வெடிகுண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 9,230 
 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நியான் விளக்குகள் சிங்கப்பூர் எங்கும் பிரகாசிக்க, என் மனத்தின் இருளை யாரறிவார்? பலத்த யோசனையுடன் கையிலிருக்கும் கருவியை அப்படியும் இப்படியும் திருப்பி பார்க்கிறேன்.

‘எனக்கு ஏன் இந்த சோதனை?’

‘என்னை கைவிடப் போகிறாயா அருந்ததி?’ என்று பழைய கைபேசி என்னைக் கண்டு கண்ணீர் உகுப்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.

“நானாகவா உன்னை கைவிடுகிறேன்? சிங்கப்பூருலதான் புதுசு புதுசா சட்டம் போடுறாங்களே! உன்னைல்லாம் இனிமே வச்சிருக்க கூடாதுன்னுட்டாங்க” என்றபடி என் ஆதங்கத்தை வாய்விட்டு கூறுகிறேன். நினைவுகளில் சில வருடங்கள் பின்னோக்கிப் போகின்றன.

“அம்மா…. இனிமே நீங்க எங்க போனாலும் இந்த போனை எடுத்துக்கிட்டுதான் போகணும்” என்றவாறு மகள் யாழினி என்னிடம் கைக்கு அடக்கமான போனை திணிக்கிறாள்.

அதைக் கையில் வாங்கும்போதே என் வயிற்றில் கலக்கம் பிறக்கிறது. எப்படி பாவிக்கணும்னு மகள் சொன்னபோதிலும், அதைக்கண்டாலே எனக்கு விதிர்விதிர்க்குது. எப்ப, எந்த நேரத்துல சத்தம் கொடுக்கும்னே தெரியாது. வீட்டில் இருக்கிறப்ப பரவாயில்லை. வெளியில் போகும்போது என்னவோ வெடிகுண்டை மடியில வச்சிருக்கிற மாதிரி. யாரோட போனடிச்சாலும் என்னோடதுதான் அடிக்குதோன்னு இருக்கும். அதிலும் பேருந்து, இரயில்ல போகும்போது… கேக்கவே வேணாம். அந்தப் பக்கம் என்ன பேசுறாங்கன்னும் சரியா கேக்காது. நான் கொஞ்சம் சத்தமா பேசினா, வண்டியில இருக்க அத்தன பேரும் என்னை பாக்கிற மாதிரியே இருக்கும். எதுக்கு இந்தத் தொல்லைன்னு வீட்டைவிட்டு கிளம்புறப்ப ஞாபகமா அதை வீட்ல வச்சிட்டுதான் போவேன். பாலர்பள்ளியில் படிக்கும் பேரன் நாவலன், சொல்லிச் சொல்லி அதன்மீதிருந்த பயம் விலகி பாசமும் பெருகியது.

இந்த நிலையில்தான் 2Gக்கு சிங்கப்பூர் அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க, புதிய கைபேசியை மகள் வாங்கித் தர, இருளடைந்த முகத்துடன் இப்போது நான். இந்த போன்ல லேசா கை பட்டுட்டாலே என்னன்னவோ கேக்குது… ஆறு மாசத்து புள்ளங்ககூட இதில் பூந்து விளையாடுதுங்க… ம்… எனக்கு ஒண்ணும் பிடிபட மாட்டுது.

‘ஏன்தான் வயசானவங்களுக்கு இவங்க இப்படில்லாம் தொல்லை கொடுக்கிறாங்களோ?’ கண்ணீர் வடிக்கா குறையாய் உள்ளேன்.

“என்ன யோசனை அருந்ததி?” என்று கேட்டவாறு வருகிறாள் தோழி சங்கவி.

“எல்லாம் இந்த கருமம் புடிச்ச போனை பத்திதான்” அலுத்துக்கொள்கிறேன்.

“நானும் அதுக்காகத்தான் வந்தேன். என்னவோ ஸ்கில் பியூச்சரமே (Skill Future) அங்க இதைப்பத்தில்லாம் சொல்லித் தர்றாங்களாம் போலாமா?”

புதுவகை கைபேசிகளின் மின் சேமிப்புபோல கடிதில் காணாமற் போகிறதுஒரு மாதம்.

“அம்மா… உங்களுக்கு பேஸ்புக்லாம் இருக்கா?” விழி விரிய யாழினி.

“ஆமாம்.”

“எப்போதிருந்து?”

“சும்மா தொணதொணக்காதே…. இன்ஸ்டகிராம்ல என்னோட டீனேஜ் போட்டோவுக்கு வந்த கமெண்ட்சை பார்க்கிறேன்.”

“பாட்டி….”

“….”

“பசிக்குது பாட்டி….” அழைக்கிறான் நாவலன்.

“யாழினி பிள்ளையை கவனி” என்கிறேன்.

“என்னம்மா நீங்க எப்பவும் போன்லயே இருக்கீங்க?” எனும் யாழினியைப் பார்க்க எனக்கு எரிச்சல் மண்டுகிறது.

‘எனக்கு தொல்லை கொடுப்பதே இவளுக்கு வேலையா போச்சு’ எண்ணியபடி “டிவிட்டர்ல பிரண்ட்சுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்றேன். உனக்கு என்ன வேணும்?”

“உங்களுக்கு டிவிட்டர்லாமா இருக்கு…?”

“ஆமாம்” சேட்டிங்கை தொடரும் என்னை விநோதமாகப் பார்க்கிறாள் யாழ்.

“எவ்ளோ பிரண்ட்ஸ் உங்களுக்கு?”

“அது இருக்கும் ஆயிரத்துக்கிட்ட.”

“ஆ…”

‘இவள் ஏன் திடீர்னு மயங்கினாள்னு தெரியலையே!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *