கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 56,431 
 

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள் உதற ஆரம்பித்தன. விஞ்ஞானம் என்றாலே பிரேமுக்கு ஓடாது. அதுவும் அன்றைக்கு செயன்முறை காட்டவேண்டிய இறுதிநாள். இரண்டு நாட்களாக யோசித்து, யோசித்து ஒன்றுமே சரிவராமல் நேற்று இரவு தான் அவசர அவசரமாக இதை ஒப்பேற்றிக்கொண்டு வந்திருந்தான். வேலை செய்யாட்டி கதை கந்தல்.

மீண்டும் ஒருமுறை மனதுக்குள் பேசவேண்டியதை யோசித்துக்கொண்டான். “கறுப்பு துளை, திண்மம் சுருங்க சுருங்க, ஈர்ப்பு விசை கூடி கூடி, முடிவிலி மையம் உருவாகி வெடித்து …ஒல்ரைட் சமாளித்துவிடலாம்” என்று நினைத்தவாறே தைரியமாக கதிரையில் இருந்து எழுந்தான். முன்னே மணியம் மாஸ்டர் சிரித்தும் சிரிக்காமலும் “வெள்ளன வாடா” என்றார். அவரின் வலக்கை விரல்கள் மூக்கு ஓட்டையிலும், இடக்கை விரல்கள் ஏற்கனவே பிரிந்த மூங்கில் பிரம்பிலும், தாளம் போட்டுக்கொண்டிருந்தன.

நடுங்கியபடியே தன்னுடைய வீட்டுவேலையை எடுத்துக்கொண்டு வகுப்பு முன்னே போகிறான். பிரேம் நடுங்கிய நடுக்கத்தில் இந்தோனேஷியா டெக்கான் தட்டுகள் இடம்மாறி, சுனாமி உருவாகி சுமாத்ரா கரையோரம் வழித்து துடைக்கப்பட்டது. இருபதானாயிரம் பொதுமக்கள் ஜஸ்ட் லைக் தட்டாக இறந்தார்கள்.

தயக்கமாக “வணக்கம் சேர்” என்றான்.

“என்ன செய்தோண்டு வந்திருக்கிற? ஐட்டத்தை எடுத்துவிடு பார்ப்பம்”

பிரேம் கையில் வைத்திருந்த கார்ட்போர்ட் பெட்டியை நிலத்தில் வைத்து திறந்தான். உள்ளிருந்து பட்டும் படாமலும் கவனமாக ஒரு உருண்டை வடிவான பொருளை வெளியே எடுத்தான். அந்த உருண்டை பச்சை நீலம் கலந்த நிறத்தில் இருந்தது. மிகச்சின்னதாக, தன்னைத்தானே சுற்றியபடி …

“என்னடா இது?”

”பூமி சேர்”

“பூமியா?” என்றபடியே மணியம் மாஸ்டர் அந்த உருண்டையை வாங்கினார். தொட்டுப்பார்த்தார். கச கச வென்று இருந்தது. மூக்கை நோண்டிய விரலாலே ஈரலிப்பாக இருந்த பகுதியை நோண்டப்போனார்.

“வேணாம் சேர் .. அமுக்க மாற்றம் வந்திடும் .. ஆக்கள் எல்லாம் செத்துப்போயிடுவினம்”

”ஆக்களா?”

”ஓம் சேர் … ஆக்கள் .. யூ நோ .. பசுக்கள்”

”வலு இன்டரஸ்டிங் .. கொஞ்சம் விளங்கப்படுத்து”

பிரேம் குரலை செருமியபடியே, சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினான்.

அனைவருக்கும் வணக்கம். இன்றை வகுப்பில் நான் உங்களுக்கு காட்சிப்படுத்தும் செயன்முறையின் பெயர் பூமி. தோரியத்தை உயர் அழுத்தத்தை உருவாக்கி, செயற்கை முறையில் கறுப்பு துளை ஒன்றை ஏற்படுத்தி, அதற்குள் திணிவு சேர்த்து சேர்த்து …

ஓகே ப்ளக்ஹோல் வெடிக்க வச்சு செய்திருக்கிற .விளங்குது … அதவிட்டிட்டு இந்த பூமியை பற்றி சொல்லு

பூமி, இதில் எல்லாமே இருக்கிறது. நிலம் கடல் இரண்டுமே ஒரே உருண்டையில் இருக்கிறது. நம்மை போல தண்ணீருக்கு இன்னொரு கிரகம் செல்ல தேவையில்லை. எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில் வசிப்பது போல டிசைன் பண்ணியிருக்கிறேன். ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு கிரகம் என்று டிசைன் பண்ண எனக்கு டைம் இருக்கேல்ல.

பிரேம் சொல்லிக்கொண்டே போக மணியம் மாஸ்டர் இடைமறித்தார்.

“பொறு பொறு .. அதெப்பிடி எல்லா மிருகங்களும் ஒரே கிரகத்தில்? ஒரே விதமான காலநிலையில் ஒரே மாதிரியான கூர்ப்பு தானே நடக்கோணும்? வேற வேற மிருகங்கள் உருவாக சான்ஸ் இல்லையே?”

பிரேம் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுதாரித்தான்.

“இல்ல சேர் … எல்லா இடத்திலையில் எல்லா நேரத்திலையும் ஒரே காலநிலை இருக்காது. அதால ஓர்கானிக் கொம்பவுண்டுகள் திரிபு அடையிறது எங்கட கிரகத்தில மாதிரி ஒரே சீரா இருக்காது”

மணியம் மாஸ்டர் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் ஏதோ குறித்துகொண்டார். திடீரென்று அந்த உருண்டையில் இருந்து சின்னதாக பறந்து வந்து நடுவில் வெடித்து சிதறியது.

“என்னடா ஏதோ பறக்குது?”

”மங்கல்யான் சேர்”

”அதென்னது?”

”ரொக்கட் சேர் .. எங்கட பட்டாசு மாதிரி … ”

”வெரி குட் சின்ன சின்ன டிடெயிலிங் எல்லாம் கவனித்து டிஸைன் பண்ணியிருக்கிறாய். ஒவ்வொரு மனிதன், விலங்கு, பறவை .. மரம் மட்டை … அணு”

”குவாண்டம் ஸ்பின் திசை வரைக்கும் புரோகிராம் பண்ணியிருக்கிறன் சேர்”

மணியம் மாஸ்டர் மீண்டும் குனிந்து மார்க்கிங் ஷீட்டில் பதிந்துவிட்டு நிமிர்ந்து வகுப்பை பார்த்து கேட்டார்.

“உங்களில ஆராவது கேள்வி ஏதும் கேக்க போறீங்களா?”

இவ்வளவு நேரமும் தங்களுக்குள் சலசலத்துக்கொண்டிருந்த வகுப்பு திடீரென்று அமைதியானது. சிலர் அப்போது தான் பிரேமின் உருண்டையையே கவனித்தார்கள். பலர் தம்முடைய செயன்முறைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

“சேர் ஒரு டவுட்”

பின் வாங்கிலிருந்து சிவா எழுந்து நின்றான்.

“இந்த பூமில கடவுள் ஆரு?”

கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த கணேஷை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பும் சிரித்தான். பிரேம் அசரவில்லை.

“நீ தாண்டா கடவுள்”

மொத்த வகுப்புமே கோல்லென்று சிரித்தது. மணியம் மாஸ்டரின் கை மீண்டும் மூங்கில் பிரம்புக்கு நெருக்கமாக போக, பிரேம் அவசரமாக விளங்கப்படுத்தினான்.

“சத்தியமா சேர் .. புரோகிராம் பண்ணேக்க சிவா, கணேஷ், கௌதம் இவங்களையே கடவுள் ஆக்கிட்டன். எப்பவுமே வகுப்புக்கு ஹோம்வேர்க் செய்யாம வந்து தோப்புக்கரணம் போடுற கணேஷுக்கு இந்த பூமில ஆக்கள் தோப்புக்கரணம் போடுற … .”

வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்க, கணேஷ் முகம் கறுத்துவிட்டது. “சத்தம் வரக்கூடாது” என்று மாஸ்டர் மீண்டும் வகுப்பை மிரட்டினார்.

“பிரேம் .. இந்த பூமில ஒரு மனிசனை சாம்பிளுக்கு காட்டினா சரி .. உண்ட அலுவல் முடிஞ்சிடும்”

“சரி சேர்”

நுணுக்குகாட்டி ஒன்றை பிரேம் மணியம் மாஸ்டரிடம் கொடுத்துவிட்டு அதை கொண்டு பூமியைஜூம் பண்ண சொன்னான்.

“சேர் இப்ப நிலப்பகுதி தெரியுதா?”

”ம்ம்”

”இன்னும் ஜூம் பண்ணுங்க .. என்ன சுத்திவர கடல் இருக்கிற நிலமா?”

”யெஸ்”

”ஒகே அது தான் தீவு .. இலங்கை … அப்பிடியே வடக்கு பக்கமா போகஸ் பண்ணி ஜூம் பண்ணுங்க”

அவன் சொல்ல சொல்ல, அவரும் தொடர்ந்து செய்தார். யாழ்ப்பாணம் என்றான். நல்லூர் என்றான். பள்ளிக்கூடம் என்றான். மணியம் மாஸ்டர் நுணுக்குக்காட்டியில் இருந்து கண்களை நகர்த்தாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.

“சேர் இப்ப என்ன தெரியுது”

”வகுப்பறை மாதிரி இருக்கு ..”

”முப்பது பெடியள் இருக்கிற வகுப்பில ஒருத்தன் முன்னுக்கு நிக்கிறானா?”

”ஓமடா”

”பக்கத்திலேயே ஒருத்தர் ஒரு உருண்டையை உத்துப்பார்த்துக்கொண்டு …”

கண்களை வெளியே எடுக்காமலேயே ஏதோ சொல்ல முனைந்தவர் திடீரென்று நிறுத்தி அதை கவனித்து கேட்டார். திடுக்கிட்டார். குரல் அடைத்தது.

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *