அவன் வழி தனி வழி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 18,457 
 

“வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவர் அந்த ஊர் வி.ஐ.பீ.. கோயில் டிரஸ்ட்டீ.

மதுராங்கத்துக்கு பக்கத்தில் உள்ள, அந்த ஊரின் பெருமாள் கோயில், ரொம்ப பிரசித்தம். விசா வெங்கடேச பெருமாளுன்னு, அந்த கோவில் மூலவருக்கு அடைமொழி வேறே. வேலை தேடி வெளிநாடு போக ஆசைப் படுவோர், அந்த கோவிலுக்கு வந்து பதினோரு தடவை பிரகாரத்தை சுற்றினால், விசா கிடைத்து விடும் என்பது நம்பிக்கை. அதனால், வசதி வேண்டுவோர், வசதி பெற்றோர், வசதியுள்ள பெற்றோர் கூட்டம் எப்போதும் அலைமோதும் கோவில்.

கோவிலுக்கு நல்ல சொத்து, நிறைய வருமானம். அந்த கோயிலின் அத்தனை கணக்குகளும் இந்த வங்கியில். சுமார் இரண்டு கோடிக்கு மேல் எப்போதும் கணக்கில் இருந்து கொண்டிருக்கும். அதைத்தவிற, வைப்பு நிதியில் ஒரு பத்து கோடி. அப்படியிருக்க , மேனேஜரின் தடபுடல் வரவேற்புக்கு கேட்பானேன்?

காலை 11.00 மணியிருக்கும். வங்கி கிளையில் கூட்டம் நிரம்பி இருந்தது. பரபரப்பான நேரம். வாடிக்கையாளர் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

பசையுள்ள வாடிக்கையாளர்களை சுற்றி ஒரு சில கடை நிலை சிப்பந்திகள், கும்மி அடித்துக் கொண்டிருந்தனர்.

***

கோவில் டிரஸ்ட்டீ, மேனேஜர் அறையில் நுழைந்த படியே, “ என்ன சார்! சௌக்கியமா? எப்படி போயிட்டிருக்கு உங்க பிசினஸ்?”

“சௌக்கியம் சார்! உங்க புண்ணியத்தில் நல்லாவே இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடறீங்க? – மேனேஜர் ஜொள்ளினார்.

“எதுவும் வேண்டாம் சார், அவசரமாக போகணும். ஒரு சின்ன வேலை! கண்ணன் இருக்காரில்லே?”. வினவினார் கோவில் டிரஸ்ட்டீ.

மேனேஜர் பியுனை அழைத்து “ மணி, கண்ணன் வந்திருக்காரா, பாரு. சீட்டிலேருந்தால், உடனே எனது அறைக்கு வரச்சொல்” பணித்தார்.

ஒரு ஐந்து நிமிட நேரத்துக்குள், கண்ணன் மேனேஜர் அறையில் நுழைந்தான்.

கண்ணன், அந்த வங்கியில் 7 வருட அனுபவமுள்ள குமாஸ்தா. வெள்ளை பாண்ட், வெள்ளை ஷர்ட், நெற்றியில் மெல்லிதாக ஸ்ரீசூரணம், நல்ல உயரம், சிரித்த முகம்.

அவனுக்கு கிட்டத்தட்ட 30 வயது. கழுத்தில் மைனர் செயின், கையில் தங்க மோதிரம், மெல்லியதாக ஒரு பிரேஸ்லெட். பார்த்தாலே, வசதியான குடும்ப பையன் என்பது தெரிந்தது. .

டிரஸ்ட்டீ கண்ணனைப் பார்த்து முறுவலித்தார். அவருக்கு கண்ணன் மேல் ஒரு கண். தனது இரண்டாம் பெண்ணுக்கு சம்பந்தம் பேச விசாரித்துக் கொண்டிருந்தார்.

கண்ணன் அவரைப் பார்த்து “ வாங்க சார்! ஏது இவ்வளவு தூரம்? சொல்லியிருந்தால், நானே வந்திருப்பேனே?” என்றான்.

“ஒண்ணுமில்லே கண்ணா! கோவில் தணிக்கைக்காக, ஆடிட்டர்கள் வந்திருக்காங்க! அவசரமாக அக்கௌன்ட் ஸ்டேட்மெண்ட் வேணும். இந்த 10 லட்சம் ரூபாயை கோவில் அக்கௌண்டில் போடணும். அப்புறம், கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய்க்கு செக்குகளும் டிரப்ட்களும் இருக்கு. இதையும் அக்கௌண்டில் வரவு வைக்கணும்”- டிரஸ்ட்டீ.

“அவ்வளவுதானே சார், நான் இப்பவே அக்கௌன்ட் ஸ்டேட்மெண்ட் எடுத்துக்கொண்டு வரேன். பணம், செக்குகளை கொடுங்க, செல்லான் போட்டு உங்க அக்கௌன்ட்லே ஏத்திடறேன், நீங்க சாரோட பெசிண்டிருங்க” சிரித்த முகத்தோடு வாங்கிக் கொண்டு கண்ணன், அங்கிருந்து நகர்ந்தான்.

டிரஸ்ட்டீக்கு பரம திருப்தி. “கண்ணன் மட்டுமில்லையென்றால், பேங்க் பக்கம் வரவே எனக்கு கொஞ்சம் யோசனைதான்”.

கண்ணன் பத்து நிமிடத்தில் திரும்பி வந்தான். செக்கு பணம் கட்டிய ரசீதை டிரஸ்ட்டீ கையில் கொடுத்த படியே சொன்னான், “சார், மன்னிக்கனும், ஸ்டேட்மெண்ட் சாயந்திரம்தான் கிடைக்குமாம். பிரிண்டர் மக்கர் செய்கிறதாம். ரெடி ஆனவுடன், நானே உங்கள் ஆபீசில் சேர்த்து விடுகிறேன்., பரவாயில்லையா?” வினவினான்.

“பரவாயில்லே! சாயந்திரமே கொடுங்க கண்ணன், அப்ப நான் வரட்டுமா? நேரம் கிடைக்கும்போது வீட்டுப் பக்கம் வாங்களேன்!” டிரஸ்டீ பின்னர் மேனேஜர் பக்கம் பார்த்தார். “சார், அப்புறம், இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். கோவில் கோபுர சீரமைப்பு, கும்பாபிஷேகம் சம்பந்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேலே அக்கௌன்ட் லேருந்து எடுக்கணும். டிராப்ட் வேண்டும். காஷ் வேறே வேணும். நான் ஒரு10 – 15 நாளிலே வரேன்.”

“அதனாலென்ன! வாங்க சார்!” -மேனேஜர். ஆனாலும், அவரது முகத்தில் லேசான கவலை ரேகை. முகம் கொஞ்சம் இறுக்கமானது.

அதை கவனித்த டிரஸ்ட்டீ சிரித்தார் “கவலையே படாதீங்க! ஒரு மாசத்தில் 3 கோடியாக டெபாசிட் தரேன்! உங்க பேங்க்லே கண்ணன் இருக்கிற வரைக்கும், கோவில் அக்கௌன்ட் உங்க கிட்ட தான்.”

சிறிது நேரம் கழித்து ட்ரஸ்ட்டீ விடைபெற்றார்.

* * *

பத்து நாட்களுக்குப் பிறகு.

அன்று வழக்கம் போல் கிளை பிசியாக இருந்த நேரம். மணி அப்படி இப்படி 12.00 இருக்கும். டிரஸ்ட்டீ வங்கிக்குள் நுழைந்தார்.

“கண்ணன் எங்கே?” என்று கேட்டுக்கொண்டே, கண்ணனின் கவுண்டருக்கு சென்றார்.
கண்ணன் இரண்டு நாட்களாக லீவென்று தெரிந்தவுடன், நேராக மேனேஜர் அறைக்குள் சென்றார்.

“வாங்க சார்” எழுந்து வரவேற்றார் மேனேஜர்.

“மேனேஜர் சார், அவசரமாக எனக்கு நாற்பது லட்சத்திற்கு டிராப்ட் தேவைப்படுகிறது. ஒரு15 லட்சத்திற்கு பணமாக வேண்டும். கண்ணன் இல்லை போலிருக்கு, எனக்கு கொஞ்சம் அவசரம். கொஞ்சம் சீக்கிரம் ஆனால் தேவலை!” டிரஸ்ட்டீ..

“அதனாலே என்ன சார் ! நாங்க இல்லையா?”- மேனேஜர் பாங்கிங் ஹால் பக்கம் பார்த்தார்.

அக்கௌன்டன்டை இன்டர்காமில் கூப்பிட்டார். “கோவில் டிரஸ்ட்டீ வந்திருக்கிறார் , சாருக்கு கொஞ்சம் அவசரம். கோயில் அக்கௌணடிலிருந்து டிராப்ட் அப்புறம் காஷ் வேணும். செக், டிராப்ட் பாரம் அனுப்பறேன், கொஞ்சம் சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க அக்கவுண்டன்ட்”

ஒரு 10 நிமிடம் ஆயிற்று. எதுவும் வரவில்லை. டிரஸ்ட்டீ கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார். கைக்கடிகாரத்தை திரும்ப திரும்ப பார்த்தார்.

மேனேஜர் “ நானே போய்க் கொண்டுவரேன்” என்று வேகமாகசென்றார், அக்கௌன்டன்ட் மேஜை நோக்கி.

அக்கௌன்டன்ட் ஏதோ தீவிர சிந்தனையுடன், மும்முரமாக, கணினியைப் பார்த்து கொண்டிருந்தார்.

“அக்கௌன்டன்ட் சார், ஏன் இவ்வளவு லேட்? டிராப்ட் ரெடியா? டிரஸ்ட்டீ வெயிட் பண்றாரே! ”

“ரெடி சார், நீங்க போங்க, நான் காஷ் எடுத்திண்டு வந்திடறேன்.”

“சீக்கிரம்! சீக்கிரம்! – மேனேஜர் அவசரப் படுத்தினார்.

இதையெல்லாம் மேனேஜர் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் டிரஸ்ட்டீ. “ரொம்ப தேங்க்ஸ், கண்ணன் இருந்தால் இந்த கஷ்டம் உங்களுக்கு கொடுத்திருக்க மாட்டேன். கண்ணன் எப்போ வருவார்?”

“தெரியலே சார், ஒரு வாரம் லீவு போலிருக்கு! வந்திடுவார். வேறே ஏதேனும் செய்யணுமா? நம்ம கம்ப்யூட்டர் அதிகாரி சீனு கிட்டே கொடுத்து செய்ய சொல்றேன்” –மேனேஜர்

“அப்படியா! ஒண்ணுமில்லே மேனேஜர் சார் ! நம்ம கோவில் ஆடிட்டர், அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட்டில் ரெண்டு மூணு சந்தேகம் எழுப்பி இருக்காங்க. கண்ணன் கிட்டே கேக்கணும்.”

“என் கிட்டே கொடுங்க, சார், நான் தேவையான விவரம் தரச்சொல்றேன்!”பேசிக்கொண்டிருந்த போதே, அக்கௌன்டன்ட் காஷ், டிராப்ட் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். “ இந்தாங்க சார்” – டிரஸ்ட்டீயிடம் பவ்யமாக நீட்டினார்.

“தேங்க்ஸ்”, வாங்கிக் கொண்டார் டிரஸ்ட்டீ.

“உக்காருங்க அக்கௌன்டன்ட், நம்ம டிரஸ்ட்டீஐ தெரியுமில்லே?” –மேனேஜர்

“தெரியும் சார், கண்ணன் அறிமுகப்படுத்தி இருக்கார்”- அக்கௌன்டன்ட்.

டிரஸ்ட்டீ தனது பையிலிருந்து பேங்க் ஸ்டேட்மெண்ட்டை வெளியில் எடுத்தார். “ போன மாசம் இந்த இரண்டு வரவு வந்திருக்கே, ரூ. 43000, 27000/- இவை பற்றிய விவரம் நீங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட்லே விவரமா இல்லை. வெறுமே ட்ரான்ஸ்பர்னு மட்டும் இருக்கு. கொஞ்சம் கொடுத்தால் சௌகரியமாக இருக்கும்.”

“இவ்வளவு தானா? இப்பவே கொடுக்கிறேன்.”- மேனேஜர் ஸ்டேட்மெண்ட்டை வாங்கி பார்வையை ஓட விட்டார்.

தூக்கி வாரி போட்டது அவருக்கு. இது பேங்க் ஸ்டேட்மெண்ட் மாதிரி தெரியலியே! இந்த பேப்பர் நம்ப இப்போ உபயோகிப்பது இல்லியே. இந்த ஸ்டேட்மென்ட் பிரிண்ட்டும் வேறே மாதிரி இருக்கே? மூளைக்குள் எலி ஓடியது. சந்தேகம் பொறி தட்டியது.

மேனேஜர் கொஞ்சம் அனுபவசாலி. அதனால், தனது எண்ண ஓட்டங்களை முகத்தில் காட்டாமல், கொஞ்சம் புன்முறுவலோடு, மெதுவாக, கோவில் கணக்கை தனது கணினியில் திறந்தார். டிரஸ்ட்டீ கொடுத்த வங்கி ஸ்டேட்மெண்ட்டின் கடைசி நாள் நிலுவையில் உள்ள தொகையை பார்த்தார். அதே நாளில் வங்கி கணக்கில் நிலுவையில் உள்ள தொகையை பார்த்தார்.

சொறேலென்று அவரது தலையில் இடி இறங்கியது. கிட்டத்தட்ட ஒரு எட்டு லட்சம் இடித்தது. வங்கி கணக்கு குறைவாக இருந்தது. ஏதோ கெட்டது நடக்கப் போறது போல் தோன்றியது.

“என்ன சார், எதாவது பிரச்னையா?” அருகில் வந்து அக்கௌன்டன்ட் மெதுவாக வினவினார்.

மேனேஜர் சமாளித்தார். “ சே! சே! ஒண்ணுமில்லே!. சரியா விவரம் கிடைக்கவில்லை. டிரஸ்ட்டீ சார், நான், மற்ற புக்ஸ் எல்லாம் பார்த்து முழு விவரமும் சாயங்காலத்துக்குள் அனுப்பி வைக்கிறேனே. அவசரம் ஒண்ணுமில்லையே?”

“பரவாயில்லே!. அப்படி ஒன்னும் ரொம்ப அவசரமில்லை. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு!. அப்ப நான் உத்திரவு வாங்கிக்கட்டுமா?” விடை பெற்றார் டிரஸ்ட்டீ.

அவர் வெளியே போனதும், தனது காபின் கதவை மூடினார் மேனேஜர். அவரது முகத்தில் பொடிப் பொடியாக வியர்வை. அதைத் துடைத்துக்கொண்டே இன்டர்காமில் அழைத்தார்“சீனு, கொஞ்சம் உடனே வாங்க. கோவில் அக்கௌன்ட் ஸ்டேட்மென்டை பிரிண்ட் போட்டு எடுத்துக்கொண்டு வாங்க” இன்டர்காமில் அழைத்தார். அடுத்த பத்து நிமிடத்தில், கம்ப்யூட்டர் அதிகாரி சீனு , கோவில் கணக்கு ஸ்டேட்மென்ட் கையும், திறந்த பேனாவுமாக அவரது அறையில் ஆஜர்.

அக்கௌன்டன்ட்டுக்கும், சீனுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன பிரச்சனை?

மேனேஜர் ஆரம்பித்தார் “கோவில் கணக்கில் ஏதோ தப்பு நடந்திருக்குமோன்னு எனக்கு சந்தேகம்”

“என்ன சார் சொல்றீங்க?” அக்கௌன்டன்ட் குரலில் பயம் தெரிந்தது. அவரது முகத்தில் கலவரம் கால்பந்து விளையாடியது.

டிரஸ்ட்டீ கொடுத்த ஸ்டேட்மெண்ட்டை மேனேஜர் காண்பித்தார். “இந்த ஸ்டேட்மெண்ட் நம்ப ஆபீஸ்லேருந்து எடுத்ததா?”

“இல்லே சார்” கோரஸாக அக்கௌன்டன்ட், சீனு. சீனு சொன்னான் “இந்த பேப்பரே வேறே சார். இதிலே வங்கி லோகோ இருக்கே. . இப்போ நாம லோகோ இல்லாத பேப்பரைத்தானே உபயோகப் படுத்தறோம்?”

மேனேஜர் சொன்னார் “அப்போ, யாரோ கோவிலுக்கு பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காங்க! ஏன்? சீனு, இந்த ஸ்டேட்மெண்ட்டுக்கும் , நம்ப பேங்க் ஸ்டேட்மெண்ட்க்கும் என்ன என்ன மிஸ்ஸிங் பாருங்க!”.

சீனு இரண்டு ஸ்டேட்மெண்ட்களையும் கவனமாக பார்த்து விட்டு சொன்னான், “ சார், போன மாசத்தில் ஐந்து தடவை பணம் வரவு பற்றிய விவரம் கோவிலுக்கு கொடுத்த ஸ்டேட்மெண்ட்லே இருக்கு. அனால், அந்த வரவு நமது பேங்க் அக்கௌண்டில் வரவில்லை. மொத்தம் ரூபாய் 8 லட்சம் உதைக்குது.”- கவலை இழையோடியது அவன் குரலில்.

“இப்போ என்ன பண்ணலாம், சார் ?”- அக்கௌன்டன்ட்.

“சரி, இந்த விஷயம் இப்ப நம்ப மூணு பேரோட மட்டும் இருக்கட்டும். கண்ணன் வந்தால் அவனையும் கேப்போம். சீனு, நீங்க உடனடியாக, அந்த 5 பற்று பணம் வரவு தகவல், நம்ப ரெகார்ட் ரூம்லேருந்து எடுத்துக் கொண்டு வாங்க. கொஞ்சம் சைலன்ட்டாக செய்யணும்”.

“சரி சார்”- சீனு, கைகுட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியேறினான்.

“பார்ப்போம்! ஒண்ணும் இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். சரி நீங்க போங்க!. உங்களுக்கு வேலையிருக்கும்… மாலை 5 மணிக்கு மேலே நாம இத பத்தி பேசி முடிவு பண்ணலாம். யார் கிட்டேயும் இதைப் பற்றி பேசவேண்டாம்.”- மேனேஜர் அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததும், அக்கௌன்டன்ட் கொஞ்சம் கவலையோட நகர்ந்தார்.

…. *தொடரும்

Reference : Fraud and Scam Awareness:

Fraudulent Bank Statements

http://indiatoday.intoday.in/story/banks-liable-for-fraud-by-its-employees/1/119979.html

அவன் வழி தனி வழி – (தொடர்ச்சி….)

மாலை 5.00 மணி.

பணியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். மேனேஜர், அக்கௌன்டன்ட் மற்றும் சீனு, மேனேஜர் அறையில் அமர்ந்திருந்தனர். மூவர் முகத்திலும் கவலை. அதிலும் அக்கௌன்டன்ட் முகத்தில் ஈயாடவில்லை.

மேனேஜர் பிரச்சினை என்ன என்பதை மீண்டும் விவரித்தார். “இப்போதைய நிலவரப்படி, 5 வரவுகள், ரூ.8 லட்சம் அளவில் போன மாதத்தில் வங்கியின் கோவில் கணக்கிற்குள் வரவு வைக்கப் படவில்லை.. ஆனால் கோவிலுக்கு தரப்பட்ட ஸ்டேட்மெண்ட் படி, இந்த பற்றுக்கள் வரவு வைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. எல்லாம் வெளியூரு செக்குகள். .

நிச்சயமாக கோவில் பணம் கையாடப் பட்டிருக்கு.அதிலே சந்தேகமேயில்லை. ஆனால், யார் செய்தது? இதைத்தவிர வேறே ஏதேனும் கையாடல் வெடிக்குமான்னும் தெரியலை.”

சீனு கூறினான் “ சார், எனக்கென்னமோ இந்த காரியத்தை கண்ணன்தான் செய்திருப்பான்னு தோன்றுகிறது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

சீனு விவரித்தான். “கண்ணன் தான் வெளியூர் செக்குகள் அனுப்புதல், வரவு வைத்தல் வேலைகளை கவனித்துக் கொள்கிறான். அந்த ஏரியாவில் தான் இப்போ கையாடல் நடந்திருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம். கோயில் கணக்கு அவனது கவுண்டர் இல்லைன்னாலும், கோயில் கணக்கு முழுவதும் கண்ணன் கண்ட்ரோலில் தான். 10 நாட்களுக்கு முன்பு கூட ஸ்டேட்மெண்ட் வேண்டும் என்று என்னிடம் கேட்டான். அவன் எதுக்கு கோவில் அக்கௌன்ட் விஷயத்தில் இவ்வளவு ஈடுபாடு காட்டணும்?”

அக்கௌன்டன்ட் கனைத்தார். “ சார், எனக்கு கூட கண்ணன் பத்தி சந்தேகம் தான். கண்ணனுக்கு தெரியும், கோவில் போன்ற நிறைய வரவு மற்றும் வெளியூர் டொனேஷன் செக்குகள் வரும் அக்கௌண்டில், இந்த மாதிரி கையாடல் அவ்வளவு எளிதில் வெளியே தெரியவராதென்று. கோவில் அக்கௌன்ட் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் மூணு நாலு கோடிக்கு மேல் நிலுவையில் இருப்பதால், யாரும் இந்த திருட்டை கவனிக்க மாட்டார்கள். கொஞ்ச நாளில் சரி செய்து விடலாம் என நினைத்திருக்கலாம். அப்புறம், அவன் கொஞ்சம் செலவாளி, கொஞ்சம் கடன் தொல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் இந்த காரியத்தை அவன் செய்திருக்கக்கூடாது?”

மேனேஜர் “இல்லே அக்கவுண்ட்டன்ட், கண்ணன் கொஞ்சம் வசதியான வீட்டுப்பையன். டிரஸ்ட்டீ வீட்டு சம்பந்தம் வேறே பேசறது அவனுக்கு தெரியும். அப்படி இருக்கும் பொது, அவன் எதுக்கு இப்போ போய் இந்த மாதிரி செய்யணும்? தெரியலை, ம்ம்.. ஆனால்…, நீங்க சொல்றதும் சரியாகத்தான் படுகிறது.”

ஒரு நிமிட யோசனைக்கு பிறகு, மேனேஜர் சொன்னார் “சீனு, ஒண்ணு செய்யுங்க, உடனே கோயில் ஆபீசுக்கு போன் பண்ணி, இந்த 5 கிரெடிட் விஷயமா, அவங்க கிட்டேயிருந்து பேங்க் ஸ்டாம்ப் இருக்கிற சல்லான் கவுண்டர்பாயில் கேட்டு வாங்குங்க. சாமர்த்தியமாக, சந்தேகம் வராதபடி கேளுங்க”

“சார், நான் மத்தியானமே கேட்டு வாங்கிட்டேன். இந்தாங்க கோவில் ரசீது/கவுண்டர்பாயில். இதிலே எல்லாத்திலேயும் கண்ணன் கவுண்டர் ரப்பர் ஸ்டாம்ப் தான் இருக்கு. அவனது இனிஷியல் /கையொப்பமும் இந்த வரவுகளிலும் இருக்கு.”

“சரி! அப்படியானால் இந்த டாகுமெண்ட்களை பத்திரப்படுதுங்க. நான் ஹெட் ஆபீஸ்க்கு விஷயத்தை சொல்லிடறேன். போலீசுக்கு சொல்லணுமான்னு தெரியலை. ஹெட் ஆபீசையே கேட்டுடறேன்.”

கண்ணன் ரொம்ப நல்லவன், கெட்டிக்காரன்னு நெனச்சேன். இப்படி ஆயிடுத்தே? அங்கலாயித்தார், மேனேஜர். ஹெட் ஆபீசில் குடை குடைன்னு குடைவார்கள், கோவில் பிசினஸ் கையை விட்டு போயிடும், ப்ரோமோஷன் அம்பேல். என்ன ஒரு கஷ்ட காலமடா சாமி!

***

இரண்டு நாள் கழித்து அக்கவுண்டன்ட் மேனேஜரை தனியாக பார்த்து ரகசியமாக சொன்னார். “ சார், எனக்கு சீனு பேரிலே சந்தேகமா இருக்கு சார்! ஏன்னா, அவன் கிட்டே தான் பிரிண்டர் இருக்கு. கம்பூட்டர் ஆபீசர் வேறே. எதுக்கும் உங்க காதிலே போடலாமேன்னு நினைச்சேன் சார்”

அதற்கு அடுத்த நாள் சீனு மேனேஜெரை தனியாக வந்து பார்த்தான். “ சார், தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னு சொல்லலாமா? அக்கௌண்டன்ட் சார் தான் தனியாக வங்கிலே இருக்கிறார். அன்னிக்கு கூட பார்த்தேன், ராத்திரி பத்து மணிக்கு, வங்கிலேருந்து போறார். சொல்லனும்னு தோணித்து சார்“

இரண்டு பேரின் சந்தேகத்துக்கும் மேனேஜர் தலையாட்டினார்.

***

ஒரு வாரமாயிற்று. கண்ணன் வங்கிக்கு வரவில்லை. 100 கி.மீ. தள்ளி திருச்சியில் அவன் வீட்டிற்கு ஆள் அனுப்பியாகிவிட்டது. ஊரிலிருந்து வந்தவுடன் சேதி சொல்வதாக அவனது அப்பா உறுதியளித்தார். ஹெட் ஆபீஸ்க்கு விஷயம் போய்விட்டது. லெட்டர் மேல் லெட்டர். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதை கொஞ்சம் தள்ளிப் போடும் படி உத்திரவு வந்து விட்டது.

***

ஒரு பத்து நாள் கழித்து:

மேனேஜர் மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்த நேரம். வாசலில் யாரோ டக் டக் என்று தட்டினார்கள். “சார்! சார்! உள்ளே வரலாமா? – குரல் கேட்டு நிமிர்ந்தார். ஆச்சரியம். வாசலில் கண்ணன் நின்று கொண்டிருந்தான். பின்னாடியே அக்கௌன்டன்ட்.

“என்ன கண்ணா ! எங்கே போயிட்டே, இவ்வளவு நாள் காணோம்? இப்படி பண்ணிட்டியே?” ஆரம்பித்தார் மேனேஜர்.

“சார்!, பத்து நாள் விடுப்பு எடுத்திருந்தேன். முந்தா நாள்தான் எனக்கு சேதி வந்தது. சார், இந்த கையாடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு இதிலே ஒரு சம்பந்தமும் இல்லே!”

“என்னப்பா சொல்றே நீ? உன் பேரிலே சார்ஜ் ஷீட் பண்ணி பதில் வாங்கி அனுப்பச்சொல்லியிருக்காங்க? நீ செய்யலேன்னா, யாரு செஞ்சா?”

“அதான் தெரியலே சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் எந்த தப்பும் செய்யலேன்னு நிருபணம் பண்றேன்! ”

“அது முடியாது கண்ணா, ஒண்ணு செய்யலாம், இந்த குற்றத்திற்கு நீ காரணமில்லைன்னு விளக்கம் எழுதிக் கொடு, ஹெட் ஆபீசுக்கு அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்”

“சரி சார், அப்படியே ஆகட்டும்” –கண்ணன்.

கண்ணன் தனது சீட்டில் சென்று அமர்ந்தான். வேலை பார்க்க ஆரம்பித்தான். மற்ற உழியர்கள் அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தனர். அவனது நெருங்கிய நண்பர்களும் கூட அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்.

அடுத்த நாள், கண்ணனது விளக்கத்தை மேனேஜர் ஹெட் ஆபீசுக்கு அனுப்பினார்.

***

மூணு நாட்களுக்கு பிறகு, ஹெட் ஆபீசிலிருந்து, விசாரணைக்காக ஒரு சீனியர் அதிகாரி, வந்து சேர்ந்தார். மேனஜரிடமிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக விசாரணை செய்தார். அக்கவுண்டன்ட், சீனு ஆகியோரை குடைந்தார். கண்ணனை கேள்வி மேல் கேள்வி கேட்டு கிழித்தார். கண்ணன் நடவடிக்கைகளை பற்றி, மற்ற உழியரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அவனது நண்பர்களை தனித்தனியாக கூப்பிட்டு விசாரித்தார். கணினியில் துருவி துருவி ஏதேதோ பார்த்தார். ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகு, திரும்பி ஹெட் ஆபீஸ் போய்விட்டார்.

***

இரண்டு மாதம் கழிந்தது.

டிரஸ்ட்டீ அன்று காலை வங்கிக்கு வந்திருந்தார். அவர் கண்ணனை தேடவில்லை. கண்ணன் இருக்க மாட்டான் என அவருக்கு தெரியும்.

நேராக மேனேஜர் அறைக்கு சென்றார். மேனேஜர் விசாரித்தார் “வாங்க சார் ! வாங்க ! புது மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?”

டிரஸ்ட்டீ வாயெல்லாம் பல். “என் பொண்ணோட கொடைக்கானல் போயிருக்கிறார், தேனிலவுக்காக” மகிழ்ச்சியோட சொன்னார். “நீங்கதான் கல்யாணத்திற்கு வரல்லியே?”

“ஆமா சார், தவிர்க்க முடியாத காரணமாக சென்னை போகவேண்டி வந்துவிட்டது”

“அப்புறம், வேறென்ன விஷயம்?”

“நம்ப அக்கௌன்டன்ட் சேலத்திற்கு மாற்றலாகிபோய் விட்டார். சீனு தான் இப்போ அக்கௌன்டன்ட். எனக்கும் சென்னைக்கு மாற்றல் வரும் போலிருக்கு. நாங்க இல்லேன்னாலும், உங்க மாப்பிள்ளை இருப்பார், கோயில் அகௌண்டை பார்த்துப்பார்.” சிரித்தார் மேனேஜர்.

“சரி, சீனுவை பார்த்து,என் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பறேன். நீங்க உங்க வேலையை பாருங்க”.சிரித்துக்கொண்டே விடை பெற்றார் டிரஸ்ட்டீ.

***

கொடைக்கானல்.

“ஏன் கொஞ்சம் யோசனையாக இருக்கீங்க?” கண்ணனின் புது மனைவி மீனா , ஆதுரத்துடன்.

“ஒண்ணுமில்லே! வங்கியிலிருந்து போன் வந்தது. அந்த நினைவிலே மூழ்கிட்டேன்”

“கேக்கணுமின்னு நினைச்சிட்டிருந்தேன்! பாங்க்லே உங்க வேலை போக இருந்ததாமே? என்ன ஆச்சு?”- மீனா அவனது பக்கத்தில் வந்து அமர்ந்து அவனது கையை தன் கையுடன் இணைத்துக் கொண்டாள்.

“ரவின்னு எனக்கு ஒரு நண்பன்.. எனது பக்கத்து சீட். நாங்க ரொம்பவே க்ளோஸ். உங்க அப்பாவோட கோவில் அக்கௌன்ட்லே கையாடல் பண்ணிட்டான். என் போதாத நேரம், நான் மாட்டிக்கேட்டேன். பழியை எம்பேரிலே போட்டுட்டான்”

“அதெப்படி பண்ண முடியும்?- மீனா

கண்ணன் விவரித்தான் “கோவிலுக்கு வரும் வெளியூர் செக்குகளை நான் வாங்கி என்னுடைய டிராயர்லே போடற வழக்கம். பக்கத்து சீட்லே இருக்கிற ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் செய்யற வழக்கம் எங்களுக்குள்ளே இருந்ததாலே, நம்பிக்கை பேரில் டிராயர் திறந்தே வைப்பேன். நான் இல்லாத நேரத்தில், கோவில் வரவு இருக்கும் சீட்டை கொஞ்சம் கெமிக்கல்ஸ் போட்டு மாற்றி, தனது பினாமி அக்கௌன்ட் நம்பர் ,பேர் எழுதி வைத்து விடுவான் போலிருக்கு. வரவு அந்த அகௌண்டுக்கு போய்விடும். வேலை பளுவில் நானும் கொஞ்சம் அசட்டையா இருந்திட்டேன். அக்கவுண்டன்ட் சாரும் பார்க்கவில்லை”

“அடபாவி, இது எவ்வளவு நாளா நடந்துகிட்டிருக்கு ?”

“இப்பதான், ஒரு மாசமா, என் பக்கத்து சீட்டுக்கு வந்த பிறகு. ஆரம்பிச்சிருக்கான்.! நூறு வரவில், ஒன்னு இரண்டு குறைந்தால், கோவில்லே யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்கன்னு நெனைச்சான்.”

“கோவில்லே இந்த வரவு வரல்லைன்னு கண்டு பிடிக்கலையா? அவங்க பணம் தானே? அவங்களுக்கும் பொறுப்பு இருக்கில்லே? ”

“கணக்கை அவங்க மாசம் ஒரு தடவைதான் சரி பார்ப்பாங்க. அங்கேயும், ரவி என்னை உபயோகப் படுத்திகிட்டான் மீனா. திடீர்னு, உங்கப்பா கோவில் ஸ்டேட்மெண்ட் கேட்டப்போ, சீனு சார் கிட்டேந்து நாந்தான் வாங்கி வெச்சேன். அதை பார்துகிட்டிருந்த ரவி, ஆனால், நான் கொடுத்திடறேன்னு சொல்லி, ரவி தான் என்கிட்டேயிருந்து வாங்கிட்டு போய் , அதை கொடுக்காமே , வேறே ஒரு ஸ்டேட்மெண்ட் ஒண்ணு தயார் பண்ணிக் கொடுத்துட்டான். என்னென்ன கோவில் வரவை தனது பினாமி அக்கவுண்டுக்கு மாத்தினானோ, அத இவனோட ஸ்டேட்மெண்ட்லே வரவா காமிச்சுட்டான். ”

“அட பாவி! அப்புறம் என்ன ஆச்சு?”

“உங்கப்பா அந்த ஸ்டேட்மெண்ட்டில் ஏதொ சந்தேகம் கேக்கபோக, மேனேஜர் திருட்டை கண்டு பிடிச்சுட்டார். முதலில், அவருக்கு என் பேரிலே தான் சந்தேகம். ஹெட் ஆபீஸ்லேருந்து வந்த என்குயரி ஆபிசர் தான், கோயில் அகௌன்ட்லே திருவிளையாடல் பண்ணது ரவின்னு கண்டு பிடிச்சார்”

“அவருக்கு எப்படி தெரிஞ்சுது, ரவிதான் இதெல்லாம் செஞ்சிருக்கன்னு?

“என்குயரி ஆபிசர் ரொம்ப கில்லாடி. கம்ப்யூட்டர் எக்ஸ்பெர்ட். எல்லாருடைய நடவடிக்கைகளையும் கவனிச்சிருக்கார். என்னை பத்தி, ரவி பத்தி விசாரிச்சிருக்கார். என்னையும், ரவியும் வேலை செய்யற போது கண் காணிச்சிருக்கிறார். என்னை துருவி துருவி கேள்வி கேட்டார். ஏனோ தெரியலே, நான் தப்பு செய்யலே, உண்மைதான் சொல்றேன்னு அவருக்கு தோணியிருக்கனும். அப்புறம், அந்த இரண்டு மாச கம்ப்யூட்டர் ரெகார்ட் எல்லாம் பாத்து, அந்த 8 லட்சம் கோவில் பணம் எந்த அக்கவுண்டுக்கு திருப்பப் பட்டிருக்குன்னு கண்டுபிடிச்சார். அதுக்கப்புறம், விசாரணையிலே அதட்டிக் கேட்டப்புறம், ரவியே குற்றத்தை ஒப்புக்கிட்டான். அவசர தேவையாம். கோவிலை, பாங்கை ஏமாத்தறது சுலபம்னு நினைச்சான். தானே மாட்டிகிட்டான்”.

“சரியாய் போச்சு போங்க! ஆமா, இதை சீனு ஏன் கண்டு பிடிக்கலை?”

‘சீனு சாருக்கு கம்பூட்டர் அவ்வளவா தெரியாது மீனா. அவரு புதுசு. ஏதோ சொல்லிக் கொடுத்ததை செய்வார். எல்லாத்துக்கும் பயப்படுவார். அவ்வளவுதான்”

“நல்ல பேங்க் போங்க!”

கண்ணன் கொஞ்சம் பெருமையாக “வங்கியை ஏமாத்தறது அவ்வளவு ஈஸி இல்லே தெரியுமா? எங்கயாவது மாட்டிப்பாங்க !”

“போதுமே! நீங்களும் உங்க பாங்கும் !” – சிரித்தாள் மீனா. “ஆமா? இப்போ ரவி எங்கே?”

“பேங்க் வேலையிருந்து பணி இடைவேளி நீக்கத்திலிருக்கிறான். வேலை போயிடுச்சாம். அதான் இப்போ பேங்க் லேருந்து போன். பாவம். எல்லா பணத்தையும் அவன்தான் திருப்பி கட்டணும். அநேகமாக ஜெயிலுக்கு கூட போகவேண்டிவரும்.”

“சரி, சரி, அவன் எப்படியாவது போகட்டும், இனி மேலாவது நீங்க ஜாக்கிரதையாக இருங்க” – வழி சொல்ல ஆரம்பித்தாள் மீனா.

இனிமேல் காலம் முழுக்க அட்வைஸ் பண்றது அவளது உரிமை. தலையாட்டி கேட்டுக் கொள்ள வேண்டியது அவன் கடமை. வேறே வழி?.

இதிலே ரவியோட வழி தான் தனி வழி!!! எல்லோரும் ஆபிஸ் வீடுன்னு அலைஞ்சா, இவன் மட்டும் கோர்ட், ஜெயிலுன்னு அலையறான்.

***முற்றும் ..(விழிப்புணர்வு கதைகள்)

Fraudulent Bank Statements

http://indiatoday.intoday.in/story/banks-liable-for-fraud-by-its-employees/1/119979.html

Print Friendly, PDF & Email

1 thought on “அவன் வழி தனி வழி

  1. அருமையான கதை. முடிவு நன்றாக இருந்தது, வினை விதைப்பவன் வினை அறுப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *