விஞ்ஞானி முனியன்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 56,185 
 

அவன் உடலில் அசைவு ஏற்பட்டு… கொஞ்சம் கண் விழித்து மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள… உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர் ராஜசேகரன்….

” வெற்றி ! வெற்றி..! அறுவை சிகிச்சை வெற்றி. இனி விஞ்ஞானி , அறிவாளிகளுக்கு சாவே கிடையாது ! ” என்று தாங்க முடியாத மகிழ்ச்சியில் கூவி குதித்தார்

‘அப்ப்பா..! எவ்வளவு கஷ்டம். உலகிலேயே யாரும் செய்து முடிக்காத முயற்சி ! ‘ – அவருக்குள் பெருமையும் பூரிப்பும் பொங்கி வழிந்தது.

ராஜசேகரன்…… தன் ஆராய்ச்சிக்கூட கட்டிலில் படுத்துக் கிடக்கும் அவனை மறுபடியும் பார்த்தார்.

‘ இனி இவன் சாதாரண ரிக் ஷாக்கார முனியனில்லை. பழம்பெரும் விஞ்ஞானியின் மூளையைப் பொருத்திக் கொண்டிருக்கும் இளம் விஞ்ஞானி முனியன். ! ‘ -என்று நினைக்க…

மனம் சட்டென்று மறுத்தது.!!

‘ விஞ்ஞானி என்று அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக் கூடாது. அறுவை சிகிச்சைதான் வெற்றியே ….. ஆள் விஞ்ஞானியா இல்லையா என்பதை அவன் செய்கை , செயலை வைத்துதான் முடிவு செய்யவேண்டும்.’ மறுத்த மனம் முட்டுக்கு கட்டைப் போட்டது.

‘ ஆம். அதுதான் சரி . ‘ – நினைத்துக் கொண்டார்.

பல கண்டுபிடுப்புகளைக் கண்டு பிடித்து மருத்துவ உலகில் வெற்றிக் கோடி நாட்டிய 80 வயதான பெரிய ஜெர்மனிய விஞ்ஞானி இறந்து போனதைக் கேள்விபட்டப்போதுதான் அவருக்குள் இந்த புதிய எண்ணமே தோன்றியது

‘ வயோதிகத்தைக் காரணம் காட்டி….. மரணம் இப்படிப்பட்ட பெரிய பெரிய விஞ்ஞானிகளைக் கபளீகரம் செய்துகொள்ள… அவர்களின் அறிவும் சக்தியும் அதற்குமேல் பயன்படாமல் மண் திண்றுவிட்டுப் போகிறதே ! உடல் வயோதிகத்தால் தளர்ந்து வலுவிழந்து போனாலும் மூளை அப்படியேத்தானே திறன் அழியாமல் இருக்கும். இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைப்பதைப்போல் மூளையையும் அப்படி மாற்றி அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாலென்ன..? ‘ இப்படித் தோன்றியது ராஜசேகரனுக்கு .

அவ்வளவுதான் !!

அதன் பிறகு…. அந்த ஆராய்ச்சியில் தன்னுடையக் கவனத்தை முழுமையாக செலுத்தினார்.

எவ்வளவோ சோதனைகள். என்னன்னவோ கஷ்டங்கள்.

முடிவில்…. வயதான குரங்கின் மூளையை எடுத்து இளம் குரங்கிற்குப் பொருத்தினார்.

வெற்றி ! !

அப்போததுதான் அமெரிக்காவில்…… மருத்துவ உலகில் சாதனைப் படைத்த லூயிசுபிராங்கிளின் என்ற பழம் பெரும் விஞ்ஞானி வயோதிகத்தால் மரணத்தின் பிடியில் இருக்கிறார் என்கிற செய்தி இவருக்கு கிடைத்தது.

லூயிசுப்பிரங்களின் மருத்துவ உலகில் சாதித்தது அதிகம்.

ராஜசேகரனும்…. கான்பரன்ஸ் அது இதுவென்று நிறைய தடவைகள் அவரைச் சந்தித்திருக்கின்றார். ஆனால் பழக்கமில்லை.

இவரின் ஆராய்ச்சி மூளை…..

‘ இந்த விஞ்ஞானியின் மூளையைத் தன் பரிசோதனைக்குப் பயன்படுத்திக் கொண்டாலென்ன..? – தோன்றியது.

உடனே செயல்பட்டார்.

அமெரிக்காவிற்குச் சென்றார்.

ஆளைப் பார்த்தார். உயிர் பிழைக்க மாட்டாரென்பது நிச்சயமாகத் தெரிந்தது. நல்ல வேலையாக அவரின் உடல் மருத்துவத்திற்குப் பயன்படவேண்டுமென்று எழுதி வைத்திருந்தது இவருக்குச் சாதகமாக இருந்தது.

அவரது மனைவி, மக்களிடம்….. தன் அராய்ச்சியைச் சொல்லி இறந்தவுடன் அவர் மூளையை எடுத்துக் பயன்படுத்திக் கொள்வதாக வேண்டினார்.

அவர்களும் சம்மதித்தார்கள்.

ஆனாலும்….

அமெரிக்க விஞ்ஞானிகள் , ”அப்படியெல்லாம் ஒன்றும் முடியாதென்று ” மறுக்க , அவர்களிடம் தன் குரங்கு ஆராய்ச்சியைப் பற்றியும் அது அடங்கிய கோப்புகளையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தி , லூயிஸ் பிராங்க்ளினை அந்த நிலையிலேயே தன் ஆராய்ச்சிக்கூடத்திற்கு இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்

இங்கு …அரசின் அனுமதி பெற்று, விபத்தில் கோமா நிலையிலிருக்கும் இளம் ரிஃஷாக்கார முனியனை பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பிராங்க்ளின் இறப்பிற்காகக் காத்திருந்தார்.

லூயிசுபிரான்களின் இறந்த அடுத்த வினாடியே வேலையை ஆரம்பித்து …ஆறாவது நிமிடமே அவரின் மூளையை அறுவை சிகிச்சை செய்து முனியன் தலைக்குள் பத்திரமாக வைத்தார்.

அது வெற்றியாகிவிட்டது.

இனி முனியனின் நடவடிக்கைகளை வைத்துதான் அவன் விஞ்ஞானியா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அதற்கும் அவர் ஒரு மாதம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

காத்திருந்தார். அந்த நாளும் வந்தது.

தூக்கத்திலிருந்து விழித்ததவனைப் போல கண்விழித்த முனியன் சுற்றும் முற்றும் பார்த்து….

” நான் எங்கே இருக்கேன்..?… இது என் ஆராய்ச்சிக்கூடம் இல்லையே …? ” என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்க…

‘ அப்பாடி ! விஞ்ஞானிதான் ! மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ! ‘ – சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனார் ராஜசேகரன்.

நடந்ததை அப்படியே அவனிடம் சொன்னார்.

தன் உடலைப் பார்த்து ஆர்ச்சரியப்பட்ட பிராங்க்ளின்.. …நம்ப முடியாத சொந்தோசத்தில் ” திஸ் இஸ் கிரேட் ! ” அன்று அவரை ஆரத் தழுவினார்.

அதே மகிழ்ச்சியில் ……

” நான் வீட்டுக்குப் போகணுமே.. ! ” என்றார் .

” சார் ! நீங்க செத்துட்டீங்க உடல் இரவல். மூளை உங்களுடையது. ” என்றார் ராஜசேகரன் .

” தெரியுது சார். நான் என் மனைவியைப் பார்த்து இந்தச் சந்தோசத்தைச் சொல்லியாகணும் ! ” என்றார் அவர்.

” நியாயம்தான். ஆனாலும் முடியாது ! ”

” முடியும். முடியானும் !! ” பிடிவாதம் பிடித்தார்.

ராஜசேகரனுக்கு வேற வழி இல்லை.

ஆளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார்.

வீட்டில்….. அவரது அறுபது வயது மனிவியிலிருந்து பிள்ளைகள் பேரன் பேத்திகள் வரை அவரை அதிசயமாகப் பார்த்தார்கள்.

ஆனாலும் ஒருவர் கூட இவர் அருகில் வரவில்லை, நெருங்கவில்லை.

முனியன் விஞ்ஞானிக்கு இதயம் வலித்தது.

ராஜசேகரன் அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்தார்.

‘ தன் முன்னாலேயே தன் குடும்பத்தை இழப்பதாவது… ‘ பிராங்க்ளின் ( முனியன் விஞ்ஞானி ) நார்மலாக இல்லை.

எதையோ இழந்துவிட்ட சிந்தனை. அதிக நேர யோசனைக்குப் பிறகு ராஜசேகரனை அழைத்தார்.

” தயவு செய்து என்னைக் கொன்னுடு..! ” சொன்னார்.

” ஏன் ..? ” இவர் பதறினார் .

” என்னால என் குடும்பத்தை நினைக்காமலிருக்க முடியல ராஜசேகரன்… !” கண்ணீர் துளிர்க்கச் சொன்னார்.

” சார் ! நீங்க மறுபடியும் இந்த உலகத்துக்குப் பயன்படணுமேன்னுதான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். ”

” இல்லை ராஜசேகரன் என் குடும்பம் என்னை நிராகரிச்சதை நினைச்சு என்னால வருத்தப் படாமலிருக்க முடியலை . என் மனசும் மூளையும் என் குடும்பத்தையே சுத்தி சுத்தி வந்து வருத்தப்பட வைக்குது. இந்த சூழ்நிலை மாறாமல் என்னால் ஆராய்ச்சியில் வெறும் எந்திரமா ஈடுபட முடியாதுன்னு எனக்கே நல்லாத தெரியுது ” மெல்ல சொன்னார்.

” டாக்டர் நீங்க…”

” இல்லை ராஜசேகரன் என்னால் முடியாது. இந்த உயிர்ப்பில் நிறைய சிக்கலிருக்கு. உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன். இப்போ என் மனைவி என்னை நிராகரிக்கிறதுக்குக் காரணம் .. இது இன்னொருத்தருடைய உடல். என்னவர் இல்லை. என்கிற நினைப்பு. அதுதான் உண்மை. இதை விலக்கி நாங்க வாழ்ந்தாலும் எனக்கு இப்போ இருபது வயசு . அவளுக்குள் அறுபது வயசு. சரி பட்டு வருமா.?? . இப்படி நிறைய சிக்கலிருக்கு. இதையெல்லாம் ஒதுக்கிட்டு என்னால ஆராய்ச்சியில ஈடுபடமுடியாது. உன் ஆராய்ச்சி கிரேட்தான். ஆனாலும் இது சரி பட்டு வராது ” திடமாய்ச் சொன்னார்.

‘ ஓ…. இப்படியெல்லாம் சிக்கலிருக்கிறதா..? ‘ நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது ராஜசேகரனுக்கு.

புரட்டிப் புரட்டி சிந்தித்தார்.

முடிவு சரப்படாதென்றே தோன்றியது.

மெல்ல எழுந்தார் . ஊசியை எடுத்தார். அந்த மருந்தை அதில் அடைத்து முனியன் உடலில் செலுத்தினார்

முனியை விஞ்ஞானி நிம்மதியாக கண்களை மூட….

அவருக்கு இதயம் வலித்தது. !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *