேன்.

“”சார் உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் வந்திருக்கு” பியூன் கவரோடு உள்ளே வந்தான்.

“”பி.ஏவை வாங்கச் சொல்லலாமில்லே?”

“”சார் பெயர் போட்டிருக்கு. அதனாலேதான்”.

“” சரி கொண்டா”.

கையெழுத்துப் போட்டு வாங்கிப் பார்த்தேன். என் மகள் படிக்கும் நாமக்கல் பள்ளி முகவரியோடு வந்திருந்தது. என் மகள்தான் அனுப்பியிருந்தாள். கவரைப் பிரித்தேன்.. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே என் பெயருக்கு ஓர் இரண்டாயிரம் ரூபாய் டி.டி. யோடு ஏழெட்டு பக்க நீண்ட கடிதத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை

“”சார். பலாங்குறிச்சி கிராமத்தில் கோயிலில் சாமி கும்பிடுவது சம்பந்தமான பிரச்னைக்குரிய இரண்டு தரப்பும் வந்திருக்காங்க சார்”

பி.ஏ. வந்து சொன்னார்.

“”அவங்களை உள்ளே வரச் சொல்லுப்பா” என்றேன். மகளின் கடிதத்தை மடித்து என்னுடைய சூட்கேஸில் வைத்துக் கொண்டேன். சாமி கும்பிடுகிற

பிரச்னை, நிலப் பிரச்னை என்று அடுத்தடுத்த அலுவலகப் பணிகள் தொடர்ந்து வர, ஒருவழியாக இரவுப் பொழுதும் வர வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இரவு படுக்கைக்குப் போகும்முன் ஆர்த்தி நினைவுக்கு வர அவள் அனுப்பிய கடிதமும் நினவுக்கு வந்தது. சூட்கேûஸத் திறந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தேன்.

அன்பு நிறைந்த என்னுடைய அப்பாவிற்கு ஆர்த்தி எழுதும் கடிதம்.

அம்மா மற்றும் உங்கள் நினைவுகளோடு இங்கு நான் நலமாக இருக்கிறேன். நான் எழுதிய இந்தக் கடிதத்தை உடனே படிக்க நேரம் இருந்ததா? இல்லை என்னுடைய கடிதம் உங்களின் கைகளில் அகப்படும்போது படிக்கிறீர்களா? என்பது எனக்குத் தெரியாது

இப்போது எனக்கு வயது 13. மூன்று வயதிலிருந்து இன்று வரை பத்து ஆண்டுகள் ஊட்டியிலும், சென்னையிலும் இப்போது நாமக்கல்லிலும் ஹாஸ்டலிலேயே வாழ்ந்திருக்கிறேன். வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவையைப்போல அவ்வப்போது விடுமுறை காலங்களில் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறேன். அந்த நாட்களில் நீங்களும் உங்களின் வேலைகளுக்கிடையில் சுற்றுலாப் பயணியைப் போல எப்போதாவது வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து விட்டு போயிருக்கிறீர்கள்.

கடைசியாக வந்தபோது அம்மாவிடம் கேட்டேன். “”நான் பிறந்த அன்று அப்பா உன்னுடன் இருந்தார்களா அம்மா என்று” அப்போது கூட நீங்கள் அருகில் இல்லையாம். ஏதோ சாதிக் கலவரம் என்று சொல்லி விட்டுப் போன நீங்கள் மூன்று நாட்கள் கழித்துத்தான் என்னை முதன்முதலாகப் பார்த்தீர்களாம். எனக்கு விவரம் தெரியாத மூன்று ஆண்டுகள் மட்டும் நான் உங்களோடும், அம்மாவோடும் இருந்திருக்கின்றேன். மூன்று வயதில் என்னை ஊட்டியில் கான்வெண்டில் சேர்த்துவிட்டீர்கள். உங்கள் கையைப் பிடித்துக்கொண்டும், அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டும் அழுது கொண்டே போக மறுத்து ஓடிவந்தேன். என் கையை உதறி சிஸ்டரிடம் கொடுத்துவிட்டு வந்தீர்கள். இன்று வரை உங்கள் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு சுதந்திரமாக ஜாலியாக சுற்றி வர நினைக்கிறேன் முடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நீங்களும் அம்மாவும் என்னைத் தேடி ஹாஸ்டலுக்கு வந்துதான் பிறந்தநாள் கொண்டாடிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

சென்ற வாரம் ஓர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எங்களை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு யாராவது தினமும் மதிய உணவு நன்கொடையாகத் தருவார்களாம். அப்படி நான்கொடையாக உணவுகொடுப்பவர்கள் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு போவார்களாம். அவர்கள் அம்மாவும், அப்பாவும் இல்லாதவர்களாம். அதை எங்களுக்குச் சொன்னார்கள்.

அவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பொறாமையாக இருந்தது. அவர்களுக்கு அம்மா அப்பா இல்லையென்றாலும் தினமும் ஏதாவது ஓர் அம்மா, அப்பா உணவு கொடுக்க அவர்களோடு உட்கார்ந்து சாப்பிடும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதே, அதை நினைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டேன்.

இப்போது நீங்கள் என்னைச் சேர்த்து விட்டிருக்கின்ற நாமக்கல் பள்ளியில் என்னைப் போன்றவர்களுக்கு வெளி உலகம் என்ற ஒன்று இருப்பது தெரியாமலேயே இருக்கிறது. எந்த நேரமும் புத்தகம், நோட்டு படிப்புத்தான்.

ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் இருக்கும் மகிழ்ச்சி ஹாஸ்டலுக்கு திரும்பும்போது இருப்பது இல்லை. இப்போதும் எனக்கு ஆசை நிறைய இருக்கிறது. வீட்டில் நீங்கள், அம்மா நான் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். இரவு படுக்கும் போது அம்மாவுக்கும், உங்களுக்கும் நான் நடுவில் படுத்துக் கொண்டு உங்கள் இருவர் மீது கைகளை போட்டுக் கொண்டு தூங்க வேண்டும். காலையில் அம்மா என்னை எழுப்பி படிக்கச் சொல்ல வேண்டும். அம்மாவின் கைவிரல்கள் என் உடம்பில் பட்டு அவர்கள் தேய்த்து விட ஆசை தீர குளிக்க வேண்டும். அம்மா என் தலைசீவி, எனக்கு ஊட்டி விட வேண்டும். ரோட்டோரத்தில் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். எதிரே வரும் கார், பஸ் ஆட்களை பார்த்து கையை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டும் இப்படியெல்லாம் இருக்க எனக்கு ஆசை அப்பா. வீட்டிற்கு வந்து இருக்கும் காலங்களில் கூட கடைக்குப் போனால் சப்கலெக்டர் மகள் என்று பார்க்கிறவர்களும், கடைக்காரர்களும் தனிமைப்படுத்தி மரியாதை கொடுக்கிறார்கள்.

“”பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து என்னை ஏன் இப்படி படிக்க வைக்கிறீங்க..?” என்று உங்களிடம் கேட்டபோதெல்லாம், “”நீ நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்னு சொல்றீங்க? படிக்கிறது நான் தானே அப்பா? எந்த பள்ளியில் சேர்த்துவிட்டாலும் நான் நல்லா படிப்பேன்பா. அதை மட்டும் ஏன் என்னிடம் கேட்கவில்லை. நான் எங்கே படிக்கணும்னு ஏம்பா நீங்க முடிவு செஞ்சீங்க? அதை விவரம் தெரிஞ்ச வயது வந்த பிறகாவது என்னிடம் கேட்டிருக்கலாமே? ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கற்றுக்கொள்ள முடிந்தது. காய்ச்சல், தலைவலி வந்தால் பிறரின் உதவியில்லாமல் தனிமையில் எனக்கு நானே இருந்துகொள்ள பழகிக்கொண்டேன்.

என்னை மாதிரி ஷூ போட்டு, டை கட்டி ஹாஸ்டலில் பணம் கட்டி தங்கி படிச்சா நீங்க இன்னைக்கு பெரிய ஆபீஸராக ஆகியிருக்கீங்க? உள்ளூர் அரசாங்க பள்ளிக்கு நடந்து போய் படிச்சுத்தானே நீங்க பெரிய அதிகாரியாக ஆகியிருக்கீங்க? அதுமாதிரி ஏன் நான் ஆகக்கூடாது? அரசாங்க அதிகாரி பதவிங்கிறது மக்களுக்கு சேவை செய்யுற பதவிதானே அப்பா. மக்கள் எல்லோரும் பழகுகிற இடத்தில் இருந்து நானும் பழகிக் கொண்டால்தானே நாளைக்கு நான் கலெக்டர் ஆகி மக்களுக்கு சேவை செய்ய முடியும்? மக்களோட பிரச்சனை என்னன்னு எனக்குத் தெரியும்.

என்னோட படிக்கிற என்னுடைய பிரெண்ட்ஸ் யாரும் ஏழைகள் கிடையாது. கஷ்டம்னா என்னன்னு தெரியாமல் வளருகிறோம். பாசம்.. உறவுகள் இதுமட்டும் தான் நாங்க நினைத்துப் பார்த்தாலும் எங்களுக்குக் கிடைப்பதில்லை.

வீட்டிற்கு விடுமுறைக்கு வரும்போது கூட நீங்க என் கூட நேரம் செலவழிப்பதில்லை. வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கீங்க. அப்பா நான் ஒரு கண்டிஷன் போட்டேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? எப்பொழுதெல்லாம் என்னை நீங்க மிஸ் பண்றீங்களோ, அப்போதெல்லாம் எனக்கு நீங்க ஐம்பது ரூபாய் ஃபைன் கட்டணும்னு சொன்னேன். அதையும் நீங்க வருத்தப்படாமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்கள். ஐம்பது ரூபாயை கொடுத்தால் சமாதானம் ஆகிவிடுவேன்னு நினைத்து அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு நீங்கள் ஐம்பது ரூபாய் கொடுக்கும்போது என் மனதின் வேதனை என்னன்னு உங்களுக்கு தெரியுமா அப்பா?

இந்த கடிதத்தோடு உங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு டி.டி. அனுப்பியிருக்கிறேன். அதுகூட என் அப்பாவிற்கு பணம் அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை என்று சொல்லி என்னுடைய கிளாஸ் டீச்சரிடம் பணமாகக் கொடுத்தேன் அவர்கள்தான் எனக்கு இந்த டி.டியை எடுத்து வந்து கொடுத்தார்கள். நீங்க அடிக்கடி கொடுத்த ஐம்பது ரூபாயை சேர்த்து வைத்துத்தான் இதை அனுப்பியிருக்கிறேன். சேமிப்பை திரும்பத் தருவதாக நீங்கள் நினைக்க வேண்டாம் அப்பா.

இந்த ஆண்டு என்னை பள்ளியில் சேர்த்து விடும்போது விண்ணப்பத்தில் உங்களுடைய மாத வருமானம் 55000 ரூபாய் என்று எழுதியிருந்தீர்கள். அதை நான் ஞாபகத்தில் வைத்து கணக்கிட்டு பார்த்தேன். உங்களின் ஒருநாள் சம்பளம் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் வந்தது. அதற்காகத்தான் உங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளேன் அப்பா. உங்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் என்னோடு ஒருநாள் முழுமையாக இருபத்தி நான்கு மணி நேரம் என்னை விட்டுப் போகாமல் அப்பாவாக இருக்கவேண்டும். செய்வீர்களா அப்பா? இந்த மகளின் வேண்டுகோள் அப்பா. ப்ளீஸ் மறுத்து விடாதீர்கள் அப்பா.

எதிர்பார்ப்புகளோடு மகள், ஆர்த்தி.

ஆர்த்தி என்று படித்து முடிக்கும் போது அந்த எழுத்துக்கள் என் கண்ணீருக்குள் கலங்கலாகத் தெரிந்தன

ஓர் ஆண்டு உருண்டோடியபின் ஒருநாள், “”ஐயா உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். பாப்பாவை நான் அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு வருகின்றேன்” என்று சொன்ன டிரைவரைப் பார்த்தேன்..

“”இது என்னுடைய வேலை. இதிலே யாரும் குறுக்கிடுவதை விரும்பவில்லை. ஆர்த்தி நீ ஏறும்மா. பள்ளிக்கு நேரமாச்சு” என்று காரின் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தேன் நான், உள்ளூர் அரசு பள்ளியில் மகளை விட்டு வருவதற்காக.

– குன்றக்குடி சிங்கார வடிவேல் (செப்டம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *