க.நா.சுப்ரமண்யம்

 

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam, கந்தாடை சுப்ரமணியம், ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.

தலைப்பு: தஞ்சைச் சிறுகதைகள் தொகுப்பாளர்: சோலை சுந்தர பெருமாள்
வலங்கைமானில் பிறந்த க.நா.சுப்ரமணியம் சுத்தமான தஞ்சாவூர்காரர். நவீன தமிழில் கலை கலைக்காகவே என்ற கோஷத்தை முன் வைத்தவர். நாவலாசிரியராகவும், சிறுகதையாசியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும் பெயர் எடுத்தவர். பதினைந்து தமிழ் நாவல்கள் எழுதியவரின் சிறந்த படைப்பாக பேசப்படுவது ‘பொய்த்தேவு’ ‘அசுரகணம்’ இவ்விரண்டுமே. இவர் நாவல்கள் எல்லாமே சோதனைப் படைப்புகளே. மனித உணர்வுகளை மையமாகக் கொண்டனவே. மருட்சி தந்தாலும் மதித்துப் போற்றத்தக்கன. தெய்வ ஜனனம், ஆடரங்கு, கருகாதமொட்டு ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும் குறிப்பிடத்தக்கன.

ஆங்கிலத்தின் மூலம் ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களையும் படித்து அவற்றில் ஈடுபாடு கொண்ட க.நா.சு அன்றைய சூழ்நிலையில் தம்மைப் போன்றவர்கள் தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதைப் பார்த்துத் தாமும் எழுதலாமே என்று சிறுகதைகள் எழுதத்துணிந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். அவருடைய நண்பர் மெளனியைப் பின்பற்றி புதிய உத்திகளுடன் புதிய கதைப்பொருள்களையும் கையாளும் சோதனைகளையும் க.நா.சு செய்து பார்த்திருக்கிறார். ஆனால் இவரது முயற்சிகளில் மேனாட்டு இலக்கியச் சாயல் அப்பட்டமாகத் தலைதுாக்கி நின்றதால் தமிழ்ச் சிறுகதை வகையில் அவற்றைப் பொருத்திப் பார்க்கும்போது இவருக்கு முந்தியவர்களின் இலக்கியத் தரத்தை இவரிடம் காண முடியவில்லை…” என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுகிறார்கள்.

மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களில் பிறநாட்டு இலக்கியப் பாதிப்பில் தமிழ்நாவல், சிறுகதைத் துறைக்கு விமர்சனக் குரல் கொடுத்து அதை வளர்த்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவ்வளவு இருந்தும், முற்போக்கு இலக்கியத்தை நேர்மையாக எதிர்கொள்ளாமல் ஓரவஞ்சனையாக எதிர்த்த கொள்கையே அவருக்கு மிகப்பெரிய பலகீனமாக அமைந்தது என்று துணிந்து சொல்லமுடியும்.
அவருக்கு இன்றைக்கும் சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது யோசிக்க முன்வருவார்களா?

சிறுகதைத் தொகுப்புகள்

  • அழகி முதலிய கதைகள் (1944)
  • ஆடரங்கு (1955)
  • இரண்டு பெண்கள்(1965)
  • க.நா.சு. கதைகள், மி,மிமி,மிமிமி (1988)
  • கருகாத மொட்டு (1966)
  • சுந்தாப்பாட்டி சொன்னாள்
  • தீ! தீ!
  • தெய்வ ஜனனம்’ (1943)
  • தோள்
  • நாயக்கர் தஞ்சை
  • பதினேழு கதைகள்
  • பெண்மனம்
  • மணிக்கூண்டு (1961)
  • மராட்டியர் தஞ்சை

க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம் – ஜெயமோகன் அக்டோபர் 4, 2012
https://solvanam.com/2012/10/04/%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *