வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 11,165 
 

திலகபாமாசின்னஞ்சிறிய வீடுதானென்றாலும் தனிமை வீட்டை நிறைத்து என்னையும் அழுத்திக் கொண்டிருந்தது. .தனிமை தவிர்க்க நினைத்து தொலைக்காட்சியைப் போட்டு விட நிகழ்ந்து கொண்டிருந்த எந்தவொரு நிகழ்வும் திருப்தி தராததால் தானியக்கி மூலமாக எல்லாவற்ரையும் ஓட விட்டேன். எல்லாவற்றிலும் கும்பல் கும்பலாக வந்து ஆடினார்கள் அழுதார்கள், சிரித்தார்கள் தேவையில்லாது பேசினார்கள். மொத்தத்தில் வெறுப்பு பற்ற ஓங்கி அழுத்தி நிறுத்தி விட்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன். கவனத்துடன் செய்திருந்த சமையல் மேசை மேல் இருந்தது. நேற்று வரை வீட்டில் இருந்த விருந்தினர் கலவரம் நேற்று மாலையோடு காணாமல் போயிருக்க காலையிலெல்லாம் வீட்டை ஒதுங்க வைத்தபடி இருந்தேன். கல்யாண மண்டபத்திலிருந்து கொண்டு வந்து போட்டிருந்த சாமான்கள் அப்போதைக்கு என்று சம்பந்தமில்லாத இடங்களில் உட்கார்ந்திருந்தது.. அப்போதைக்கு எனறு தீர்மானிக்கப் படுகின்ற நிகழ்வுகளின் வலிகள் எனக்கு மட்டுமே தெரியும். என்பதால் உடனே சரிப்படுத்திவிட மனது துடித்தது.

இதையாவது சரிப்படுத்தலாமே என்றும். உறவினர்கள் உதவி செய்ததாய் சொல்லப் பட்டு மாறி மாறி திணிக்கப் பட்டிருந்தது எரிச்சல் தந்தது. சடாரென பார்க்கையில் பளீரென தெரிந்த வீடு , அலமாரிகளுக்குள் தெளிவில்லாது குழைந்து கிடந்தது.. எது எங்கே இருக்கு என்று கண்டு பிடிக்கவே குழப்பமாக இருந்தது. .இடம் மாறி இருந்தது பொருட்கள் மட்டுமல்ல. உதவிகள் என நினைத்தது உபத்திரவமாய் மாறி இருப்பது மீண்டும் மீண்டும் உறுத்தியது. எவர் சிலவர் பாத்திரங்களுக்கு இடையில் வைக்கப் பட்டிருந்த சீர் கொண்டு சென்ற தட்டுகள் எடுத்து தனியாக அதற்கென இருந்த உயர அலமாரியில் வைக்க, ஒரு மூடையில் எல்லா காய்கறிகளும் கலவையாக இருக்க பிரித்து ஒதுக்கி பைகளில் போட்டு பத்திரப் படுத்தினேன். இன்னொரு மூடையில் சமையலுக்கு பயன்படுத்திய பலசரக்குகள் ஒன்றோடொன்று கொட்டி கலந்து கிடக்க தனது ஆச்சியின் நினைவுகளோடு சொளகில் தட்டி கடுகு, உளுந்து ,சீரகம் எனப் பிரித்து அடுக்கினேன்.

ஐந்து குடும்பங்கள் ஒன்றாய் இருந்த கூட்டுக் குடித்தனத்தில் வசிக்க நேர்ந்த ஆச்சி வீட்டில் பெண்கள் சும்மா இருந்தால் பிரச்சனை வருமென்று அவரது மாமனார் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் எல்லாம் ஒன்றாய்த் தட்டி பிரித்து வைக்கச் சொல்லிப் போனதாய் ஆச்சி பேசியது நினைவுக்கு வந்ததை நினைத்துக் கொண்டாள். தனக்கும் அந்தப் பயிற்சி உதவும், தனியே இருப்பதை மறக்க அதுபோல் பலமுறை தானும் கலந்து பின் , பிரித்து வைக்கலாம். மாறிப் போன சூழலின் பின்னும் மாறாத நடவடிக்கைகள் காரணங்களோ வேறு, நினைக்க பெருமூச்சு உதிர்ந்தது .

நினைவுகளை தட்டி விடும் போது எல்லாம் ஒதுக்கி முடித்திருந்தேன் . வேலைகளில் மூழ்கி இருந்தவரை ஒன்றும் தோன்றவில்லை. இப்போ எல்லா வேலையும் முடிந்த பிறகு அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற மலைப்பில் தனிமை என்னுடனிருப்பதை உணரத் தொடங்கினேன். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே என்னுள் அவஸ்தை ஆரம்பமானது

குளிர்சாதனப் பெட்டியின் மேலேயிருந்த மகள் தீபாவின் படம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இனிமேல் அதுதான் தீபா. இதுவரை படமாயிருந்த நிழற்படம் இனிமேல் அதுதான் மகளாயிருக்குமோ? படத்தில் இருந்த தீபா சிரிப்பது போல் தோன்றவே தலையை உலுக்கிக் கொண்டேன்.

“.சே இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரிவில்லையே.” தீபாவின் திருமணம் பெரியதொரு பிரிவையோ, தனிமையையோ கொண்டு வந்து விட முடியாது என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் ஏதேதோ நினைவுகள்.

நினைவுகள் 20 வருடங்களுக்கு பின்னால் என்னை இழுத்துச் செல்ல அந்த இருட்டு அறையில் இருந்து வந்த அழுகை ஒலியும் , தொடர்ந்து நான் தோள் தொட , வெளி வந்த மழலைக்குரல் இன்று போல் ஒலித்தது.

“கல்யாணம் பண்ணிக்கப் போறியா அம்மா ?” ஏற்கனவே நடந்து கொண்டிருந்த குழப்பங்களில் திணறிப் போயிருந்த நான் இப்போழுது சடாரென முடிவுக்கு வர இந்த கேள்வி ஒரு காரணமா ஆயிட்டது

“இல்லைம்மா , அம்மா கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை ‘

சொன்ன பதிலைத் தொடர்ந்து அவள் என் கழுத்தைக் கட்டிக் கொள்ள நான் திணறினேன்.

எல்லாவற்றையும் துறந்து விட்டதாய் மனசு வைராக்கியத்தைச் சுமந்து நின்றாலும் ஸ்பரிசங்களுக்காக ஏங்கிய உடல் ஒன்று விழித்துக் கொண்டு இருப்பதை மகளின் பிஞ்சு ஸ்பரிசங்கள் சொல்லிப் போக நானும் இழுத்து அணைத்துக் கொண்டேன். உள்ளே கொழுந்து விட்டெரிந்த ஜுவாலை ஒன்று என்னையே எரித்துக் கொண்டிருந்தது..

வீட்டில் எழுந்து கொண்டிருந்த விவாதங்களுக்கு மகளின் கேள்வி அப்போதைக்கு விடை தந்தது போல் தோன்றினாலும் , தொடர்ந்து நிறைய சிக்கல்கள் வரப் போவதை அறியாது அப்போதைக்கு அந்த பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தேன். கழுத்தை கட்டிக் கொண்டு மகள் தூங்கிப் போயிருந்தாள். ஏதேதோ மனம் தேடிக் கொண்டிருக்க தூங்க முடியாது நான் , தேடல்களின் நுனி கிடைக்காது தடுமாறியபடி இருந்தேன்.

ஓடிப் போயிருந்த காலங்கள் நினைவில் வந்து குத்தத் தொடங்கி இருந்தன .பாடங்கள் ,படிப்பு பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொண்டவளில்லை. நான். கல்லூரிப் படிப்பு கௌரவமாகக் கருதப் பட்டிருந்த கால கட்டத்தில் இருந்தேன் அப்போது. கல்யாண வரனோ, வயசோ வருகிற வரை காத்திருக்கும் இடமாக கல்லூரி மாறியிருந்தது. எனக்கே படிப்பு மீதான நம்பிக்கைகள் தொலைந்து போயிருந்தன.

கல்யாண வரனும் சரி, வயசும் சரி வந்து வந்து போய்க் கொண்டு இருந்தன. செவ்வாய் தோசமும் தோற்றப் பொலிவின்மையும் என் வயதைக் கூட்டிக் கொண்டிருந்தன. கல்யாணக் கவலை தோன்றாத என்னுள் தோன்ற வைக்க சுற்றியிருந்தவர்கள் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். துர்க்கையம்மன் கோவிலில் இட்ட எலுமிச்சை விளக்கோ, மார்கழி மாதத்தில் அரசரடிப் பிள்ளையாருக்கு எடுத்து ஊத்திய மஞ்சத் தண்ணியோ வரனை கூட்டி வந்ததாக எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்க, தந்தையின் பணம் எல்லாவற்றையும் சரிக்கட்டியது நிதர்சனமாய் தெரிந்தாலும், தெரியாததாய் எல்லோரும் காட்டிக்கொண்டார்கள். நானும் கல்யாணப் பெண்ணானேன் .என்ன காசுக்கேத்த நல்ல பொருள்தானா என்று ஒடித்தோ உரசியோ பார்க்க முடியாதிருந்தது. எல்லாரையும் போல எல்லாவித சந்தோசங்களும் கற்பனைகளும் நிறைந்த மனதுடன் திருமணம் முடிந்து மறுவீடு போய் வளைகாப்பு நடக்கும் வரை எல்லாம் சந்தோசமாகத்தானிருந்தது.

பிரசவத்திற்காக நான் வந்திறங்கிய அம்மாவீடே காலமெல்லாம் எனக்காக என்று மாறிப் போகும் என்று நினைத்திராது சந்தோசமாகத் தான் வந்து சேர்ந்திருந்தேன். பிள்ளை, கயிறு கட்டி, கையிலெடுத்து நான் வாசலில் நிற்க எடுத்த ஆரத்தியில் சூடு அப்போது நான் அறியாதிருந்தது. வைத்த பொட்டு கறையாக மாறுமென்பது உணராததாயிருந்தது. ஆரம்பத்தில் மாற்றங்கள் கண்ணில் புலப்படவில்லை என்றாலும் தொடர்ந்து என்னையும் அவர்களால் முட்டாளாக்க முடியாததாயிருந்தது வீட்டிற்கு அடிக்கடி வந்து போன அவரது அத்தை மகள் நான்கு மாதங்களில் நான் விட்டுச் சென்றிருந்த இடத்தை நிரப்பியிருந்தாள்

அதிர்ச்சியில் நான் அதிர்ந்து கேட்க “ ஆமாம் அனுசரிச்சு போகப் பழகிக்கோ” பதில்கள் நெருப்புத் துண்டங்களாய் விழுந்தன. நெருப்புத் துண்டங்களை அணைய விடாது ஊதி நெருப்பாக்கி எரிந்தாள். இருவீட்டார் மோதலில் எனக்கு அம்மா வீடே நிரந்தரமானது.. வசதிகளுக்கு குறைவில்லாத வாழ்வென்றாலும் எங்கோ தனிமை எனை வெறுமையாக்கிக் கொண்டிருந்தது. அவங்க வீட்டிலிருந்து எல்லாமும் எடுத்து வர என் வீட்டார் போராடி ஜெயித்தனர். ஜெயித்ததாக சொல்லிக் கொண்டனர். இடைஞ்சல்கள் இல்லாது எனது கணவராயிருந்தவரின் வாழ்க்கை ஆரம்பமாக என் வாழ்க்கை பற்றிய கேள்வி அண்ணன்களிடம்.

“ஏன் தங்கச்சி தனியா இருக்கனும். கல்யாணம் கட்டி வைக்க எங்களால முடியும்” முடியுமென நிரூபிக்க அவர்கள் களத்திலிறங்கிய போதுதான் தீபாவின் கேள்வி எல்லாரையும் நிராயுதபாணீயாக்கி அடித்து வீழ்த்தியது.. இல்லையென்றால் எனக்கும் திருமணமாகி இவர்கள் வீரத்தை காட்டி வென்றவர்களாயிருப்பார்கள். கல்யாணப் பேச்சு நின்று போக தீபாவோடு என் வாழ்க்கை பயணமாகியது

மூத்த தலைமுறைகள் சரிந்து இளைய தலைமுறைகள் பொறுப்புக்கு வர எனைப்பற்றிக் கவலைப் பட்டிருந்த தாத்தா என் மேல் சொத்துகள் எழுதி வைத்த திருப்தியில் போய்ச் சேர, தம்பிமார்களுக்கு கல்யாணமாகி அம்மா காலம் வரை அவர்களோடு இருந்து அம்மா காலத்திற்கு பிறகு தனியா வீடமர்த்தி , தீபா படிப்பில் கவனமாக இருக்க கற்பித்து காலங்கள் சென்றன.

அப்படித்தானொரு நாள் அம்மாவோடு இருந்த காலங்களில் தங்கையை காண வந்த அவளது தோழி. அவர்களுக்கு காப்பி போட அடுக்களை போனேன். திரும்பி வர எனைப் பற்றி பேச்சு ஓடிக் கொண்டிருந்தது, தெரிய கால்கள் ஸ்தம்பித்து நின்றன. வந்தவள் கேட்டுக் கொண்டிருந்தாள் “ அக்காவுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் தானே அதை பத்தி ஏன் நீங்கள் யாரும் நினைக்கவே இல்லை?”

“என்ன செய்யறது சாந்தி? . தீபா உடையுறதை எப்படி சமாளிக்க, ? இன்னைக்கு அக்காவுக்காக கல்யாணம் செய்யலாம். அடுத்த தலைமுறை பாதிக்கப் படாதா? அவளுக்காக வாழ்ந்த அம்மாவுக்காக அவள் என்றும் நன்றியோட இருப்பாள் காலமெல்லாம் நினைப்பாளே.”

“நினைப்பை வைத்து என்ன செய்ய? அக்காவை வேலைக்காவது அனுப்பலாம்தானே. வெளியே போய் வர பலபேரை சந்திக்கும் வாய்ப்பிருந்தாலாவது தனக்கான வாழ்வு பற்றிய சிந்தனை வருமே”

“வேலைக்கு போக வேண்டிய தேவை வரலியே. பார்ப்போம். பேசிக் கொண்டே வாசலில் என் நிழலாட என் சம்பந்த பேச்சை முடித்தனர். அவர்கள் முடித்த இடத்திலிருந்து என் சிந்தனை ஓடியது. எனக்கு ஆசாபாசங்கள் இருக்கிறதா? கேள்வியை சிந்திக்க விடாது குக்கர் சத்தம் கொடுத்து வைக்க இன்று நினைத்து பார்க்கிறேன் ஏன் மேற்கொண்டு அதை சிந்திக்காமல் போனேன்

அன்றொரு நாள் தீபாவிடம் நடத்திய விவாதங்களும் வந்து போனது . நினைவில். இதுவரை அடுத்தவரோட பிரச்சனையை விவாதிச்சோமுன்னு நினைச்சிருந்ததெல்லாம் இப்ப என்னுடையதாய் எனக்கானதாய் தோன்ற ஆரம்பிப்பது ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. தீபா கல்லூரி இரண்டாவது படித்த வருடம் சாப்பாட்டு மேசையில் வழக்கம் போல் பலதும் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

“இன்னைக்கு கல்யாண் குமாரை பார்த்தேன்மா.”

அவள் சாப்பாட்டை பார்த்தபடியே சொன்னாள் எனக்குள் ஒரு திடுக்கிடல். நடந்திருந்த விசயங்கள் எனக்கும் அரசல் புரசலாக காதில் விழுந்திருந்தது. எதுவுமறியாதது போல் “அப்படியா?” என்றேன்.

“ஆமாம்மா ரெண்டு வாரத்துல ரொம்ப ஒடைஞ்சு போயிட்டான். குடிக்க ஆரம்பிச்சுட்டதா அவன் நண்பர்கள் சொன்னாங்க.”

நேரில் பார்த்தவுடன் “ஏன் இப்படி ஆயிட்டேன்னு?” கேட்டேன்.

எனக்கு நடந்த விசயங்களும் , நடந்து கொண்டிருந்த விசயங்களும் தெரிந்திருந்தாலும் தீபாவுக்கு தெரிய வேண்டியதில்லாத விசயம்ன்னு நான் நினைச்சிருந்ததை நினைத்து “ முட்டாளே “ என்று மனசு சொல்லிக் கொண்டது.

என்ன சொன்னான்” அதே அழுத்தங்களூடன் கேட்டேன். ரொம்ப நேரம் அமைதியா இருந்தான். “அழுகிறான்மா’. அழுவதற்கு என்ன இருக்கிறது என்கிற தோரணையில் தீபா சொல்லவும் எனக்குள் பீறிட்டது.

“அழுகாம என்னமா செய்வான்? அவன் அம்மா ஓடிப் போனது தப்பில்லையாம்மா? . ஆம்பிள்ளை எவ்வளவு மனசு உடைஞ்சு போவான் ? தாங்க முடியுமா?”

தீபா தலை தூக்கி பார்த்தாள் இப்போழுது தான் எனை. என் கோபம் கண்களில் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். நெத்தி முடிச்சிட யோசனையுடன் தலை சாய்த்து நாடியில் கைவைத்து என்னையே பார்த்தாள்

“ஆம்பிள்¨ளை உடைஞ்சு போயிடுவான் அப்படிங்கறதுக்காக்க அந்தம்மா தன் மனக்காதலை மறைச்சு வச்சிருந்தா எல்லாருமே சந்தோசமா இருந்திருப்போம் . இருந்திருப்பாங்க இல்லையா?”

“இது காதலா? ரெண்டு பிள்ளைக்கப்புறம் அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைங்க.. .. .. ..”

‘உடம்பு திமிர் எடுத்து ஓடினா என்ன செய்ய?”

கோபத்தில் என் வார்த்தைக்கள் தடிக்க பேச்சை நிறுத்தினேன் அத்தோடு. எனக்குள்ளிருந்து வந்த பெருமூச்சு என் கோபத்தைப் பேசியது.

“பிறகு எதும்மா காதல்? காதல்னா கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் தான் வரணும்மாம்மா? கழுத்தில் தாலி போட்டவுடன் இனிமே காதலே வராதுன்னு எப்படி முடிவு பன்றது? காதல் ஒரு உணர்வு தானேம்மா. நேசம் கூடக் கூட வரத்தானே செய்யும் . ரெண்டு பிள்ளைக்கப்புறம் வராதா? வரக்கூடாதுன்னு ஏன் எப்படி நினைக்கிறிங்க?. மனசு சேர்ந்தப்புறம் உடல் பற்றிய பிரக்ஞை ஏன் வருது/ மனசு சேராம உடல் சேர முடியுமா”. அந்தம்மா தன் உணர்வுகளை மறைச்சு சாகடிச்சு வாழ்ந்திருந்தா எல்லாரும் சந்தோசமா இருந்திருப்போம். பத்தினின்னு சொல்லியிருப்போம் இல்லையா? உணர்வுகளை ஒளிக்காம சொல்லும் போது ஏன் சிதைஞ்சு போயிடறோம்? பெரிசு படுத்துறோம்.”

“அப்போ ஓடிப் போனது சரிங்கரியா?” கேள்விகளில் என் குழப்பம் எனக்கே தெரிந்தது

“தப்புன்னு சொல்றது சரியான்னு யோசிக்கிறேன். சரியா முடிவெடுக்க முடியாம போக நாமளும் காரணமோன்னு”

அவங்களோட உணர்வுகளை அந்த குடும்பத்தார் சரியா புரிந்து கொள்ள அல்லது பகிர்ந்து கொள்ள தவறிட்டாங்களோன்னு கோபத்தை , வருத்தத்தை பகிர்ந்து கொள்வது போல் காதலை ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது போகிறது.? காதல் ஒரு அதீத அன்புதானே அம்மா. உங்களால் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனை அந்தரங்க உணர்வுகளை அழுத்தி வைத்திருப்பீங்க அதுதான் பத்தினித்தனம் என்று இருந்திருப்பிர்கள்? எல்லாவறையும் மறைத்து வைத்துக் கொண்டால் நல்லவர்களா? வெளிப்படையா கல்யாண்குமார் அம்மா மாதிரி சொல்றவங்க நல்லவங்களா எனக்கும் புரியலைம்மா?

“ ஏம்மா தனியாஇருந்த இத்தனை காலம் உங்களுக்கு யார் மேலேயும் காதலோ பிரியமோ வரவே இல்லையா? தாலி , உங்க காதல் உணர்வை தடுக்க முடிகிறதா?”

அவளுக்கு தெரிந்திருந்தது அவள் கேள்விகள் நான் தாங்கமாட்டேன் என்பதும் என்னிடம் பதில் இல்லை என்பதும். எழுந்து போய் விட்டிருந்தாள் நான் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். கல்யாண்குமார் அம்மாவின் குணங்களுக்கு பொருந்தாத அவர் கணவர் முகம் , முக்க என்பது வெறும் கண் காது வாய் மட்டுமல்லவே . அந்த மனிதனை பிரதி பலித்த அவரது முகம் வந்து போனது தீபாவின் பேச்சை யோசிக்க வைக்க “ எனக்கு ஏன் காதல் வரலை? . தாலி !.. தங்கச் சங்கலியாயிருந்த தாலியா என் உணர்வுகளைத் தடுத்தது. இனி தடுக்காது. பதில் சொல்ல மனது இந்த தனிமையைப் தவிர்க்க முயற்சி எடுக்காமல் போனது. தன் தப்பா? ஒரு வேளை வேலைக்கென்று போயிருந்தால் பரந்த உலகில் என் நேசத்திற்குரியவர் இருந்திருக்கலாம் என்று தோன்றியிருக்கலாமோ? நான் எல்லாவற்றையும் தவிர்த்து சிறையிருந்துவிட்டேனோ? அறையுள்ளிருந்து வெளிவந்தாள் கண் கூசத் துவங்க கை நெற்றிப் பொட்டுக்கு போகப் போனதை தடுத்தாள் வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கென்று.

– அக்டோபர் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *