க.சொக்கலிங்கம்

க.சொக்கலிங்கம்
 

ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார்.

நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் “சொக்கன்” 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்” என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கல்வி உலகிலே வித்துவான், M.A. பட்டங்கள் பெற்றவர். யாழ். பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ P.h.D பட்டம் அளித்தது. தமிழ் ஆசிரியராகவும் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.

பழைய இலக்கியப் புலமையும் புதிய இலக்கிய ஈடுபாடும் ஒருங்கே கொண்ட இவரின் படைப்புக்கள் சிறுகதை – நாவல் – நாடகம் – கவிதை – இலக்கிய ஆய்வு – கல்வி நூல்கள் – சுயசரிதை – மொழிபெயர்ப்பு என்று பன்முகப்பட்டன. எத்துறையானாலும் தமிழ் இலக்கண அமைதி காக்கப்பட வேண்டும் என்ற கருத்து உடையவர். ஸ்ரீலங்காவின் சாகித்திய இரத்தினம் பட்டத்தினையும் ஏராளமான இலக்கியப் பரிசுகளையும் பெற்றவர்.

வாழ்விலே ஒரு ஆத்மீகவாதி. வாழ்வின் உறுதுணையாக இருந்த மனைவி தெய்வானை அம்மையார் 04-02-2004 இல் காலமானார். நல்லூர் முருகப் பெருமானின் பரமபக்தர். மக்களுக்காக நல்லவற்றைச் சிந்திக்கும், பேசும், எழுதும், பண்புடையாளர்.

ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்)அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார்.டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார்.

கல்வியும் ஆசிரியர் அதிபர் பணியும்

சொக்கன் தமது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யாழ்ப்பணம் வண்ணார்பண்னை நாவலர் பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் ஆசிரியப் பயிற்சியை பலாலி ஆசிரியகலாசாலையிலும் (1950-1951)பெற்றார் பின்னர் தமிழ் வித்துவான் பட்டத்தை(Diploma in Tamil-1953) பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கலைமாணிப் பட்டத்தை(1968-B.A)இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலைமாணிப் பட்டத்தை (1977-M.A)ஈழத்து தமிழ் நாடகவளர்ச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டும் பெற்றுக்கொண்டார். கலாநிதிப்பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கி இவரைக் கௌரவித்தது,

தமது 21 ஆவது வயதில் வதுளை உவாக்கல்லூரியில் உதவி ஆசிரியராக தமது பணியைத் தொடங்கிய இவர் 1963 -1973 ஆம் ஆண்டுகளில் யாழ் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்1973 சிலாபம் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபராகப் பணியேற்ற சொக்கன் கோண்டாவில் இராமகிருஷ்ணாவில் கொத்தணி (கல்வி நிர்வாக சேவை) அதிபராகக் கடமையாற்றி 38 ஆண்டுகள் பணிக்குப் பின் 1990 ஆம் ஆண்டு ஒய்வைப் பெற்றுக்கொண்டார் . இடையில்1976- 1979 இல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் 1982 -1983-ஆம் -ஆண்டில் பலாலி ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராயும் பணியாற்றிய சொக்கன் தனது பணி ஓய்வுக்குப் பின் யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை வருகை விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) 1992-1993 பணிசெய்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுகதைகள்

  • 225 மேற்பட்ட சிறுகதைகள்.
  • கடல்-15 கதைகளின் தொகுப்பு -1972
  • சொக்கன் சிறுகதைகள்- 10 கதைகளின் தொகுப்பு – 2004
  • கணிசமான சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். 

நாவல்கள்

  • மலர்ப்பலி – ஈழகேசரி -1949-9.1 1949 முதல் 27.3. 49 வரை தொடராக வந்தது
  • செல்லும் வழி இருட்டு (1959 இல் தினகரனில் வெளியானது பின் வீரகேசரிப் பிரசுரமாக 1973ஆம் ஆண்டுவெளிவந்தது.)
  • சீதா(1963) – வீரகேசரி பிரசுரம்-1974
  • சலதி -1985 பக்திக்சந்த் -1985 (மொழிபெயர்ப்பு நாவல்),
  • குறுநாவல் ஞானக்கவிஞன்- 1966
  • முகங்கள்-ஈழமுரசு -1986.

பெற்ற பரிசில்கள், பட்டங்கள்

  • கடைசி ஆசை – சிறுகதை. மின்னொலி சஞ்சிகை முதற்பரிசு -1946
  • பிரயாணம் – தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு – 1960
  • சிலம்பு பிறந்தது -முதற் பரிசு. இலங்கக் கலைக் கழகம் – 1960
  • சிங்ககிரிக்காவலன் – முதற்பரிசு இலங்கக் கலைக் கழகம் – 1961
  • தபாற்காரச் சாமியார்- வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு-1966
  • நெடும்பா 3 இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது -1986
  • மானத்தமிழ் மறவன் -இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது.
  • கடல் – இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு – 1972
  • சலதி- இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு – 1987
  • ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி – இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு – 1978
  • தமிழ்மாமணி- ஆறுமுகநாவலர் சபை இலக்கியச் செம்மல்- இந்து கலாசார அமைப்பு. சாகித்திய இரத்தினம் – இலங்கை அரசின் கலைக் கழகம் – 2003. வடக்கு கிழக்கு மாகண கல்வியமைச்சு – ஆளுனர் விருது நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தானம்.குகஸ்ரீ.

உங்களுக்கு எனது திருமுகம் – சொக்கன் சிறுகதைகள் – 2004

என் அன்புக்கும் கடப்பாட்டுக்கும் உரிய வாசகர்கள், விமர்சகர்கள் யாவருக்கும், 

வணக்கம் 

நூலாசிரியன் ஒருவன் தனது நூலுக்கு எழுதும் முகவுரை மரபிலிருந்து விடுபட்டு, உங்களோடு நெருக்கமாக என் நெஞ்சத்து ணர்வுகளைத் தடையின்றி வெளிப்படுத்த மிகவும் உகந்தது இந்தத் “திருமுகமே” என்று தீர்மானித்து இதனை எழுதுகின்றேன். உங்களின் வரவேற்பு இதற்குக் கிடைக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. என் அன்பிற்குரியவர்களே, 

என்னைப் பற்றிச் சொல்வதானால் எழுத்தாளனாக நான் முளைவிடத் தொடங்கியபோது முதலில் எழுதியது சிறுகதைதான். முதற்கதை வெளியாகிய இருபத்தெட்டாண்டுகளின் பின்னரே முதலாவது சிறுகதைத் தொகுதி ‘கடல்’ வெளியாயிற்று (1972) அது வெளியாகிச் சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து ‘சொக்கனின் சிறுகதைகள்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி வெளியாகிறது. 

எனது நீண்ட எழுத்துப் பயணத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருப்பேன். அவற்றிலிருந்து முப்பதையாவது தெரிந்தெடுத்திருந்தால், இன்று என் பெயரில் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருக்க வேண்டும். 

இவ்வாறு வெளிவராமைக்கு, எனது கவனம், நாவல், நாடகம், சிறுகதை, கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, பாடவழிகாட்டி நூல்கள் தொகுப்புக்கள், உரைவிளக்கம் சார்ந்த நூல்களை வெளியிடுவதில் மிகுதியும் சென்றமையே காரணம். 

வாழவேண்டிய காலத்தின் முக்கால் பாகத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்நிலையில் இச்சிறுகதைத்தொகுதி வெளியாவது உங்களிடையே இருவேறுபட்ட கருத்துக்களை உருவாக்கும் என்றே கருதுகிறேன். 

“வாலையில் ஆடியவள் வயோதிபத்திலும் காலைக்காலை ஆட்டுகிறாள்’ என்ற பழமொழியை நினைத்து ‘பழசு’ என்ற உணர்வுடன் இவற்றை அணுகி முகம் சுழிப்பவர் இல்லாது போகலாம், என்று நான் முடிவெடுத்தால் அது நிச்சயமாக எனது அசட்டுத்தனமாகவே இருக்கும். முயல்வேகத்தில் விரைந்து கொண்டிருக்கும் இன்றைய வீறார்ந்த இளம் எழுத்தாளர் பரம்பரைக்கு முன்னால் எனது படைப்புக்கள் ஆமைகளாய் ஊர்கின்றன என்று நியாயப்படுத்துவதில் நியாயம் இல்லாது போகும் என்பதற்கில்லை. 

‘ஆனால் சொக்கனின் எழுத்தில் இன்னமும் உயிர்த்துடிப்பு முற்றாகச் செத்துவிடவில்லை’ என்று பாராட்டும் குரல்கள் சில நலிந்தொலித்தாலும் அவற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை! 

நான் காய்த்த மரம். எத்தனையோ கல்லெறிகளைப் பட்டவன். சில வேளைகளில் என் சிறுகதைகள், மற்றப் படைப்புக்கள் சில போலவே மலர்தூவும் பாராட்டுக்கும் உரியனவானதையும் இவ்வேளையில் நினைந்து, அந்த மகிழ்ச்சி தரும் உந்தலாலே இச்சிறுகதைத் தொகுதியை உங்கள் முன்பு படைக்கிறேன். 

இத்தொகுதியிலே எல்லாமாகப் பத்துக் கதைகள் உள்ளன. அவற்றிலே பெரும்பாலானவை முதியோர் பிரச்சினைகளுக்கு முதன்மை அளித்து எழுதப்பட்டவை. சில கதைகள் எனது நாலு தசாப்தக் கற்பித்தல் அனுபவத்தின் போது நான் சந்தித்த ஆசிரியர்களின் போக்கையும் நோக்கையும் அலசி ஆராய்பவை. ஒரு கதை இனம், மதம், மொழி கடந்த மானிடத்தின் நெஞ்ச நெகிழ்வினைக் கருணை ஊற்றை உருக்கமாக வெளிப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சியின் அறுவடை. மனித இனமானது தன் உள்ளத்திலே நன்றிக் கடப்பாட்டினை முற்றாக உதறி எறியும் போதும், ஐந்தறிவுப் பிராணியான நாய் அதனைப் போற்றி அன்றுபோல் இன்றும் பேணிவருவதை எதார்த்தமாகச் சித்தரிக்க முனைவது மற்றொருகதை. 

வளர்ச்சி அடைந்த உலக நாடுகள், தம் குடிமக்களான முதியோரை மட்டுமன்றித் தம்மைத் தஞ்சமடைந்து வாழும் வேற்று நாட்டு முதியோரையும் மதித்து, அன்பு காட்டி அவர்களுக்கு முதுமைக் காலத்தில் உதவிநிதி, வாழ்வதற்கு வீடு, தொடர் வண்டிப் பயணங்களில் கட்டணச் சலுகை என்பவற்றை வழங்கி வருகின்றன. எமது சகோதர சமுகத்தினரான சிங்களவரும் முதியோரை மதித் தொழுகுவதை நேரில் கண்டு உருகும் வாய்ப்புக்கள் சில எனக்கு ஏற்பட்டன. என்னுடன் தொடர்பான உதாரணத்தை மட்டுமே இங்குக் குறிப்பிடுகின்றேன். 

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் எனது கடவுச் சீட்டின் கால எல்லையை நீட்டிக்க அண்மையில் என் மகளுடன் காலை வேளையில் சென்றிருந்தேன். மண்டபத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. கியூவரிசை மண்டபத்தைக் கடந்தும் நின்றது. 

‘இன்று பிற்பகல்தான் வேலை முடியும்’ என்ற சலிப்புடன் நின்ற எங்களை, விண்ணப்பப்படிவம் வழங்கும் பெண்மணி மறித்துப் படிவத்தை மகளிடம் வழங்கினார். ‘உமது அப்பாவை உந்த ஆசனத்தில் இருத்திவிட்டுப் படிவத்தை நீரே நிரப்பி அவரிடம் கையெழுத்து வாங்கிக் கவுண்டரில் கொடும்’ என்று அந்தப் பெண் பவ்வியமாக உரைத்தார். ‘எங்களுக்கு எவ்வளவோ நேரம் முந்திவந்து காத்திருப்போர் எம்மீது சினம் கொள்ளப்பட்டார்களா? என்று தயங்கி னோம். ஆனால் எமது தயக்கத்திற்கு இடமில்லாது கியூவரிசை விலகி வழிவிட்டது; முதுமையும் தளர்ச்சியும் நிறைந்த என்னை அனுதாபத்துடன் நோக்கியது. ஒரு முகத்தில் கூட வெறுப்போ அருவருப்போ இல்லை. சரியாக ஐந்து நிமிடங்களில் கடவுச்சீட்டைக் கையளித்து உரிய கட்டணம் செலுத்தி வெளியில் வந்தோம். மீண்டும் பிற்பகல் சென்று கடவுச்சீட்டைப் பெறும் போதும் காலையிற் போலவே கிழவனாகிய எனக்கு மனப்பூர்வமாக விசேட சலுகை வழங்கப்பட்டது. 

இதற்கு நேர்மாறான அநுபவத்தை அடுத்தநாள் கொழும் பிலிருந்து திரும்பும் பொழுது எம்மவரின் பரிசோதனை முகாமில் நான் பெற நேர்ந்தது. எனது பயணக்களைப்பு, முதுமை என்பவற்றிற்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படவில்லை. எல்லாரையும் போல நானும் எனது பயணப் பொதியோடு பேருந்திலிருந்து இறக்கப்பட்டேன். வெளியில் கியூவரிசையில் நின்று பரிசோதனைக்குள்ளானேன். என்னை அறியாமல் என்வாய் “இந்த வயதிலும் இத்தனை கெடுபிடியா?’ என்று முணுமுணுத்தபொழுது ஓர் இளங்குரல் “வயது போனால் வீட்டிலை கிடக்க வேண்டியதுதானே? பிரயாணம் செய்ய வந்தால் எல்லாத்தையும் அனுபவிக்கத்தான் வேணும்” என்று படபடத்தது. மனத்தில் உறுதியும் கடமையில் தவறாமையும் போற்றப்படவேண்டி யனவே. ஆனால் மனத்தைக் கல்லாக்கிய வண்ணம் கடமையில் கருணை காட்டாமையென்பது முதுமையை அவமதிப்பதல்லாமல் வேறென்ன? 

எனது அவதானிப்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக் காலங்களிலே முதியோர் பலவித தொல்லைக்கும் உட்படுத்தப் படுகிறார்கள். தள்ளாமையும் தனிமையும் தாழ்வுணர்ச்சியும் தலை யெடுக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் விரக்தி இவ்வளவு என்று கூறல் இயலாது. நவீன வைத்திய சாதனைகளின் உதவியால் முதியோரின் ஆயுள்கள் நீட்டிக்கப்படுவதும், அந்த நீட்சியின் பயனாக உண்டாகும் அவலங்களைப் பெரும் சுமையாக அவர்கள் சுமப்பதும் ஒருவகையில் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையேயன்றி வேறில்லை. யாழ்ப்பாணத்தில் முதியோர் பாதுகாப்பில்லங்கள் எண்ணிக்கையில் பெருகி வருவது அரோக்கியமான நிலை என்பதற் கில்லை. 

“சொல்தளர்ந்து கோலூன்றிச் சேர்ந்த நடையினராயும்” “என்று வருவன் எமன் என்று எதிர்நோக்கி நித்தலும் நின்று தளர்வோ ரா”யும் உள்ள முதியோர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பதாலும் என்சார்பிலும் அவர்கள் சார்பிலும் நான் பட்டும், பார்த்தும், கேட்டும் உணர்ந்தவற்றை உரத்த குரலில் முதியோர் கதைகளில் எடுத்துரைத்துள்ளேன். இவை இலக்கியக் கொடுமுடிகள் ஆகும் சாத்தியம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால் எனது ஆத்மார்த்த சத்தியம் இக்கதைகளில் வெளிப்படுகிறது. என்பதில் எனக்கு ஒரு மனநிறைவு உண்டு. 

ஆக்க இலக்கியங்களில் கூறப்படுவன எல்லாம் வேதவாக் குகள் அல்ல. இப்படிச் செய், இப்படி நட என்று கட்டளை யிடும் பணியை அவை எக்காலத்திலும் செய்ய முற்படுவதில்லை. ஆனால் அவற்றில் புலப்படுத்தப்படும் சில எதார்த்தங்கள் அவற்றைப் படிக்கும் ஒரு சிலருடைய நெஞ்சங்களையாவது நெருடி, தாம் வந்த வழி சரியா என்று மீள்பார்வை பார்க்கவாவது உதவும் என்பதற்கு ஐயம் இல்லை. 

இவ்வகையில் முதியோர் கதைகள் ஒரு சிலரினது விழிகளை யாவது திறக்குமானால் அதுவே அவற்றின் வெற்றி. 

அன்ரன் செக்கோவ் என்ற ருஷ்ய எழுத்தாளர் வைத்தியருங் கூட. எனவே அவரின் கதைகளில் வைத்தியசாலைக்கேயுரிய பிரத்தியேக நெடியும் வைத்தியர்களின் ஊடாட்டங்களும் நோயாளி களின் முனகல்களும் அதிகம் அதிகமாக இடம்பெற்றன. நான் ஓர் ஆசிரியன் என்பதால் இத்தொகுதியில் ஆசிரியர்கள் சம்பந்தப் பட்ட கதைகளுக்கும் போதிய இடம் அளித்துள்ளேன். என்பதோடு நான் இதுவரை எழுதிய கதைகளில் பெரும்பாலானவை ஆசிரிய உலகத்தையே மையங்கொண்டன. என்பதையும் கூறி வைக்கின்றேன். 

மற்றக் கதைகள் பற்றி மேலும் கூறுவது மிகை. 

இந்நூலைத் தனது சொந்தச் செலவில் வெளியிடுபவன் தம்பி கிருபானந்தா. முன்னரும் எனது ‘அக்கரைச் சீமையின் அனுபவங்கள்’ என்ற நூலும் அவனது முதலும் முயற்சியும் கொண்டே வெளிவந்தது. என்னில் தனது பெரியதந்தை அமரர் வித்துவன். சி. குமாரசாமியை அவன் காண்கின்றானாம்! (ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரான வித்துவானுக்கு முன் நான் வெறும் வெற்றுவேட்டு) அந்தப் பாவனையால் அவன் எனக்கு ஆற்றிவரும் உதவிகள் அளப்பில. கிருபான்னந்தாவுக்கு என் வாழ்த்துக்கள். 

ஆக்க இலக்கியம், ஆற்றல் இலக்கியம் ஆகிய இருதுறை களிலும் இடைவிடாது எழுதிக் குவித்துத் தமிழ்கூறும் நல்லுலுகில் தமது பெயரை அழுத்தமாகப் பதித்துக்கொண்டவர் நண்பர் செங்கையாழியான். தாமும் வளர்ந்து தம்மொத்தவரும் தம்மிலும் மூத்தவருமான எழுத்தாளர்களையும் பேணி, இளம் பரம்பரை யினரையும் ஊக்கி உற்சாகப்படுத்தும் பண்பாளரான அவர் இந்நூலு க்கு அளித்துள்ள அணிந்துரை என்னை முழுமையாகக் காட்டும் ஒரு முயற்சி. அவருக்கு எனது உளங் கனிந்த நன்றி. 

வழமைபோல இந்த நூலுக்கும் கண்ணும் கவசமுமாயிருந்து சரவை பார்த்த பேரன்பர் மயிலங்கூடலூர் நடராசன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி எனச் சொல்வதன் மூலம் எனது கடப்பாடு நிறைவு பெறாது. என்னளவில் அவர் மிது நான் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் நிலையானவை. 

நூலின் அட்டை இறுதிப் பக்கத்தில் என்னை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் ‘நந்தி’ (செ.சிவஞானசுந்தரமி) அவர்கள் என் நெஞ்சிற்கு மிக அண்மையான அருமையான ஒருவர். அவர் நலமுடன் நீடு வாழ எல்லாம் வல்ல முருகனை இறைஞ்சுவதல்லால் வேறறியேன். 

நூலை அழகுற வெளியிடும் திருவள்ளுவர் அச்சக உரிமையாளருக்கும் ஊழியருக்கும் நன்றியுடையேன். 

அன்புடன் 
௧.சொக்கலிங்கம் (சொக்கன்)
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம். 

அணிந்துரை – சொக்கன் சிறுகதைகள்- 2004

ஈழத்தின் சிறுகதை வரலாற்றில் சொக்கன் என்ற படைப் பாளியின் பங்கினை மதிப்பிடுவதாயின் அவரின் பல்துறைப் பரிமாணத் தினையும் இணைத்துக் கவனத்திற்கு எடுக்க வேண்டிய அவசிய மிருப்பதாக நான் எண்ணுகிறேன். நவீன தமிழலக்கியத்தில் சொக்கனின் பேனை தடம் பதிக்காத துறை எதுவுமேயில்லை. சொக்கன் யாது எழுதினார் எனக் கணக்கிடுவதிலும் எதனை எழுத வில்லை எனக் கணக்கிடுவது இலகுவாகவிருக்கும், சிறுகதை. நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, சமயம், வானொலிச் சித்திர ங்கள், பாடநூல்கள், பாடநூல் வழிகாட்டிகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளிலும் அகலமாயும் ஆழமாயும் கால்களை ஊன்றியுள்ளார். அவருடைய பல்துறை இலக்கியப் பங்களிப்பில் சிறுகதைத் துறைக்கு ஆற்றியிருக்கும் பணி ஆறு தசாப்சங்களைக் கடந்ததாகும். 

அச்சுவேலி ஆவரங்காலில் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆந்திகதி பிறந்த கந்தசாமிச் செட்டி சொக்கலிங்கம் யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டினைத் தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தால், சொக்கனால் நாயன்மார்கட்டு பெருமை பெற்றது. 1935 இலிருந்து இன்று வரை அவர் கற்பதை நிறுத்தவில்லை. வித்துவான், கலைமாணி, முதுகலைமாணி, கலாநிதியென அவர் தன் கல்விப் புலமையை விரித்துக் கொண்டார். யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பப் பாடசாலை, நாவலர் பாடசாலை, ஸ்ரான்லிக் கல்லூரி, பலாலி ஆசிரிய கலாசாலை, பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகம், என்பன சொக்கனைக் கல்வியாளனாக உருவாக்குவதில் பெரும் பங்கும் அதனால் பெருமையுமடைந்தன. ஆசிரியராக (1952-1973) அதிபராக (1973-1982) இலங்கைக்கல்வி நிர்வாகசேவையாளனாக, கொத்தணி அதிபராக (1982-1990) விளங்கியுள்ளார். அரசினர் பாடநூல் வெளியீட்டு ஆலோசனைக்குழு உறுப்பினராகக் கடமையாற்றித் தமிழ், சைவநெறி ஆகிய துறைகளுக்கு அளப்பரிய பங்காற்றியதோடு, சைவநெறி பத்தாம் பதினோராம் பாடநூல்களின் 

எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இடையாற்று விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியகராசாலை (1976-1979) பலாலி ஆசிரிய கலாசாலை (1982-1983) என்பனவற்றிலும் இடைவரவு விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் (1992-1993) பணிபுரிந்துள்ளார். பொதுச் சேவைகளில் அகில இலங்கைத் திருமுறைமன்றத்தின் தலைவராகவும் (1989-1994) யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1959) இலங்கைக் கம்பன் கழகம் (1963-1966), அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் (1966-1973) முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் (1977- 1990) யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷாவிருத்திச் சங்கம் (1990- 2002) என்பனவற்றின் செயலாளராகவும் தனது பணியினை ஆற்றி யதால் சமுகநிறுவனங்கள் தம்மளவில் செழித்தோங்கிக் கலை இலக்கிய சமய வரலாற்றில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளன. 

சொக்கன் என்ற இந்தப் படைப்பாளியை உருவாக்கியவர்க ளென அவர் இன்றும் நன்றியுடன் நினைவு கூரும் நாடகாசிரியர், நடிகர் அமரர் எஸ்.பி. நாகரததினம், அமரர் சு.சுப்பிரமணியம், கட்டுரை யாளரான த. இராஜகோபாலன், சொக்கனின் நண்பராக விளங்கிய அமரர் கவிஞர் மதுரகவி இ.நாகராஜன், இலக்கியக் கலாரசிகர் சோ. இராமச்சந்திரஐயர், ஈழத்தின் இலக்கிய கர்த்தாக்கள் பலரை உருவாக்கக் காரணராக விளங்கிய அமரர் இராஜஅரியரத்தினம், அமரர் பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை எனப் பெருமக்கள் கூட்டத்தை இன்றும் போற்றி வருகின்றார். தாமே சுயமென்று ஏற்றி விட்ட ஏணியைத் தள்ளிவிடும் கலை இலக்கியவாதிகளிடையே சொக்கன் தன்னை உருவாக்கியவர்களை மறக்காது நினைவு கூருவது பெருமைக்குரிய பண்பும் பணிவுமாகும். அவ்வகையில் சொக்கனிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் எங்களுக்குள்ளன. 

கலை இலக்கிய உலகில் க.சொக்கலிங்கம் பல்வேறு புனைபெயர்களில் தன்னை இனங்காட்டியுள்ளார். சொக்கன், வேனிலான், திரிபுராந்தகன், ஆராவமுதன், சுடைலையூர் சுந்தரம் பிள்ளை, சோனா, சட்டம்பியார், பேய்ச்சாத்தன், திருஅள்ளுவர், பரிமேலழகியார், தேனீ, கற்றுக்குட்டி, ஞானம், சாம்பவன், எதார்த்தன், பாலன், எனப் பல அவதாரங்களில் எழுதிக் குவித்துள்ளார். 

சொக்கனின் கவித்துவ ஆற்றல் வியப்புக்குரியது கவிதைக்கு ஓசையும் கற்பனையும் மரபுவழிக் கவித்துவ ஆற்றலும் அவசிய மான அம்சங்கள் என்பதைச் செக்கனின் கவிதைகளைப் படிக்கும் போது உணர்ந்து கொள்ள முடியும். மரபு தெரியாமலே மரபை மீறுகின்ற இளங்கவிதையாளர்கள் சொக்கனின் கவிதைகளைப் படிக்க வேண்டும். படித்துப் பார்த்து உணர்ந்தபின் மரபை மீறிப் புதுக்கவிதை படைக்க எண்ண வேண்டும். வீரத்தாய், நசிகேதன், முன்னீச்சரவடிவழ காம்பிகை அந்தாதி, நல்லூர் நான்மணிமாலை, அப்பரின் அன்புள்ளம், நெடும்பா-3, நல்லூர்க்கந்தன் திருப்புகழ், சைவப்பெரியாரின் சால்பை உரைத்திடுவோம் முதலான கவிதை நூல்களின் ஆசிரியர். நெடும்பா – 3 என்பது கதைப் பாடற்றொகுதியாகும். அது இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழை 1986 இல் பெற்றுக் கொண்டது. தமிழும் சைவமும் அவற்றின் தூய்மையும் வளர்ச்சியும் சொக்கனின் தவிதா தரிசனத்தின் உள்ளடக்கமாவுள்ளன. ‘சொக்கன் நூலறி புலவர். ஆகையால் செய்யுள் வடிவம் பற்றிய முழு விளக்கம் அவரிடம் உண்டு. யாப்பின் வழுக்களைச் சொக்கனின் ஆக்கங்களில் காண்பது அரிது. ஓசை வழுக்கள் மாத்திரமன்றி வாக்கிய வழுக்களையும் சொக்கனின் எடுத்துக்களில் காணமுடியாது’ என்பது கவிஞர் முருகையனின் கணிப்பீடாகும். 

கட்டுரையியல் கைவரப்பெற்ற வல்லுநர் சொக்கனாவார். அவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாகும். அவரது கட்டுரைகளின் தொகுப்புகளாகப் பத்துத் தொகுதிகள் வரையில் வெளிவந்தள்ளன. அவை பொதுவிடயங்கள், ஆய்வுகள், பாடநூல் வழிகாட்டிகள் எனப் பல்வகைப்பட்டன. அவை பாரதி பாடிய பராசக்தி, பைந்தமிழ், வளாத்த பதின்மர், நல்லை நகர் தந்த நாவலர், சேர் பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். தமிழ்ப் பேரன்பர் வித்துவான் வேந்தனார். படிப்பது எப்படி?, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியவரலாறு, விபுலானந்தக் கவியமுதம், இருபெரும் நெறிகள், இலக்கணத்தெளிவு, இந்துநாகரிகம் எனப் பலவாறாக விரியும். ‘நீண்ட காலமாக ஈழத்தில் நிலைத்து வரும் சமய மரபினைத் தமது காலத்தில் தொடர்ந்து பேணும் வகையிலும் சமயக் கருத்தக்களை யாவரும் விளங்கும் வகையிலும் எழுதச் சொக்கனால்தான் முடியுமென்பது பேராசிரியர் ப.போபாலகிருஷ்ணன் கருத்தாகும். சொக்கனின் ஈழத்துத்தமிழ் நாடக இலக்கிய வரலாறு மிக ஆழமான ஆய்வு நூல் 1978 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசினைப் அது பெற்றுக் கொண்டது. 

நாடகங்களை நடிப்பதற்கும் படிப்பதற்முரிய கலை இலக்கிய மாக எழுதிய நாடகாசிரியர் சொக்கனாவார். வரலாற்றுக் கதாபாத்திரங் களையும் இலக்கியக் கதாபாத்திரங்களையும் தன் நாடகப்பிரதி களில் உயிரோட்டமாக நடமாடவிட்டவர் சொக்கனாவார். பொதுவாக அவரது வரலாற்றுப் படைப்புகளில் அழகு தமிழும் கம்பீரமான தமிழும் செந்தமிழும் விளையாடும். அலுப்புக்களைப்பின்றி ஆற்றொழுக்காகத் தமிழைத் தன் நாடகங்களில் உரையாட விட்டு ள்ளார். சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக்காவலன், தெய்வப்பாவை, மாருதப்புரவல்லி, மானத்தமிழ் மறவன் என்பன அவரது நாடக நூல்களாகும். இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழுவின் முதற்பரிசினை 1960 இல் சிலம்பு பிறந்தது என்ற நாடகப் பிரதியும், 1961 இல் சிங்ககிரிக்காவலன், என்ற நாடகப்பிரதியும் பெற்றுக் கொண்டன. மானத்தமிழ்மறவன் என்ற நாட்டுக்கூத்து நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இன்னொரு நூலாகும். துரோகம் தந்த பரிசு என்ற நாடகத்தினை எனது மாணவக் காலத்தில் தினகரன் வாரமலரில் வாசித்து வியந்துள்ளேன். 

ஈழத்து நாவல் வரலாற்றில் சாதியத்தினைக் கருவாகக் கொண்டு முதன் முதல் நாவல் படைத்த பெருமை சொக்கனுக்கே யுரியது. அவரது ‘சீதா’ அவ்வாறு சிறப்புப்பெறும் நாவலாகும். செல்லும் வழி இருட்டு, ஞானக்கவிஞன், சலதி என்பன சொக்கன் படைத்தளித்த நாவல்கள். சலதியில் அன்னாரின் உரைநடை மிகவும் என்பன மிக கம்பீரமானது. வர்ணனைகள், உரையாடல்கள் எளிமையாகவும் அதே வேளை கவிதைக்குரிய ஓசையும் கற்பனை வளமும் கொண்டவையாகவும் விளங்குகின்றன. சலதி நாவல் இலங்கை இலக்கியப்பேரவையின் பரிசினை 1987இல் பெற்றுக் கொண்டது. சத்தியஜித்ரேயின் ‘பத்திக்சந்த’ சொக்கனால் தமிழாக்கப்பட்டுள்ளது. ஈழத்து வாசகனுக்குப் புதியதொரு களத்தை அது அறிமுகப்படுத்தியது. 

ஈழத்துச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் சொக்கன் முன்னோடிச் சிறுகதையாளர்களில் ஒருவராவார். பழைய இலக்கியப் பரிச்சயமும் நவீன இலக்கியத் தெளிவும் கொண்டவர். அதனால் அவரது சிறுகதைகளில் அவ்வாற்றல் காணப்படும். வீரகேசரியில் 1944இல் அறிமுகமாகும் சொக்கன். அதனைத் தொடாந்து ஈழகேசரியில் கனவுக்கோயில் கவிஞன் பலி. குட்டைநாய், மாணிக்கம், கற்பரசி, தீர்ப்பு, கூனல், பனித்துளி, தாமரையின் எக்கம், மறுபிறவி, காதலும் உரிமையும், வினோதநண்பரர். பிள்ளைப்பாசம் முதலான சிறுகதைகளைப் படைத்துள்ளார். ‘மறுமலர்ச்சி’யில் பொன்பூச்சு என்றொரு சிறுகதை வெளிந்துள்ளது. இவை ஆரம்பச் சிறுகதை களாயினும் அக்கால கட்டத்தில் பலராலும் விதந்துரைக்கப்பட்ட கதைகளாகவுள்ளன. கனவுக்கோயில், கவிஞன்பலி, ஞாபகச்சின்னம், தீர்ப்பு, கற்பரசி ஆகியன சரித்திரக் கதைகளாகவும் ஏனையவை சமுகக்கதைகளாகவும் உள்ளன. இவற்றில் கனவுக்கோயில், குட்டைநாய் என்பன குறிப்பிடத்தக்கவை. தனது பதினான்காவது வயதில் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் காலடி எடுத்து வைத்த சொக்கன் இன்றும் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்ர். ‘பழைய எழுத்தாளர் சோ.சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர் கோன், சு.வே.வரதர், கனக செந்திநாதன் வரிசையில் சொக்கன் இடம் பெற்றவர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக்ஜீவா சந்ததியோடு ஒன்றானவர். அதைத் தொடாந்து யோகநாதன் பெனடிக்பாலன், செங்கைஆழியான், செம்பியன் செல்வன் காலத்தில் அவர்களுடன் நின்றவர். இப்போதும் புதிய இளமையுடன் எழுதிக் கொண்டிருப்பவர்’ எனப் பேராசிரியர் நந்தி குறிப்பிட்டமை முற்றிலும் ஏற்புடையதே ‘நல்ல சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டுமென்று யாராவது கேட்டால் அதற்கு வரைவிலக்கணம் தேடி மண்டையை உடைத்துக் கொண்டிராமல் சொக்கன் எழுதிய தபாற்காரச்சாமியார், குரு, ஆசிரியர், பிரியாவிடை, இருவரும் அழுதனர், உறவுமுறை போல இருக்கவேண்டும் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். எனச் சொக்கனின் ‘கடல்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கான விமர்சனத்தில் ‘சிற்பி’ குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடாத சொக்கனின் சிறுகதை களில் ‘கடல்’ மிக முக்கியமானது. இச் சிறுகதைத் தொகுதி 1972 ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சாகித்யமண்டலப் பரிசிற்குரிய தாகியது. கதாசிரியரின் படைப்பனுபவத்தினையும் சமுகப்பார்வையையும் ஆழமாகப் புலப்படுத்தும் சிறுகதை கடலாகும். அச்சிறு கதைக்காகச் சொக்கன் என்றும் பேசப்படுவார். 

சொக்கன் பல்வேறு பரிசில்களும் விருதுகளும் பெற்றுத் தன் இலக்கிய ஆளுமையை நிலைநாட்டியவர். கடைசி ஆசை (1946) மின்னொளிச் சஞ்சிகையின் சிறுதைப் போட்டியில் முதற்பரிசி னையும், தபாற்காரச் சாமியார் (1966) வீரகேசரிச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசினையும் தமதாக்கிக் கொண்டவை. ஸ்ரீலஸ்ரீஆறு முகநாவலர் சபை ‘தமிழ்மாமணி’ என்ற பட்டத்தையும், இந்து கலாசார அமைச்சு ‘இலக்கியச்செம்மல்’ என்ற பட்டத்தினையும், நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தானம் குகஸ்ரீ என்றபட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கியக் கலாநிதி என்ற பட்டத்தையும் இலங்கை அரசின் கலைக்கழகம் சாகித்தியரத்தினம் விருதையும் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு ஆளுனர் விருதையும். வழங்கித் தம்மைக் கௌரவப்படுத்திக்கொண்டன. 

இந்தப் பிண்ணனியில் ‘செக்கனின் சிறுகதைகள் என்ற இப் புதிய சிறுகதைத் தொகுதியை நோக்க வேண்டும். இத்தொகுதியில் 1986-2004 காலகட்டத்தில் ஆக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன. படைப்பாளி தன் வாழ்க்கையில் சந்தித்த மாந்தரின் வாழ்வுத் துயரங்களும் தன் வாழ்வில் சந்தித்த உறவுப் பிரச்சினை களும் துயரங்களும் அவமானங்களும் அவனையறியாமல் அவன் ஆழ்மனதில் நிரம்பிக் கனக்க வைக்கின்றன. அந்த அழுத்தத்தை மனதிலிருந்து இறக்கி வைக்கச் சொக்கன் என்ற படைபாளனுக்குதக் தெரிந்த வழி எழுததில் இட்டு இறக்கி விடுவதுதான். சொக்கனின் இச்சிறுகதைகளின் மூலாதார உள்ளடக்கமாகவும் கருப்பொருளாகவும் அமைந்த முதியோரின் துயரங்கள் சிறுகதைகளாக மாறி வாசகனின் மனதினைக் கனக்க வைத்து விடுகின்றன. சொக்கனின் மனப்பாரங்கள் இச்சிறுகதைகளைப் படிப்போரின் மனப் பாரங்களாக ஏறிவிடுகின்றன. 

இவ்விடத்தில் சொக்கனின் படைப்பனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றது. அது படைப்பின் வெற்றி. முதியோர்களுக்கு இவ்வளவு துயரங்களா? பதினான்கு வயதில் சிறுகதைத்துறையல் சொக்கன் என்ற முதிரா இளைஞனின் இனிமையான கனவுகளும் பரந்த உலகமும் அவர் சிறுகதைகளில் விரிந்திருந்தன. ஆனால் எழுபத்தைந்து அகவையடைந்து பவளவிழாக் காணும் சொக்கனின் இன்றைய சிறுகதைகளில் அனுபவ முதிர்ச்சியையும் சமுகத்தின் தவறான நடத்தைகளையும் அவற்றினை மிகுந்த இரக்கத் தோடு நோக்கிக் கவல்கின்ற உணர்வுகளையும் காணலாம். சமுகத்தி னையும் உறவகளையும் அவர் வையவில்லை. இவ்வாறு நடக்கக் கூடாது. எவ்வாறு நடக்கவேண்டும் எனச் சுட்டுகிறார். 

இணைந்து வாழ்ந்து வரும் மனைவியின் மரியாதைக் குறைவான ஏச்சுக்கள், குடும்பத்திலும் சமுகததிலும் எதிர் கொள்ளும் அவமானங்கள் அதனால் மரணத்தினை எதிர்கொள்ளத் தயாராகும் ஒரு முதியவரின் மனப்பக்குவத்தினை உள்ளத்தை உருக்கும் வகை யில் ‘அழைப்பு’ என்ற சிறுகதையில் சொக்கன் கலைத்துவமாகச் சித்திரித்துள்ளார். ‘மாற்றம்’, ‘கனவுகள் கலையட்டும்’ ஆகிய இரண்டு சிறுகதைகளும் ஆசிரிய உலகத்தின் அவலங்களைக் காட்டி நிற்கின்றன. சுயநல நோக்கொடு செயற்படும் அதிபர்-ஆசிரியர் உறவினை மாற்றம் சித்தரிக்கிறது. பாடசாலையின் ஏழை அதிபர் ஒருவா தன் மூன்று குமர்களைக் கரைசேர்க்கப் படும் பாட்டினை அகவுள உணர்நிலையில் ‘கனவுகள் கலையட்டும்,’ என்ற சிறுகதை விபரிக்கின்றது. அக்கா-தம்பி உறவின் தொப்புள் கொடி உறவின் நெருக்கத்தினைச் ‘சந்திப்பு’ என்ற சிறுகதையும், யுத்தம், இடப் பெயர்வு என்பன ஏற்படுத்திய மானிட உறவின் விரிசலையும் பாசமும் பொறுப்புமில்லாத நடத்தைகளையும் முதியோர் வாழ்க! என்ற சிறுகதையும் சித்திரிக்கின்றன. வீட்டிற்குக் காவலாக எத்தனை முதியவர்களைத் தனியே விட்டு விட்டு எங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓடியிருக்கின்றோம்? உறவின் பெறுமானத் தினைப் புரிந்து கொள்ளாமல் கபோதிகளாக இருந்து விட்டமையைச் சொக்கன் தன் சிறுகதையில் சுட்டி நிற்கிறார். இத்தொகுதியில் வரும் சிறுகதையான ‘கிழவரும் கிழவியும் வாழ்வின் இனிய பக்கங் களையும் துயரப் பக்கங்களையும் இரைமீட்கும் சுய கழிவிரக்கமாக விரிகின்றது. ‘அப்பப்பாவுக்கு அறளை’ என்ற சிறுகதை இத்தொகுதி யின் உச்சமான கதை. கூட்டுமொத்தமாகச் சொக்கனின் இத்தொகுதி முதியோர் பாலான சமுக அலட்சியத்தைச் சுட்டிக்காட்டுவதுடன் எவ்வாறு எமது மனப்போக்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற செய்திகளையும் கொண்டுள்ளது. 

சொக்கனின் எளிமையான உரைநடையும் இலக்கண சுத்தமான வாக்கியங்களும் இத்தொகுதிக்கு மேலதிகச் சிறப்பினைத் தருகின்றன. சிறுகதையை எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டுமென்பதைச் சொக்கன் நன்கு தெரிந்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுதியிலுள்ள கதைகள் உதாரணங்களாகின்றன. சிறுகதையைச் சீராகச் சொல்ல அவரால் முடிகின்றது. பாத்திரவார்ப்பு முரண்படா வகையில் தத்ருபமாக அமைந்துள்ள சிறப்பினைக் குறிப் பிடாமல் இருக்க முடியாது. அவரது சிறுகதைகளில் களமும் சூழலும் வெகு நோத்தியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவருடைய சிறுகதைகள் பெயருக்கெற்ற சிறிய கதைகளாக அமைந்தாலும் ஒரு கலைநேர்த்தி அவற்றில் உள்ளது. முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாக இச் சிறுகதைகளுள்ளன. 

சொங்கையாழியான்
கலாநிதி க.குணராசா
மாநகர ஆணையாளர்
யாழ்ப்பாணம். 

– சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *